டெல்லி செல்லும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
திமுக 37 எம்பிக்களை வைத்து கொண்டு என்ன செய்ய போகின்றது என ஏக விவாதங்கள், எம்பிக்கள் வெல்வதே டெல்லியில் ஆட்சி அமைக்க என நினைக்க தொடங்கிவிட்டதின் விபரீத விளைவு அது
டெல்லியில் காங்கிரஸின் கொடி உரக்க பறந்த காலங்களில் எல்லாம் திமுக அங்கு அரசில் பங்குபெற்ற கட்சி அல்ல, அதெல்லாம் சமீபத்திய காலங்கள்
அதற்கு முன் அதன் வரலாறு மகத்துவமானது. ஏன் பார்வர்டு பிளாக் கட்சியின் பிரதிநிதியாக டெல்லி சென்ற பசும்பொன் சிங்கம் அங்கு முழங்கியது இன்றளவும் சிலாகிப்பான பேச்சு
அண்ணா அன்று மாநில கட்சியின் எம்பியாக சென்று டெல்லியில் அசத்தினார், நகைகடையில் ஆர்வமுடன் அமர்ந்திருக்கும் பெண்கள் போல அவரை அந்த சபை வியப்புடன் பார்த்தது
அழகான ஆங்கிலமும், தாவி வந்த உவமையும், யாரையும் காயபடுத்தாமல் அவர் தென்னக நியாயங்களை எடுத்து வைத்த வாதமும் அப்படியானவை
அண்ணாவிற்கு பின்னரான காலங்களில் திமுக முத்திரை பதித்த எம்பிக்களை அனுப்பியது
அதில் குமாரமங்கலம், வலம்புரி ஜாண் என பல பிரபலங்கள் உண்டு
வைகோ பேசிய பேச்சில் இந்தியாவே ஈழபிரச்சினைக்கு ஆதரவாக களமிறங்கி வந்தது, அவரை பேசவைத்து ரசித்து கைதட்டினார் இந்திரா
வடகிழக்கு மாநிலங்கள் பிரச்சினையினை ஜெயலலிதா பேசியபொழுது அந்த சபையே ஆச்சரியமுடன் பார்த்தது
ஆம், ஆட்சியில் இல்லா காலங்களில் திமுக எம்பிக்களும், திறமையான அதிமுக எம்பிக்களும் வாத திறமையால் அந்த சபையினை அதிசயிக்க வைத்தனர்
இதில் இன்னொரு சோகமும் உண்டு
குமாரமங்கலம் முதல் வலம்புரி ஜாண் வைகோ என யாரை எல்லாமோ அனுப்பி கைதூக்கிவிட்டார் கலைஞர் , அவர்கள் அவருக்கு எதிராகவே திரும்பினர்
பாவம் அந்த மனிதன் அதையும் தாங்கினான்
ஜெயாவினை ராமசந்திரனுக்கு எதிராக சரியாக ஏவியது டெல்லி, அதுவும் பலன் கொடுத்தது
கலைஞருக்கு முரசொலிமாறன், திருச்சி சிவா, டி,ஆர் பாலு ஆ.ராசா போன்றோர் கடைசிவரை நன்றிகடனோடு இருந்தனர்
அதுவும் மாறனுக்கு இருந்த நன்றி அவர் பிள்ளைகளுக்கு இருந்ததாக தெரியவில்லை
எதையோ சொல்லவந்து எங்கோ சென்றுவிட்டோம், விஷயம் இதுதான்
ஆட்சியில் பங்கு என்பது வரும் போகும். அது அதிர்ஷ்டத்தை பொறுத்தது
ஆனால் தமிழக எம்பிக்கள் முத்திரை பதிக்க வாய்ப்பு உண்டு
கனிமொழி, தமிழச்சி, திருமா, ஆ.ராசா போன்றோர் செல்லும் சபையில் ஓரளவு தமிழக நியாயங்கள் அரங்கேறும் அதற்கு வாய்ப்பு உண்டு
அண்ணா, வலம்புரி ஜாண், குமாரமங்கலம், வைகோ, ஜெயலலிதா போன்ற திராவிட பிரபலங்கள் வரிசையில் இவர்களும் இடம்பெறட்டும்
தமிழக நலனை காக்கும் குரல் டெல்லியில் எக்காலமும் ஒலிக்கும் என நிரூபித்து காட்டட்டும்
மோடியும், நேருவும் இந்திராவும் தமிழக குரல்களை ஒலிக்க வைத்து அவர்கள் நியாயத்தை அகில இந்தியா அறிந்து கொள்ள வழி செய்தது போல் பெருந்தன்மையுடன் நடத்தட்டும்
தேசம் செழிக்கட்டும், யாரும் ஆளட்டும் ஆனால் தமிழகம் செழிக்கட்டும்
ஒரு விஷயம் உறுதியாக சொல்லமுடியும்
இன்று கலைஞர் இருந்தால் கனிமொழி டெல்லி செல்வதை விட திருமா டெல்லி செல்வதையே உச்சி முகர்ந்து அனுப்பி வைத்திருப்பார்
அடிமட்டத்தில் இருந்து உருவாகி வந்த அந்த திருமாமேல் கலைஞருக்கு எப்பொழுதும் அபிமானம் இருந்தது
ஆயிரம் கருத்துக்கள் மோதட்டும் அதில் உண்மை பூக்கள் மலரட்டும் என்ற தத்துவபடி பாராளுமன்றம் இந்நாட்டை வழிநடத்தட்டும்
டெல்லி செல்லும் அனைவருக்கும் வாழ்த்துக்கள், உங்களால் செழிக்கட்டும் தமிழகம்
அதே நேரம் பில்லி சூனியம் போல டெல்லி சூனியமும் பொல்லாதது, அது கட்சியினை உடைக்க சொல்லும் தீட்டிய மரத்தில் கூர்பார்க்க சொல்லும், சோறிட்ட கரங்களை வெட்ட சொல்லும், ஏறி வந்த கயிறை வெட்ட சொல்லும்
அதில்மட்டும் எச்சரிக்கையாய் இருங்கள், கலைஞர் சமாதியில் நன்றியோடு வணங்க்விட்டு செல்லுங்கள் , மனசாட்சி உங்களை வழிநடத்தும்