திருகுவளை நாயகனே திராவிட தலைமகனே

Image may contain: one or more people

திருகுவளை நாயகனே திராவிட தலைமகனே
காரிருள் நீக்கவந்த கலைவான சூரியனே
தமிழளந்த திருகுமரா தமிழர் மருத்துவனே
தமிழரை கதற‌வைத்து கண்மூடி விட்டாயோ

ஓய்வரியா சூரியனே ஒப்பற்ற பெரும்பிறப்பே
காய்ந்திருந்த தமிழருக்கு வான்மழையாய் வந்தவனே
வாய்திறந்த போதெல்லாம் தமிழர்நலம் பேசிநின்றாய்
நோய்பட்ட தமிழுக்கு வைத்தியமும் கொடுத்திட்டாய்

பாயும் இடமெல்லாம் வாழ்வளிக்கும் காவேரிபோல்
சாயும் இடமெல்லாம் வாழவைத்த வான்குமாரா
ஓயும் போதும் உன்பெருமை காட்டிவிட்டாய்
ஓஎன உலகம் கதறுவது கேட்கின்றதா?

தமிழ் உன்னால் வளம் பெற்றது
தமிழகம் உன்னால் நலம் பெற்றது
தமிழின் இனிமை அழகுற‌ சொன்னாய்
அமிழ்தினும் இனிதேன அர்த்தமும் பெற்றோம்

உயிரில் கலந்தாய் உணர்வில் வளர்த்தாய்
சிந்திக்க செய்தாய் கற்றும் கொடுத்தாய்
நிந்தனை ஆயிரம் தினம் தினம் வாங்கி
மந்தபுத்தி மாந்தரை மாற்றிட முனைந்தாய்

எங்கள் தமிழே, இரண்டாம் குறளே
சங்க தமிழின் கடைசி சங்கமே
தங்க மகனே சிங்கத்தின் முழக்கமே
வங்க கடலினும் சிந்தனை கடலே

கரித்திடும் கனல்கள், எரித்திடும் எதிரிகள்
கொத்தும் பாம்புகள் கொடுமதி சூதுகள்
நித்தம் எம்மை சூழ்ந்திட்ட போதும்
அர்த்தமாய் சிரித்தாய் சிரித்தே காத்தாய்

எம்மருந்தலைவனே மறைந்து விட்டாயா
மாணிக்க வீணையே உடைந்து விட்டாயா?
அண்ணணை பார்க்க ஆவல் கொண்டாயோ
அதற்கு தம்பிகளை மறந்து சென்றாயோ?

உடன்பிறப்பே, எம் உயிரினும் சிறப்பே
கடன்பட்ட நெஞ்சம்போல் கலங்கி நிற்கின்றோம்
விடுபட்ட உன் கனவு எம்மோடு உண்டு
கடும்பாடு பட்டேனும் அக்கடப்பாடு உண்டு

திரும்பா இடத்திற்கு செல்கின்றாய் போ
விரும்பா கண்ணீரை எடுத்துகொண்டு போ
இரும்பான இதயத்தை கொடுத்துவிட்டு போ
மருந்தான பேனாவை கொடுத்துவிட்டு போ

பெரும்படை திரட்டிவிட்டாய் பெருமையாய் போ
அரும்பெரும் காரியம் ஆற்றுவோம் போ
உருப்பெறும் உன் கனவு தயங்காமல் போ
அரூபியாய் அதில் வாழ்வாய் அமைதியாய் போ”


வாழும்பொழுதெல்லாம் இட ஒதுக்கீட்டிற்காக போராடியவர், செத்த பின்னும் “இட ஒதுக்கீட்டிற்காக” மல்லு கட்டி கொண்டிருகின்றார்

இறந்தும் போராடுகின்றார் கலைஞர்…