தாய் மண்ணிற்கு வர காத்திருப்பது ஒருவிதமான வலி

தாய் மண்ணிற்கு வர காத்திருப்பது ஒருவிதமான வலி, அதுவும் டிக்கெட் வந்துவிட்டால் அதன் பின் உண்ண தோன்றாது, உறக்கம் வராது நினைவுகள் அங்கே சுற்றிகொண்டே இருக்கும்

ஒவ்வொரு முறையும் கிளம்பும்பொழுது ஆயிரம் திட்டம் இருக்கும், இம்முறை பலரை சந்திக்கவேண்டும் பல இடங்களை பார்க்க வேண்டும் என கடும் திட்டமிடல் உண்டு

செங்கோட்டை முதல் பாஞ்சாலங்குறிச்சி கோட்டைவரை குறித்து வைத்துவிட்டுத்தான் வருவது, ஆனால் வந்து தாயின் முகம் கண்டுவிட்டால் எல்லாம் மறந்துவிடும், ஒரு அடி நகர மனம் வராது, நொடியில் கழிந்துவிடும் விடுமுறை

சென்றவுடனும் அழவேண்டும் , பிரிந்து வரும்பொழுதும் அழவேண்டும்

இதனால் இந்நாள் வரைக்கும் உறுதியளித்த யாரையும் சந்திக்க முடியவில்லை, நினைத்த இடத்திற்கு செல்லவும் முடியவில்லை

நம்புவீர்களோ இல்லையோ பலமுறை பார்க்க நினைத்த பத்மநாபபுரம் அரண்மனைக்கு கூட பல வருடமாக செல்லவில்லை

இம்முறை சென்னைக்கு விஜயம், அந்த ஊரில் 2002ல் கால்வைத்தேன், 2 மாதம் தங்கி இருந்தேன். படித்து முடித்த காலங்கள்

முட்டைக்குள் இருந்து வந்த குஞ்சு போல அந்த ஊரில் திருதிருவென சுற்றி இருக்கின்றேன், அன்று சென்னைவாசிகள் தமிழை கேட்டேன் அதிலொன்றும் ஆச்சரியமில்லை

ஆம் அவர்கள் ஆங்கிலத்தை அப்படியே தமிழாக்கம் செய்வார்கள், ஆங்கிலத்தில் நீ, நீர், நீவிர் என எல்லாவற்றிற்கும் என்ற வார்த்தைதான், அதை அப்படியே தமிழாக்கம் செய்து “வா”, “போ” ,”இந்தா புடி”, “குந்து” என தமிழில் பேசிகொண்டிருப்பவர்கள் சென்னைவாசிகள், அதில் ஒரு ரசனையும் இருந்தது.

அன்றே வேலை தேடுகின்றேன் என சொல்லிவிட்டு மியூசியம் முதல் கோட்டை வரை பல வரலாற்று புகழ்மிக்க‌ இடங்களை பார்த்துவிட்டேன், அதில் பரங்கிமலை தியேட்டரும் ஒன்று

அண்ணா கல்லறைக்கு சென்றேன், ராமசந்திரன் கல்லறை அருகில் இருந்தது, அங்கு செல்லாமல் அவரை பழிவாங்கினேன். என்னால் முடிந்தது அதுதான்

இன்னும் பல இடங்களுக்கு செல்லும் திட்டம் இருந்தது ஆனால் பல நெருக்கடிகளால் ஓடிவிட்டேன்

அதன் பின் பல்லாண்டுக்கு பின் விமானம் ஏற வந்ததோடு சரி, அப்பக்கம் வரவே இல்லை

அந்த சென்னைக்கு வரும் அவசியத்தை என்பவர் ஏற்படுத்திவிட்டார் Jpr Rayan, அவர் உறவினர் ஆனால் கொஞ்ச தூரம்.

ஒரு சீனபடத்தில் ஒரு காட்சி மறக்க முடியாதது. 1940களில் நடக்கும் கதை, சீனாவில் புரட்சி நடக்கும் குட்டி இளவரசனை கம்யூனிஸ்டுகள் தூக்கி எறிவார்கள் அவன் எங்கோ சென்றுவிடுவான் 1980களில் திரும்பவருவான், அவன் வளர்ந்த அரண்மனைக்கு வருவான்

வந்து இதோ இது என் அறை இங்குதான் நான் உறங்கினேன், இது என் தந்தையின் அரியாசனம், இது என் வீடு என கதறுவான். ஆனால் கம்யூனிஸ்டுகள் இது இப்பொழுது நாட்டு சொத்து என சொல்லி விரட்டுவார்கள்

அந்த கதைக்கும் இவருக்கும் வித்தியாசம் ஒன்றுமில்லை, இவரும் சில கம்யூனிஸ்ட் கொள்கைவாதிகளால் சென்னை வந்தவர்

அவரின் திருமணத்தில் கலந்துகொள்ள அன்னையார் உத்தரவு

இதற்காக சென்னை வந்துவிட்டு பலரை சந்திக்க திட்டமிருக்கின்றது, இப்பொழுது பல நண்பர்கள் அழைத்துகொண்டிருப்பதால் உற்சாகமாக வரலாம்.

மதித்து அழைப்பவர்களை பார்த்துவிட வேண்டும்.

பலரை சந்திக்கவும், பல இடங்களுக்கு செல்லவும் திட்டமிருக்கின்றது, சென்னை பழமையும் புதுமையும் கலந்து மின்னும் நகரம் என்பதால் ஏராளமான இடங்கள் இருக்கின்றன‌

முடிந்த அளவு எல்லோரையும் சந்திக்கலாம், சந்திக்க வேண்டும்

பார்க்க வேண்டிய முகங்கள் என எண்ணும்பொழுது மனதிற்குள் முதலில் வருவது கலைஞர் முகம்,

அவரை பார்க்காமல் சென்னையினை விட்டு திரும்புவது பூமியில் பிறந்துவிட்டு சூரியனை பார்க்காமல் வாழ்வது போன்றது

கலைஞரை திமுகவினர் மட்டும்தான் சந்திக்க வேண்டும் என்பதில்லை , அவரை பற்றி அறிந்த யாரும் பார்க்கலாம் என்பது அவரின் அரசியல் தத்துவம்

அதனை அறிந்த திமுகவினர் உதவுவார்கள் என நம்புகின்றோம், , பார்க்கலாம்

விரைவில் சங்கம் சென்னை நோக்கிய தன் பயணத்தை தொடக்க இருக்கின்றது.

தலைவியினை பார்த்து சங்க கொள்கையினை விளக்கலாம், வாய்ப்பு கிடைக்குமா என தெரியவில்லை.

முடியாவிட்டால் அவரின் வீடு அமைந்திருக்கும் பகுதியான சாந்தோம் ஆலயத்தில் தலைவிக்காக திருப்பலி ஒப்புகொடுத்துவிட்டு சந்தோஷமாக திரும்பலாம்