சென்னையில் மழை தொடங்கிவிட்டது

சென்னையில் மழை தொடங்கிவிட்டது, மக்கள் குழுக்களாக பிரிந்து ஒருவேளை பெருவெள்ளம் வந்துவிட்டால் எதிர்கொள்வது எப்படி என கிளம்பிவிட்டார்கள்

ஒரு தலைவன் இருந்து நடத்துவதாக தெரியவில்லை, மாறாக மக்கள் குழுக்களாக அதனை செய்கின்றார்கள், 2015 வெள்ள அனுபவ எச்சரிக்கை அவர்களை அதனை செய்ய வைக்கின்றது

உண்மையில் மகா ஆச்சரியமான விஷயம் இது, இந்நகரத்து யதார்த்தத்தை புரிந்துகொண்டார்கள், நமக்கு நாமே என கிளம்பிவிட்டார்கள்

மனிதநேயம், திட்டமிடல், தங்களை தற்காத்து கொள்ளும் துணிச்சல், மத இனங்களை கடந்து இயற்கை சீற்றத்தில் எப்படி நிற்க வேண்டும் என உலகிற்கே பாடம் நடத்துகின்றார்கள்

நிச்சயம் பாராட்டபட வேண்டிய விஷயம் இது

ஒன்று புரிகின்றது, ஒரு அரசு இருப்பதாகவோ அல்லது ஒரு மாநகராட்சி இருப்பதாகவோ யாரும் சட்டை செய்யவில்லை

அது மகா உண்மை என்பது போல அரசும் அதுபோக்கில் உறங்கிகொண்டிருக்கின்றது, உருப்படியான எந்த நடவடிக்கையும் காணோம், விடுமுறை அதனால் எல்லோரும் வீட்டில் முடங்குங்கள் என சொல்லிவிட்டு அவர்கள் போக்கில் இருக்கின்றார்கள்

மழை பெய்தால் விடுமுறை விடும் அளவிற்கு கட்டமைப்பு வசதிகள் உள்ளது என்பது மாபெரும் வெட்ககேடு, தலைகுனிவு.

மக்களோ கொஞ்சமும் முடங்காமல் நமக்கு நாமே என கிளம்புகின்றார்கள், எங்களை காப்பாற்றிகொள்ள்ளும் வழி எமக்கு தெரியும் என முந்தி நிற்கின்றார்கள்.

மாநில அரசுக்கு இதனை விட பெரும் அவமானம் ஏதுமில்லை,

கொஞ்சமேனும் சிந்திக்கும் திறனும் மான உணர்ச்சியும் இருந்தால் ஜெயா சமாதியில் விடியற்காலையில் ராஜினாமா கடிதம் எழுதி வைத்துவிட்டு எங்காவது ஓடிவிடலாம், அவ்வளவு பெரும் அவமானம் இது

இப்பொழுது ஆளும்வர்க்கத்திற்கு இந்த அவமானம் புரியாவிட்டாலும், மழை வலுத்து வெள்ளம் வந்தால், “மந்திரி சபையும் முதல்வரும் எங்களை தொடர்பு கொண்டால் மீட்டு வந்து தங்க இடமும் ,
உணவும் தருவோம்” என மக்கள் சொல்லும்பொழுது நிச்சயம் புரியும்

அதற்குத்தான் தயாராகின்றார்கள் சென்னை மக்கள்.

இந்த எழுச்சிமிக்க சென்னையினை இனி மழைவெள்ளம் என்ன? வட கொரிய அதிபர் கூட மிரட்ட முடியாது.