தடுப்பு ஊசி போட்டுக்கலாமா?

ஒரு வித்தியாசமான தொற்றுநோய் இப்பொழுது கிளம்பியிருக்கின்றது, அதாவது எது என்றாலும் ஆஆஆ இலுமினாட்டி சதி என அலறுவது

உலக மாற்றத்திற்கும், சில மாற்றங்களுக்கும் வித்தியாசம் தெரியாமல் அலறும் வியாதி அது.

இயற்கை விவசாயம் வரவேற்கபடவேண்டியது, ஆனால் அதற்கு பெரும் நிலபரப்பில் விவசாயம் செய்யபடவேண்டும், நாம் மன்னர்கள் காலத்தின் பின் ஒரு வயல் அல்லது ஒரு குளம் புதிதாக உருவாக்கியிருப்போம்?,

மாறாக அழித்துகொண்டிருக்கின்றோம்

1950களில் நம் மக்கள் தொகை 50 கோடி, ஆனால் அந்த 50 கோடி மக்களுக்கும் உணவளிக்கமுடியாமல், சத்தான பால் கொடுக்கமுடியாமல் நாம் பஞ்சத்தில் செத்தோம்

வீரிய நெல், கோதுமை ரகங்கள் வந்துதான் பசி போக்கின, பல வகையான மாடுகள் வந்துதான் இன்று பால் எல்லோருக்கும் கிடைக்கின்றன‌

நவீன விவசாயம் இல்லாமல் இன்றைய 130 கோடி மக்களுக்கு உணவு கொடுப்பதும், கலப்பின பசு இன்றி இம்மக்களுக்கு பால் கொடுப்பதும் அறவே முடியாத விஷயம், அவை இல்லை என்றால் நாளையே பட்டினி சாவு

நம்முடைய அகோர தேவையினை அந்த நவீன விவசாயமே தீர்த்துவைத்ததை மறுக்க முடியாது.

இதில் இலுமினாட்டி சதியோ அலுமினியசட்டி சதி என எதுவுமே இல்லை

ஜல்லிகட்டு தடை, நாட்டு மாடு இன அழிப்பு என சிலர் சொல்லிகொண்டிருந்தனர், அதனை விட அபத்தம் இருக்க முடியாது

தமிழகத்தின் வெகுசில பகுதிகளில் நடப்பது ஜல்லிகட்டு, ஆனால் இந்தியா முழுக்க நாட்டுமாடுகள் உண்டு, எல்லோரும் ஜல்லிகட்டு நடத்தியா சந்ததி பெருக்கினார்கள்?

எல்லா இடங்களிலும் அதற்கான காளைகள் தனியே உண்டு. அவற்றை எல்லாம் யாரும் அடக்கமாட்டார்கள், அது வெண்டுமானால் பசுமாட்டிடம் அடங்கி போகும்

பிராய்லர் கோழியில் சத்து இல்லை, ஆபத்து என கிளம்புகின்றார்கள், சரி அதுவும் இல்லாவிட்டால் இன்றைய மாமிச தேவையினை எது பூர்த்திசெய்யும் என்றால் பதிலிருக்காது.

நாட்டுகோழி எத்தனை பேர் தேவையினை பூர்த்தி செய்யும்? வெள்ளை முட்டை வரவில்லை என்றால், தமிழகத்தில் யாராவது முட்டையினை கண்ணில் பார்க்கமுடியுமா?

கலப்பின பசுக்கள் வராவிட்டால் இன்று பால் யாருக்கு கிடைக்கும்? நம் மக்கள் தொகைக்கும் நாட்டுமாடு விகிதத்திற்கும் 1 லிட்டர் பால் 500ஐ தாண்டியிருக்கும், யார் குடிக்க முடியும்?

குடிப்பதை விடுங்கள், பார்க்க கூட முடியாது.

ஆக நம் தேவைகளை மறைத்துவிட்டு, இலுமினாட்டி சதி அது இது என குதித்துகொண்டிருக்கின்றோம்

நம் தேவை என்ன என்பதை நாம் மறைத்தே விடுவோம்

சில மறைநீர், இறைநீர் என கத்திகொண்டிருப்பான், அதாவது நாம் விவசாயம் செய்யும் நீரினை எல்லாம் வெளிநாட்டு கார்கம்பெனிக்காரன் வீணடிக்கின்றான் என்பான்

சரி மழைகாலத்தில் கடலில் கலக்கும் நீர், சென்னை வெள்ளத்தில் கடலில் கலந்த நீர் எல்லாம் என்ன வகை என்றால் பதிலிருக்காது

குளங்கள் பாழைடைந்து போய், ஆற்றுகரைகள் தூர்ந்துபோய் கடலுக்கு செல்லும் நீர் பற்றி இவன் பேசவே மாட்டான், ஆனால் மறைநீர் என கிளம்பிவிடுவான்

பெருக்கெடுத்து ஓடும் தமிழக வெள்ளத்தினை கடலுக்கு அனுப்பிவிட்டபின் இஸ்ரேலிய சொட்டு நீர் பாசனமும், அதன் மறைநீர் கணக்கும் பற்றி பேசுவான்

அவனுக்கு மழை இல்லை, உனக்கு ஏன் நீர் சேர்க்க தெரியவில்லை என்றால் பதிலிருக்காது.

மாறாக அதே இலுமினாட்டி, கம்முனாட்டி என அழ தொடங்கிவிடுவான்,

இப்பொழுதும் பாருங்கள், ஒரு விபத்திற்கும் இலுமினாட்டி என அழ ஆரம்பித்துவிட்டான்.

சென்னையில் இரு கப்பல்கள் மோதிகொண்டது நம் கடல் மீன் அழிக்க அந்நிய சதி என சிலர் பேசிகொண்டிருக்கின்றான்

கப்பல்கள் மோதிகொள்வதும், கடலில் எண்ணெய் கசிவதும் பல இடங்களில் ஏற்படும் விபத்தே, அதற்குள் ஆளாளுக்கு கப்பல் பொறியாளன் போல கிளம்பிவிடுகின்றான்

இப்பொழுது தடுப்பூசி பிரச்சினையில் பயமுறுத்துகின்றான்

ஏய் எல்லாம் மோசடி, எல்லாம் விஷம், அந்த ரூமைலா ஊசி எல்லாம் விஷம், போடாதே, இலுமினாட்டி ஒழிக, குண்டான்சட்டி ஒழிக என ஏக இம்சை

முன்பு பெரியம்மை, சின்னம்மை (சின்னம்மா இல்லை) என பெரும் நோய்கள் இருந்தன, அவற்றிற்கான தடுப்பூசி வெளிநாட்டில் இருந்தே வந்தது,

இன்று நம்நாட்டில் அவை பெரும்பாலும் தடுக்கபட்ட நோய்கள்

போலியோ நோயும் வெளி மருந்துகளால் தடுக்கபட்டிருக்கின்றன, அது என்றல்ல மலேரியா, காலரா,பிளேக் போன்ற எண்ணற்ற அக்கால நோய்களை விரட்டியே விட்டோம்

எப்படி? இம்மாதிரியான தடுப்பு மருந்துகளால்

இப்பொழுது ரூமைலா தடுப்பூசிக்கு எதிர்ப்பு என கிளம்பிருக்கின்றார்கள்

சரி நாளையே அந்த ஊசி போடாமல் குழந்தைகளுக்கு நோய் வந்தால் என்ன செய்வார்கள்?

தனியார் மருத்துவமனையில் கொள்ளை விலைக்கு அதே ஊசியினை போட்டுவிட்டு பில் கட்டிவிட்டு வருவார்கள்,

ஆக எல்லாவற்றையும் சந்தேக கண் கொண்டு பார்ப்பது நம்மை உலகத்தை விட்டு துண்டித்தே விடும்

எபோலா, சார்ஸ் , மெர்ஸ் என பாதிக்கபட்ட பகுதிகளில் எல்லாம் எப்படி உலகம் திரண்டு இனி இம்மாதிரி நோய்கள் பரவகூடாது என முடிவெடுக்குமோ அப்படித்தான் இம்மாதிரி தடுப்பு நடவடிக்கைகளும் நமக்கு ஏற்பாடாயிருக்கின்றன‌

முன்னமே உலக சுகாதார அமைப்பு செய்திருக்கும் ஏற்பாடு அது

ஆக பறபதற்கு வெள்ளையன் விமானம் வேண்டும், வெள்ளையன் இண்டர் நெட் வேண்டும், அவன் அனுபவிக்கும் சகல வசதிகளும் நாமும் அனுபவிக்க வேண்டும், அவன் பயன்படுத்தும் எல்லா விஞ்ஞான வசதிகளையும் நாமும் பயன்படுத்தவேண்டும்

வெள்ளையன் கண்டறிந்த மின்சாரம், விளக்கு, ஏசி, கார், பைக் , தொலைகாட்சி, செயற்கைகோ, போன், ஜிபிஎஸ் என‌ எல்லா வசதிகளும் விருப்பமாக வேண்டும்.

ஆனால் தடுப்பு மருந்தினில் மட்டும் இலுமினாட்டி குண்டாசட்டி என கத்த வேண்டுமா?

இந்த பைத்தியங்களை புறந்தள்ளிவிட்டு குழந்தைகளுக்கான தடுப்பு மருந்தினை போட்டுவிடுங்கள்

நாளை உலகில் அவர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளும்பொழுது இம்மாதிரி தடுப்புஊசிகள் போடபட்டதா என்று சோதனைகள் நடந்தால் அவர்களுக்கு பாதிப்பு வராது

ஊரோடு ஒத்துவாழ் என அன்றே சொன்னவன் தமிழன், ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும் என சொன்னவனும் அவனே

ஊர் என்றால் 4 தெரு மட்டுமல்ல, உலக வழக்கு என்றும் பொருள்

இவை எல்லாம் நிச்சயம் இலுமினாட்டி, இல்லாதநாட்டி எனும் அழிச்சாட்டியங்களில் வராது

இவை எல்லாம் காலமாற்றம் எனும் புதியன புகுதல் எனும் வகையாறாவில் வருபவை

ஆக அச்சமின்றி அந்த ஊசிகளை போட்டுகொள்ளலாம்,

இந்த அரைபயித்தியங்களை விடுங்கள், அவைகளிடம் காதினை கொடுங்கள், சசிகலா முதல்வராவதும் இலுமினாட்டி சதியாக இருக்குமோ என யோசித்து கொண்டிருக்கின்றோம் என்பார்கள்

அவர்களை புறந்தள்ளிவிட்டு உங்கள் குழந்தைகளை காக்கும் வழியினை பாருங்கள்

இவர்கள் கருத்தினை கேட்டால் நம்மை எல்லாம் கல்தோன்றி மண் தோன்றா காலத்திற்கு அழைத்து சென்று, இலை தழைகளை உடுத்தி, நடுகாட்டில் நிறுத்திவிடுவார்கள் ஜாக்கிரதை.