திரிகோணமலை துறைமுகத்தை யார் கையில் வைத்திருப்பது ?

அது கிட்டதட்ட 50 ஆண்டுகால பிரச்சினை , இலங்கையின் திரிகோணமலை துறைமுகத்தை யார் கையில் வைத்திருப்பது எனும் பிரச்சினை

காரணம் அதன் தன்மை அப்படி, மிக சிறந்த இயற்கை துறைமுகம், அதில் மட்டும் ஒரு ராணுவ தளம் அமைந்துவிட்டால் கிழக்காசியா முழுக்க நின்று ஆடலாம், அப்படியான இடம் அது

இப்படியான இடத்திற்கு மசால் வடையினை தேடிவரும் எலிபோல அமெரிக்கா வராமல் இருக்குமா? அது காலூன்ற சுற்றி சுற்றி வந்தது. அது வந்தது சோவியத் முகாமிற்கு எரிச்சல் குறிப்பாக இந்தியாவிற்கு

ஆனால் இந்திய வம்சாவளியினரை திரும்ப ஏற்றுகொண்டது, கச்ச தீவினை கொடுத்தது, 1979ல் நடந்த உள்நாட்டு கிளர்ச்சியினை அடக்கியது என இந்தியாவும் இலங்கையுடன் நட்புறவில்தான் இருந்தது

ஆனால் ஜெயவர்த்தனே திரிகொணமலையினை சொப்பன சுந்தரியாக காட்டி உலகெல்லாம் வசூல் செய்துகொண்டிருந்தார், கூடவே அப்போது துளிரிவிட்டிருந்த தமிழ் போராளிகளை ஒடுக்க அமெரிக்கா இஸ்ரேல் உதவியினை அவர் நாடினார், அவருக்கு பாடம் கற்பிக்க களத்தில் இறங்கியது இந்தியா

அவர்கள் பார்வை அங்கிருந்த போராளிகளுக்கு பயிற்சி கொடுக்க தொடங்கினார், நிச்சயம் தனிநாடு அமைத்துகொடுக்கும் எண்ணம் இந்தியாவிடம் இல்லை, ஒரு காலமும் இல்லை

காரணம் வங்கதேசத்தை பிரித்துகொடுத்தாலும் அதனால் இன்றுவரை இந்தியாவிற்கு அச்சுறுத்தல் இல்லை, மேற்கு வங்க மக்கள் அது எங்கள் தொப்புக்ள்கொடி என கத்துவதில்லை, அந்த புள்ளியில் இந்தியா வங்கத்தி சாதிக்கமுடிந்தது

ஆனால் ஈழசிக்கல் அப்படி அல்ல, சும்மாவே திராவிட நாடு , தனி நாடு என குரல் கேட்ட இடம் தமிழகம், மாநில கட்சிகள் ஆளும் மாநிலம், வோட்டுக்காக எதனையும் சொல்லும் அரசியல்வாதிகள் நிறைந்த மாநிலம், ஈழம் உருவாக்குவது பிரச்சினை அல்ல‌

ஆனால் உருவாக்கிவிட்டால் தமிழகம் அமைதியாக இருக்கும் என்பது மட்டும் எதிர்பார்க்கவே முடியாது, அதனால் ஒரு கல்லில் பலமாங்காய் அடிக்க திட்டமிட்டது இந்தியா

அதாவது போராளிகளின் அடியில் இலங்கை அரசு இறங்கி வரவேண்டும், ஈழமக்களுக்கு சில உரிமைகள் கிடைத்ததாக இருக்கவேண்டும், இந்திய படை ஒன்று இலங்கையில் குறிப்பாக திரிகோணமலையினை ஒட்டி நிறுத்தபடவேண்டும்

இந்த நுட்பத்தில் இந்தியா வெற்றிபெறும் பொழுதுதான் இந்திரா படுகொலை நிகழ்ந்தது

அடுத்து வந்த ராஜிவ் அந்த திட்டத்தை அப்படியே செயல்படுத்தினார், ஈழமக்களுக்கு ஒரு ஒருங்கிணைந்த அரசு என அவர் பேசதொடங்கினார், இந்திய அமைதிபடை இந்திராவின் கனவுபடி அனுப்பபட்டது, ஆனால் திரிகோணமலை துறைமுகத்தை ஜெயவர்த்தனே அமெரிக்க திட்டபடி குழப்பினார்

அது ராணுவத்திற்கு இல்லை என்றார், இன்னும் பலவாறு குழப்பினார், இந்தியா மிரட்டி எண்ணெய் நிலைய டாங்கிகள் அமைப்போம் என சொல்லி தன் பிடியினை பெற்றது, இன்றும் திரிகோணமலையில் இந்திய கட்டுபாடு பகுதி உண்டு, இறுதி யுத்தத்தின்பொழுது இந்திய படைகள் அங்கும் சிறிய அளவில் இருந்தன‌

பின் அமைதிபடை இருக்க பிடிக்காமல் பிரேமதாசவும் புலிகளும் ஆடிய ஆட்டத்தில் எல்லாம் நாசமாகி, ராஜிவ் கொலைக்குபின் இந்திய ஈழபார்வை மாறினாலும், திரிகோணமலையினை இந்தியா விடுவதாக இல்லை

பின் மகிந்தா சீனாவுடன் நெருங்கிய காலத்தில் அந்த எண்ணெய் டாங்கிகளை சீனாவிற்கு கொடுக்க முயன்றதும், பின் அவர் அரசியலில் இன்றுவரை பல சிக்கல்களை சந்திப்பதுன் இன்னொரு செய்தி

இந்திரா, ராஜிவ் காலத்திற்கு பின் மன்மோகன் சிங் எதுவும் பேசாமலே இலங்கையினை கையாண்டார்

இப்பொழுது மோடி காலம், அந்த எண்ணெய் டாங்கிகளின் ஒப்பந்தம் புதுப்பிக்கபடும் நேரம், இன்னும் 5 நாட்களில் புத்தர் விழாவிற்காக செல்லும் மோடி அதில் கையெழுத்திட வேண்டும்

ஆனால் இலங்கை எதிர்கட்சிகளை யாரோ தூண்டிவிட ஆட்டம் சூடுபிடிக்கின்றது

இலங்கை விற்பனைக்கல்ல என அந்த கட்சிகள் கொடிபிடிக்கின்றன, அதிபர் பாலசேனா மன்றாடிகொண்டிருக்கின்றார்

முன்பு ஜெயவர்த்தனேவினை சமாளிக்க இந்தியாவிற்கு போராளிகள் வாய்ப்பாக இருந்தனர், இலங்கையில் ஒரு சமநிலை வேண்டுமென்றால் சிங்களை அரசினை எதிர்க்கும் ஒரு தரப்பு வேண்டும் என்பது அரசியல், இந்த தைரியத்தில்தான் புலிகள் ராஜிவ் கொலைவரை சென்றனர்

இன்று போராளிகள் இல்லை, இலங்கை அரசை வழிக்கு கொண்டுவர இந்தியா என்ன செய்யும் என கேள்விகள் எழுகின்றன?

எதிர்கட்சிகளின் போராட்டத்தை பாலசேனா அடக்கிவிடுவார்தான், ஆனால் இந்தியா நீண்ட காலமாக எப்படி அந்த இடத்தினை தக்க வைக்க முடியும் என்ற கேள்விகள் எழுகின்றன‌

மோடி ஒரு உறுதியான தலைவர் என்பதில் சந்தேகமில்லை, ஆனால் எப்படி இலங்கையில் எப்படி சாதிக்க போகின்றார் என இனிதான் தெரியும்

திரிகோணமலை விவகாரத்தில் மோடி செய்யும் ஒவ்வொரு காரியமும் இனி இந்திரா, ராஜிவ் இலங்கையில் செய்த ராஜதந்திர நிகழ்வுகளை சொல்லிகொண்டே இருக்கும், அவர்களின் தேசாபிமான‌ நடவடிக்கைகள் அப்படி

இந்தியா சுற்றி அரண் அமைக்க அவர்கள் அப்படிகாரியங்களை செய்தார்கள், நேபாளத்தை இந்திய நட்புநாடாக்கியது, திரிகோணமலையினை இந்திய கட்டுபாட்டில் எடுத்தது என பெரும் காரியங்களை அவர்கள் செய்தார்கள்

உச்சமாக இந்த விவகாரத்திற்காக ராஜிவ் உயிரையே கொடுத்தார், திரிகோணமலையில் ராஜிவிற்கு வேறு என்ன வேலை? எல்லாம் நாட்டிற்காக‌

இனி எந்த இந்திய பிரதமருக்கும் இலங்கை விஷயத்தில், குறிப்பாக திரிகோணமலையில் ராணுவத்தை நிறுத்தும் ஆசையே வரகூடாது என பயமுறுத்தும் வகையில் நடந்ததுதான் ராஜிவ் கொலை,

புலிகளும் பிரபாகரனும் ஒரு கருவிகள், அதற்கான விலையினை அவர்களும் கொடுத்தாயிற்று

முன்பாவது திரிகோணமலைக்கு அமெரிக்கா மட்டும் வந்தது, இப்பொழுது சீனாவும் வந்து நிற்கின்றது, நிச்சயம் மோடிக்கு ஒரு அக்னி பரீட்சை.

ஒரு சுவாரஸ்யமான ஆட்டம் 35 வருடத்திற்கு பின் மறுபடியும் தொடங்குகின்றது,