ஜெயா பொம்மை, அதற்கொரு மாலை.. ஹா ஹா ஹி ஹி ….
இங்கு அடிக்கொரு பூங்காக்கள் உண்டு, பசுமையான பூங்காக்கள் , சும்மா சொல்ல கூடாது, அரசின் வருமானத்தில் பாதி அதனை பராமரிக்கவே செலவாகலாம், அவ்வளவு சுத்தமாக வைத்திருப்பார்கள்
காலையும் மாலையும் அதில் உடற்பயிற்சி செய்வோர் ஏராளம்,
அந்த பூங்காக்கள் அதிகாலையும் மாலையும் வேலைக்கு செல்பவர்களுக்கு,தினமும் காலை 8 மணிவாக்கில் ஒய்வுபெற்றவர்களுக்கு
அவர்கள் அப்படித்தான் தினமும் கொஞ்ச தூரமாவது நடக்கவேண்டும் என்பது அவர்கள் வகுத்த விதி, நடக்க முடியாவிட்டாலும் ஊன்றுகோலோடு நடப்பார்கள். கோலும் அவர்களும் ஒன்றுபோல்தான் இருப்பார்கள்
சிலர் நடப்பார்கள், சிலர் ஆங்காங்கு இருக்கும் கம்பிகளில் பாம்பு போல தொங்குவார்கள், சில பெண்கள் (மூதாட்டிகள்) கூட்டமாக கூடி சிங்காரவேலன் குஷ்பூ கும்பல் போல ஆடிகொண்டிருப்பார்கள், நல்லா மேற்கத்திய இசையொன்று ஓடிகொண்டிருக்கும்
தாளம் தப்பாமல் ஆடுவார்கள், அது மிக சிறந்த உடற்பயிற்சி என்பதில் சந்தேகமே இல்லை
இவை எல்லாம் அன்றாடம் காணும் காட்சிகள்,பணி நிமித்தம் வேகமாக கடக்க வேண்டிய அவசர காலைபொழுது என்பதால் ஒரு புன்னகையோடு கடந்துவிட்டு வருவது வாடிக்கை
இன்றும் அப்படி ஆடிகொண்டிருந்தார்கள், நான் அருகில் கடந்து செல்லும் பொழுது சத்தம்போட்டு மொத்தமாக சிரித்தார்கள்,
பெரும் அதிர்ச்சியானது ….
பொது அமைதியினை அப்படி பேணுவார்கள், பொது இடங்கள் அப்படி ஒரு அமைதியாக காணப்படும், எங்கோ கூவும் குயிலோசை கூட துல்லியமாக காதில் விழும் அளவு அமைதி, பொது இடத்தில் சத்தம்போட்டு கூட பேசமாட்டார்கள்
அதனால் பகீரென்றது, என் உடையினை சரிபார்த்தேன் சரியாக இருந்தது, காலில் ஷூ சரியாக இருந்தது, பின் ஏன் சிரிக்கின்றார்கள்? பொதுவிடுமுறையா? அப்படி ஏதும் தெரியவில்லை பின்னர் ஏன்?
எங்காவது வில்லங்கமான விளம்பரத்திற்கு நமக்கு பேனர் வைத்துவிட்டார்களா? அப்படி யாரும் நம்மை படமெடுக்க கூட இல்லையே? பின்னர் ஏன்?
கால்பந்து விரும்பிகள் , அவர்களின் கால்பந்து எதிரிகள் இந்தோனேசியா, தாய்லாந்து , போன்ற பக்கத்து நாடுகள், அவர்களை வென்றுவிட்டால் மிக்க மகிழ்வார்கள்
ஒருவேளை ரொனால்டோவும் , மெஸ்ஸியும் கலந்துகொண்ட அணியினை இவர்கள் தோற்கடித்துவிட்டார்களோ? இல்லையென்றால் இவ்வளவு சிரிப்பு சாத்தியமில்லை?
ஏதும் காமெடி காட்சிகள் சூட் செய்கின்றார்களா என பார்தால் அப்படியுமில்லை
தமிழ் முகங்கள் என்றால் கூட கபாலி இரண்டாம் பாகம் வரலாமாம் என நினைத்து இப்படி சிரிப்பார்கள் என எண்ணிகொள்ளலாம் ஆனால் இது அவர்களும் அல்ல…பின்னர் ஏன்?
தமிழக பூங்கா என்றால் சீமான் பேச்சையோ, தமிழிசையினையோ, அல்லது பாண்டியராஜனின் புதிய பர்பி டாலையோ பார்த்து வயிறுகுலுங்க சிரிக்கின்றார்கள் என சொல்லிவிடலாம், ஆனால் இங்கு எப்படி?
சிரிப்பென்றால் பெரும் சிரிப்பு, ஒருவேளை தினகரன் வெற்றிபெற்று முதல்வரானால் சசிகலா கும்பல் எப்படி சிரிக்குமோ அல்லது தமிழர்களை பார்த்து உலகம் எப்படி சிரிக்குமோ அந்த சிரிப்பு
எனக்கும் ஒன்றும் புரியவில்லை, ஆனால் ஆளாளுக்கு முகத்துமுன்பு சிரிக்கும் பொழுது என்ன செய்ய முடியும்? சிரிப்பு எனக்கு சாதாரணமாகே வரும், இங்கே வராமல் இருக்குமா?
சின்னகவுண்டரில் மனோரமாவும் சுகன்யாவும் சிரிக்கும்பொழுது விஜயகாந்த் அர்த்தம்புரியாமல் சிரிப்பார், அப்படி கவுண்டமணி பாணியில் சிரித்துவிட்டு ஓடிவிட்டேன்
அவர்கள் சிரித்துகொண்டே இருந்தார்கள், மெதுவாக தள்ளி சென்று ஒருவரிடம் கேட்டேன், இந்த விஸ்வரூப சிரிப்புக்கு என்ன காரணம்?
அவர் சொன்னார் “இது லாபிங் தெரப்பி, 10 நிமிடம் இப்படி சிரித்தால் உடல் புத்துணர்வு பெறும், நோய்கள் நெருங்காது, இப்பொழுது இது பிரபலம்”
இதனைத்தான் “வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும்” என என்றோ நம் முன்னோர்கள் சொல்லிவைத்தாயிற்றே, நமது பழமொழி நம் கண்முன்னே “தெரபி” என வரும்பொழுது சிரிக்கத்தான் தோன்றுகின்றது
என்ன தெரபியோ, சந்தோஷமாக சிரிக்கின்றார்கள். பார்க்க மகிழ்வாக இருந்தது. மனிதர்கள் சிரித்து மகிழ்வதை பார்த்தாலே மனம் தானாக உற்சாகம் கொள்கின்றது
10 நிமிடம் எப்படி , எதனை நினைத்து சிரிப்பார்களோ தெரியாது, ஆனால் ஒருவர் சிரிக்க தொடங்கிவிட்டால் போதும், எல்லோருக்கும் தானாக வந்துவிடும், சிரிப்பின் ஸ்பெஷாலிட்டி அது
தமிழர்களும் இப்படி மணிகணக்கில் சிரிக்கலாம், இந்த அரசியல், சினிமா இன்னபிற அழிச்சாட்டியங்கள் , தலைவர்களின் பேட்டிகள், நேற்று ஜவுளிகடை பொம்மையினை பாடையில் போட்டு தூக்கி திரியும் பாண்டியராஜனை நினைத்தால்…
10 மணிநேரம் தொடர்ந்து சிரிக்கலாம்
அப்படி உலகில் மிக தரமான “லாபிங் தெரபி” சிகிச்சையினை நமது அரசியல்வாதிகள் செய்கின்றார்கள்.
ஆனால் நாம்தான் சிரிக்காமல் அவர்களின் உழைப்பினை எல்லாம் வீணாக்குகின்றோம், இனியாவது சிரித்து அவர்களை உற்சாகபடுத்துவோம்
இவர்களை பார்த்து சத்தமாய் சிரிப்போம், நோயின்றி வாழ்வோம்
மிஸ்டர் பாண்டியராஜன் ..ஹோ ஹாஆ ஹா ஹாஹ்..ஹா ஹ்ஹா….
ஜெயா பொம்மை, அதற்கொரு மாலை..
ஹா ஹா ஹி ஹி ….
எல்லாம் சரி, ஜெயா உடலருகே இருந்த சசிகலா பொம்ம்மை எங்கே? மிஸ்டர் பாண்டியராஜன்?.
ஹா..ஹோ ஹோ..அதனருகே உங்கள் தலைவர் பன்னீர் வேறு அமர்ந்திருந்தாரே….
.ஹஹாஹ் ஹாஹஹ
வைத்தால் ஜெயா உடல், சசிகலா, பன்னீர் என மொத்தமாக அல்லவா கொலு வைக்க வேண்டும்?”
ஹஹஹஹ்ஹாஹஹஹ ஹா..ஹிஹிஹீஹ் ஹோ ஹோ..ஜெயா பொம்மை ஹஹா..