தீபாவின் கணவர் புதுகட்சி தொடங்கினார்
தீபாவின் கணவர் புதுகட்சி தொடங்கினார்
1972 முதல் அது காமெடி கட்சிதான், ஆனால் இப்பொழுது உச்சகட்ட பெரும் காமெடி காட்சிகள் எல்லாம் நடக்கின்றன
15 ஆண்டுகள் ராமசந்திரன் என்பவர் செய்த காமெடிகளும், அவரின் அண்ணாயிசம் கருத்துக்களும் பெரும் பிரசித்திபெற்றவை
ஐன்ஸ்டீனின் சார்பியல் கொள்கை புரிந்தாலும், ஒரு காலமும் எம்ஜிஆரை தவிர யாருக்கும் புரியாத கொள்கை அண்ணாயிசம்
1987ல் ஜாணகி எனும் பொம்மையினை வைத்தும் காமெடிகள் நடந்தன, ஜெயா எனும் எம்ஜிஆரின் வார்ப்பு ஒன்று பின் அந்த காமெடிகளை அடக்கி வைத்திருந்தது
“குனிந்து நிற்காதவன் குறுக்கிலே மிதி” , “ஜெயா முகத்தை நோக்கி பேசுவன் முகத்தில் ஆசிட் ஊற்று..” எனும் அளவில் கொடூர காமெடிகள் நடந்தன
அதுவும் உல்லாச மாளிகையில் இருந்து கொண்டு மக்களுக்காக நான் என்பதும் 1 ருபாய் சம்பளத்தில் உலகின் எல்லா செல்வங்களை குவித்த காமெடிகளும் குமாரசாமி தீர்ப்பு வரை தொடர்ந்தது
இன்று ஜெயா இல்லாததால் எப்படி காமெடி செய்யலாம் என ஆளாளுக்கு யோசித்தார்கள், சசிகலா வெளியே இருந்தவரை “ஒரு கட்டம் வரை பொறுப்போம்”, “நான் சிங்கம்”, கல்லறையில் அடித்து சத்தியம் என ஏகபட்ட காமெடிகளை செய்தார்
கூவத்தூரில் கட்டிவைத்து அடித்தாலும் , பாஷா ரஜினி போலவே சிரித்துகொண்டிருந்த 122 எம் எல் ஏக்கள் காமெடி இன்னொரு புறம், தமிழக பட்ஜெட்டை ஜெயா கல்லறையில் வைத்தது இன்னொருபுறம்,.
பன்னீர் காமெடி இன்னொரு ரகம், புத்தனுக்கு ஏதோ மரத்தடியில் ஞானம் வந்தது போல, அவருக்கு ஜெயா சமாதியில் ஞானம் வந்திருக்கின்றது, அவர் ஒரு கூட்டத்தை சேர்த்துகொண்டு எல்லோரையும் சிரிக்க வைக்கின்றார்
சசிகலாவிற்கு பின் தினகரன் காமெடியும் உச்சம் அடைகின்றது, 100 வருஷம் நாங்கள் ஆளுவோம், திமுகவினை விடமாட்டோம் என அவர் உட்கட்சியினரிடம் முதுகில் அடிவாங்கிகொண்டே சவால் விடுவது பெரும் காமெடி
எம்ஜிஆர் என்பவரே மறந்துவிட்ட நிலையில் நான் அவரின் அண்ணன் மகன் என்றொருவர் வந்து நிற்பது இன்னொரு காமெடி
தீபா என்பவர் இன்னொரு காமெடி, எங்கிருந்தார் என தெரியாதவர், திடீரென வந்து கட்சி போட்டி என்கின்றார், ஜெயா அவரின் அத்தையாம், அதனால் கட்சி அவருக்காம்
இப்பொழுது தீபாவின் கணவர் புதுகட்சி தொடங்குகின்றாராம், தீபாவே 4 வோட்டு வாங்குவாரா என்பது தெரியாது, இதில் இவர் கணவர் வேறு..
கழுதைக்கு ஒரு கட்சி என்றால், கழுதை வாலுக்கும் ஒரு கட்சி எனும் அளவில் அக்கட்சி காமெடி செய்துகொண்டிருக்கின்றது
இன்னும் ஜெயா வீட்டு சமையல்காரி மட்டும் கட்சி தொடங்கவில்லை, சசிகலா அதிமுகவிற்கு உரிமை கோருவதால் அந்த கணக்கு சரியாகிவிடுகின்றது
இனி யார் கட்சி தொடங்குவார்கள்?
ஜெயா இருந்தபொழுது குப்புற விழுந்து கிடந்தவர்கள், கால் வலிக்க நின்றவர்கள் எல்லாம் கட்சி தொடங்கும்பொழுது, ஜெயா அருகிலே அவருக்கு சரிக்கு சமமாக அமர்ந்தவர் கட்சி தொடங்கமாட்டாரா?
ஆம், அப்படி ஒரு தைரியமானவர் இருந்தார், அதுவும் ஜெயா எங்கு சென்றாலும் தைரியமாக ஜெயா பக்கம் மணிகணக்கில் அமர்ந்திருந்தார், அவரை ஒருநாளும் ஜெயா எழும்பு என அவமதித்ததில்லை,
அவர் ஜெயாவின் கார் டிரைவர், அவர் எழும்பி நின்று கார்வோட்ட முடியாதல்லவா? அதனால் ஜெயாவிற்கு அருகில் சரிசமமாக அமர்ந்திருந்தார்
பெரும் அமைச்சர்கள், மில்லினர்கள் எல்லாம் நின்றுகொண்டு பேசிய காலத்தில், தைரியமாக ஜெயா பக்கம் அமர்ந்திருந்தவர் அவர்தான்,
ஆக ஜெயா காலத்திலே அவருடன் சரிக்கு சமமாக அமர்ந்தவன் நான், ஜெயாவிடம் என் மதிப்பு அப்படி, அதனால் கட்சி எனக்குத்தான் என அவர் என்று கிளம்பபோகின்றாரோ தெரியவில்லை..
அன்றே சொன்னார் எம்.ஆர் ராதா “டேய் ராமசந்திரா, அரசியலுக்கு சில நல்லவர்கள், சிந்தனையாளர்கள் எல்லாம் இருக்காங்க அவங்க பாத்துபாங்க
உனக்கு எதுக்குடா அரசியல்”
ஆளாளுக்கு அதிமுகவில் கட்சி தொடங்கும் பொழுது ராதாவின் அந்த வசனம்தான் நினைவுக்கு வருகின்றது
“டேய் ராமசந்திரா.. உனக்கு எதுக்குடா அரசியல்”