சுற்றுப்யணத்தின் கதை….

கன்னியாகுமரி குழு ஒன்று சுற்றுபயணமாக வந்திருந்தது, சில விஷயங்களுக்காக தெளிவு கேட்டார்கள், விளக்கி சொல்ல சென்றதின் விளைவு இரு நாட்களை விழுங்கிவிட்டது

சிங்கப்பூர் செல்லும் பயண ஆலோசனை, பஸ் நிலையம் என கேட்டார்கள். டிராவல் ஏஜென்ட் எனப்படுவோர் துணையின்றி வந்தவர்கள் என்பதால் சில விஷயங்களை சொல்லி உதவ வேண்டியதாயிற்று, பக்கா ஏற்பாடோடுதான் வந்திருக்கின்றார்கள், ஆனால் எங்கோ எதுவோ குழம்பிற்று.

பார்த்து சிலவிவரங்களை சொல்லிவிட்டு வந்துவிடலாம் என சென்றால், நமது மக்கள் அல்லவா? அதுவும் நெடுநாளைக்கு மேற்கு கன்னியாகுமரி மாவட்ட வார்த்தைகள் காதில் தேன் பாய்த்தன

“மக்களே” “வெள்ளம்” “பறையனும்””விளிக்கி””கருக்கு” “குடிச்சானு” “வரூம்””யான்” என பல பழம் வார்த்தைகள் காதில் ஒலித்தன.

தோவாளையிலிருந்தே அந்த நாஞ்சில் தமிழ் தொடங்கும், மார்த்தாண்டத்தில் மாறும், பாறசாலை முதல் திருவனந்தபுரம் வரை கூட அது தமிழ் மலையாள கலவையாக இருக்கும்

அதனை தாண்டி வட கேரளா செல்ல செல்ல “ங,ஞ..” என மெல்லினத்திலே பேசிக்கொண்டிருப்பார்கள், கொடு மலையாளம் சுத்தமாய் புரியாது.

இந்த தமிழ் புரியும், கொஞ்சம் இனிமையானதும் கூட‌

நான் ஆடவில்லை, சதை ஆடிற்று, அவர்களோடே ஒட்டிகொண்டேன். அவர்களுக்கும் அந்நிய தேசத்தில் ஒருவரை பார்ப்பது போன்ற மகிழ்ச்சி, விடுவதாக இல்லை

இரு நாட்களில் கோலாலம்பூரை பார்ப்பது கடினம். ஒரு இடமே ஒரு நாளை விழுங்கும், எனினும் பத்துமலை, இரட்டை கோபுரம் என சில இடங்களையும், சில சிறப்பு உணவுகளையும் மட்டும் பார்க்க அவர்களால் முடிந்தது

அதில் ஒரு ஆசிரியை இருந்தார், ஆச்சரியமாக அவர் மலேசிய பிறப்பு. தந்தை அந்நாளைய கோலாலம்பூர் போலிஸ் கமிஷனர் தமிழர். தமிழக பெண்ணை திருமணம் செய்ததால் இங்கு 13 வயது வரை வளர்ந்திருக்கின்றார் அதன் பின் முழுக்க இந்தியா வாசம்

35 வருடம் கழித்துவந்திருக்கின்றார், சில இடங்களில் அவர் முகத்தில் மவுனம் நிலவியது, என்ன என்று கேட்டால் அன்று என் தந்தையோடு வாகனத்தில் வரும்பொழுது இந்த சாலையோரம் போலிசார் சல்யூட் அடிப்பார்கள், இதோ இதுதான் அந்த அலுவலகம் என அந்த நினைவுகளில் மூழ்கினார்.

இங்கு வளர்ந்து இங்குள்ளவர்களாக மாறி இருக்கவேண்டிய அவர் வாழ்வு மாறி இருக்கின்றது, விதி

அவரும் கோலாலம்பூரினை மற்றவர்கள் போலவே ரசித்தார், 35 ஆண்டுகளில் இவ்வளவு மாற்றமா? என வியந்தார், எஞ்சியிருக்கும் பல உறவுகளை சந்தித்தார்.

கண்கள் கலங்கிய நேரமது

வந்தவர்கள் எல்லாம் கேட்ட கேள்வி, இங்கே ஏன் ஹார்ன் சத்தம் இல்லை? ஹாரன் அடிக்காமல் வண்டி ஓட்டிவது எப்படி முடியும்?

ஏன் குப்பைகள் இல்லை? இப்படி சுத்தம் எப்படி சாத்தியம்? என ஏராளமான கேள்விகள்.

ஒரே பதில் இந்தியாவில் எல்லாவற்றிலும் அரசியல் இருக்கும் வரை உருப்படாது என்பது அவர்களுக்கே விளங்கிற்று,

சில இடங்களில் வெள்ளையர்கள், ஆப்ரிக்கர்கள், கிழக்காசிய மக்கள் என எல்லோரும் கலந்து சனிகிழமை இரவினை தெருக்களில் கொண்டாடியபொழுது வாழ்க்கையினை இவ்வளவு ரசிக்கின்றார்களா? என ஆச்சரியபட்டார்கள்.

சிங்கப்பூர் செல்ல அவர்களுக்கு பேருந்து ஏற்பாடாயிற்று, குறித்த நேரத்தில் அழைத்து சென்றேன், பொது போக்குவரத்து ரயிலில் சென்று அங்கு இறங்கினோம்

“என்னய்யா நீரு, பஸ் ஸ்டாண்டுக்கு கொண்டுவரசொன்னா ஏர் போர்ட்டுக்கு கொண்டு வந்திரிக்கியரு..” என சீறினார் ஒருவர்

அது பேருந்து நிலையம் என சொல்லி நிரூபிக்க பெரும்பாடாயிற்று

அது என்னவோ தெரியவில்லை, மலேசிய அரசின் மக்கள் நலன் போக்குவரத்து அக்கறை அலாதியானது, உட்புறத்திற்கு பல, புற நகருக்கு 4 திசைகளிலும் ஒன்று, தொலை தூர பிரயாணிகளுக்கு ஒன்று என அசத்திகொண்டே இருப்பார்கள்.

போக்குவரத்து சிரமத்தை குறைக்க பேருந்துகளை முறையாக பிரித்து அவை வந்து செல்ல புற நகரிலே பேருந்து நிலையம் அமைப்பார்கள்.

அதனை ரயில்கள் மூலம் நகருக்குள் இணைத்தால் போக்குவரத்து சிக்கல் பெரும்பாலும் தீருகின்றது, பெருமளவு குறைகின்றது

அப்படி ஒரு அழகான பேருந்து நிலையத்தினை உலகதரத்தில் உருவாக்கி இருக்கின்றார்கள், அதுவும் விமான நிலையம் போலவே போர்டிங் பாஸ், செக்கியூரிட்டி செக், பேருந்து வந்துவிட்டதா/ கிளம்பிவிட்டதா என சொல்லும் டிஜிட்டல் போர்டுகள் என அசத்தி இருந்தார்கள், ஊழியர்களுக்கும் யூனிபார்ம்

பாஸ்போர்ட்டும், குடியுரிமை சோதனையும், விமானமும் இல்லாத விமான நிலைய வசதி அது.

ஏதும் ஆலோசனைகளை சொல்ல சில பார்ம்களும் இருக்கின்றது, குழுவிவில் ஒருவர் இது எதற்கு? என்றார், ஆலோசனை சொல்வதற்கு என்றேன்

நமது ஊருக்கு வந்து ஆலோசனை சொல்ல ஒரு கோரிக்கை எழுதி வைக்ககட்டுமா என்றார், கோயம்பேட்டில் ஏதும் அனுபவமாக இருக்கலாம்.

அந்த செக்கியூரிட்டி செக்கில் பிரயாணிகள் மட்டும் கடக்க முடியும் என்பதால் என்னால் செல்லமுடியவில்லை,

கொஞ்ச நேரம் பழகிவிட்டாலும் சில உறவுகள் நீரில் உப்பு போல கலந்துவிடுகின்றன, சில நெடுநாள் பழகினாலும் எண்ணெயும் நீருமாக ஒட்ட மறுக்கின்றன, மானிட விசித்திரம்

எல்லோரும் நன்றி என்றார்கள். எனக்கும் சொந்த மக்களை பிரிவது போன்றே இருந்தது, இரு நாட்களும் திருவட்டார் பகுதியில் இருப்பது போன்றே இருந்தது

எல்லோரும் நன்றி சொல்லி கிளம்பினார்கள், அந்த சகோதரியும் நன்றி என்றார்

முன்பே ஓரளவு அந்த சகோதரி தாத்தா பற்றி தெரிந்திருக்கின்றேன், 1930களில் மலேய ரப்பர் தோட்டத்திற்கு வந்தவர், பின்னாளில் ஏகபட்ட தமிழர்கள் அங்கு பணியாற்ற உதவினார் என்பார்கள்.

யாராவது தமிழர்கள் 1940 களில் அந்த டவுண்பக்கம் அலைந்தால், வேலை கிடைக்கும் வரை வீட்டில் வைத்து சோறுபோடுவது, அவர்களுக்கு யாரையாவது பிடித்து பணியில் அமர்த்துவது, அவர் குடும்பத்தாருக்கு ஒழுங்காக பணம் அனுப்புவாரா என கண்காணிப்பது என பல விஷயங்களை செய்வார் என்பார்கள்.

இந்தியாவின் தெற்கு பகுதியின் வீடுகளிலிருந்து அந்த ரப்பர் எஸ்டேட் பகுதியில் பணியாற்றுவோர் தொடர்பற்று போனால் முதல் தந்தி அவருக்குத்தான் பறக்கும் என்பார்கள்

அப்படி எல்லோருக்கும் உதவிய முத்திரை அவருக்கு இருந்திருக்கின்றது.

இன்று அவரின் பேத்தி நன்றி எனும்பொழுது எனக்கே சிலிர்த்துவிட்டது, எதற்கு என்றேன்?

எங்களோடு இரு நாட்கள் செலவிட்டதற்கு நன்றி என்றார்

“உங்கள் தாத்தா அக்காலத்தில் எத்தனையோ பேருக்கு உதவினார்களாம், அதுவும் மாதகணக்கில் ஆதரித்தாராம், இந்த உதவி எல்லாம் அதற்கு முன் நிற்குமா?

உங்கள் பணம் , உங்கள் பயணம்இரு நாட்கள் இந்த புதிய தேசத்தில் உங்களுக்கு உதவியாக இருந்தேன்..” அவ்வளவுதான் என்றேன்

மறுபடியும் நன்றி என்றார், அந்த கண்களில் அவரின் தாத்தா உருவம் தெரிந்தது

முன்னோர்களின் சில நினைவுகளை நாம் வாழ்நாளில் சந்திக்கும் ஏதோ ஒரு முகம் மறுபடி நினைவுபடுத்துகின்றது,

முன்னோர்கள் எங்கோ யாருக்கோ செய்த உதவியில் ஒரு துண்டேனும் அவர்கள் சந்ததிக்கு எங்கிருந்தோ கிடைக்கின்றது.

வாழ்வில் யாரோ ஒரு சம்பந்தமில்லாதவர் நமது முன்னோர்களை நினைக்க வைத்துவிடுகின்றார்.

அந்த சகோதரியின் பிரிவு நேர‌ பார்வை அதனைத்தான் சொன்னது.