ஜூலை 4 : அமெரிக்க சுதந்திர தினம்
இன்றைய உலகின் நம்பர் 1 வல்லரசு நிச்சயம் அமெரிக்கா, அதில் எவ்வித சந்தேகமும் இல்லை, மிக பெரும் வல்லரசாக அது தன் கொடியினை உயர பறக்கவிட்டு கொண்டே இருக்கின்றது, அதன் செங்கோல் உலகை ஆளத்தான் செய்கின்றது
நாளை அவர்களின் சுதந்திர நாள், இன்றே கொண்டாட்டம் தொடங்கியாயிற்று
செவ்விந்தியர், மாயர், இன்கா என பல பழங்குடிகள் வாழ்ந்திருந்தாலும், வைகிங் போன்ற நாடோடிகள் வசித்திருந்தாலும் அதன் நவீன வரலாறு கொலம்பஸும், அமெரிக்கோ வெஸ்புகியும் கால் வைத்த காலங்களுக்கு பின் தொடங்கின
ஸ்பெயின், பிரிட்டன், பிரான்ஸ் என எல்லா நாடுகளும் அங்கு காலணி அமைத்தன. போர்சுக்கல்லுக்கும் ஸ்பெயினுக்குமான சண்டையில் போப்பாண்டவர் கிழக்காசியா போர்த்துகீசியருக்கு, அமெரிக்கா ஸ்பெயினுக்கு என தீர்ப்பிட்ட பின் போர்ச்சுகல் ஒதுங்கியது
அமெரிக்காவில் 13 இடங்களில் பிரிட்டன் குடியேற்றம் இருந்தது, பிரான்ஸ் குடியேற்றமும் இருந்தது
ஐரோப்பாவில் இருந்த, இந்தியாவில் இருந்த பிரென்ஞ் பிரிட்டன் மோதல் அங்கும் இருந்தது
பிரிட்டானியர் எங்கு சென்றாலும் அந்நாட்டின் வளங்களை லண்டனில் குவிப்பார்கள், அப்படி அமெரிக்காவிலும் வரி விதித்தார்கள், ஆனால் அமெரிக்க குடியேற்றம் அதனை எதிர்த்தது, இங்கே செய்யவேண்டிய வசதிகள் ஆயிரம் இருக்க லண்டனுக்கு ஏன் வரி என முணுமுணுத்தன
கலவரம் வெடித்தது, பிண்ணணியில் பிரான்ஸ் இருந்தது, 13 குடியேற்றங்களும் போராடின, பாஸ்டன் கலவரம் எல்லாம் ந்டந்து தாங்கள் விடுதலை பெற்றதாக அறிவித்தன
அதன் பின் பிரான்ஸ் தன் பகுதிகளை அவர்களுக்கே விட்டு கொடுத்தது, அமெரிக்கா சுதந்திர நாடாக வளர ஆரம்பித்து பின் 50 மாநிலங்களோடு பெரும் நாடாயிற்று
அந்நாடு வளர ஏகபட்ட காரணம் உண்டு, முதலாவது குழப்பமான ஐரோப்பிய போர்களில் வெறுப்புற்ற மக்கள் அங்கு குடியேறினர், அமெரிக்கா மிக பெரிய நாடு மற்றும் எல்லா வளமும் கொண்ட நாடு, பெட்ரோல் உட்பட அங்கு கொட்டி கிடந்தது
வியாபாரம் செய்ய எல்லா வழிகளையும் அதி திறந்துவிட்டது, அந்த பணத்தில் உலகின் எதனையும் அவர்களால் வாங்க முடிந்தது, அபார மூளைகள் உட்பட
ஐரோப்பிய நாடுகள் எல்லாம் மன்னராட்சியில் சிக்கி கிடக்க, அமெரிக்கா மக்களாட்சியில் ஜன்நாயக முறையில் வளர்ந்ததால் மக்களின் விருப்ப தேசமானது
கருப்பர் கலவரம், இனவெறி என ஏகபட்ட சர்ச்சைகளை கடந்து அத்தேசம் வளர்ந்தத்து, கனடா, ஆஸ்திரேலியா போல இருந்த நாடுதான் ஆனால் இரு பெரும் உலக போர்கள் அதனை உலக வல்லரசு நிலையினை அடைய வைத்தன
அமெரிக்க சுதந்திரம் உலகில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தியது, அதன் பின்புதான் உலகில் மக்களாட்சி சாத்தியம் என்றொரு நம்பிக்கையே வந்தது, பின்னாளில் பல நாடுகளில் மக்களாட்சி மலர இதுதான் காரணம்
அவ்வகையில் இன்றைய நாள் வரலாற்றில் குறிப்பிடதக்கது
பிரான்ஸ் அவர்களின் நட்புக்காக, சுதந்திர தேவி சிலையினையினையும் கொடுத்தது, அச்சிலை அமெரிக்காவிற்காக செய்யபட்டதல்ல, எகிப்து பக்கம் சூயஸ் கால்வாய் ஓரம், பிரென்ஞ் வல்லமையினை காட்ட ஒரு கலங்கரை விளக்கம் போல செய்யபட்ட சிலை, ரோம கடவுளை பிரதிநிதித்த சிலை அது
ஆனால் சூயஸ் எங்கள் சொத்து என அந்நாளைய பிரிட்டன் மல்லுகட்டியதில் அது நிறுவபடாமல் போக, வெறுப்புற்ற பிரான்ஸ் அதனை அமெரிக்காவிற்கே வழங்கியது அது அமெரிக்க சுதந்திர தேவி சிலையானது
அமெரிக்க சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் கழித்தே அது அமெரிக்க சுதந்திர தேவி சிலையான கதை இப்படித்தன்
இன்று எல்லா வளர்ச்சியிலும் உச்சத்தில் இருந்து உலகை ஆட்டி வைக்கும் சக்தி அவர்கள்தான், சந்தேகமில்லை
நாங்கள் ஜனநாயகத்தில் உயர்ந்தவர்கள் என அந்த சிலையினை காட்டி , இது சுதந்திர தேவி சிலை என பெருமைபடுகின்றது அமெரிக்கா
ஆனால் மற்ற நாடுகளின் சுதந்திரத்தை அது அங்கீகரிக்கின்றதா என்றால் இல்லை
போராடி சுதந்திரம் வாங்கிய நாடு, உலகிற்கே சுதந்திரத்தின் மகிமையினை சொன்ன நாடு, இன்று எத்தனை தேசங்களின் விடுதலையினை மறுக்கின்றது என்றால் அதுதான் அரசியல்
இந்த சுதந்திர தேவியின் சிலையினை கொண்டாடிகொண்டா எங்களை போன்ற சுதந்திர வீரர்களை அடக்குகின்றீர்கள், இது எப்படி நியாயம் என கேட்ட வியட்நாமிய மாவீரன் ஹோ சி மின்னின் கேள்விகளில் எந்நாளும் நியாயம் உண்டு
அதே கேள்வியினை சதாம் உசேன், கோமேனி, கடாபி, அராபத், காஸ்ட்ரோ, சே குவேரா என பலர் கேட்டுகொண்டே இருந்தனர்
அமெரிக்காவின் அந்த விசித்திர அணுகுமுறைக்கு சான்றாக அந்த சுதந்திர தேவி சிலை புன்னைக்கின்றது
இதனை அமெரிக்கர்கள் உணரும் நாளில் அவர்கள் சுதந்திர தின கொண்டாட்டம் அர்த்தமுள்ளதாகும், ஆனால் அவர்களின் இலக்கு, தொழில், ஆளுமை எல்லாம் வேறுமாதிரியனவை
இதுபற்றி எல்லாம் சிந்திக்க மாட்டார்கள் அதனால் அவர்கள் சுதந்திர தினத்தில் ஒரு அர்த்தமுமில்ல்லை
சூரியன் அஸ்தமிக்காத பிரிட்டன் சாம்ராஜ்யத்தின் அடுத்த வாரிசு அவர்கள் ஆனால் மக்களாட்சி போர்வையில் ஒளிந்திருக்கின்றார்கள் என்பதை தவிர ஒன்றும் சொல்லமுடியாது
ஆனால் காலம் அவர்கள் பக்கம் இருக்கின்றது, உலகை அவர்கள்தான் ஆள்கின்றார்கள்
எப்படியாயினும் அவர்கள் சுதந்திர நாள், உலகிற்கே நம்பிக்கை கொடுத்த நாள், அதனால் அவர்களுக்கு சுதந்திர வாழ்த்தை மகிழ்வோடு சொல்லிகொள்ளலாம்..