தமிழன் என்பதற்காக திமுகவிலும் வரமுடியாது
ஏதோ நாம் அண்ணா காலத்தில் இருந்து திமுக போலவும், கலைஞருடன் பாளையங்கோட்டை சிறையில் இருந்தது போலவும், மிசாவில் ஸ்டாலினுடன் அடிவாங்கியவன் போலவும் இப்பொழுது சில விஷயங்களை சொன்னால் ஏய் உன் பதிவு சரி இல்லை , நீ ஆரிய அடிவருடி என பல திமுகவினர் கிளம்புகின்றார்கள்
இந்த திமுக அபிமானம் என்ற முத்திரை எப்பொழுது விழுந்ததென்றால் இந்த தும்பிகளை பற்றி எழுதியபொழுது, சைமனை கிழித்தபொழுது
ஒரு இந்தியனாகத்தான் புலிகளை சாடினோம், அவர்களுக்கு கலைஞரும் இத்தேசமும் செய்த உதவிகளை சொன்னோம், அப்பொழுது ஓடிவந்து சேர்ந்தவர்கள்தான் இந்த திமுகவினர்
திமுகவா, அதிமுகவா என பார்க்கும்பொழுது தமிழகத்தில் திமுகவின் நிலைப்பாடும் அரசியலும் கொள்கையும் பன்மடங்கு உயர்ந்தவை என்பதால் திமுகவின் சில நியாயங்களை சொன்னோம்
அப்படி கலைஞரின் சில நல்ல பக்கங்களை சொல்ல வேண்டியதாயிற்று
அதற்குள் நாம் முழுக்க திமுக போலவும், பெரும் திராவிட வெறியன் போலவும் அவர்களாகவே நினைத்துகொண்டு சாடிகொண்டிருகின்றார்கள்
நாம் முதலில் இந்தியன் அதன் பின்பே தமிழன்
அந்த நிலைப்பாட்டில் இருந்து மாறமுடியாது, மாறவேண்டிய அவசியமுமில்லை
இப்பொழுது என்ன நடக்கின்றது, கலைஞருக்கு பின் திமுகவில் அழகிரி கொடிபிடிக்கின்றார்
இது பெரிய கட்சிகளில் சாதாரணம், அதுவும் தமிழகத்தில் மிக மிக சாதாரணம்
பெரும் தலைவன் இறந்தபின் அக்கட்சியில் பூகம்பம் வெடிக்கும், பிளவுபடும் பெரும் குழப்பத்தில் சிக்கித்தான் கட்சி மீளும்
திமுக, அதிமுக வரலாறு இதுவே
இதில் கலைஞருக்கு பின்பான திமுக மட்டும் தப்பிவிட முடியாது
இதில் கவனிக்கபட வேண்டியது ஒன்றுதான்
திமுகவிற்கு அதிமுக போல் தனிபட்ட வாக்குவங்கி கிடையாது, தமிழக சாபமோ இல்லை வேறு விஷயமோ திமுகவினை விட அதிமுகவிற்கு வோட்டு வங்கி அதிகம்
அது ராமசந்திரன் செத்தும் மாறவில்லை, ஜெயா செத்தபின்னும் அசைந்ததாக தெரியவில்லை, ஆர்.கே நகரில் கூட அதிமுக வோட்டு அப்படியே தினகரனுக்கே விழுந்திருக்கின்றது, சந்தடி சாக்கில் திமுக வோட்டையும் இழுத்து சென்றிருக்கின்றது
அண்ணா காலத்தில் இருந்தே கூட்டணி இல்லா தேர்தலை திமுக சந்திக்காது, 1996ல் இது நன்றாக தெரிந்தது
ஆக திமுக பெரும் வாக்குவங்கி கொண்ட கட்சி அல்ல, இன்னும் எதிர்கட்சி வலுவாகவே இருக்கின்றது.
இந்நிலையில் அழகிரி போன்றோரை விலக்கி வைத்தால் அது திமுகவின் தேர்தலை நிச்சயம் பாதிக்கும், இன்று இல்லாவிட்டாலும் பின்னாளில் தெரியும்
ஸ்டாலின் ஒன்றும் எம்ஜிஆரோ, கலைஞரோ அல்ல
இருக்கும் சூழலில் ஒவ்வொரு வோட்டும், ஒவ்வொரு உறுப்பினரும் திமுகவிற்கு மகா முக்கியமானவர்கள்
இதெல்லாம் அவர்களுக்காக தெரிய வேண்டிய விஷயம், தமிழக வரலாற்றை உற்று நோக்கும் ஒவ்வொருவருக்கும் புரியும் விஷயம்
இது எல்லோரும் சொல்லும் சாதாரணமாக சொல்லும் விஷயம், அதைத்தான் நாமும் சொன்னோம்
“அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது
உட்பகை உற்ற குடி.”
இந்த குறளுக்கு அர்த்தம் தெரியவில்லை என்றால் கலைஞர் எழுதிய உரையினை படித்துகொள்ளவும், நன்றாக எழுதியிருப்பார்
நாம் மறுபடியும் சொல்லிகொள்கின்றோம், நாம் இந்தியன் என்பதற்காக பாஜகவிலோ ஆர்.எஸ்.எஸிலோ சேரமுடியாது
தமிழன் என்பதற்காக திமுகவிலும் வரமுடியாது
நமக்கு தோன்றுவதை, மனதிற்கு பட்டதை நாம் எழதிகொண்டே இருப்போம்
அதற்காக திமுகவிற்கு எதிராக எழுதாதே என்பதையும், விமர்சிக்காதே என சொல்வதற்கும் உங்களுக்கு உரிமை இல்லை
பிடிக்கவில்லை என்றால் விலகி செல்லுங்கள், திமுக ஆதரவு ஸ்டாலின் ஆதரவு என எழுது என வந்து மல்லுகட்டாதீர்கள்
உங்களுக்காக எம் பாதையினை மாற்றமுடியாது,
தமிழகம் எனும் மிக குறுகிய வட்டத்தில் அதுவும் திமுக எனும் மிக குறுகிய வட்டத்தில் சிக்க நாம் தயாராக இல்லை
அதிமுகவினை எல்லாம் , பாஜகவினை எல்லாம் சில நேரங்களில் கடுமையாக விமர்சிக்கின்றோம்
அவர்கள் யாராவது ஒருவார்த்தை சொல்கின்றார்களா?
உங்களை விட அவர்கள் மகா நல்லவர்கள் போலிருக்கின்றது