சேவல் விருத்தம் : 01
பறவை இனங்களில் தனித்து நிற்பது சேவல்
அது விழிப்பானது, அதிகாலையிலே எழுந்து எல்லோரையும் எழுப்பும் குணம் கொண்டது, போர்குணம் அதிகமானது, எளிதில் பின்வாங்காதது, தலமையேற்று செல்லும் சக்தி கொண்டது, மறைந்திருக்கும் விஷயங்களை கிளறி வெளி கொண்டுவரும் இயல்பு அதனுடையது
அந்த சேவலின் குணத்தை கவனமாக படித்த ரிஷிகள் முருகனின் கொடியின் அடையாளமாக அதை வைத்தார்கள்
ஆன்மாவுக்கு இருக்க வேண்டியவை வைராக்கியம், விழிப்பு, மறைந்திருப்பதை தேடுதல், தைரியம் என சில குணங்கள் அந்த குணங்களை கொண்ட ஆத்மா ஞானத்தை அடைந்து முக்தியடையும்
அதைத்தான் சேவல் கொடி தத்துவம் சொல்கின்றது
கொடி என்பது வெற்றியின் அடையாளம், ஆட்சியின் அடையாளம், சேவலுக்குரிய குணங்களை கொண்டிருக்கும் ஆத்மா முருகனின் ஆட்சிக்குள் அவன் காவலில் செல்கின்றது என்பதே சேவல் கொடியின் தத்துவம்
வேல் எனும் ஞானத்தையும், மயில் எனும் ஆன்மாவினையும் பாடிய அருணகிரிநாதர் இப்பொழுது ஆன்மாவுக்கான வைராக்கிய குணத்தையும் சேவல் விருத்தமாக பாடுகின்றார்
இதோ முதல் பாடல்
“உலகிலநு தினமும்வரும் அடியவர்கள் இடரகல
உரியபர கதிதெ ரியவே
உரகமணி எனவுழலும் இருவினையும் முறைபடவும்
இருள்கள்மிடி கெட அருளியே
கலகமிடும் அலகைகுறள் மிகுபணிகள் வலிமையொடு
கடினமுற வரில் அவைகளைக்
கண்ணைப் பிடுங்கியுடல் தன்னைப் பிளந்துசிற
கைக்கொட்டி நின்றா டுமாம்
மலைகள்நெறு நெறுநெறென அலைகள்சுவ றிடஅசுரர்
மடியஅயில் கடவு முருகன்
மகுடவட கிரியலைய மலையுமுலை வநிதைகுற
வரிசையின மகளவ ளுடன்
சிலைகுலிசன் மகள்மருவு புயன்இலகு சரவணச்
சிறுவன்அயன் வெருவ விரகிற்
சிரமிசையில் வெகுசினமொ டடியுதவும் அறுமுகவன்
சேவற் றிருத்துவசமே”
முதல்வரி இதோ
“உலகிலநு தினமும்வரும் அடியவர்கள் இடரகல
உரியபர கதிதெ ரியவே”
இவ்வரி “உலகில் அநுதினமும் வரும் அடியவர்கள் இடர் அகல உரிய பரகதி தெரியவே
அதாவது இவ்வுலகில் முருகபெருமானின் அடியவர்களுக்கு நாள்தோறும் ஏற்படும் இடைஞ்சல்கள் நீங்கும்படியும் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய முக்தி தெரியும்படி என பொருள்
இரண்டாம் வரி இப்படி வருகின்றது
“உரகமணி எனவுழலும் இருவினையும் முறைபடவும்
இருள்கள்மிடி கெட அருளியே”
இவ்வரி “உரகமணி என உழலும் இருவினையும் முறைபடவும் இருள்கள் மிடி கெட அருளியே” என பிரியும்
அதாவது ரத்தினத்தை தாங்கும் சர்பங்கள் (உரக மணி) அலைந்து திரிகின்ற, நல்வினை தீவினை இரண்டும் அழிய (இருவினை முறபட) , இருளும் துன்பமும் (மிடி) நீங்க அருளிய என பொருள்
இனி மூன்றாம் வரி
“கலகமிடும் அலகைகுறள் மிகுபணிகள் வலிமையொடு
கடினமுற வரில் அவைகளைக்”
இவ்வரி “கலகமிடும் அலகை குறள் மிகு பணிகள் வலிமையொடு கடினமுற வரில் அவைகளைக்” என பிரிந்து பொருள் தரும்
அதாவது இடைஞ்சல்கள் செய்யும் (கலகமிடும்) பேய்களையும் குட்டி சாத்தான்களும் (அலகை) முழு பலத்தோடு (தங்கள் இயல்பில்) வலிமையோடு (முழு பலத்தோடு) பெரும் துன்பம் தரவந்தால் (கடினமுற வரில்) அவைகளையெல்லாம் என பொருள்
நான்காம் வரி இதோ
“கண்ணைப் பிடுங்கியுடல் தன்னைப் பிளந்துசிற
கைக்கொட்டி நின்றா டுமாம்”
இவ்வரி “கண்ணைப் பிடுங்கி உடல் தன்னைப் பிளந்து சிற கைக்கொட்டி நின்று ஆடுமாம்” என பிரிந்து பொருள்தரும்
அதாவது அவைகளின் கண்ணை பிடுங்கி உடலை பிளந்து சிறகை அடித்து நின்று ஆடுமாம் என பொருள் தரும்
(அந்த சேவல் எது என்றால்..)
ஐந்தாம் வரி இதோ
“மலைகள்நெறு நெறுநெறென அலைகள்சுவ றிடஅசுரர்
மடியஅயில் கடவு முருகன்”
இவ்வரி “மலைகள் நெறு நெறு நெறு என அலைகள் சுவறிட அசுரர் மடிய அயில் கடவு முருகன்” என பிரிந்து பொருள் தரும்
அதாவது உலகிலுள்ள மலைகள் அனைத்து நறுநறுவென பொடிபடவும் சமுத்திரம் வறண்டு போகவும் அரக்கர் அனைத்தும் இறந்து போகவும் தன் வேலை வீசிய (அயல் கடவு) முருகபெருமானின் என பொருள்
ஆறாம் வரி இதோ
“மகுடவட கிரியலைய மலையுமுலை வநிதைகுற
வரிசையின மகளவ ளுடன்”
இவ்வரி “மகுடவட கிரி அலைய மலையும் முலை வநிதை குற வரிசை இன மகள் அவளுடன்” என பிரியும்
அதாவது சிகரங்களை உடைய (மகுடவட) மேருமலை தோற்கும் படி (அலைய) ஏதிர்த்து போர் செய்கின்ற, பெரிய மார்பகங்களை உடைய பெண்ணும் (முலை வனித) குறவர் குல மகளான வள்ளியுடனும் (குறவரிசை இனமகள் அவளுடனும்) என பொருள்
இனி ஏழாம் வரி
“சிலைகுலிசன் மகள்மருவு புயன்இலகு சரவணச்
சிறுவன்அயன் வெருவ விரகிற்”
இவ்வரி “சிலை குலிசன் மகள் மருவு புயன் இலகு சரவணச் சிறுவன்அயன் வெருவ விரகில்” என பொருள் தரும்
அதாவது ஆக்ரோஷமான வஜ்ராயுதத்தை ஏந்தியுள்ள இந்திரனின் மகள் தேவயானையினையும் (சிலை குலிசன் மகள் மருவு புயன் ) அணைத்திருக்கும் பன்னிரு புயங்களை (மருவ புயன்) உடையவன், விளங்கும் சரவண பொய்கையில் உதித்தவன் (இலகு சரவண சிறுவன்) பிரம்மனே அஞ்ச (அயன் வெறுவ) ஞானமுடன் (விரகில்) என பொருள்
கடைசி வரி இதோ
“சிரமிசையில் வெகுசினமொ டடியுதவும் அறுமுகவன்
சேவற் றிருத்துவசமே”
அதாவது “சிரமிசையில் வெகுசினமொடு அடி உதவும் அறுமுகவன் சேவல் திருத் துவசமே” என பிரிந்து வரும்
அதாவது பிரம்மனின் தலையில் குட்டி அருளிய (சிரமிசையில்) சன்முகபெருமான் அவன் கொடியில் அமர்ந்துள்ள சேவலே அது (சேவல் திருத் துவசமே) என பொருள்
ஆக பாடலின் பொருள் இதுதான்
இப்பூவுலகில் முருகப் பெருமானின் அடியவர்களுக்கு நாள்தோரும் ஏற்படும் இடஞ்சல்கள் நீங்கும்படியும் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய லட்சியமாகிய முக்தியை காண்பித்தருளியும், படத்தில் ரத்தினத்தைத் தாங்கி இருக்கும் சர்ப்பங்கள் போல அலைந்து திரிகின்ற, நல்வினை தீவினை இரண்டும் அழியவும், அஞ்ஞான இருளாகிய பொருள் வறுமை அறிவு வறுமை ஆகிய இரண்டும் அழிந்து ஒழியும்படி, அருள் செய்யவும்
இடஞ்சல்கள் செய்துவரும், பேய்களும் குட்டிச் சாத்தான்களும், கொடிய பாம்புகள், மிகுந்த பலத்துடன், பெரும் துன்பத்தை தர வந்தால், அவைகளை எல்லாம், கண்களைப் பிடுங்கியும் தேகங்களைப் பிளந்தும், தனது சிறகுகளைக் அடித்துக் கொண்டு வெற்றிக் களிப்புடன் நின்று கூத்தாடும்
(அது எது என வினவினால்)
உலகில் உள்ள மலைகள் அனைத்தும் பொடிபடவும், சமுத்திரம் வற்றி வறண்டு பொகவும், அரக்கர்கள் அனைவரும் இறந்து மடியவும், வேலாயுதத்தைப் பிரயோகித்த முருகப் பெருமான், சிகரங்களை உடைய மேருமலை தோல்வி அடையும்படி, எதிர்த்து போர் செய்கின்ற, தன பாரங்களை உடைய பெண்ணும், வேடர் குடி மக்களாகிய, புகழ் மிக்க, அந்த குலத்தில் பிறந்த வள்ளிப் பிராட்டியையும்
கோபமுடைய வஜ்ராயுதத்தை ஏந்தியுள்ள இந்திரனின் திருமகளாகிய தேவயானையையும், அணைத்திருக்கும் பன்னிரு திருப்புயங்களை உடையவன், விளங்கும் சரவணப் பொய்கையில் உதித்த குமாரன், பிரம தேவன் அஞ்சும்படி, வெகு சாமர்த்தியமுடன், தலையில், மிகுந்த கோபத்துடன் குட்டி அருளிய, சண்முகப் பெருமானின் கொடியில் அமர்ந்துள்ள சேவலே தான் அது.
இப்பாடல் நேரடியாக இப்பொருளை சொன்னாலும் அது கொடுக்கும் ஞானபோதனை பெரிது
முருகபெருமானை நினைத்து தவமிருப்பவர்களுக்கு பெரும் இடைஞ்சல்கள் வரும், முக்தி என்பது எளிதில் கைகூடமுடியாதபடி பெரும் சிக்கல்களெல்லாம் வரும், அந்த சிக்கல்களை எதிர்கொள்ள வைராக்கியம் வேண்டும்
முருகனை வழிபட்டால் அந்த வைராக்கியம் எனும் உறுதி இடைக்கும்
படமெடுத்து ஆடும் நாகம் என்பது குண்டலினி சக்தியினை குறிப்பது, அந்த குண்டலினி சக்தியின் உச்சியில் ரத்திரனம் ஜொலிக்கும் என்பது யோகத்தின் கடைசிநிலையில் திறக்கும் துரிய சக்கரத்தை சொல்கின்றது, அந்த பெரும் ஞானயோக நிலை வாய்க்கும் பொழுது கர்மவினை எனும் நல்வினை தீவினை என இரண்டும் அழியும்
அந்த நிலையினை வைராக்கியமான தவம் கொடுக்கும் முருகன் அருள் அந்த உறுதியினை அருளும்
இங்கு பேய்கள் குட்டிசாத்தான்கள் என்பது மாயைகளை குறிப்பது, ஒரு ஆத்மா முக்தி அடைவதை தடுக்கவும் யோகநிலை கலையவும் மாயைகள் சூழ வந்து தொல்லை கொடுக்கும்
முருகபெருமானிடம் வேண்டினால் அந்த மாயைகளை வெல்லும் வைராக்கியமும் தைரியமும் ஆற்றலும் நமக்கு கிடைக்கும் என்கின்றார் அருணகிரியார்
முருகனின் வேல் பெரும் மலைகளை தகர்த்தது பெரும் கடலை வற்ற செய்தது அரக்கர்களை ஒழித்தது என்பது அவன் ஞானத்தினால் வரும் யோகம் பெரும் தடைகளை தாண்டி மனதின் ஆசைகளை வற்றவைத்து துர்குணங்களை ஒழிக்கும் என பொருள்
முருகனை வழிபட்டு சரணடைந்தால் ஆத்மாவுக்கு பெரும் வைராக்கியம் வரும் , வைராக்கியமும் உறுதியும் பின்வாங்காத குணமும் விழிப்பும் கொண்ட ஆத்மா எல்லா இடையூறுகளையும் உடைத்து முக்தி அடையும் என்பது பாடலின் ஞான தத்துவம்