சுப்பிரமணியன் பாரதி
இந்திய திருநாட்டில் கர்ம வீரர்களாக வாழ்ந்தவர்கள் வெகுசிலரே, அவர்களின் இயல்பான நாட்டுபற்றும் இந்த பெருமைமிகு நாட்டுக்கும் அதன் தர்மத்துக்கும் வாழ்வதை விட கடமை பெரிதில்லை என வாழ்ந்து வரலாராய் நின்றவர்கள் சிலரே
அவர்கள் தங்கள் செல்வம், வாழ்வு, திறமை என எல்லாவற்றையும் இந்த தேசத்துக்காய் கொடுத்து தன்னை எரித்து ஒளியேற்றி மறைந்தார்கள், அவர்களின் ஒப்பற்ற தியாகத்தினாலே இன்றும் வரலாறாய் நிற்கின்றார்கள்
அடிவாங்கி சிலையாகும் கற்பகிரக சிலை போல, தன்னில் எரிந்து ஒளிவீசும் தீபம் போல, மழைதாங்கி வெயில்தாங்கி நிற்கும் கோபுரம் போல அவர்கள் நிலைத்து நிற்கின்றார்கள்
அவர்களைத்தான் இன்றும் என்றும் தங்கள் தலைமுறைக்கு தேசம் கைகாட்டி வணங்கி தானும் வணங்க சொல்கின்றது, அவர்களுக்காகத்தான் அழுது புலம்பி அவர்களின் தேசபற்றில் ஓரளவேனும் ஒவ்வொருவருக்கும் வரவேண்டும் என பாடுபடுகின்றது
அந்த தேசபக்தி வரலாற்றில் முக்கியமானவன் சுப்பிரமணியன் பாரதி
அவனுக்கு இந்நாட்டுக்கு ஏதோ செய்ய விருப்பம் இருந்தது, தன்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்தான், ஆனால் தேசபோராட்டம் திலகர் வழியில் இருந்து காந்தி கைக்கு செல்லும் பொழுது அவன் தடுமாறினான்
அந்த தடுமாற்றத்தை விவேகானந்தரின் சீடர் நிவேதிதா போக்கினாள், சுவாமியின் போதனைகளில் கரைந்த பாரதி விவேகானந்தரை தன் ஞானகுருவாக ஏற்றுகொண்டான்
அதிலிருந்து அவன் சுடர்விட்டான், விவேகானந்திரின் ஞானம் அவரில் எரிய தொடங்கியது, பாரதியின் தேச வாழ்வு அதனில் இருந்துதான் தொடங்கிற்று
அவன் பெரும் பணக்காரன் அல்ல, அவனுக்கு தெரிந்ததெல்லாம் பாட்டும் எழுத்தும், அதை கொண்டு எட்டபுரம் மன்னனுக்கு பாடியிருந்தால் இன்று அவம் வம்சம் நெல்லையின் பணக்கார வம்சமாய் நின்றிருக்கும்
அந்த பாடலை ஜார்ஜ் மன்னனுக்கும் வெள்ளையனுக்கும் பாடியிருந்தால் அவன் தாகூர் போல் நோபல் பரிசெல்லாம் வாங்கியிருப்பான்
அவ்வளவு ஏன் கற்பனை கதைகளை “பொன்னியின் செல்வன்” போல கற்பனை காவியங்களை அவன் எழுதியிருந்தால் இந்நேரம் அவன் வம்சம் எங்கோ பணத்தில் கொழித்திருக்கும்
அவன் பத்திரிகையினை தேசபற்று அற்றோ வெள்ளை ஆதரவாக நடத்தியிருந்தால் அவம் வம்சம் இப்பொழுது தமிழக அமைச்சர்களாக வீற்றிருக்கலாம்
ஆனால் தன் எழுத்தும் பேச்சும் பாட்டு இந்நாட்டுக்கு தன் தேசவிடுதலைக்கு என தர்மபோரை சரியாக நடத்தினான் அந்த கவிஞன், எந்நிலையிலும் ஓயாத போர் அவனுடையது
அந்த நெல்லை தமிழ்புலவனுக்கு சம்பாதிக்க தெரியாது, அந்நியனுக்கு அடிபணிய தெரியாது, அவனுக்கு செல்வாக்கு கிடையாது, அவனுக்கு பெரும் ஆதரவும் கூட்டமும் கிடையாது, அவன் பாக்கெட்டில் பத்து காசு கிடையாது, அவனிடம் அதிகாரம் கிடையாது, பெரும் நிலபுலனும் தொழிற்சாலையும் கிடையாது
அவனிடம் இருந்ததெல்லாம் ஆழ்ந்த அறிவு, சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட தேசபற்று, பல மொழிகளில் பெரும் அறிவு, மிக தீர்க்கமான ஞானம், இந்துமதம் மேல் அபார நம்பிக்கை
அவனின் தொழில் எழுத்தும் பாட்டும். அவனின் பலம் அது, வாழ்வு அது, மூச்சும் கைகோலும் கைவிளக்கும், வாழ்வின் மூலதனமும் அது
அந்த மொத்த வரத்தையும் இந்நாட்டுக்கும், நாட்டு விடுதலைக்கும், இந்த மதத்துக்கும் கலாச்சார பண்பாட்டுக்குமாய் கொடுத்தான் பாரதி
இந்தியாவில் தேசாபிமானிகள் குறைவு, அதுவும் மிக அறிவார்ந்த சிந்தனைமிக்க தேசியவாதிகள் குறைவு, அதை தனி மனிதனாக நின்று லட்சம்பேர் சுமக்க வேண்டிய சுமையினை தனித்து சுமந்தான் அவன்
நிச்சயமாக கட்டபொம்மனும் பூலித்தேவனும் ஆயுதவழி போரை தொடங்கி வைத்த நெல்லைதான் பாரதியினை கொடுத்து பேச்சிலும் எழுத்திலும் பாட்டிலும் சுதந்திர போரை தொடங்கி வைத்தது
சட்டர்ஜிக்கு முன்பே வந்தே மாதரம் பாடியவன் அவனே, தன் எழுத்து ஒன்றாலே இந்தியா முழுக்க தேசபக்தர்களை திரட்டியவனும் அவனே
ஒரு விளக்கு ஓராயிரம் விளக்கினை ஏற்றிவைக்கும் என்பது போல அந்த சிறு கூட்டம் பேரோளியினை இங்கு ஏற்றியது, அவர்கள் கொடுத்த வீச்சும் ஏற்றிவைத்த புரட்சி தீயும் கொஞ்சமல்ல
ஒருவன் காலமான பின்பும் அவனுக்கு எது எஞ்சி நிற்கின்றதோ அதுதான் அவன் வாழ்ந்த வாழ்வின் அடையாளமும் அவனின் வாழ்வின் தத்துவமும். அப்படி இங்கு புகழோடு வீற்றிருப்பவர் வெகு சிலரே
அதில் ஒருவன் எங்கள் பாரதி, நெல்லை மண் கொடுத்த எங்கள் சிங்க நிகர் பாரதி
அந்த திருகமகன் மகாகவி சுப்பிரமணிய பாரதி ஒரு பிறவி ஞானி, பலதலைமுறை ரிஷிகளின் ஞானமும் அறிவும் ஒருங்கே பிறந்த பிறப்பு, தெய்வம் அவனுக்கு பாடும் வரத்தை கொடுத்தது.
அந்த பாடலையும் அவன் தனக்காக பாடவில்லை, அவனின் பாடெலெல்லாம் தேசம், சமூகம் , தெய்வம் என இந்த மூன்று பிரிவில்தான் வருமே தவிர, அவனுக்காகவோ அவன் குடும்பத்துக்காகவோ அவன் பாடவில்லை
நெல்லையின் வறண்ட பகுதியில் வளரும் மரமெல்லாம் நீருக்கு ஏங்கி தவிக்க வேண்டும் என்பதும், தமிழகத்தில் இருக்கும் அறிவாளியெல்லாம் ஒரு அங்கீகாரத்துக்கு ஏங்கி தவிக்க வேண்டும் என்பது விதி
அந்த கொடுமைக்கு அவனும் தப்பவில்லை
ஆச்சரியமானவன் அந்த சுப்பிரமணி, 6 வயதில் கவிதை எழுதினார், நெல்லையில்தான் தமிழை கற்றார், அந்த ரிஷிகேஷ் சன்னியாசி சிவானந்தாவும் அவரும் வகுப்பு தோழர்கள். எட்டயபுரம் மன்னர் அந்த அறிவில் சிறந்த மாணவர்களை தன் ஆதரவில் படிக்க வைத்தார். இருவருமே சரித்திரமானது ஆச்சரியம்
காசி சுப்பிரமணியினை உருவாக்கியது, அவன் பாரதியாக மலர்ந்து ஞானம்பெற்றது அங்குதான், பல மொழிகளை கற்று மொத்த இந்தியாவினையும் உணர்ந்தது அங்குதான், அதன் பின்புதான் சொன்னான்
“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிமையானதை காணோம்”,
உண்மைதான் பல ஊர்களில் தண்ணீர் குடித்தால்தான் சுவையான நீர் எது என்று தெரியும், அது அவருக்கு தெரிந்தது.
வெறும் தமிழ்படித்துவிட்டு தமிழ் உயர்ந்தது என சொல்வதில் என்ன இருக்கின்றது, உலகமொழியெல்லாம் சொன்னானே பாரதி, அதில் இருந்தது உண்மை.
எல்லா மொழியும் கற்றாலும் தமிழரிடம் தமிழிலும் உருது பேசும் வடக்கத்திய இஸ்லாமியரிடம் இந்தியிலும்தான் பேசினார், இந்நாட்டு மொழியில் அவருக்கு ஒரு தீரா பெருமை இருந்தது
தமிழ்மேல் தீரா பாசம் இருந்தது தமிழ்கவிதைக்கு தலைகீழ் திருப்பம் கொடுத்தார், பல்லாண்டு கால இலக்கிய உலகுக்கு திடீர் திருப்பம் அவரே கொடுத்தார்
பாரதியின் வாழ்வில் நாம் கண்ட விஷயம் அம்மனிதனிடம் உண்மை இருந்தது, அது அநீதியினை கண்டபொழுதெல்லாம் பொங்க சொன்னது. இந்த தேசத்துக்காக அவனை எழுத சொன்னது
சில உண்மைகளை இன்னொருவர் மூலம் தெய்வம் உணர்த்தியபொழுது அதை ஏற்கும் மனமும் பாரதிக்கு இருந்தது, அருட்சகோதரி நிவேதிதாவை கல்கத்தாவில் கண்டார் உண்மை உணர்ந்து பெண்விடுதலைக்கு தமிழகத்தில் முதல் குரல் கொடுத்தார்.
இங்கு பெண்ணுக்கும் எல்லா உரிமையும் வேண்டும் என்ற முதல் குரல் அவனிடமிருந்தே வந்தது, ஈரோட்டு ராம்சாமியெல்லாம் பின்னாளில் பாரதி சொன்னதைத்தான் சொன்னது
பாரதி பணத்துக்காகவும் வாய்ப்புக்காகவும் வாழ்ந்திருந்தால் அவன் வாழ்வு எப்படி இருந்திருக்கும்?
எந்த வம்புதும்புக்கும் போகாமல் எழுதிமட்டும் கொண்டிருந்தால் தாகூரை விட பெரும் கவிஞனாக கொண்டாடபட்டிருப்பான்
ஆங்கிலேயனை ஆதரித்திருந்தால் இன்று பெரும் பணக்கார கவிஞனாக வரலாற்றில் இருந்திருப்பான் இங்கல்ல லண்டனில், அவரது ஆங்கிலபுலமை அப்படி.
தாகூர் ஒரு ஆங்கில அடிமை, நேருவின் மகோன்னத சாயல். வெள்ளையனுக்கு அவன் அடிபணிந்து எழுதிய பாடலெல்லாம் இங்கு தேசிய கீதம் என்பதெல்லாம் நாட்டு அவமானம்
பாரதி தாகூரை போல் வளைந்திருந்தால் மிகபெரிய கவிஞனாக அவனால் லண்டனில் வலம் வந்திருக்க முடியும், பெரும் சுகபோகத்துடன் வாழ்ந்திருக்க முடியும்
ஏன் எட்டயபுர மன்னரை புகழ்ந்து ஒரு நாளைக்கு 2 பாடல் எழுதியிருந்தால் இன்று பாரதியின் வம்சம் 4 மில்களோடு நெல்லையையும், தூத்துகுடியினை ஆண்டுகொண்டிருக்கும்.
அவ்வளவு ஏன் ஆசிரியபணியினை ஒழுங்காக செய்தால் கூட ராதாகிருஷ்ணன் அளவிற்கு உயர்ந்திருப்பான்
அந்த பத்திரிகையாவது ஒழுங்காக நடத்தினால் இன்று அது தொலைகாட்சிகள் நடத்தும் அளவிற்கு பெரும் ஊடகமாக வளர்ந்திருக்கும்.
அப்பாவி சுப்பிரமணிய பாரதி இவற்றை எல்லாம் எப்படி தவறவிட்டார் என்றால் இரண்டே காரணம்தான் ஒன்று இந்த நாட்டை தீவிரமாக நேசித்தது, இன்னொன்று இந்து மதம் நிலைக்க, மதமாற்றம் தடுக்கட வாய்ப்பாய் இருந்த சில சமூக வழக்கங்களை கண்டித்து உண்மையை உரக்க சொன்னது.
ஆம் யாராலும் புரிந்து கொள்ளமுடியா அந்த பாரதி உண்மை பேசினான், நாட்டை நேசித்தான், வாழ்வை இழந்தான்
அவனது தேசபற்று ஆட்சியாளர்களின் கோபத்தை கிளறியது, சமூகபற்றும் மதபற்றும் சொந்த மக்களே பாரதியை விரட்ட வைத்தது.
அவன் போராடினான், நம்பினான், தன்னாலும் வாழமுடியும் என நம்பினான். ஒரு அங்கீகாரத்துக்கு ஏங்கினான்
அவனை புரிந்து கொள்ள கெஞ்சினான், ஆனால் அவனின் 7ம் அறிவுக்கும் இங்கிருந்தோரின் ஐந்தாம் அறிவுக்கும் பொருந்தவில்லை
வளைந்தும், நெளிந்தும், கெஞ்சியும், கொஞ்சியும்,மிரட்டியும், விரட்டியும் வாழவேண்டிய சமூகத்தில் அவர் மட்டும் மனிதனாக வாழ்ந்தான், மனித நேயத்தோடு வாழ்ந்தான்.
உண்மையில் பராசக்தி வசனம் அவருக்குதான் பொருந்தும், அது பாரதியினை நினைத்தால் ஒவ்வொருவர் மனதிலும் தானாக வரும்
பிரிட்டிசார் விரட்டினர் ஓடினான், வறுமை விரட்டியது ஓடினான், சமூக கொடுமைகள் விரட்டியது ஓடினான்,ஓடினான் முடிந்தவரை ஓடினான், முடியவில்லை இறந்தான்.
ஒரு மனிதனுக்கு தாங்கமுடியாத அவமானம் என்பது அவனது திறமையை பரிகாசிப்பது, அதற்கு அங்கீகாரம் தர மறுப்பது, ஒரு வகையில் அது ஒரு உளவியல் கொலை,
அதைத்தான் அந்த சமூகம் பாரதிக்கு செயதது, பாவம் அவன் “நல்லதோர் வீணை செய்தே” என அவனால் தெய்வத்திடம் புலம்பத்தான் முடிந்தது, “சக்திகொடு” என கெஞ்சத்தான் முடிந்தது,
அவனுக்கிருந்த அறிவிற்கு அவனோடு சமமாக பேசகூட யாருமில்லை, பேசினாலும் அவனை புரிந்து கொள்ள முடியவில்லை
ஒருவன் கையில் எவ்வளவு இருக்கின்றது, சொத்துபத்து எவ்வளவு இருக்கின்றது என காணும் செல்வங்களையே கணக்கிட்ட உலகம் அவனின் பெரும் அறிவு செல்வத்தை கண்டு கொள்ளவில்லை
கொண்டாடபட வேண்டியவனை பைத்தியம் என ஒதுக்கினார்கள்,விரட்டினார்கள் அவன் கவிதையோடும், கடவுளோடும், பறவையோடும், கழுதையோடும் பேசிக்கொண்டிருந்தான் அந்தோ பரிதாபம்.
அங்குமிங்கும் ஓடினான், இந்த சமூகத்தில் தனக்கான இடத்தை பிடிக்கலாம் என நம்பினான், முடியவில்லை.
உலகிலே மிக கொடுமையான ஒரு விஷயம் உண்டென்றால் ஒரு அறிவாளியினை 10 முட்டாள்களோடு வாழவிடுவது அதுதான் பாரதிக்கும் நடந்தது.
குடும்பமும் வறுமையும் அவனை பணம் சம்பாதிக்க கட்டாயபடுத்தின, அவனும் முடிந்ததை எல்லாம் செய்துபார்த்தான், காலம் அவனுக்கு வாய்க்கவில்லை
அந்த வறுமையிலும் கண்ணனை நினைத்து பாடி மகிழ்ந்தான், அப்பொழுதும் பாரதபோரையும் இந்திய சுதந்திரத்தினையும் தொடர்புபடுத்தி பாஞ்சாலி சபதம்தான் எழுத துணிந்தான்.
அப்படியே வீரசிவாஜியினை தன் வீரதளபதியாகவும் ஏற்று அவன் காவியமெல்லாம் எழுதினான், அதனில் தேசபக்தியினை கலந்தான்
ஆனாலும் கொடும் துன்பங்கள் அவருக்கு உண்மையை உணர்த்திற்று,
கனவு வேறு,கடமை வேறு, வாழ்க்கைவேறு, என்பது மெல்ல விளங்கிற்று
அதை உணர்த்தியது அவரது தோழரானவ.உ.சியின் சிறைகொடுமையும், சுப்பிரமணிய சிவாவின் கொடுமையான இறுதிகாலமும்
இன்னும் வ.வேசு அய்யர் முதல் நீலகண்ட பிரம்மச்சாரி வரை அவரின் தோழர்களுக்கு நிகழ்ந்ததை எலலம் எண்ணி மனம் வருந்தினான்.
ஆம் வெள்ளையனின் நரிதிட்டத்தில் தேசம் அவர்களை கைவிட்டது, வெள்ளையரிகளின் கைகூலிகள் நிரம்பிய காங்கிரஸ் சுதந்திரத்தை மெல்ல மனதுக்குள் சொல்லும் அளவு போர்குணத்தை அடக்கியது
மக்களால் கைவிடபட்ட போராளிகள் வரிசையில் தன் கண்முன்னே தன் தோழர்கள் இணைந்து சரிவதை கண்டு துடித்தான் பாரதி, அவனின் பாடலும் எழுத்தும் கூட மக்களிடம் சென்று சேர்வது தடுக்கபட்டது, வெள்ளையனை விட அவன் கைகூலிகள் அதை சரியாக செய்தனர்.
விளைவு ஒரு பெரும் கவிஞன், பன்மொழி ஆசிரியன், பெரும் காவியங்களை படைக்கும் ஆற்றல் உள்ளவன் ஒரு சாதாரண பத்திரிகையாளன் ஆனார்,
அந்த யானை விறகு பொறுக்க கிளம்பியது, அந்த சிங்கம் எலி வேட்டைக்கு சென்றது, அந்த சூரியன் ஒரு அறைக்கு விளக்காக முயன்றது
இறுதிகாலத்தில் பித்துபிடித்தவர் என்றும், வாழதெரியாதவர் என்றும் புறக்கணிக்கபட்டவர், அப்போதும் ஏதோ எழுதிகொண்டிருந்தார், அப்பொழுது எழுதியவைதான் சாகாவரம் பெற்ற தேசபக்தி பாடல்களும், இன்னும் பல அழியா பாடல்களும்.
ஒன்று நிச்சயமாக சொல்லலாம், இந்தியாவின் தேசியகீதமாக்குவதற்கு அவரது பாடல்களை தவிர நிச்சயமாக எக்காலத்திலும் வேறுபாடல்களில்லை.
ஆனால் இந்திய இலக்கிய உலகம் வங்காளிகள் கையில் இருந்தது, எளிதாக தாகூரின் பாடலை தேசிய கீதம் ஆக்கினார்கள், எந்த பாடல் 1911ல் ஜார்ஜ் மன்னருக்காக தாகூர் எழுதியதாக சர்சையில் சிக்கிய அதே பாடல், “ஜண கண மன” எனும் அந்த பெரிய பாடல்
அன்று தாகூர் எழுதியது மிக பெரும் பாடல், அதை பாடி அரைமணி நேரம் கச்சேரி செய்யலாம், அதனை 5 நிமிடமாக சுருக்கி “இந்திய தேசிய கீதம்” என அறிவித்துவிட்டார்கள், என்ன செய்வது, பாடித்தான் ஆகவேண்டும். பாடுகின்றோம்
இந்தியாவில் இல்லாத சிந்து, (பிரிந்த) பஞ்சாபையும்,
வங்கதேசம் ஆகிவிட்ட வங்கத்தையும் சேர்த்து. சிந்துவை இன்னமும் வாழ்த்திகொண்டிருக்கின்றோம்
ஆனால் அதன் கரையிலேதான் இந்தியாவினை அழித்தொழிக்க திட்டம் தீட்டபட்டுகொண்டிருக்கின்றது என்ன கொடுமை இது.
ஆனால் “தாயின் மணிக்கொடிபாரீர்” அல்லது “வந்தே மாதரம் என்போம்” போன்ற பாடல்களில் சிறிது மாற்றம் செய்துபாருங்கள், அற்புதமான தேசிய பாடல்கள் கிடைக்கும்.
தாகூருக்கு வெள்ளையர் கொடுத்த பெரும் வெகுமதி பின்னாளைய “நோபல் பரிசு”, பாரதியோ வெள்ளையர் விரோதியாய் பாண்டிச்சேரியில் “ஆடுவோமே பள்ளு பாடுவோமே” என பாடிகொண்டிருந்தார், அவருக்கு வெள்ளையன் கொடுத்தது “தேச துரோகி” பட்டமும் சிறைதண்டனையும்.
பாரதி இந்தியாவினை எவ்வளவு நேசித்தார் அல்லது இந்தியா பற்றி அவரின் கனவு என்ன என்பதற்கு அவரின் பாடல்களே சாட்சி, தாகூர் சிறந்த கவிஞர்தான் ஆனால் பாரதியின் “கணல்” அல்லது “உணர்ச்சி” அவர் பாடலில் இல்லை.
இன்றும் சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம் என அவன் பாடியதே நடந்து கொண்டிருகின்றது
அவரது கனவுபடியே இந்தியா சுதந்திரம் பெற்றது, ஆனால் அவர் மிகவும் நேசித்த சிந்து நதி கூட இன்று இந்தியாவிற்கு இல்லை, பாரதி முன்னமே இறந்தார் இல்லை 1947ல் இறந்திருப்பார்.
எப்படியோ பெண்விடுதலைக்கும், தீண்டாமை கொடுமைக்கும், சாதி கொடுமைக்கும் எதிராக தீ வைக்க துணிந்தவர் பாரதி.
அவர் பாஷையில் சொல்வதென்றால் “அக்கினிக் குஞ்சொன்று கண்டேன், அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன் வெந்து தணிந்தது காடு”.
அவர் வைத்த அந்த தீ தான், பின்னாளில் எழுந்து பல தமிழக சமூக மாற்றங்களுக்கு வழிவிட்டது.
பாரதியின் வாழ்க்கையே கொடுமையானது, அவராவது அறிவாளி இந்த சமூகத்தோடு ஒட்டமுடியாமல் அவதிபட்டார் விதி, ஆனால் அவரை நம்பி வந்த மனைவியின் வாழ்வே மகா கொடுமை, வறுமையும் புலமையும் அந்நாளைய தமிழக அறிஞர்களின் சாபம்தான்
வருமானம் இல்லை, கடன் வாங்கி அரிசி வாங்க பணம் கொடுத்தால் புத்தகம் வாங்குவது, பக்கத்து வீட்டில் கடனுக்கு அரிசியாக வாங்கி வைத்தால் காக்கா குருவிக்கு வீசி கவிதைபாடுவது, உச்சகட்டமாக குடும்பமே பசியில் வாடினால் அவர் விழித்திருந்து அழுது கவிதை எழுதுவார்,
பிள்ளைகளுக்காய் அல்ல பிஜி தீவில் கரும்புகாட்டில் அவதிபடும் இந்தியருக்காக
உலகின் கஷ்டத்த்தினை எல்லாம் உணர்ந்த பாரதிக்கு மனைவியின் கஷ்டம் புரியவில்லை,புரியவும் புரியாது காரணம் அவர் மனநிலை அப்படி
புரிந்தாலும் அவரால் ஒன்றும் செய்யமுடியாத ஒரு நிலை.
இறுதியாக சென்னை திருவல்லிகேணியில் ஒரு வாடகை வீட்டில் ஒண்டுகுடித்தனம் நடத்தும்பொழுதும் பாரதி அப்படியே இருந்தார், சொந்த பந்தம் யாருமில்லாத அபலையாக செல்லம்மாள் அந்த கோயிலிலே அழுவார்.
கோயிலின் தெய்வம் கோபபடவில்லை, ஆனால் கோயில் யானை தாக்கியது, வழக்கம்போல பழம்கொடுக்க “அப்பனே கணேசா..” என அருகில் சென்ற பாரதியை லேசாக தாக்கிற்று. அன்று நோயில் விழுந்தவர் விரைவாக உடல்நலம் கெட்டு செப்டம்பர் 11ல் காலமானார்.
உண்மையில் அந்த யானை பாரதியினை கோபபட்டு தாக்கவில்லை, அது உண்மையில் அவருடன் விளையாடியது, அனுதினமும் பழம் கொடுத்து விளையாடும் அவருடன் கொஞ்சம் முரட்டுதனமாக விளையாடியது
ஆனால் மனதாலும் உடலாலும் தளர்ந்திருந்த பாரதி எளிதில் காயமடைந்தார், அப்பொழுது பாரதிக்கு ஏதோ நடந்துவிட்டதை அறிந்து அந்த யானை அமைதியாய் ஒதுங்கி நின்று கண்ணீர் விட்டது என்பதை கண்டோர் உண்டு
மொத்ததில் இந்தியா பிளவுபடுவதை பார்த்தால் பாரதி தாங்கமாட்டான், அதுவும் நாத்திக கோஷ்டிகளின் அட்டகாசத்தை கண்டால் அவன் செத்தேவிடுவான் என முன்னறிந்த தெய்வம் அவனை அப்படியே யானை வடிவில் எடுத்து கொண்டது.
இன்று அவர் பெரும் கவிஞர், இனி எந்த கவிஞனும் பிடிக்க முடியாத இடத்திற்கு சொந்தகாரர், கம்பனுக்கு பின் தமிழகம் கண்ட பெரும் கவிஞன், எந்த உண்ர்ச்சியில் பாட்டெழுதுகின்றானோ அதே உணர்ச்சியை அந்த பாடலை கேட்பவருக்குள்ளும் கொண்டுவரும் அனாசய வித்தைக்கு சொந்தகாரன்.
60 வருடம் 100 வருடம் கழித்து போடபடும் இசைக்கும் கட்டுபடும் வரிகளை மிக அழகாக எழுதியிருப்பது தான் பாரதியின் பெரும் சிறப்பு.
ஆனால் வாழும் பொழுது அவருக்கு ஒரு செம்பு தண்ணீர் கொடுக்கவும் ஆளில்லை, பேச கூட விரும்பவில்லை, ஒரு அகதியாய், ஒரு அனாதயாய் விரட்டி விரட்டி கொத்தபட்ட ஒரு பரிதாபத்திற்குரிய அறிஞன்.
ஆனால் 38 ஆண்டுகள் வாழ்வதற்குள்ளாகவே வரலாற்றில் இடம்பெற்ற அறிஞன் அவர், தமிழ் இலக்கியம் உள்ள காலமட்டும் பாரதியார் வாழ்வார், அப்படி ஒரு சூரியனை கொடுத்தது என்பதற்காக நெல்லையின் மக்களான நாமும் பெருமை அடையலாம்.
எம்மை பொறுத்தவரை பாரதி திருஞான ச்ம்பந்தரின் ஒரு சாயல் கொண்ட பிறப்பு, அதில் சந்தேகமில்லை
தனது ஏதாவது ஒரு வரியில் பாரதி நிச்சயம் ஒவ்வொருவரின் உள்ளத்தையும் தொட்டிருப்பார், அந்த மகா கவிஞனுக்கு ஒரு தமிழனாய்,நெல்லையனாய் அஞ்சலி செலுத்துவோம்.
வாழும்பொழுது வெள்ளையனை எதிர்த்தவன் என்பதற்காக விரட்டபட்டான், சுதந்திர இந்தியாவின் தமிழகத்தில் பிராமணன் என்பதர்க்காக அவன் புகழ் திட்டமிட்டு மறைக்கபட்டது.
பாரதியினை கொண்டாடினால் அவனின் தேசபக்தியும், ஒருங்கிணைந்த இந்தியாவினையும் கொண்டாடவேண்டும் என்ற நோக்கில் அவன் திட்டமிட்டு மறைக்கபட்டான்,
தமிழ் பக்தரான பாரதிதாசன் கொண்டாடபட்டான், பாரதியின் வாரிசு என கொஞ்சமும் சொல்லமுடியாத தகுதி கொண்ட மொழி வெறியன் பாரதிதாசன்
பாரதிக்கு இருந்த தேச அபிமானமும் அறிவும் அவனுக்கு கொஞ்சமுமில்லை, அறிவுகெட்ட தேசவிரோதிகளை கொண்டாடும் திராவிட கோஷ்டி பாரதிதாசனை கொண்டாடியதில் அதிசயமில்லை
ஆம், கவனியுங்கள் தேசாபிமானி பாரதியினை அதிகம் கண்டுகொள்ளா அந்த திராவிட கும்பல் பாரதிதாசனை கொண்டாடும், முழுக்க விஷம்
காங்கிரஸுக்கு எதிரி என்பதால் அந்த கட்சியும் பாரதியாரை அதிகம் தொடாது
இப்பொழுது தமிழகத்தில் பாஜக குரல் எழும்புகின்றது, அந்த பாஜகவினராவது அவனுக்கு கொடுக்கவேண்டிய மரியாதையினை கொடுக்கட்டும்
தமிழக பாஜகவினர் அவனுக்கு செய்வதாக இருந்தால் அவன் பாடல்களை இந்தியா முழுக்க கொண்டு செல்லலாம், வந்தே மாதரம் பாடலுக்கும், ஜனகணமன விற்கும் சற்றும் குறையாத பாடல் அவனுடையது.
தேசபக்தி என்றால் என்னவென்று வாழ்விலும் , பாடலிலும் சொல்லி சென்றவன் அவன். உண்மையான தேசபக்தி என்பது பாரதியிக்கு அஞ்சலி செலுத்துவதிலும் அவன் பாடாலை நாடெல்லாம் கொண்டு செல்வதிலும் இருக்கின்றது.
தாயின் மணிக்கொடி பாரீர் என்பதை விட மிக உருக்கமான தேசியகொடி வாழ்த்து பாடலை எங்கு காணமுடியும்? வந்தே மாதரம் என்போம் என்பதை விட உணர்ச்சிமிக்க தேசிய பாடல் எங்கு இருக்கின்றது?
அவன் பாடல்களையும் தேசியமயமாக்க சொல்லலாம், எல்லா இந்தியனும் அதனை படிக்கலாம்
அதனை காங்கிரஸ் செய்யவில்லை, பாஜகவும் செய்யாவிட்டால் செய்வதற்கு யாருமில்லை
சுதந்திர இந்தியாவின் முதல் முறையாக சுதந்திர தினத்தில் செங்கோட்டையில் பாரதியின் வரிகளை மேற்கோள் காட்டி பேசினார் மோடி
கைகளை கூப்பி கண்ணீர் விட்டு சொல்லலாம், 1920க்கு பின் ஒரு உச்சபீட தலைவன் இந்தியாவில் பாரதியினை நினைவு கூர்ந்தார் என்றால் அது மோடிதான்
காந்தி, நேரு இந்திரா ராஜிவ் என யாரும் செய்யாத அந்த மகா தூய செயலை மோடிதான் செய்தார், உண்மையான தேசபக்தன் ஒருவனுக்கே மாபெரும் தேசபக்தனான பாரதியின் பெருமை தெரிந்தது
இதற்கு 100 ஆண்டுகள் ஆகியிருக்க்கின்றது
பாரதிக்கான மிகபெரும் அங்கிகாரம் அது, அது இன்னும் தொடரவேண்டும், பாரதி புகழ் இந்தியா எங்கும் பரவி நிலைக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்குத்தான் இருந்தது
ஆம், பாரதீய ஜனதா என அவர்கள் பின்னாளிதால் கட்சி தொடங்கினார்கள் ஆனால் முதன் முதல் “பாரதி” என பட்டத்தை சுமந்தவன் அந்த சுப்பிரமணி
அந்த சுப்பிரமணி பாதையில் நடந்த கட்சிதான் இன்று ஆட்சியில் இருக்கின்றது, அவன் சொல்லியபடிதான் “வெள்ளிபனிமலை மேல் உலவுவோம்” என சீனாவினை மிரட்டி கொண்டிருக்கின்றது
அவனின் பாடலை கவனியுங்கள், அவனுக்கு பெரும் உலக கவனமும் தேசாபிமானமும் எதிர்கால சமூக சிந்தனையும் நிரம்பி இருந்திருக்கின்றது
நாத்திகத்தின் போக்கை 1917லே உணர்ந்தான், எல்லோரும் ரஷ்ய புரட்சியினை மானிட சாதனை என சொல்ல “பராசக்தி எழுந்தாள்” என நெற்றியில் அடித்து சொன்னவன் பாரதி
அவன் பாடலில் தேசத்தின் நலம், எதிர்காலம், கலாச்சாரம், சமூகம், மானிடம், விஞ்ஞானம், இந்துமத கோட்பாடுகள் என எல்லாமும் எல்லாமும் கலந்திருக்கும்
அப்படி ஒரு கவிஞன் இனி சாத்தியமில்லை, அவன் வறுமையில் போராடினான், அவன் ஓட விரட்டபட்டான், வறுமையும் வெள்ளையனும் அவனை விரட்டி கொண்டே இருந்தன
ஆனால் அவன் கண்ட கனவு பெரிது, மிகபெரிய மனசிகரத்தில் அமர்ந்து எல்லா பக்கமும் பார்த்து பார்த்து அவன் எழுதிய பாடல்களின் தன்மையும் சிந்தனையும் அதை அறுதியிட்டு சொல்கின்றது
கற்பனையில் எதை எலலமோ தேசம் பற்றி எழுதிவிட்டு, பின் தன் வறுமை உணர்ந்து “சக்திகொடு” என சக்திதேவியிடம் கெஞ்சியிருக்கின்றான்
கொஞ்சம் நம்பிக்கையில் “கிழம் கூடி வெட்டி மனிதரை போலே” என சீறியிருக்கின்றான், திடீரென “நல்லதோர் வீணை செய்தே, சொல்லடி சிவசக்தி” என கதறி இருக்கின்றான்
ஒரு கணம் அவன் இடத்தில் இருந்து நினையுங்கள் அந்த ஞான ஒளி காற்றில் ஆடிய கோலம் தெரியும் , அந்த சிங்கத்தின் வலியும் வேதனையும் புரியும்.
நல்லவர்களும் ஞானிகளும் வாழும் பொழ்தை விட காலமான பின்பே விஸ்வரூபமெடுப்பார்கள்
அந்த தென்னக ஞான வீணை நலங்கெட புழுதியில் எறியபட்டாலும் அதன் இன்னிசை எந்நாளும் இந்நாட்டில் கேட்டுகொண்டே இருக்கும்
நாட்டிற்காகவும், இச்சமூகத்திற்காகவும் ஒலித்த வீனை அது
தமிழ்சமூகத்தின் அறிவுடை மகனுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள், மாபெரும் தேசபற்றாளனுக்கு “பாரத தேசமென்று பெயர் சொல்லுவார்..” என்ற அவரின் வரிகளுடன் அஞ்சலிகள்
நெல்லையின் அடையாளம் தாமிரபரணி மட்டுமல்ல, நெல்லையப்பர் மட்டுமல்ல பாரதி எக்காலமும் அந்த மண்ணின் ஞான அடையாளம்.
நெல்லையப்பரும் காந்திமதி அம்மையும் தத்தெடுத்து வளர்த்த தனி குழந்தை அவர், இன்னொரு ஞான சம்பந்தர்.
பாரதியின் மனைவி செல்லம்மாள் ஒரு பேட்டியில் சொன்னார் , “அவர் ஒரு யுகபுருஷன் என்பது எனக்கு பின்னர்தான் தெரிந்தது, ஒரு யுகபுருஷனுடன் வாழ்ந்திருக்கின்றேன் என்பதை விட என்ன பெருமை வேண்டும்”
ஆம் பாரதி பிறந்த மண்ணில் பிறந்தோம், அவன் பேசிய பேச்சினை பேசினோம் என்பதைவிட என்ன பெருமை வேண்டும்
பாரதியில் கரைந்தோரெல்லாம் தேசியம் பேசினார்கள், ஜெயகாந்தன் பேசினார், கண்ணதாசன் பேசினார், எல்லோரும் பேசினார்கள்
இன்று மோடியும் பேசுகின்றார்
இத்தேசத்தில் எங்கெல்லாம் தேசியம் பேசபடுமோ அங்கெல்லாம் மூல முதல்வராக பாரதி நிற்பார் அவரின் வரி அவரை விட முந்தி கொண்டு நிற்கும்
அதுதான் நம் பாரதியின் வெற்றி, அவன் வணங்கிய காளி கொடுத்த தனிபெரும் வெற்றி, எக்காலமும் இங்கு கவிராஜனாய் அவன் நிலைத்து நிற்கும் வெற்றி
தேசத்தை மனமார நேசிப்பவர்கள், இந்துமதத்தை தன் மனமார நேசிப்பவர்கள் காலம் காலமாய் இங்கு நிலைப்பார்கள் எனப்தற்கு, தன் திறமையினை நாட்டுக்கும் மதத்துக்கும் கொடுத்த ஒருவன் எக்காலமும் நிலைப்பான் என்பதற்கு தெய்வம் கொடுத்த ஒரு பெரும் சாட்சி பாரதியார்..
திராவிட கோஷ்டிகளுக்கு இன்றும் என்றும் பாரதி பெரும் சவால், அவனை முழுக்க உள்ளே எடுக்கவும் முடியாமல் விரட்டவும் முடியாமல் அவர்கள் இன்றுவரை தலைமேல் கொள்ளியாக துடிப்பது கொஞ்சமல்ல
தெய்வம் பின்னாளைய திராவிட இம்சைகளை கருதி முன்னே அனுப்பிவைத்த தேவதூதன் அந்த பாரதி.
அவனை படிக்காமல் தேசபற்று வராது, நல்ல தமிழ் கவிதை வராது, பாடல் வராது. தேசியமோ தமிழோ எதுவுமே உருப்படியாக வராது
பாரதியினை படித்தோரெல்லாம் இங்கு மாபெரும் அறிவுசுடராய் தேசியவாதிகளாய் மாபெரும் கலைஞர்களாய் ஜொலித்தார்கள். அது சுஜாதா, ஜெயகாந்தன்,பாலசந்தர் என பெரும் வரிசை
அந்த ஞானதமிழன் பெயர் அவன் நடமாடிய சென்னை கடற்கரைக்கு சூட்டபட வேண்டும், அவனை உருவாக்கிய ஞானபூமியான காசியில் அவனுக்கோர் பெரும் சிலை வேண்டும்
“தண்ணீர் விட்டா வளர்த்தோம் ? சர்வேசா இப்பயிரைக்
கண்ணீரால் காத்தோம்” என தேசியத்தை காக்க அவன் இங்கு வேண்டும்
“மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையினை கொளுத்துவோம்” என பெண்ணுரிமை காக்க அவன் வேண்டும்
“பாரத தேசமென்று பெயர் சொல்லுவார் –
மிடிப் பயங்கொல்லு வார்துயர்ப் பகைவெல்லுவார” என முரசு கொட்ட அவன் வேண்டும்
“சொல்லுக் கடங்காவே-பரா சக்தி
சூரத் தனங்க ளெல்லாம்;
வல்லமை தந்திடுவாள்-பரா சக்தி
வாழியென்றேதுதிப்போம்” என ஆன்மீகத்தை துணிச்சலாய் பேச அவன் வேண்டும்.
“”மோதி விளையாடு பாப்பா.. ” என அடுத்த தலைமுறையினை கைபிடித்து அழைத்து செல்ல அவன் வேண்டும்
“சுற்றி நில்லாதே போ!-பகையே!
துள்ளி வருகுது வேல்.” என பாட அவன் வேண்டும்
பாரதம் பாரதமாக வாழவும், தமிழகம் ஞான பூமியாய் பாரதத்துக்கு வழிகாட்டி நிற்கவும் அவன் இங்கு வேண்டும் , எக்காலமும் எங்கள் பெருமைக்குரிய பாரதி வேண்டும்
தன் குருநாதன் விவேகானந்தரின் ஞானத்தில் கரைந்து, சிவாஜியின் இந்துபற்றில் தன்னை நீர்த்து அந்த மாமுனியின் இந்து ஞானத்திலும் சிவாஜியின் இந்து வீரத்திலும் வாழ்ந்த அந்த மகாகவிஞன் தன் இளம் வயதிலே அவர்களை போலவே மரித்தும் விட்டான்
அதுவும் சுவாமி விவேகானந்தரின் முத்திரை நாளிலே அவன் மரித்ததான் அவன் விவேகானந்தரின் முழு சீடனாய் இருந்தான் எனபதன் அங்கீகாரம்