தீரா சோகத்துடன் கல்லறையில் இருந்து : அண்ணா
தம்பிக்கு,
என்னை நீங்கள் எல்லாம் மறந்திருக்கலாம், நான் உங்களையோ அருமை திராவிடத்தையோ மறப்பவன் அல்ல, சொர்க்கத்தில் இருந்தும் உங்களையே நினைப்பவன்
நான் தான் அண்ணா, திராவிடத்தின் அணைகட்டி உங்களை வாழ வைத்தவன், படிக்கட்டாய் உங்களை உயர்த்திவிட்டவன்
பெரியாரை விட்டு பிரியும்பொழுது எப்படி அழுதேனோ அப்படியே இப்பொழுது என் கல்லறை முன்னின்று அழுது கொண்டிருக்கின்றேன், துடித்து கொண்டிருக்கின்றேன்
தம்பி, இந்த திமுக எனும் மாபெரும் இயக்கம் எப்படி உருவாயிற்று? இதில் உடல் பொருள் ஆவி என சகலமும் கொடுத்த கோடான கோடி தம்பிமார்கள் எத்தனை பேர்?
மணியம்மையினை பெரியார் திருமணம் செய்தார் என்றவுடனும், திராவிட கொள்கைகளை அவர் அரசியலாக்க மறுத்தார் என்றவுடனும் கிளம்பியவர்கள் நாம்
எத்தனை பேர் கிளம்பினோம்? 5 விரல்களை வழக்கமாக விரிப்போம் அல்லவா? அத்தனை பேர் கூட இருந்திருக்கமாட்டோம்
கல்லடி பட்டோம், சொல்லடி சுமந்தோம், ஏன் குருதி கூட கொட்டி இயக்கம் வளர்த்தோம். தமிழன்னையினை காக்க தமிழ்மொழி காக்க செத்தவர் மட்டு 100 பேர், வாழ்வினை தொலைத்தவர் சில ஆயிரம் பேர்
அவர்களின் ரத்தத்தில் ஆட்சிக்கு வந்தோம், மாபெரும் இயக்கம் அப்படித்தான் சாதித்தது, சரித்திரமானது
ஆனால் ஆட்சிக்கு வந்ததில் இருந்து தம்பி கருணாநிதி தன்னை முன்னிலைபடுத்தினான்
ஆண்டதோ நான், ஆனால் உத்தரவிட்டதெல்லாம் அவன்
இனி என்னாகுமோ என நான் பரிதவித்த காலங்களில் என் காலமும் முடிந்தது, நான் வரலாறும் ஆகிவிட்டேன்
அதன் பின் இங்கிருந்து கவனித்துகொண்டிருக்கின்றேன், என் அன்புதம்பிகள் எல்லாம் விரட்டபட்டார்கள், கருணாநி மட்டும் நிலைத்து கொண்டான்
இதயகனியினை வண்டு துளைத்து அது வெளியேறியது தனி கதை என்றாலும், என் இதயத்தை இரவல் வாங்கியவனை என் அருகே இப்பொழுது படுத்திருப்பவனை பார்த்து கொண்டே பழம் நினைவுகளுக்கு செல்கின்றேன்
இந்த இயக்கத்திற்கு கருணாநிதி உழைத்தது போலவே நெடுஞ்செழியன் உழைத்தார், மதியழகன் உழைத்தார், நடராசன் உழைத்தார். இன்னும் களத்தில் நின்றவர் ஏராளம், போராடிய தம்பியர் ஏராளம்
ஆனால் அவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்?
மதியழகனும், நெடுஞ்செழியனும் இன்னும் பலரும் என்னை நினைத்து அழும் குரலை எல்லாம் கேட்டவன் நான், கேட்டு என்ன செய்யமுடியும் அழத்தான் முடியும்
சரி அவர்கள்தான் இல்லை, அவர்கள் குடும்பத்தாரையாவது எங்காவது நீ கண்டாயா?
அன்பழகனை கண்டால் ஏதோ கந்துவட்டிக்கு கடன் வாங்கிவன் போல் பரிதாபமாய் தெரிகின்றது
நானும் 4 பிள்ளைகளை வளர்த்தேன், யாரையாவது தளபதி, சிப்பாய், ஆயுத காவலன் என அருகில் வைத்திருந்தேனா? வைத்தால் கட்சி நிலைத்திருக்குமா?
நான் கட்சி தொடங்கிய பாவத்திற்கு என் குடும்பம் விரட்டபட்டிருக்கலாம், ஆனால் மதியழகன், நெடுஞ்செழியன் நடராசன் குடும்பங்கள் எல்லாம் என்ன ஆனது?
குடும்பத்தை விடு தம்பி, அப்படி சிலர் இருந்ததாவது யாருக்காவது தெரியுமா?
நானே என் பிறந்த நாள் அன்றுதான் அவர்கள் நினைவுக்கு வந்தேன் என்றால் அவர்கள் நிலை என்ன? மற்ற தம்பிகள் நிலை என்ன?
ஊரெல்லா அண்ணா சாலை கண்டார்கள், ஆனால் என் கட்சியில் என்பாதை இல்லை
தமிழகமெங்கும் அண்ணா நகர் எழுப்பினார்கள், ஆனால் என் கோவிலான கட்சியில் என் கொள்கை இல்லை
என் பெயரில் பல்கலைகழகம் எல்லாம் வைத்தார்கள் ஆனால் நான் சொல்லிகொடுத்த கல்வியினை காற்றிவிட்டார்கள்
எவ்வளவு பெரும் துரதிருஷ்டசாலி நான், என்னை நம்பிய தமிழகத்திற்கு எவ்வளவு பெரும் துரோகம் இளைத்துவிட்டேன்
இதை எல்லாம் எண்ணி, அழுது நொந்து ஒரு கட்டத்தில் எல்லாம் மறந்து துயில் கொண்டிருந்தேன்
திடீரென தம்பி ராமசந்திரனை கொண்டுவந்து வைத்து என் தூக்கத்தை கெடுத்தார்கள், ஒரே சத்தம் அழுகை, ஒப்பாரி
அப்பொழுதும் என்னை ஏறெடுத்து பார்த்தவரில்லை, இவ்வளவிற்கும் கூத்தாடி என ஒதுக்கபட்ட நடிகர்களை கட்சியில் சேர்த்து பெரும் பிம்பம் கொடுத்தவன் நான்
என் இதயகனி என்றவனே இதயத்தை பிளந்தான் எனும் சோகத்தையும் புதைத்து “மறப்போம் மன்னிப்போம்” என சொல்லிவிட்டு தூங்கிவிட்டேன்
ராமசந்திரனோ அழுதுகொண்டே இருந்தான், ஏன் என கேட்டேன் என் கட்சிக்கு பெரும் அழிவினை கொடுத்துவிட்டேன் என்றான்,
நானும் அதே சோகத்தில் இருந்ததை சொன்னேன், ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லிவிட்டு தூங்கிவிட்டோம்
இருவருடங்களுக்கு முன் நான் கட்சியிலே கண்டிராத , ஏன் கனவிலும் நினைத்திராத, ஒரு திராவிட கட்சிக்கு பார்பானிய பெண் தலைவான அதிர்ச்சியும் கொடுத்த அந்த ஜெயலலிதா என்பவரை கொண்டு வந்தார்கள்
அவருக்கும் எனக்கும் என்ன தொடர்பு? நாங்கள் தமிழ்நாட்டில் உயிரை கொடுத்து போராடும் பொழுது ராமசந்திரன் கோவாவில் சந்தியா மகளோடு சூட்டிங்கில் இருப்பதாக சொன்னார்கள்
இங்கோ போலிஸ் சூட்டிங்கில் பலர் செத்துகொண்டிருந்தோம், அதன் பின் வந்து என்னிடம் ஆசி வாங்கினாள் அந்த பெண்
அவள் என் கட்சிக்கு வாரிசாக வந்து ஆளுவாள் என யார் நம்பினார்கள், மணியம்மை ஆவி பழிவாங்கியது போல் இருந்தது
அவள் கட்சிக்கும் என் பெயராம்
அவள் வந்ததும் வந்தாள், ராமசந்திரனுக்கும் அவளுக்கும் ஒரே சண்டை அதிலும் என் தூக்கம் கெட்டது, போதா குறைக்கு சசிகலா என்றொருவர் அங்கு 3 முறை அடித்தபொழுது என் கன்னத்தில் யாரோ அடித்தது போலவே இருந்தது
அதன் பின் விழித்து கல்லறை மேலே அமர்ந்திருந்தேன், ஆளாளுக்கு வந்தார்கள். பன்னீர் செல்வம் என்பவர் தர்மயுத்த மவுனவிரதம் எல்லாம் இருந்தார்
அடடே இவர் நீதிகட்சி பன்னீர்செல்வமா? இங்கு ஏன் வந்தார் என காண சென்றால் இவர் நீதியில்லா பன்னீர் செல்வம்
அதன் பின் ஏக சண்டைகள் , கூத்துக்கள் இன்னபிற கொடுமைகள்.
இதற்கெல்லாம் காரணம் நான் என நொந்து கொண்டேன், ராமசந்திரனை கட்சிக்குள் கொண்டுவந்தது எவ்வளவு பெரும் தவறு என அப்பொழுது புரிந்தது, முறைத்தேன்
அவனோ வானத்தை நோக்கி சிரித்தான் அங்கே நேருவின் மகள் இருந்தாள்
என்னை வெல்லமுடியாத நேரு குடும்பம், நான் இல்லா காலத்தில் எப்படி அடித்திருக்கின்றது என்பது புரிந்தது
இப்பொழுது கொஞ்ச நாட்களாக அமைதி, அந்த ஜெயா பக்கம் யாரும் வருவதில்லை. அந்த சமாதிக்கு வருபவர்களுக்கு நிம்மதி போய்விடும் என்பது ஐதீகமாம்
என் நிம்மதியான தூக்கத்தை கெடுத்தபின் இப்படித்தான் நடக்கும் என்பதால் நிம்மதியானேன்
இப்பொழுது தம்பி கருணாநிதி இரவல் வாங்கிய இதயத்தை கொடுப்பதாக வந்து அவனும் தூங்க ஆரம்பித்தான்
அத்தோடு என் தூக்கம் சுத்தமாக கெட்டது
திராவிட கொள்கையாளன் யாரெல்லாமோ வருகின்றார்கள், வந்து பூஜிக்கின்றார்கள், பாலூற்றுகின்றர்கள், பழ அலங்காரம், பூ அலங்காரம் செய்கின்றார்கள்
இப்பொழுது பஜனையும் ஆரம்பித்துவிட்டார்கள், அவனை எழுப்பி இதெல்லாம் என்ன என கேட்டேன்?
“அண்ணா உம் இதயம் உம்மிடம் தந்தாயிற்று, இது என் இதயம் எனக்காக கல்லறைக்கு வெளியே துடிக்கும் இதயங்கள், நான் என்ன செய்ய முடியும்?” என்றான்
உன் இதயம் இப்படியா மூட நம்பிக்கையில் துடித்தது என்றேன்,
“அண்ணா, பாசம் மீறும்பொழுது பகுத்தறிவு விடைபெறும், பகுத்தறிவு மிஞ்சும்பொழுது பாசம் குறையும். பாசமோ பகுத்தறிவோ அன்பே முக்கியம்” என வழக்கம் போல குழப்பி சென்றுவிட்டான்
திடீரென அழகிரி வந்திருக்கின்றார் என்றார்கள், பட்டுகோட்டை அழகிரியா என ஓடி சென்று பார்த்தால் மதுரை அழகிரி, இவர் திராவிட போராட்டம் எதை செய்தார் என கேட்டேன், ஒருவருக்கும் புரியவில்லை
இன்னும் யார் யாரோ வருகின்றார்கள், உரண்டு புரளுகின்றார்கள், கதறுகின்றார்கள்
இந்த கருணாநிதியினை உருவாக்கிய என்னை யாரும் கண்டுகொள்ளவுமில்லை, அப்படி ஒருவன் இங்கு இருப்பதாக நினைக்கவுமில்லை
என்னால் என் காலடியில் நடக்கும் இம்சைகளையும், சத்தங்கங்களையும் அழிச்சாட்டியங்களையும் பார்க்க முடியாமல் கடற்கரை கட்டுமரத்தில் என் பாணியில் அமர்ந்து கொண்டேன்
எவ்வளவு பெரும் தவறை என் வாழ்வில் செய்திருக்கின்றேன் நான், பெரியாரிடம் மன்னிப்பு கேட்பதை தவிர வழியில்லை
பெரியார் திடலுக்கு சென்றால் வழக்கமான “அயோக்கிய பயலுகளா” என்ற வசனத்துடன் வரவேற்றார்
நான் என் அழுகையினை சொல்லி அழுமுன்பு
அவரோ வீரமணியின் அட்டகாசங்களை சொல்லி அழுதார்
“அண்ணாதொர காலணாவினையும் செலவழிக்காமல் திராவிட கொள்கை வளக்க பாடுபட்டவன் நான், உனக்கு கூட சரியா சம்பளம் தரல, ஆனா இப்போ அவ்வளவு சொத்தையும் வச்சிட்ட்டு இந்த வீரமணி ஆட்டம் போட்டுட்டு இருக்கான்”
எனக்கு ஓ என அழவேண்டும் என தோன்றிற்று
உன்னை நான் விட்டிருக்க கூடாது என அவர் அழ, அவரை நான் பிரிந்து தமிழகத்திற்கு இப்பாவத்தை செய்திருக்க கூடாது என நான் அழ இருவரும் அழுதுகொண்டே இருக்கின்றோம்
நான் கட்சியினை தொடங்கி இருக்க கூடாது, தொடங்கி இருந்தாலும் என் குடும்பத்தை உள்ளே இழுக்காமல் இருந்திருக்க கூடாது
அதனால்தான் என்னமோ என்னை பார்க்க குடும்பத்தார் கூட வரவில்லை, என்னை போல பாடுபட்ட எந்த தம்பிக்கும் எந்த அடையாளமுமில்லை
திமுக என்பது திருகுவளை முத்துவேலர் கருணாநிதி என்றே அடையாள படுத்திகொண்டிருக்கின்றனர்
எனக்கு தெரியாத அரசியல் வாரிசு அரசியல். அதை எனக்கே கற்று தந்திருக்கின்றான் கருணாநிதி
எங்கும் இரண்டாம் கலைஞர், மூன்றாம் கலைஞர் என ஏக சத்தம்
இரண்டாம் எம்ஜிஆர், கருப்பு எம்ஜிஆர், சிகப்பு, பச்சை எம்ஜிஆர் என சிலர்
அவ்வளவு ஏன் இரண்டாம் ஜெயலலிதா என ஒருவர் வந்து சென்றார்
ஆனால் ஒரு இடத்திலாவது இரண்டாம் அண்ணா, மூன்றாம் அண்ணா என ஒரு சத்தத்தையும் காணோம்
இரண்டாம் பெரியார் என்றும் யாரையும் காணோம்
நானும், பெரியாரும் அவ்வளவு மோசமானவர்களா, எங்களை போல் யாரும் வரகூடாதா? ஏன் அப்படி எங்களை சுத்தமாக மறந்துவிட்டனர் இக்கட்சியினர்?
அங்கே வாழ்க தளபதி என்ற குரல் கேட்கின்றது 70 வருடங்களுக்கு முன்னால் எனக்காக எழுந்த குரல், எனக்கு கிடைத்த அதே பட்டம், எனக்கு கொடுத்த பட்டத்தையா இவருக்கு கொடுத்தார்கள், அன்றே கொடுத்திருந்தால் புற்றுநோய் இல்லாமலே செத்திருப்பேனே
திருக்குவளையிலிருந்து வந்த கருணாநிதி குடும்பமும் மாறன் குடும்பம் மட்டும் ஆளவா இம்மாபெரும் போராட்டத்தை போராடினோம், இயக்கம் வளர்த்தோம்
இதற்காகவா இவ்வளவு கஷ்டபட்டு கால்வயிறு கஞ்சி குடித்து கால் தேய தேய நடந்தோம்
பெரும் வரலாற்று தவறு செய்துவிட்ட உணர்வு வாட்டியது
நாங்கள் தமிழருக்காக எழுப்பிய மாளிகையினை யாரோ கைபற்றி கொண்டார்கள், தமிழருக்காக எழுப்பிய சாம்ராஜ்யத்தில் யாரோ வந்து இருந்து சண்டை போட்டு கொண்டிருகின்றார்கள்
நான் ஆசையாக பெயர் வைத்த தமிழ்நாடு நாசமாயிற்று
இந்த மாளிகைக்கு அடிக்கல் நாட்டியவன் என்ற முறையிலும், வெற்றிகளை குவித்து முதன் முதலில் அரியணை ஏறியவன் என்ற முறையிலும் நானே எல்லாவற்றிற்கும் பொறுப்பு
பெரியாரிடம் வாய்விட்டு மன்னிப்பு கேட்டேன், “நாம் வெளிச்சத்திற்காக பற்ற வைத்த தீபம் நெருப்பாய் தமிழகத்தை எரிகின்றது” என்ற பதிலை தவிர ஒன்றும் அவர் சொல்லவில்லை
ஆம், இருட்டில் இருந்த தமிழகத்திற்கு வெளிச்சம் கொடுக்க தீபம் ஏற்றினேன் என இருமாந்திருந்தேன், ஆனால் அந்த தீபம் நெருப்பாய் பிடித்து என்னையே சுடுகின்றது, என் நெஞ்சை எரிக்கின்றது
அந்த தீ தமிழகத்தையே எரிக்கின்றது என்பதை நான் எப்படி எதிர்கொள்ள முடியும்? காமராஜர் சிரிக்கமாட்டாரா? நான் எதிர்த்து நின்ற காங்கிரசாரெல்லாம் கைகொட்டி சிரிக்கமாட்டார்களா?
அன்று நான் பெற்ற வெற்றி, இன்று தமிழகத்தின் பெரும் தோல்விக்கே வழிசெய்திருக்கின்றது என்பதை எண்ணி அழுகின்றேன்
இனி வாழாது திராவிடம், வளராது திராவிடம்
என்னை புதைத்து, என் கொள்கைகளையும் புதைத்து அருகே இவர்களும் வந்து புதைந்து இங்கு நான் படும்பாடு கொஞ்சமல்ல
ஒரே ஒரு உண்மை தொண்டன் எனக்காக இருந்தாலும், தயவு செய்து என் கல்லறையினை காஞ்சிபுரத்திற்கு மாற்றிவிட தம்பி உன்னை கெஞ்சுகின்றேன்
தீரா சோகத்துடன்
கல்லறையில் இருந்து அண்ணா.”