சிவாஜி சிலைக்கு மிக மிக பொறுத்தமான இடம்
சிவாஜி கணேசன் நடிப்பினையும் அவர் உலகபுகழ் பெற்றதையும் சொல்வது, குஷ்பூ அழகானவர் என்பதை போன்றது
அதாவது எல்லோருக்குமே தெரிந்த விஷயம், ஆனால் சிவாஜி பெயரால் அவரின் ரசிகர்களும் போலிசாரும் கண்ணாமூச்சி ஆடும் விளையாட்டு ஒன்று திருச்சியில் நடப்பது பலருக்கு தெரியாத விஷயம்
அதாகபட்டது 2010 வாக்கில் திருச்சியில் சிவாஜிக்கு சிலை அமைக்க உதவியவர் கே.என் நேரு, இவர் திமுக்காரர்.
அதன் பின் வந்தது அம்மையார் ஆட்சி, 2016ல் வென்று வென்றவுடன் அப்பல்லோ போன காலம் அல்ல, 2011ல் அவர் நலமாகவே இருந்தார்.
அவர் ஆட்சிக்கு வருவதே, திமுகவும், திமுகவினர் செய்திருக்கும் காரியங்களை எல்லாம் குப்பையில் போடுவது என்ற ஒரே நோக்கத்திற்காக என்பது போயஸ் கார்டன் கொள்கை.
அப்படி புதிய சட்டமன்றம், அண்ணா நூலகம் போன்றவற்றை வரிசையாக புரட்டி போட்டவருக்கு இந்த சிலை விவகாரமும் கிடைத்துவிட்டது.
அது கே.என் நேரு பெயர் அடிபட்ட சிலை என்பதால் கூடுதல் மகிழ்ச்சியுடன் சாக்கு பை கட்டிவிட்டார்கள்.
அதன் பின்பு நடப்பதுதான் கண்ணாமூச்சி.
ரசிகர்களும் ஜனநாயக முறைப்படி அலைந்தார்கள், சிவாஜி போலவே கதறினார்கள். பல கதவுகளை தட்டினார்கள். ஒரு கதவும் திறக்கவில்லை
கே.என் நேருவும் தனிபட்ட சோகத்தில் சிக்கினார், திருச்சி சிவாவிற்கும் அதே போன்ற நிகழ்வு கூடவே சசிகலா புஷ்பாவுடன் மான் கராத்தே சண்டை.
வெறுத்துபோன ரசிகர்கள் அவர்களே சிலையினை திறந்தார்கள்
அய்யகோ சட்டம் ஒழுங்கு கெட்டுபோயிற்றென்று காவல்துறை ஓடிவந்து மறுபடியும் மூடிற்று
இந்த விளையாட்டு கொஞ்சகாலம் ஓய்ந்திருந்தது, இப்பொழுது அடுத்த ரவுண்ட் தொடங்கிவிட்டது.
நாளை சிவாஜி பிறந்தநாள் கொண்டாடும் நிலையில், நேற்று சில ரசிகர்கள் இன்குலாப் ஜிந்தாபாத் என கிளம்பி சென்று அதிகாலையிலே திறந்துவிட்டார்கள்
மறுபடி காவல்துறை சிலையினை மூடி அவர்களை சிறையில் அடைதாயிற்று, அங்கு அவர்கள் கட்டபொம்மன் வசனம் பேசிகொண்டிருக்கின்றார்கள்
காவல்துறை தலையினை பிய்த்துகொண்டிருக்கின்றது.
இதில் காவல்துறையினை ஒன்றும் சொல்லமுடியாது, அரசு உத்தரவிட்டால் நாளை திறப்புவிழாவிற்கு எஸ்,பி சவுத்திரி ஸ்டைலில் வந்து கம்பீரமாக நிற்கபோவது அவர்கள்தான்
ஆக சிக்னல் கொடுக்கவேண்டியது அரசுதான்
சிவாஜி மணிமண்டபம் உள்ளிட்ட விஷயங்கள் திறப்புவிழா காணும் பொழுது, இந்த சிலையும் திறப்புவிழா கண்டால் நிச்சயம் ரசிகர்கள் மகிழ்வார்கள்.
மாநில அரசு இப்பொழுதெல்லாம் தானாக எந்த முடிவும் எடுப்பதில்லை, சொல்லவேண்டிய இடம் வேறு. அங்கு மட்டும் தட்டிவிட்டால் பழனிச்சாமியே வந்து சிலைதிறப்பார்
சிவாஜி ரசிகர்கள் காங்கிரஸ்காரர்கள் என்றொரு பிம்பம் தமிழகத்தில் என்றுமே உண்டு, அதையும் மீறி அந்த மேலிடத்திற்கு இப்படி சொல்லலாம், அது உண்மையும் கூட
சிவாஜி மிக சிறந்த தேசபக்தன். மாவீரன் சிவாஜியின் நாடகத்தை நடிதே சிவாஜி கணேசன் ஆனார், பாரத விலார் உள்பட பலதேசபக்தி படங்களில் நடித்தார்
சீன போர், வங்கபோர் நிதி திரட்ட எல்ல்லாம் நடித்து கொடுத்தார், அந்த மாபெரும் தேசபக்தன் சிலை திறப்பில்தான் சிக்கல்” என்றால் மறுநொடி விஷயம் சரியாகலாம்
மற்ற இடங்களில் சிலை வைப்பதற்கும், திருச்சியில் சிலை வைப்பதற்கும் பல வித்தியாசம் உண்டு,
ஆம், திருச்சி பகுதிதான் அவர் கணேசனாக சுற்றி திரிந்த பகுதி. அந்த பக்கம் நடந்த நாடகங்களை கண்டுதான் அவர் நடிகர் ஆனார்.
பின்னாளில் அவர் கஞ்சன் என பெயரெடுத்தற்கு அங்கு அவர் கண்ட வறுமையும் ஒரு காரணம். கணேசனுக்கு வாழ்வினை சொல்லிகொடுத்த பகுதி அது.
கலைவாணருக்கு நாகர்கோவில் வடசேரி போல, சிவாஜி கணேசனுக்கு அந்த திருச்சி பாலக்கரை ஏரியா
சிவாஜி சிலைக்கு மிக மிக பொறுத்தமான பகுதி.
அங்கு அச்சிலை திரை நீக்கபட்டு திறக்கபடுமாயின், எல்லோருக்கும் மகிழ்ச்சி
அந்த மாபெரும் கலைஞனின் பிறந்தநாளில் அந்த சிலை நாளை திறக்கபடுமானால் முதல்வர் பழனிச்சாமிக்கு நன்றி.
என்ன பெரிய சிவாஜி? நம்மை விட, பன்னீரை விட என்ன நடித்துவிட்டார் என அவர்கள் கருதுவார்களானால் , ஒப்புகொள்கின்றோம் உங்களுக்கு அடுத்த நடிகர் இவர்தான் போதுமா? என சொல்லியாவது திறக்க வைக்கலாம்.
நாளை பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தும் விஷயங்களில் திருச்சி சிவாஜிகணேசன் சிலையும் ஒன்று.
உலகமே கொண்டாடிய உன்னத தமிழ் கலைஞனின் சிலையினை அவன் வளர்ந்த இடத்திலே மூடி வைத்திருப்பது எவ்வகையிலும் நியாயம் அல்ல.