திருக்குறள் கூறிய பிரதமர் மோடி

Image may contain: 2 people, text

திருகுறள் தமிழர் அடையாளம் முன்பெல்லாம் திராவிட மேடைகளில் அதனைத்தான் பேசுவார்கள், கலைஞர் புகுந்து விளையாடுவார். இப்பொழுதெல்லாம் குறளை சொல்ல அங்கு யாருமில்லை

தான் செல்லுமிடங்களில் எல்லாம் குறளை சொல்வார் கலாம், அவரோடு அதுவும் போயிற்று

பாஜகவினர் மோடிக்கு குறள் எழுதி கொடுக்கின்றார்கள், அவரும் அதனை நன்றாக வாசிக்கின்றார், இம்முறை இக்குறளை கொடுத்திருகின்றார்கள்

“தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்கு
கற்றனைத் தூறும் அறிவு”

காவேரி சிக்கல், வறட்சி என தமிழகம் கொந்தளிக்கும் வேளையில் மணலை தோண்டினால் நீர் வரும் என்ற குறளை கொடுத்திருக்கும் பாஜகவினரை என்ன செய்ய?

(மண்ணை தோண்டி குடியுங்கள், படித்து அறிவினை வளருங்கள் என தமிழரையே ஒரு மாதிரி கிண்டல் அடித்திருகின்றனர் பாஜகவினர் 🙂 )

இது கலைஞர் போன்றவர்கள் களத்தில் இருந்தால் பெரும் விவாதம் ஆகும் விஷயம், “ஆரிய விஷத்தை பார்த்தீர்களா? இக்குறள் இப்பொழுது ஏன்?” என அட்டகாச அரசியல் செய்வார் அவர்

அப்படி யாரும் இப்பொழுது இல்லை

எனினும் நாமும் ஒரு குறளை மோடிக்கு சொல்லலாம்

“வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம் 
உள்ளத்து அனையது உயர்வு”

நீர் இருக்குமளவுதான் தாமரை போன்ற மலர் இருக்கும், நல்ல சிந்தனை இருக்கும் மனதை பொறுத்துதான் உயர்வு இருக்கும்

நீர் இல்லா இடத்தில் “தாமரை” மலராது

காவேரி நீர்விட்டு பாருங்கள் அதில் தாமரை மலரலாம்.

இதற்கு மேலும் பொருள் வேண்டுமானால் அருகிருக்கும் தமிழிசையிடம் கேட்டு கொள்ளவும், அவருக்கும் குறள் தெரியாதுதான் ஆனால் அவர் தந்தையிடம் கேட்டு ஒழுங்காக சொல்லிவிடுவார்