தமிழகம் விழித்துகொள்ளட்டும், டெங்குவிலிருந்து விடுதலை பெறட்டும்

No automatic alt text available.

டெங்கு காய்ச்சல் வேகமாக பரவுகின்றதாம், அரசினை முழுமையாக சாட முடியாது. இதில் மக்கள் விழிப்புணர்வும் மகா அவசியம்.

காய்ச்சலில் டெங்கி மற்ற காய்ச்சலை விட கொடூரமானது, இதன் அபாயம் என்னவென்றால் இது முற்றிவிட்டால் மருந்தே இல்லை

டெங்கு உடலை பாதிப்பது எப்படியென்றால் ரத்தத்தில் உள்ள அணுக்களின் எண்ணிக்கையினை குறைக்கும், அது குறைய குறைய உடல் நலம் பாதிக்கும்

கடைசி கட்டத்தில் ரத்தம் கசிய எமன் தோன்றும் நேரம் வந்துவிடும்.

கடுமையான குறையாத காய்ச்சல், வாந்தி , தலைவலி தோலில் ஒரு மாதிரியான தடிப்பு இருந்தால் உடனே மருத்துவரை பார்ப்பது நல்லது, ரத்த பரிசோதனை செய்து முடிவினை தெரிந்து கொள்வது அதனை விட நல்லது.

டெங்கிக்கு என்று சிறப்பு மருந்து, சிகிச்சை ஏதுமில்லை என்பதுதான் சோகம். காய்ச்சலை குறைக்கும் மருத்துகளை கொடுத்து ரத்த அணுக்களின் எண்ணிக்கையினை அதிகபடுத்தித்தான் குணமாக்கலாம்.

டெங்கு கொடூரமான நோய்தான். ஆனால் ஆண்டவன் படைப்பில் ஒவ்வொரு நோய்க்கும் ஒரு பலவீனம் இருக்கும், அது டெங்குவிற்கும் உண்டு

அதாவது இது ஏடிஸ் எனப்படும் கொசு மூலம் மட்டுமே பரவும், டெங்கு கண்டவரை கடித்த ஏடிஸ் கொசு உங்களை கடித்தால் உங்களுக்கும் வரும், மற்றபடி தொற்றுநோய் வகையில் டெங்கு வராது.

ஏடிஸ் கொசுதான் டெங்கு காய்ச்சலின் மூலவர், பிதாமகன் எல்லாம். அவரின்றி பரவாது டெங்கு

அந்த ஏடிஸ் கொசுவிற்கும் சில நல்ல குணம் உண்டு, எல்லா நீரிலும் அது வளராது. நல்ல நீர் வேண்டும். நல்ல நீர் என்றால் குடிநீர் தொட்டி, பூந்தொட்டிகளில் தேங்கும் நீர், வீட்டு உபயோக நீரை சேர்க்கும் பாத்திரம் என எதுவாக இருந்தாலும் அதில்தான் வளரும்

நல்ல நீரை தேங்கவிடாமல் பார்த்துகொண்டால், சாக்கடை சேராமல் பார்த்துகொண்டாலே டெங்கு பரவாது.

ஏடிஸ் கொசுவின் இன்னொரு நல்ல குணம் அது அதிகாலையில் கடிக்கும் அல்லது மாலையில் கடிக்கும் என ஆய்வுகள் சொல்கின்றன, அம்மாதிரி நேரத்தில் கவனமாய் இருப்பது நல்லது.

டெங்கிக்கு முதல் தடுப்பு சுற்றுபுறத்தை நீர் தேங்காமல் பார்த்துகொள்வது, சென்னை போன்ற நெருக்கமான வீடுகள் உள்ள பகுதியில் மக்கள் இணைந்து செய்யாமல் இது சாத்தியமில்லை.

ஒருவர் சுத்தமாக வைக்க, அடுத்தவர் நீரை தேங்கவிட்டால் அவ்வளவுதான். ஏடிசுக்கு என்ன தெரியும்? அதற்கு எல்லோரும் ஒன்றுதான். இவர் சுத்தமாக வைத்திருந்தார் அய்யோ பாவம் என்றேல்லாம் அது பார்ப்பதில்லை.

டெங்கு அறிகுறி கண்டுவிட்டால் உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்வதும் சால சிறந்தது, நோயாளியினை தனிமைபடுத்தி சிகிச்சையளிப்பது நல்லது

பப்பாளி இலை சாறும், நிலவேம்பு கஷாயமும் டெங்கி காய்ச்சலுக்கு சிறந்த மருந்து.

இன்றும் கிழக்காசியாவில் ஆண்டுக்கு ஆயிரகணக்கானோரை கொல்லும் கொடூர காய்ச்சல் அது. ஆனானபட்ட சிங்கப்பூரே அதனை வெல்ல முடியவில்லை, முடியவும் முடியாது

மிக மிக விழிப்பாக இருந்தால் அதனோடு ஆடும் கண்ணாமூச்சியில் ஜெயிக்கலாம், கொஞ்சம் அசந்து அது முதல் குத்து குத்தும்பொழுதே தெரிந்துகொண்டால் பிழைக்கலாம்

அசால்ட்டாக விட்டுவிட்டால் அது மாபெரும் வெற்றியினை தட்டி பறிக்கும்

இம்மாதிரி நோய்களை கட்டுபடுத்தவும், ஒழிக்கவும் மக்கள் ஒத்துழைப்பும் வேண்டும், சரியான முன்னேற்பாடுகளை செய்யாமல் அடிக்கும் கொசுமருந்து பலனில்லாதது.

அதே நேரத்தில் அரசும் முழு விழிப்புணர்வினை மக்களுக்கு கொடுக்க வேண்டும்

அரசு மட்டுமல்ல தனியார் மீடியாக்களும் இதனை அரசை குற்றம் சொல்லும் விஷயமாக கருதாமல், மக்கள் உயிர்காக்கும் விஷயமாக பொறுப்புணர்ச்சியோடு விழிப்புணர்வு தகவல்களை தரவேண்டும்.

தமிழ்நாட்டில் அரசியலுக்காக தொலைகாட்சி நடத்தபடும் சோகம் இருப்பதால் இதனை அவைகள் செய்யாது. ஆனால் நல்ல மீடியாக்கள் டெங்கு அபாயத்தை எடுத்து சொல்ல வேண்டும். அரசியலுக்காக அதனை செய்யாமலிருப்பது மகா பாவம்.

தொலைகாட்சியோ, எப்.எம் ரேடியோவோ எதுவாக இருந்தாலும் சரி, மக்களை காக்கும் தகவல்களை கொடுக்கட்டும்

தமிழகம் விழித்துகொள்ளட்டும், டெங்குவிலிருந்து விடுதலை பெறட்டும்