சேவல் விருத்தம் : 10

மகரசல நிதிசுவற உரகபதி முடிபதற
மலைகள்கிடு கிடுகிடெனவே
மகுடகுட வடசிகரி முகடுபட படபடென
மதகரிகள் உயிர்சிதறவே
ககனமுதல் அண்டங்கள் கண்டதுண் டப்படக்
கர்ச்சித் திரைத்தலறியே
காரையா ழிந்நகரர் மாரைப் பிளந்துசிற
கைக்கொட்டி நின்றாடுமாம்

சுகவிமலை அமலைபரை இமையவரை தருகுமரி
துடியிடைய னகையசலையாள்
சுதன் முருகன் மதுரமொழி உழைவநிதை
இபவநிதை துணைவனென திதயநிலையோன்
திகுடதிகு டதிதிகுட தகுடதித குடதிகுட
செக்கண செகக்கணஎனத்
திருநடனம் இடுமயிலில் வருகுமர குருபரன்
சேவற் றிருத் துவசமே.

முதல்வரி இதோ

“மகரசல நிதிசுவற உரகபதி முடிபதற
மலைகள்கிடு கிடுகிடெனவே”

அதாவது மகர மீன்கள் வாழும் கடல் வற்றிப் போகவும் (மகர சலநிதி சுவற) ஆதிசேஷனின் ஆயிரம்
முடிகளும் பதறவும் (உரகபதி முடி பதற) மலைகள் கிடு கிடு என நடுங்கவும் என பொருள்

இரண்டாம் வரி இதோ

“மகுடகுட வடசிகரி முகடுபட படபடென
மதகரிகள் உயிர்சிதறவே”

சிகரங்களைக் கொண்ட குடம் போல் திரண்ட (மகுட குட ) மேரு மலையின் (வடசிகரி) உச்சிகள் நடுங்கவும் அங்கிருக்கும் மதம்பிடித்த யானைகள் வீழவும் (முகடுபட படபடென மதகரிகள் உயிர்சிதறவே) என்பது பொருள்

இனி மூன்றாம் வரி

“ககனமுதல் அண்டங்கள் கண்டதுண் டப்படக்
கர்ச்சித் திரைத்தலறியே”

தேவலோகம் முதல் (ககன முதல்) எல்லா அண்டங்களும் கண்ட துண்டப் பட எல்லா உலகங்களும் துண்டு
துண்டாகச் சிதறவும் பெரும் ஆரவாரம் செய்த (கர்ச்சித்து அலறி)

இனி நான்காம் வரி

“காரையா ழிந்நகரர் மாரைப் பிளந்துசிற
கைக்கொட்டி நின்றாடுமாம்”

ச‌முத்திரக் கரையில் உள்ள காரையாழி நகரில் வாழ்ந்த அசுரர்களின் மார்பைப் பிளந்து தன்னுடைய சிறகுகளை அடித்துக்கொண்டு களிப்புடன் நடனம் ஆடுமாம் என்பது பொருள்

இனி ஐந்தாம் வரி

“சுகவிமலை அமலைபரை இமையவரை தருகுமரி
துடியிடைய னகையசலையாள்”

சுக சொரூபியானவள் (சுகவிமலை ) குற்றமற்ற பரிசுத்தமானவள் (அமலை) , பரை (பராசக்தி) , யமராஜன் தந்த மடந்தை (இமயவரை தரு குமரி) உடுக்கையின் இடுப்பினைபோல் வடிவு கொண்ட அனகை (பயமற்றவள்), அசலை (அசையா தன்மை கொண்ட உறுதியானவள்)

இனி ஆறாம் வரி

“சுதன் முருகன் மதுரமொழி உழைவநிதை
இபவநிதை துணைவனென திதயநிலையோன்”

பார்வதி தேவி தந்த திருக் குமாரன் (சுதன்) முருகன், தேன் போன்ற இனிய மொழியை பகரும் மான் மகளான வள்ளிப் பிராட்டி ( மதுரமொழி உழைவநிதை) ஐராவதம் வளர்த்த தேவசேனை (இபவநிதை) துணைவனென்ன இதயத்தில் இருப்பவன் (எனது இதய நிலையோன்)

ஏழாம் வரி இதோ

“திகுடதிகு டதிதிகுட தகுடதித குடதிகுட
செக்கண செகக்கணஎனத்

திகுட திகு எனும் ஒலியுடன் செக்க சிவந்த கண்களுடன் என பொருள்

இனி கடைசிவரி

“திருநடனம் இடுமயிலில் வருகுமர குருபரன்
சேவற் றிருத் துவசமே”

அப்படி நடனமிடும் மயிலில் பவனிவரும் குமரகுருபரனின் கையில் இருக்கும் கொடியில் வீற்றிருக்கும் சேவலே அது எனபது பொருள்

ஆக பாடலின் பொருள் இதுதான்

“மகர மீன்கள் வாழும் கடல் வற்றிப் போகவும், சர்ப்ப ராஜனான ஆதிசேஷனின் ஆயிரம் முடிகளும் பதறவும், மலைகள் கிடு கிடு என நடுங்கவும், சிகரங்களைக் கொண்ட, குடம் போன்ற திரட்சி உடைய, மேரு மலையின், உச்சிகள் படபடென நடுங்கவும், மத யானைகளின் உயிர் பயத்தால் பிரியவும்

தேவலோகம் முதல், எல்லா உலகங்களும் துண்டு துண்டாகச் சிதறவும், பெருத்த ஆரவாரம் செய்து, சமுத்திரக் கரையில் உள்ள காரையாழி நகரில் வாழ்ந்த அசுரர்களின், மார்பைப் பிளந்து தன்னுடைய சிறகுகளை அடித்துக்கொண்டு களிப்புடன் நடனம் ஆடுமாம்

(அது எது என வினாவினால்)

சுக சொரூபியானவள், மலமற்றவள், பராசக்தி, இம ராஜன் தந்தருளிய மடந்தை, உடுக்கை போன்ற இடுப்யை உடையவள், பயமற்றவள், மலை போன்று சலனமில்லாமல் இருப்பவள், இப்பேர்ப்பட்ட பார்வதி தேவி தந்த திருக் குமாரன்

ஞானமும் அறிவும் இளமையும் உடையவன், தேன் போன்ற இனிய மொழியை பகரும் மான் மகளான வள்ளிப் பிராட்டி, ஐராவதம் வளர்த்த தேவசேனை, இவர்களின் துணைவன், எனது உள்ளத்தில் என்றும் நிலைத்து இருப்பவன், எனும் ஒலியுடன், நடனமிடும் மயில் வாகனத்தில், பவனி வரும் குமரகுரு மூர்த்தியின் கொடியில் உள்ள சேவலே தான் அது.”

இப்பாடல் மனதடக்கி செய்யும் யோகத்தையும் அதனால் எழும் குண்டலி சக்தியின் பலனையும் மறைமுகமாக சொல்கின்றது

முருகனை நினைந்து பணிந்து தவமிருந்தால் மனதின் ஆசைகடல் வற்றும் அங்கிருக்கும் வெளிதெரியா பேராசைகளெல்லாம் அழியும் என சொல்லும் அருணகிரி நாதர், குண்டலி சக்தி தலைக்கு ஏறும் அந்த நுணுக்கத்தை மலைசிகரங்களெல்லாம் வெடிப்பதாக சொல்கின்றார்

குடம் போன்ற மூலாதாரத்திலிருந்து எழும் சக்தி உச்சந்தலைக்கு செல்லும் பொழுது மனிதனை மதம்பிடிக்க வைக்கும், மதம்பிடித்த யானைபோல் ஆட்டுவிக்கும் ஆசாசாபம் அகங்காரமெல்லாம் அழியும் பெரும் ஞானநிலை கிட்டும் என்பதை சொல்கின்றார் அருணகிரியார்

முருகனை பணிந்தால் குண்டலினி சக்தி எழுந்து சிரசுக்கு வரும் அந்நிலையில் பேராசையும் அகங்காரமும் ஒழிந்து ஞானம் பெருகும் என்பது பாடலின் பொருள்

இங்கு குற்றமில்லா அன்னை பார்வதிபற்றியும் பாடுகின்றார் அருணகிரியார்

அன்னை தேவி முருகனை வளர்த்தவள், முருகனுக்கு ஞானமும் அறிவும் கொடுத்து வேலும் கொடுத்தவள்

அந்த பரிசுத்தமான அன்னை தன் மகனை மிக பரிசுத்தமாக வளர்த்தாள், அதனால் முருகனும் மிக மிக பரிசுத்தமானவன், அவன் பாதம் பணிந்தால் மானிட ஆத்மாவும் மாசுநீங்கி கர்மவினை நீங்கி சுத்தமான ஞானத்தில் ஜொலிக்கும் என்பது பாடலின் பொருள்