ஜம்பு தீவு பிரகடன நாள்

1800களில் மொகலாயருக்கும் மராட்டிய பேரரசுக்கும் இடையே நடந்த தீரா போர்களிலும், சீக்கிய எழுச்சி மொகலாயருக்கு கொடுத்த அடியிலும் குழம்பி கிடந்தது பாரத கண்டம்

இதனால் எல்லை பகுதியிலும் தொலைதூரத்திலும் குழப்பம் நிலவிற்று அந்த குழப்பம் ஆங்கிலேயருக்கு சாதகமாயிற்று, ஆற்காடு நவாப் வழியாக தமிழகத்தில் ஊடுருவினார்கள், அக்காலத்தின் குழப்பம் அவர்களுக்கு சாதகமாயிற்று

மொகலாயரின் சரிவுக்கு பின் அவர்கள் பிரநிதிகளான ஆற்காடு நவாபுக்கு தமிழக இந்து மன்னர்களும் நாயக்கர்களும் அடங்கமறுக்க போர்கள் வெடித்தன, சில போர்கள் நவாப் குடும்பத்துக்குள்ளே வெடித்தன‌

ராபர்ட் கிளைவ் அதை பிரிட்டிசாருக்கு வாய்ப்பாக்கி அவர்கள் ஆட்சிக்கு வித்திட்டான், வரிவசூல் செய்யும் உரிமை அதாவது அடாவடி வரிவசூல் பிரிட்டிசாருக்கு வழங்கபட்டது அவ்வகையில் பிரிட்டிஷ் ஆட்சி தமிழகத்தில் தொடங்கிற்று, ஒற்றுமையில்லா இந்துமன்னர்களை வீழ்த்திய வெள்ளையன் சிவகங்கை சீமைக்கு குறிவைத்தான்

முத்துவடுகநாதரும் வீரமங்கை வேலுநாச்சியாரும் சரிக்கபட்டாலும் மருதுபாண்டியர் வீரபோரை தொடர்ந்தார்கள், அவர்களின் சிந்தனையும் போக்கும் விசாலமாயிருந்தது

தனியே சிவகங்கைக்கு மட்டும் போரிடாமல் எல்லா மன்னர்களையும் திரட்டி இந்திய விடுதலை என பெரும் திட்டம் தீட்டினார்கள், இதனில் கட்டபொம்மனின் தம்பி ஊமைதுரை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்

வெள்ளையனின் பலமே பிரிந்த கூட்டத்தில் குழப்பம் விளைவித்து அடிப்பது, இந்திய இந்து மன்னர்கள் ஒன்றுபடுவதை அவன் முளையிலே கிள்ள திட்டமிட்டான், அவனுக்கும் சில கைகூலிகள் கிடைத்தார்கள்

1800ம் ஆண்டு பிரிட்டிஷ் தளபதி அக்னியு மருதுபாண்டியரை அடக்க திருச்சி பக்கம் முகாமிட்டான், அவன் சிவகங்கை சீமையின் உண்மையான வாரிசு தங்கள் கைகூலியான பொம்மை கெளரி வல்லப பெரிய உடையாத் தேவர் என்று அறிவித்தான், அவர்தான் சிவகங்கை அரச குடும்பம் என்றும் மருது சகோதரர்கள் அடாவடியாக அரசை கைபற்றி இருப்பதாகவும் அவர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என அறிவித்தான்

மருது சகோதரர்கள் இதை கண்டு பொங்கி தாங்கள் இந்நாட்டின் விடுதலையினை வேண்டி நிற்பவர்கள் என்றும், மக்கள் அதை புரிந்துகொண்டு துரோகிகளுக்கு இடமளிக்க கூடாது என்றும் கோரிக்கைவிடுத்தனர்

வெள்ளையர் வரிபிரிக்க வந்த பகுதிகள் வெட்டுகிளி கூட்டம் புகுந்த காடுகளைவிட பாழாயின, கடல் கடந்து வியாபாரத்துக்கு வந்த அக்கூட்டம் இந்தியாவின் செல்வத்தை மிக கடுமையாக சுரண்ட பெரும் கொடும்வரிகளை விதித்தது

அதனால் பஞ்சமும் ஏழ்மையும் தென்னகத்தில் உருவாயின, விளையும் விளைச்சலெல்லாம் வரி என உறிஞ்சபட ஏழ்மை தலைவிரித்தாடிற்று

அந்நிலையில்தான் இந்த ஏழ்மைகும் வறுமைக்கும் காரணம் பிரிட்டிசார்தான் என்றும் அவர்களை விரட்டவேண்டிய அவசியத்தை வலியுறுத்தியும் ஜம்பு தீவு பிரகடனத்தை வெளியிட்டனர் மருது சகோதரர்கள்

அது 1801 இதே ஜூன் 16ம் தேதி

ஆங்கில படைகள் இருந்த திருச்சி மலைகோட்டை வாசலிலும், திருவரங்க கோவில் வாசல் அருகிலும் ஆட்டு தோலில் எழுதபட்ட அந்த அறிவிப்பு ஒட்டபட்டிருந்தது

வீரசிவாஜியின் இந்து ராஜ்ய அறிவிப்புக்கு பின் இந்தியாவில் இந்து மன்னர்களை திரட்டும் அறிவிப்பு அதுதான், அவ்வகையில் அது ஆங்கிலேயரை அலறவிட்டது

இந்து மன்னர்கள் ஒன்றினைத்தால் என்னாகும் என்பதை அறிந்த வெள்ளையன் பதறினான்

நாவல் மரம் மிகுந்த தென்னிந்தியாவுக்கு நாவலந்தீவு என்றொரு பெயர் உண்டு, நாவல் மரத்தின் வடமொழியான ஜம்பு எனும் பெயரில் அது ஜம்புதீவு என்றும் ஆனது

அந்த பெரும் இந்திய பகுதிக்கு விடுதலை கோரித்தான் அந்த பிரகடனத்தை வெளியிட்டனர் மருதிருவர், இந்துக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் துரோகிகளை ஒழிக்கவேண்டும் என்றும் அழைப்பு விடுத்தனர்

அந்த அறிவிப்பு இதுதான்

“இதை காண்போர் அனைவரும் கவனத்துடன் படிக்கவும்’மேன்மை தாங்கிய நவாபு முகமது அலி ஐரோப்பியர்களுக்கு நம்மிடையே இடங்கொடுத்து விட்டதன் காரணமாக ஐரோப்பியர்கள் தங்கள் வாக்குறுதிகளை மீறி அவரது அரசாங்கத்தையே தங்களுடையதாக ஆக்கி நாட்டு மக்கள் அனைவரையும் நாய்களாக கருதி ஆட்சி அதிகாரம் செய்து வருகின்றனர்.

மக்கள் பெரிதும் ஏழ்மையில் உழல்கின்றனர். சோற்றுக்குப் பதில் நீராகாரம்தான் உணவு என்று ஆகிவிட்டது. 1,000 ஆண்டுகள் வாழ்வதாக இருந்தாலும் மனிதன் கடைசியில் செத்துத்தான் ஆக வேண்டும். ஆதலால் பாளையங்களில் உள்ள ஒவ்வொருவரும் போர்க்கோலம் பூண்டு ஒன்றுபட வேண்டும்.

ஆதலால் மீசை வைத்துக் கொண்டிருக்கும் நீங்கள் எல்லோரும் ராணுவம் அல்லது மற்ற தொழில்களில் ஈடுபட்டிருக்கும் நீங்கள் அந்நியன் கீழ் தொண்டுபுரியும் சுபேதார்கள், அவில்தார்கள், நாயக்கர்கள், சிப்பாய்கள் மற்றும் போர்க் கருவிகளைப் பயன்படுத்தும் எல்லாரும் உங்களுக்கு வீரமிருந்தால் அதை கீழ்க்கண்டவாறு நீங்கள் வெளிப்படுத்த வேண்டும்.

ஐரோப்பியர்களை எவ்விடத்தில் கண்டாலும் கண்ட இடத்தில் அவர்களை அழித்துவிட வேண்டும். அவர்களுக்கு எவனொருவன் தொண்டூழியம் செய்கிறானோ அவனுக்கு இறந்தபின் மோட்சம் கிடையாது என்பதை நான் உறுதியாகக் கூறுவேன். ஒட்டப்பட்ட இந்த அறிவிப்பை சுவற்றிலிருந்து எவனொருவன் எடுக்கிறானோ அவன் பஞ்சமா பாதகங்களை செய்தவனாகக் கருதப்படுவான்.

இப்படிக்கு

மருது பாண்டியன் , பேரரசர்களின் ஊழியன், ஐரோப்பிய ஈனர்களின் ஜென்ம விரோதி”

இந்த அறிவிப்புக்கு பின் மிக பெரும்வகையில் போர் தொடுத்து அந்த கொடியவன் அக்னியூ மருதுபாண்டியரை வீழ்த்தினான் அதுவும் காளையார் கோவில் கோபுரத்தை தகர்ப்பதாக கூறி சின்னமருதுவினை கொன்றொழித்தான்

மருதுபாண்டியரோடு சேர்ந்து ஆயிரகணக்கான மக்கள் கொல்லபட்டனர், தங்கள் ஆட்சியினை நிலைக்க வைக்க மொத்த மக்களையும் அழித்து அந்த ரத்த சகதியில் ஆட்சியினை நிறுவினான்

அடுத்த 50 ஆண்டுக்குள் பாரதம் வெள்ளையன் பிடிக்குள் சென்றது, 1857ல் சிப்பாய் கலகம் எனும் முதல் விடுதலைபோர் தோற்றபின்புதான் மருதுபாண்டியர் சொன்ன ஜம்புதீவு பிரகடனம் இந்தியருக்கு புரிந்தது

பின் அவர்கள் வழியில் மொத்த இந்தியாவும் திரண்டு அடித்தபின் வெள்ளையன் வெளியேறினான்

இந்தியாவில் பிரிட்டிசாரை மிக கடுமையாக எச்சரித்து உயிர்விட்டவர்களும், இந்தியர் ஒன்றுசேராமல் வெற்றி இல்லை என சொன்னவர்களும் அந்த மருதுபாண்டியர்கள்

இன்று அந்த ஜம்பு தீவு பிரகடன நாள்

திருச்சியில் அந்த பிரகடனம் ஒட்டபட்ட இடத்தில் ஏதும் நினைவு சின்னம் உண்டா என்றால் இல்லை, அப்படி ஒரு கோரிக்கை முன்புவைக்கபட்டபொழுது காங்கிரஸ் அரசே செய்யவில்லை

இப்பொழுது முன்னாள் காங்கிரஸ்காரரான திருநாவுக்கரசு எம்பி அதே கோரிக்கையினை முன் வைக்கின்றார்

இவ்விவகாரத்தில் அரசியல் பேதம் பார்க்காமல் பாஜக அரசும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் கோரிக்கைக்கு செவிமடுத்து அங்கு நினைவு சின்னம் வைத்தல் அவசியம், பாஜக அதை செயல்படுத்தும் என எதிர்பார்ப்போம்,

நிச்சயம் அதை செய்வார்கள் மிக விரைவில் ஜம்பு தீவு பிரகடனம் ஒட்டபட்ட இடத்தில் நினைவு சின்னம் வைக்கபடும் என தேசம் இந்நாளில் எதிர்பார்க்கின்றது