திருச்சி விமான நிலையத்தில் சிபிஐ சோதனை

Image may contain: sky and outdoor

திருச்சி விமான நிலையத்தில் சிபிஐ சோதனை செய்திருப்பது வரவேற்கதக்க விஷயம்

அதிலும் சுங்க சோதனையினை தாண்டி சென்றவர்களிடம் கடத்தல் தங்கத்தை பிடித்திருப்பது சாகசம், அதாவது அந்த கறுப்பு அதிகாரிகள் கையும் களவுமாக பிடிபட்டிருக்கின்றார்கள்

வெகுநாட்களாக எல்லோரும் சொல்லிவரும் விஷயம் இது, தமிழக விமான நிலையங்களிலே ஊழலும் வசூலும் கட்ட பஞ்சாயத்து போல பயணிகளிடம் இருந்து பணம் கறப்பதும் அன்றாட நிகழ்வுகள்

அதாகபட்டது திருச்சியில் ஒரு விமான நிலையம் உண்டு, அதில் ஏகபட்ட சர்ச்சைகளும் உண்டு, இப்பொழுது ஏர் ஏசியா, மலின்டோ எனும் பட்ஜெட் விமானங்கள் திருச்சிக்கு பறந்தபின் அந்த சர்ச்சை வலுக்கின்றது

தமிழ்நாட்டின மைய நகர் அது, சென்னை எங்கோ ஒரு மூலையில் இருக்கும் நகரம், அதனால் தெற்கே இருக்கும் மக்களுக்கு திருவனந்தபுரம் ஒரு வாய்ப்பு என்றால் பெருவாரியான மக்களுக்கு திருச்சி நல்ல வாய்ப்பு, அதுவும் தமிழகத்தை சுற்றிபார்க்க, குறிப்பாக காவேரி கரை கோவில்களுக்காகவே வருபவர்களுக்கு அதுதான் தேர்வு

அரேபியாவிலிருந்து வருபவர்களுக்கு கொச்சி பிரதானம் என்றால், கிழக்கிலிருந்து வரும் தமிழர்களுக்கு திருச்சிதான் பிரதானம்

அந்த முக்கியத்தில்தான் கருப்பு ஆடுகள் விளையாடுகின்றது, மலேசியா சிங்கப்பூரில் இருந்து ஏராளமான விமானங்கள் அங்கு வருகின்றன அதில் படித்தவர், சுற்றுபயணிகள், பணியாற்றுவோர், படிப்பறியா தொழிலாளிகள் என பல வகை உண்டு

அவர்களிடம் முடிந்தமட்டும் பலவகையான சுரண்டல்களையும், மிரட்டல்களையும் மேற்கொள்கின்றார்கள் என்பது முன்பே வந்த செய்தி, நகை போட்டிருக்கின்றாயா எடு வரியினை, இது டிவியா எடு பாதி தொகையினை, கையில் என்ன பணமா? கொடு ஒரு பங்கை என நடப்பதாக பல செய்திகள் வந்தன‌

அடுத்த‌ செய்தி பல சுற்றுலா பயணிகளின் பெட்டிகள் உடைக்கபடுகின்றன, நகைகள் கேமராக்கள் காணவில்லை என இன்னபிற

கேட்டால் யாருக்கும் தெரியாது என கையினை விரித்துவிடுவார்கள் என ஏகபட்ட சர்ச்சைகள், அழுகை கண்ணீர் என நிரம்ப கதைகள் உண்டு, இதனாலேயே திருச்சியினை தவிர்த்து கொச்சிக்கு பறந்த பயணிகள் ஏராள உண்டு

மலேசிய சிங்கப்பூரில் பணிபுரியும் ஏராளமான தொழிலாளர்கள் புதுகோட்டை, சிவகங்கை பகுதியினர், இங்கு மிகுந்த சிரமபட்டு பட்டினி கிடந்து உழைத்து கொண்டு செல்லும் பொருட்களை அந்த விமான நிலையத்தில் மீட்க அவர்கள் பட்ட பாடுகளின் கதைகளும், மீட்க முடியாமல் போன கையாலாத அழுகை கதைகளும் ஏராளம் உண்டு

கேட்டாலே கண்ணீர் வரும் கதைகள் அவை..

பொருட்கள் காணாமல் போவது, அழிச்சாட்டியம் செய்வது வேறு பிரிவினர் என்றால், குடிநுழைவு எனும் பொறுப்பான துறையில் இருக்கும் அதிகாரிகளும் புகுந்து விளையாடுகின்றார்கள் என்கின்றார்கள்

எப்படி?

வெளிநாட்டு விசாக்களில் பல வகை உண்டு, சுற்றுலா மற்றும் வியாபாரம் போன்ற குறுகிய விசாக்களுக்கு திரும்பி வரும் டிக்கெட்டையும் காட்ட வேண்டும் என்பது விதி, யாரின் சட்டம் என்றால் வெளிநாட்டு அரசுகளின் சட்டம், அப்படி இருந்தால்தான் அனுமதிப்பார்கள், அதாவது கண்டிப்பாக அவர் திரும்பிவிடுவார் எனும் உறுதி அது

சில சர்ச்சைகள் காரணமாக இந்திய குடிநுழைவு துறையும் அதனை மேற்பார்வை செய்வதுண்டு, செய்ய வேண்டியதுதான் ஏஜெண்டுகள் எனும் அரக்கர்களிடம் ஏமாறும் சில அப்பாவிகளை காக்க அது உதவும், ஆனால் திருச்சியில் நடப்பது என்ன?

வெளிநாட்டு குடிநுழைவு அதிகாரிகள், சிங்கப்பூர் மலேசிய அதிகாரிகள் கேட்க வேண்டிய கேள்விகளை இவர்கள் கேட்கின்றார்கள், அது சுற்றுலா விசா என்றால் கூட பரவாயில்லை நீண்ட கால விசா எனும் அனுமதிகளில் கூட கேட்கின்றார்களாம்

கேட்டாலும் பரவாயில்லை, அவர்கள் ரிட்டன் டிக்கெட்டும் எடுத்தால்தான் அனுமதிப்போம் என்று ஒற்றைகாலில் நிற்கின்றார்களாம், இது இவர்களுக்கு சம்பந்தம் இல்லா விஷயம்

நீண்ட கால விசாக்களுக்கு மலேசிய, சிங்கப்பூர் அரசுகளே திரும்பி செல்லும் டிக்கெட்டினை கேட்பதில்லை, காரணம் அவர் எப்பொழுது திரும்புவார் என்படு பயணிக்கே தெரியாது, அப்படியும் கேட்டால் கேட்டால் அவர்கள்தான் கேட்க வேண்டும் இந்திய குடிநுழைவு துறைக்கு என்ன வந்தது?

திருவனந்தபுரம், கொச்சி எல்லாம் இந்த விஷயத்தில் மிக சிறந்தவை, விசாக்கள் சரியாக இருந்தால் “ஷெரி” என்பததோடு சரி, அவ்வளவுதான்

ஆனால் திருச்சி விமானநிலையம் நீண்டகால விசாக்களில் செல்வோரை குறிவைத்து அடிக்கின்றது, அதுவும் தனியாக செல்லும் முதியவர் என்றால் கொண்டாட்டம்

இங்கேயே எடு டிக்கெட்டை இல்லாவிட்டால் அனுமதிக்கமாட்டோம் என சொல்லி , விமான நிறுவணங்களுடன் உள்குத்து வைத்து இவர்கள் செய்யும் அழிச்சாட்டியம் தாளவில்லை

ஏதும் சொன்னால் சட்டம் மாறிற்றாம், திருவனந்தபுரம், கொச்சி சென்னைக்கு ஒரு குடிநுழைவு சட்டம், திருச்சிக்கு தனி குடிநுழைவு சட்டமா? திருச்சி என்ன தனி நாடா? அல்லது காஷ்மீரா?

விமான நிலைய வளாகத்தில் பணம் மாற்றும் புரோக்கர்கள் வளைப்பார்கள், அவர்களிடம் என்ன உரிமம் உள்ளது? யார் அனுமதி கொடுத்தது? ஒருவரும் இல்லை

அப்படியானால் அது ஹவாலா அல்லது கள்ளநோட்டு என்பதை தவிர என்ன? இதனை தடுக்க முடியாத அரசா நாடெல்லாம் கருப்பு பணத்தை மீட்க போகின்றது, சுத்த அபத்தம்

கண்ணீரோடு கையிலிருக்கும் பணத்தை கொட்டி டிக்கெட் எடுத்துவிட்டு, அப்படி பணமில்லாமல் இருந்தால் பயணத்தை ரத்து செய்துவிட்டு கலங்கி நிற்பவர்கள் ஏராளம்

எவ்வளவு பெரும் கொடுமை இது? பயண ஆவணங்கள் எல்லாம் சரியாக இருந்தும், பயணி பயணம் செய்ய ஒரு தடையும் இல்லாமல் இருந்தும் அவர்களை தடுக்க இவர்களுக்கு என்ன உரிமை? இது கடமையினை மீறிய அதிகார துஷ்பிரயொகம், மோசடி..

பலதரமான சர்ச்சைகள் வருகின்றன, அங்கு சென்ற பலருக்கும் பலவிதமான கசப்பான அனுபவங்கள் நேர்கின்றன‌

மிக முக்கியமான இடத்தில் இருக்கும் திருச்சி விமான நிலையம், தன் பெயரை கெடுத்து இந்திய பெயரையும் கெடுக்கின்றது. முதன் முதலில் வரும் வெளிநாட்டவருக்கு என்ன நினைப்பு இந்தியா பற்றி வரும்?

விமான நிலையங்களும் , குடிநுழைவும் ஒரு நாட்டின் வாயில்கள் நாட்டின் மாண்பினை அவைதான் வெளிநாட்டவருக்கு சொல்லும்

இந்த திருச்சி விமான நிலையத்து அனுபவம், இந்தியாவின் பெயரினையும் மாண்பினையும் கெடுத்து கொண்டிருக்கின்றது, தமிழக நிலையம் என்பதில் பெரும் வருத்தமாக இருக்கின்றது

திருவனந்தபுரமும், கொச்சியும் அவ்வகையில் பரவாயில்லை நாட்டின் பெயரை காக்கின்றன‌

தமிழகத்திற்கு விமான பயணம் மேற்கொள்வோர் திருச்சியினை தவிர்ப்பது நல்லது, மீறி சென்றால் சொந்த செலவில் சூனியம் வைப்பதற்கு சமம் அப்படிபட்ட இமேஜினை திருச்சி விமான நிலையம் வைத்திருந்து

கடும் ஆட்டத்தை அந்த கறுப்பு ஆடுகள் ஆடின‌

இந்த சிபிஐ சோதனை அந்த கறுப்பு ஆடுகளின் அட்டகாசத்தினை வேறறுக்க வாழ்த்துக்கள்