ஜெயலலிதா : ஒரு சகாப்தம்

தன்னபிக்கைக்கும், போராட்ட குணத்திற்கும் பெரும் அடையாளமாய் விளங்கிய ஜெயலலிதா இனி இல்லை

மனம் நம்ப மறுக்கின்றது, ஏற்றுகொள்ள முடியவில்லை. ஆனால் ஏற்றுகொண்டுதான் ஆகவேண்டும்

எந்த ராஜாஜி ஹாலில் அவருக்கு சவால் விடபட்டதோ,எங்கு அவமானபடுத்தபட்டாரோ, அதே ராஜாஜி ஹாலில் தன் வெற்றியினை பதித்துவிட்டு அமராராக சயனனமாகிவிட்டார்

பெரும் மக்கள் திரட்சி, காவல்துறை திணறத்தான் செய்கிறது, ஏதேனும் மத்திய படைகள் வராமல் இன்றைய தினம் அமைதியாக கழிய வாய்ப்பில்லை

மைசூரில் பிறந்த குழந்தை எங்கெல்லாமோ சுற்றி, பின்னாளில் அரசியலுக்கு வந்து வங்க‌ கடலோரம் ஒரு முதலமைச்சராக அடக்கம் செய்யபடும் என எங்கோ எழுதபட்ட்ட விதி முற்றிலும் தன் கடமையினை செய்துவிட்டது.

உடலினை பேண வேண்டியது எவ்வளவு பெரும் அவசியம் என்பதுதான் அவர் இறுதியாக சொல்லிவிட்டு சென்றிருக்கும் செய்தி அல்லது அறிவிப்பு

தமிழக அரசியலில் பெண்களுக்கு தனி இலக்கணம் எழுதிய அந்த வரலாறும், அதன் துணிவும் விடைபெற்றுகொண்டது

எதிர்பாரா அரசியல் திருப்பங்கள் நடக்கின்றன‌
நொடிக்குள் பன்னீர் செல்வம் முதல்வராகி இருப்பது, கட்சி நிச்சயம் தமிழக கட்டுபாட்டில் இல்லை என்பதையும் , அடுத்து எதுவும் நடக்கலாம் என்பதையும் சொல்கின்றன‌

அக்கட்சிக்கும் தமிழகத்திற்கும் சோதனையான காலம்

தமிழகம் மீண்டெழும்ப நிச்சயம் 1 வாரம் ஆகலாம்

தன்னபிக்கைக்கும், போராட்ட குணத்திற்கும் பெரும் அடையாளமாய் விளங்கிய ஜெயலலிதா இனி இல்லை

மிக துணிச்சலான அவரின் நடவடிக்கைகளுக்கும், அவரின் சந்தேகமில்லாத நாட்டு பற்றிற்கும் நிச்சயம் தலைவணங்கியே ஆகவேண்டும்

அவரின் வாரிசு என சொல்ல கண்ணுகெட்டிய தூரம் வரை ஒருவருமில்லை, ஒரே ஜெயா தான்

ஒரு காலமும் அவர் மாநில அளவில் தன்னை வோட்டிற்காக சுருக்கிகொண்டவர் அல்ல, அவரின் பேச்சுக்களும் கர்ஜனைகளும் ஒரு நல்ல இந்திய குடிமகளாகவே அடையாளம் காட்டின‌

யமனை தவிர யாரிடமும் தோற்காத ஒரு பெண்சிங்கம் வங்ககடலோரம் தூங்க சென்றுவிட்டது

அதன் சீற்றமும், உறுமலும் அதன் கம்பீரமும் தமிழக வரலாறாக அடையாளம் பெற்றுவிட்டன‌

ஆழ்ந்த அஞ்சலிகள்

திறமையான நடிகையாக வந்த ஜெயலலிதா

தன் ஆங்கில பேச்சால் இந்திராகாந்தியினை கட்டிபோட்ட ஜெயலலிதா

தன் கட்சி தன்னை தூர வீசியபோதும் கலங்காத ஜெயலலிதா

மீறி எழுந்து மொத்த கட்சியினையும் தன் கையில் சிக்க வைத்த அந்த ஜெயலலிதா

எத்தனை வழக்கும், சர்ச்சையும் வந்தாலும் அவற்றை எல்லாம் மீறி ஜெயித்த ஜெயலலிதா

புலிகளை விமர்சிக்க எல்லோரும் அஞ்சிய காலத்தில் மகா துணிச்சலாக பிரபாகரனை தூக்கில் போடவேண்டும் என முதன் முதலில் சொன்ன ஜெயலலிதா

பெரும் ரவுடிகள் அரசியல் பின்புலத்தில் ஆட்டம் போட்ட பொழுத் கொஞ்சமும் அசராமல் துடைத்தொழித்த ஜெயலலிதா

மோடி அசுர வெற்றி பெறவில்லை என்றால், பிரதமர் பதவியினை நெருங்கும் வாய்ப்புபெற்ற ஜெயலலிதா

இனி இல்லை

அவரது வாழ்வில் ஒரே ஒரு கரும்புள்ளி உண்டென்றால் அது கூடா நட்பு

அந்த நட்பு மட்டும் இல்லையென்றால் பெரும் அடையாளத்தோடு இன்னமும் உயர்ந்திருப்பார்

எல்லாம் முடிந்துவிட்ட நிலை

வரலாறு ஆனார் ஜெயலலிதா..