தன்மான சிங்கம் டி.ஆர்
ஒருவன் வீட்டில் ஏதும் பேசமுடியா நிலையில், பேசினால் அடிவிழுமோ எனும் நிலையில் வெளியிடத்தில் பொங்கி தீர்ப்பான் என்பது உளவியல்.
அதற்கும் கீழே சொல்லபடும் விஷயத்திற்கும் சம்பந்தம் இருப்பதாக நினைத்துவிட கூடாது. மேல் சொல்லபட்டது ஒரு தத்துவம்.
சம்பவம் என்னவென்றால், டி.ஆர் ஒரு சினிமா விழாவிற்கு சென்றிருகின்றார், மேடையில் அமர்ந்திருக்கின்றார். அங்கு ஆளாளுக்கு பேசியிருக்கின்றார்கள். படத்தின் நாயகி தன்ஷிகாவும் பேசியின்றார்.
பலர் பேசும்பொழுது தன்ஷிகாவினை கபாலி நாயகி என சொல்லிகொண்டே இருந்திருக்கின்றார்கள், டி.ஆருக்கு அதிலே கடுப்பு போல
அடுத்து பேசவந்த தன்ஷிகா பேசியிருக்கின்றார், ஆனால் மேடை நாகரிகபடி தமிழ் வணக்கம், அவை வணக்கம், மொழி வணக்கம், எக்ஸ்ராவாக டி.ஆர் வணக்கம் எல்லாம் வைக்காமல் பொதுவாக பேசி முடித்துவிட்டாராம்.
தன்மான சிங்கமான டிஆருக்கு கடுப்பு கூடிற்று. மைக் கிடைத்தவுடன் தலையினை சிலுப்பி கொண்டு கிழித்தெறிந்திருக்கின்றார். தன்னை தன்ஷிகா பெயர் குறிப்பிட்டு மரியாதை செய்ததில்லை, ,மேடை நாகரிகம் தெரியவில்லை என எடுத்த எடுப்பிலே எட்டு கட்டையில் டண்டனக்கா ஆடியிருக்கின்றார்
மேடையில் இருந்தவர்கள் அவரை சமாதானபடுத்தியிருக்கின்றார்கள், டி.ஆர் என்றால் அமைதியாவார்,
ஆனால் மைக் கிடைத்தவுடன் புகுந்துவிடும் சுடமை சாமி விடுமா? ஆடி தீர்த்திருக்கின்றது.
நடிகை தன்ஷிகா பிளீஸ் சார் என சொல்லி ஒரு கட்டத்தில் மேடையிலே அழுதுவிட்டார். ஆனாலும் ஆடு கத்தினாலும் சாமி விடுமா? அது தன்ஷிகா துடிக்க துடிக்க மைக்கால் அறுத்திருக்கின்றது.
விஷயம் பற்றி எரிகின்றது. டி.ஆருக்கு எதிராக கண்டனங்கள் வலுக்கின்றன.
டி.ஆர் எத்தனையோ மேடைகளை கண்டவர். இப்பொழுது மட்டும் என்ன அவமானம் கண்டாரோ தெரியவில்லை. தன்ஷிகா மீது அப்படி என்ன கோபம்?
ஏதும் சிம்புவுடன் நடிக்கமாட்டேன் என சொல்லிவிட்டாரா என்றால் அதுவுமில்லை, ஒரு வேளை டி.ஆரே கால்ஷீட் கேட்ட கதையுமில்லை
மேடையில் தன்ஷிகா அழுது ஓய்ந்திருக்கின்றார், கடைசியில் டி.ஆர் சொன்ன ஒரு வார்த்தைக்காக மறுபடியும் அழுது அழுது புரண்டிருக்கின்றார்.
அதாவது அறுத்து முடிக்கும்பொழுது டி.ஆர் சொன்னாராம் , “நான் தன்ஷிகாவிற்கு அண்ணன் மாதிரி”
எப்படியோ டி.ஆருக்கு கண்டனங்கள் பறக்கின்றன.
உண்மையில் உலகில் பரிதாபத்திற்குரிய பெண்மணி யாரென்றால் அந்த உஷா ராஜேந்தர் தான். பெற்ற பிள்ளையும் கொண்ட கணவனும் ஒரே நேரத்தில் பித்தானால் என் செய்வார்?
தன்ஷிகா எப்படி இந்த விஷயத்தை எதிகொள்ள போகின்றாரோ தெரியாது.
ஒருவேளை இப்படி அடுத்த கூட்டத்தில் சொல்லலாம்.
“வந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம், வராத டி.ராஜேந்தர் அவர்களுக்கும் வணக்கம்”