டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு சம்பவம் தீரா களங்கம்

இந்த தேசத்தில் காந்தி, இந்திரா, ராஜிவ் கொலைகளுக்கு ஈடானது அந்த கொடூர நிகழ்வு. இந்த‌ சுதந்திரநாட்டின் கருப்பு புள்ளி அது. ஒருநாளும் தீரா களங்கம் அது

டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு சம்பவம் அது

நிச்சயமாக அதன் வரலாறு அமைதியாக தொடங்கியிருக்கின்றது, எத்தனையோ இஸ்லாமிய மன்னர்கள் வந்து ஆண்டாலும் அங்கு சிக்கல் இல்லை. பாபர் என்பவரும் அப்படி வந்திருக்கின்றார்

பாபர் ஆப்கானிய மன்னர்களில் வித்தியாசமானவர், இந்த மக்களை எதிரியாக பாராமல் அவர்களோடு கலந்து இங்கே வசிக்க நினைத்தவர். அதனால் இங்குள்ள கலாச்சாரத்தோடு இணைந்துவாழ, இம்மக்களோடு கலந்து வாழ எண்ணினார்

அந்த அஸ்திவாரத்தில்தான் அக்பர் போன்றோர் அவர் வழியில் வந்து மிக பெரும் முகலாய சாம்ராஜத்தை கட்டி காத்தனர். அவர்கள் இந்நாட்டை ஆள அவர்களின் அந்த மத நல்லிணக்கமும் மிக முக்கியமான விஷயம்

ஓளரங்கசீப் காலம் வரை நன்றாக இருந்தது, அவர் கடும்போக்கான விஷயங்களில் இறங்கவும் , சிவாஜி போன்றவர்கள் எதிர்த்து வாள்பிடிக்கவும் எல்லாம் நாசமாயிற்று

சிவாஜி இஸ்லாமினை எதிர்க்கவில்லை மாறாக ஓளரங்கசீப்பின் அடாவடியினையே எதிர்த்தார்

அப்படிபட்ட முகலாய வம்சத்தின் பிதாமகன் பாபர் நிச்சயம் அடாவடியாக அந்த மசூதியினை கட்டியிருக்க முடியாது, கட்டியிருந்தால் அன்றே ஓட அடித்திருப்பார்கள்

பொதுவாக முன்னோர்கள் தொழுத இடம், மகான்கள் அவதரித்த இடங்களை இஸ்லாமியர் மகா விருப்பமாக தேடுவார்கள். இந்திய அபிமானத்தை பெற விரும்பிய பாபர் அந்த ராமர்பிறந்த இடம் என சொல்லபட்ட இடத்தின் ஒரு மூலையில் தொழுதிருக்கலாம் அது மசூதி ஆயிருக்கலாம்

இந்துக்கள் விட்டு கொடுத்துவிட்டு மறுபக்கம் ராமர் வழிபாட்டை தொடர்ந்திருக்கலாம்

இந்த அனுமானங்கள் உண்மையாக இருக்க ஒரே ஆதாரம் வெள்ளையர் வருமளவு அங்கு சிக்கல் இல்லை. அவர்கள் வந்தும் பெரும் சிக்கல் இல்லை

400 ஆண்டுகளாக சிக்கல் இல்லை

இந்துக்கள் ஒரு புறமும் சிறிய ராமர் ஆலயத்திலும், இஸ்லாமியர் மறுபுறமும் மசூதியில் அந்த் இடத்தில் பிரார்தித்துகொண்டுதான் இருந்தார்கள்

திப்பு சுல்தானை வீழ்த்த இந்து முஸ்லீம் பிரிவினை கையில் எடுத்த வெள்ளையனுக்கு அது அனுகூலமாயிற்று, பின் காந்திவழி தொடங்கிய அந்த புனிதமான போராட்டத்தை கூட இந்து முஸ்லீம் என கீறி, இந்த தேசத்தை இரண்டாக்கினான் வெள்ளையன்

அப்பொழுது விதைக்கபட்டதுதான் இந்த ராம் ஜென்ம பூமி பிரச்சினை

பிரிவினைக்கு பின் அது பூதாகரமாக எழும்பும்பொழுதுதான் காந்தி கொலையும் அதன் பின் இந்த மதவாத அழிச்சாட்டி கும்பலின் அமைதியும் ஏற்பட அப்பிரச்சினை அடங்கியது, ஆர்.எஸ்.எஸ் தடை செய்யபட்ட காலங்கள் அவை

அதன் பின் ஜனசங்கம் (பாஜகவின் முப்பாட்டன்) இப்பிரச்சினையினை தோண்டினாலும் சாஸ்திரி, இந்திரா போன்ற பெரும் ஜாம்பவான்கள் இருந்ததாலும் எதிர்கட்சியில் மதவாதிகள் இல்லாததாலும் அப்பிரச்சினை எழமுடியவில்லை

இந்திரா கொல்லபட்டு அனுபமில்லா ராஜிவ் இருந்த காலங்களில் மதவாத சக்திகளுக்கு உற்சாகம் பீறிட்டன, இதனை பெரும் விவாதமாக்கின‌

உண்மையில் பாஜக இந்திய நாட்டுபற்றுள்ள கட்சி என்றால் இந்த பிரச்சினையினை கையில் எடுத்திருக்க கூடாது, ஆனால் அவர்களுக்கு அதை தவிர அரசியல் செய்ய ஏதுமில்லை

விபி சிங் இருந்தகாலத்தில் இந்த விஷயங்களை எல்லாம் அடக்கியே வைத்திருந்தார், ஆனால் ராஜிவ்காந்தியினால் அவர் வீழ்த்தபட அத்வாணியின் குரல் ஓங்கி ஒலித்தது

ராஜிவும் கொல்லபட மதவாத கும்பல்கள் அரசியலில் தங்களுக்கொரு இடம் வேண்டும் என காட்ட இந்த பாதக செயலை செய்தன‌

அது உணர்ச்சி கொந்தளிப்பில் நடைபெற்ற விஷயம் அல்ல, பாஜகவும் அதன் பங்காளிகளும் சேர்ந்து நன்கு திட்டமிட்டு, வெடி எல்லாம் வைத்து அதில் மசூதி இடியாமல் பின் கடப்பாரை சகிதம் திட்டமிட்டு இடித்தார்கள்

கல்யாண் சிங் எனும் உபியின் முதல்வர் அதனை தடுக்க நினைக்கமாட்டார் என்பதில் ஆச்சரியமில்லை, ஆனால் நரசிம்மராவ் அரசும் அமைதியாக இருந்ததுதான் ஆச்சரியம்

அவர்கள் ஏன் அப்படி இருந்தார்கள் என்பதற்கு இன்றுவரை விடை இல்லை

அந்த மசூதி இடிப்பினால் ஏற்பட்ட சேதங்கள் கொஞ்சமல்ல, நாடு முழுக்க அது கலவரமானது மும்பையில் மட்டும் சில ஆயிரம்பேர் கொல்லபட்டார்கள், சொத்து சேதகணக்கு வேறு

நாடு முழுக்க கொல்லபட்டவர் எண்ணிக்கை கணக்கே இல்லை

பின் அது மும்பை குண்டுவெடிப்பு, கோத்ரா ரயில் எரிப்பு, குஜராத் கலவரம் வரை தொடர்ந்தது

ஒருவிஷயம் உறுத்தலான உண்மை. பிரிவினையின் பொழுது எரிந்த இந்தியா பின் அமைதியாகியிருந்தது, மறுபடி அதனை பற்றி எரிய செய்து இன்றுவரை நீருபூத்த நெருப்பாக ஆக்கி வைத்தது இந்த மசூதி இடிப்புதான்

வழக்கு நடக்கின்றது இன்னும் முடிந்தபாடில்லை, முடியவும் முடியாது.

இத்தேசம் மறக்க முடியா கொடூர நாள் இது.

இந்த வலிகளை கடந்து இத்தேசம் அமைதியாக சில விஷயங்களை செய்தே ஆகவேண்டும்

மசூதி இருந்த இடத்தில் மசூதியும், ராமர் கோவில் சிறிதாக இருந்த அந்த மரத்தடியில் ராமர்கோவிலும் அமைக்கபட்டு மத நல்லிணக்கம் காணபடவேண்டும்

உண்மையில் இத்தேசத்தின் பெரும்பான்மை இந்துக்களும், பெரும்பான்மை இஸ்லாமியரும் அமைதி விரும்பிகள், சகோதரர்களாக பழகிகொண்டிருப்பவர்கள்

ஆனால் ஒரு குடம் பாலை ஒரு துளி நஞ்சு கெடுத்துவிடுவது போல ஒரு சில அயோக்கியர்களின் செயல்கள் மொத்த மக்களின் அமைதியினை கெடுத்துவிடுகின்றது

இந்த பாஜக நாட்டுபற்றுள்ள கட்சி என்றால் அந்த மசூதியினை இடித்திருக்க கூடாது, இன்னும் நாடுபற்றுள்ள கட்சி என்று சொல்வதாக இருந்தால் உடனே அதற்கான பரிகாரங்களை செய்ய வேண்டும்

மதவெறுப்பில் அது பெற்ற வெற்றியினை விட, மத நல்லிணக்கத்தில் இறங்கினால் அது அசைக்கமுடியா இடத்தினை பெறும் சந்தேகமே இல்லை

கெட்டது நடந்த இடத்தில் சில நல்லது நடக்காமல் அமைதி திரும்பாது, திரும்பினாலும் நிலைக்காது

மகா ஆச்சரியமாக பெரும்பான்மை மக்கள் இத்தேசத்தில் மத நல்லிணக்கத்தை கடைபிடிப்பதால் இத்தேசம் அதனை கடந்தும் வெற்றிநடையினை அமைதியாக போட்டுவருகின்றது

இந்நாள் வலிதான், நல்ல இந்தியனுக்கு இரத்தம் வர வைக்கும் ரணம்தான். ஆனால் கடந்து வரவேண்டும்

மதகலவரத்தில் இடிக்கபட்ட முதல் மற்றும் கடைசி மசூதி அதுவே என்று வரலாறு எழுதட்டும்.

பாபர் மசூதி சிக்கலுக்கு வயது வெறும் 50 ஆண்டுகளே, ஆனால் அதற்கு முன்பு 450 வருடம் இத்தேசம் அமைதியாக இருந்திருக்கின்றது. மகா ஒற்றுமையாக இந்துக்களும் இஸ்லாமியரும் அந்த வளாகத்தில் வலம் வந்திருக்கின்றார்கள்

நாம் அந்த 50 கசப்பான‌ வருடங்களை கடந்து அந்த ஒற்றுமையான 450 ஆண்டு காலகட்டத்திற்கு செல்ல முடியாதா? அந்த நீண்ட பொற்காலத்தை மீட்க முடியாதா?

நிச்சயம் முடியும்.

கசப்பான நாட்களை கடக்கும்பொழுது இனி இவ்வாறு நடக்கவே கூடாது எனும் வைராக்கியம் மகா முக்கியம்

அந்த வைராக்கியத்தோடு இத்தேசம் இந்நாளை வலியோடு கடந்து செல்லட்டும்