திமுகவிற்கு சமூக பொறுப்பு வந்துவிட்டதாம்…
“நீட் தேர்வில் திமுக பெரும் எதிர்ப்புகாட்டவில்லை என சொன்னால், உனக்கு என்ன வேண்டும்? திமுக களமிறங்கி போராட வேண்டுமா? தமிழகம் பற்றி எரியவேண்டுமா? அதனையா எதிர்ப்பார்க்கின்றாய்
சமூக பொறுப்பு இல்லாதவனே, அந்த கொடுமை எல்லாம் நாங்கள் செய்யமாட்டோம், நியாயபடி வெல்வோம், எல்லாம் எம் தளபதிக்கு தெரியும்” என பலர் பாடமெடுக்கின்றார்கள்.
திமுக வரலாறு என்ன?
குலகல்வி திட்டம் என ராஜாஜியின் கல்வி திட்டத்தை எதிர்த்து நீதிமன்றமா சென்றது? குட்டிகரணம் அடித்து தமிழகத்தை ஸ்தம்பிக்க செய்யவில்லை?
ராஜாஜியினையே விரட்டவில்லையா?
இந்தி எதிர்ப்பில் என்ன செய்தது? சட்டபடி, நியாயபடி என வசனம் பேசியதா?
பெரும் பிரச்சினையாக மாற்றி 67 பேரை பலிகொடுத்து அல்லவா இந்தியினை விரட்டியது.
கூடவே காமராஜரையும் விரட்டியது.
கல்லகுடியில் நடந்தது என்ன? பெயர் பலகையில் பெயர் ஒட்ட போலிஸ் அனுமதியுடன் நடந்த போராட்டத்தில், சட்டபடி நியாயபடி போஸ்டர் ஒட்டிவிட்டு அமைதியாக திரும்பியதா?
இல்லை சட்டத்தை மீறி தண்டவாளத்தில் படுத்து, துப்பாக்கி சூட்டை நடத்த காரணமாகி 3 பேரை பலிகொடுத்ததா?
திமுக என்று சட்டபடி போராடியிருக்கின்றது?
இன்றைய நாம் தமிழர், அட அதுவுமில்லை கிருஷ்ண்சாமி கட்சி போல 1950களில் இருந்த திமுகபெரும் பிம்பமாக எழும்பியதே போராட்டங்களில்தான்
அன்றைய முதல்வர் ராஜாஜி, குமாரசாமி ராஜா போன்றோர் எடுத்த நடவடிக்கையிலே திமுக வளர்ந்தது. குமாரசாமியின் அடக்குமுறை இல்லையென்றால் திமுக அனுதாபம் பெற்று வளர்ந்திருக்காது
தமிழுக்காக, தமிழருக்காக உயிர்கொடுக்கின்றார்களே இவர்கள் எனும் அந்த அனுதாபம்தான் தமிழகம் திமுக பக்கம் திரும்ப பெரும் காரணம்.
திமுக வரலாறு அப்படி, போராட்டத்திலே வளர்ந்த கட்சி அது.
அதிமுகவிடம் அப்படி எதிர்பார்க்க முடியுமா?
இன்றுவரை உருப்படியான போராட்டமோ இல்லை ஒரு கொள்கையோ எதுவுமே இல்லாமல் இருக்கும் ஒரே கட்சி அதுதான். அது பலமுறை ஆட்சிக்கு வந்ததுதான் உலகின் எட்டாம் அதிசயம்
திமுக அப்படி அல்ல, அதனிடம் என்றுமே மக்களுக்கு எதிர்பார்ப்பு உண்டு
இன்று நினைத்தாலும் பெரும் போராட்டத்தை அதனால் முன்னெடுக்க முடியும், தமிழகத்தை அகதளம் அல்ல மாறாக மக்கள் எல்லோரையும் திரட்ட அதனால் நிச்சயம் முடியும்.
ஈழபிரச்சினையினை தமிழகத்தில் பெரிதாக்கியதும், பெரும் மாநாடுகளை நடத்தியதும், அமைதிபடையினை சொந்தநாட்டு ராணுவம் என்றும் பாராமல் கண்டித்து பெரும் அழிச்சாட்டியம் எல்லாம் செய்தது திமுக
அதெல்லாம் என்ன சட்டபடி நடந்ததா? நிச்சயமாக இந்திய ஒருமைபாட்டுக்கு எதிரான செயல்.
அந்த அளவு துணிச்சலாக இருந்த திமுக எங்கே?
ராஜிவ் கொலைமட்டும் நடக்கவில்லையென்றால் 2009ல் திமுக தமிழகத்தில் அமைதியாயிருக்கும் என நம்புகின்றீர்கள்? நிச்சயம் இருந்திருக்காது.
அதன் கடந்தகால வரலாறுகளை பார்த்துவிட்டுதான் கேட்கின்றோம்
அதிமுக என்பது அம்மிக்கல் அல்லது மம்மிக்கல் எங்கு போட்டாலும் பொத்தென்று இருக்கும், அதனிடம் என்ன எதிர்பார்க்க?
ஆனால் திமுக என்பது தீபந்தம், அது சில விஷயங்களை செய்யாவிட்டால் அந்த தீ அணைந்துவிட்டதா என்றுதான் கேட்க தோன்றும்
திமுக வரலாறை புரட்டுங்கள். திக கழகத்து பெரியார், திமுகவின் அண்ணா, கலைஞர் எல்லாம் போர்குணம் மிக்கவர்கள், அந்த வரிசையில் ஒரு வீரியமும் போர்குணமும் மிக்க தலைவன் வந்தால் ஒழிய அது திமுகவாக இருக்காது
இதனை சொன்னால் நம்மிடம் சீறுபவன் முக ஸ்டாலினின் விசுவாசியாக, அல்லது கனிமொழியின் விசுவாசியாக இருப்பானே அன்றி நிச்சயம் நல்ல திமுக காரனாக இருக்கமாட்டான்.
இன்று திமுகவிற்கு சமூக பொறுப்பு வந்துவிட்டதாம், அதனால் பெரும் போராட்டம் நடத்தமாட்டார்களாம்
அப்படியானால் ராஜாஜிக்கு எதிராக, இந்திக்கு எதிராக, மிசாவுக்கு எதிராக கிளம்பிய அந்த திமுகவிற்கு அமைதிபடைக்கு எதிராக சமூக பொறுப்பு இல்லாமலா இருந்தது???
முன்பிருந்த திமுக வேறு, இப்பொழுது இருக்கும் திமுக வேறு என்றாவது சொல்லி தொலையுங்கள், ஒருவரும் உங்களிடம் ஒன்றும் கேட்கமாட்டார்கள்.