“தனி தமிழ்நாடே தீர்வு” என்பவர்களுக்கு…..

தான் தீவிர தமிழர், தனிதமிழ்நாடே தீர்வு என்று சொல்லும் சீமானிய முகமூடி ஒன்று போதிக்க வந்தது, இந்தி திணிப்பு, காவேரி என எப்படிஎல்லாம் இந்த தமிழர்களை இந்தியா வஞ்சிக்கின்றது தெரியுமா?, சிந்தியுங்கள் தம்பி, தனிநாடு இன்றி இனி தமிழகம் வாழமுடியாது என ஒரே போதனை

“சரி தமிழ்நாடு அடைந்தால் கவேரி பிரச்சினை எப்படி தீரும்? நாம் இந்தியாவிடம் அல்லவா சண்டையிட வேண்டும்? சர்வதேச கோர்ட்டுக்கு செல்ல வேண்டும் அல்லவா??

அதான் தம்பி, நாம் தனிநாடாகிவிட்டால் அப்படித்தான் செல்லவேண்டும்

காவேரி வந்துவிடுமா?

வரலாம் வரமாலும் போகலாம், நாம் தனிநாடு ஆனபின் அணுகுண்டு வரை செய்து அதனை மிரட்டி காவேரியினை மீட்கலாம்

அது எப்படி? இந்தியாவிடம் அணுகுண்டு இல்லையா? அணுகுண்டு செய்வது அவ்வளவு எளிதா?

சரி அதனை விடுங்கள், காவேரி வராவிட்டால் பராவாயில்லை, தமிழ் வாழும் தமிழர் வாழ்வர்

தமிழ் வாழும் லட்சணம் புரிகின்றது, தமிழை தமிழரேதான் அழிக்கின்றனர், சரி தமிழர் எப்படி வாழ்வர்? தமிழரின் உறவுகள் இந்தியா முழுக்க சிதறிகிடக்கின்றன, நாளை தனிநாடு ஆயின் அவர்களை விரட்டமாட்டானா? அப்படி இல்லையாயினும் அவர்களை சந்திக்க பாஸ்போர்ட் கெடுபிடி அது இது என எவ்வளவு சிக்கல்?

இல்லை உனக்கு புரியவில்லை, நாம் வளர்ச்சியடைந்த வல்லரசானால் எல்லாம் சாத்தியம்

எவ்வளவு நாளில் வல்லரசாவோம்

ஒரிரு வருடத்தில் வல்லரசாவோம்

எப்படி?

தமிழனின் உழைப்பும் அறிவும் அப்படி, குட்டியான சிங்கப்பூரே வளர்ச்சியடைந்தபொழுது தமிழகம் வளராதா?

தமிழகத்தை விட பெரிதான ஆப்கன் வளர்ந்துவிட்டதா? எத்தியோப்பியா வளர்ந்துவிட்டதா?

தம்பி நாம் பெரும் அறிவாளி தம்பி, இஸ்ரேல் போல ஜொலிக்கலாம், இந்தியா தமிழகத்தை வைத்திருப்பதே அதன் கடலுக்குத்தான் தம்பி

ஓ.. தமிழகத்தை தவிர இந்தியாவில் கடல் இல்லையா? குஜராத் முதல் கல்கத்தாவரை எவ்வளவு துறைமுகம் உண்டு

அது தம்பி, தமிழகம் போல வராது, அன்றே பூம்புகாருக்குத்தான் கப்பல் வந்தது, நாம் வ‌ல்லரசாகிவிடுவோம் தம்பி

அப்படியா? எப்படி?

அணுகுண்டு தயாரித்தால் நாம் வல்லரசு.

தனி தமிழ்நாட்டில் எங்கு வைத்து அணுவினை வெடிப்பீர்கள்? சென்னை நகரிலோ மற்ற நகரிலோ முடியுமா?

அட தம்பி நாம் கச்சதீவினை மீட்டு அதில் வெடிக்கலாம், நிச்சயம் வல்லரசாவோம்

ஓஹோ, வல்லராகிவிட்டு என்ன செய்ய வேண்டும்?

ஈழவிடுதலைக்கு உதவ வேண்டும்?

ஓஓஓ இதுதான் நோக்கமா? ஈழ விடுதலைக்காக நாம் தனிநாடு ஆகவேண்டுமா?

ஆம் போர் வெடிக்கும், நாம் சுதந்திரமான தமிழகம் என்பதால் சிக்கலே இல்லை, இலங்கையினை ஏறி மிதிக்கலாம்

மிதிப்பது இருக்கட்டும், முள்ளிவாய்க்காலில் சிங்களன் ஏறி மிதிக்கும்பொழுது உலகமே வந்ததே? அப்படி கூடிவிட்டால்??

நாம் வீரம் செறிந்த போர் நடத்தவேண்டும்

அப்படித்தான் நடத்தி கிழித்தோமே யார் வந்தார்கள்?

இல்லை தமிழகத்தில் 8 கோடி தமிழர், ஈழத்தில் 5 லட்சம் தமிழர், ஆக இந்த 8கோடியே 5 லட்சம் தமிழரை 1.5 கோடி சிங்களன் வெல்லமுடியாது

தமிழகம் தனிநாடான கோபத்தில் இருக்கும் இந்தியா சிங்களனோடு சேர்ந்தால் 110 கோடி இந்தியனும் 1.5 கோடி சிங்களனும் சேர்ந்து தொலைத்துவிடுவானே?

அதுதான் நீங்கள்கவனிக்க வேண்டும், இரு எல்லையிலும் நாம் போராட வேண்டும், மானமுடனும் வீரமுடனும் இரு நாடுகளையும் பணிய வைக்க வேண்டும்

ஓஓ தனி தமிழ்நாடு இப்பக்கம் இந்தியாவிடமும், அப்பக்கம் இலங்கையிடமும் அடிபட்டு சாக வேண்டும் , பாக்குவெட்டியில் சிக்கிய எலிபோல் திணறவேண்டும், இதுதானே உங்கள் எண்ணம்? ஓடு நாயே…

நீ அடிவருடி, இனதுரோகி, என சொல்லிவிட்டே அது ஓடிவிட்டது

5 லட்சம் பேருக்கு நாடுவாங்க 8 கோடி பேர் அடிபட்டு சாக வேண்டுமாம், எப்படி ஒரு கொள்கை??

ஏதோ விறகு பொறுக்கி அடுப்பெரிப்பது போல தமிழரை பிடித்து தீயில் எரிய திரிகின்றார்கள், அதன் பெயர் இன உணர்வு, தமிழுணர்வு.