நடிகர்கள் என்பதால் இங்கு ஜெயித்துவிடலாம் என்பதெல்லாம் அபத்தம்
நடிகர்கள் என்பதால் இங்கு ஜெயித்துவிடலாம் என்பதெல்லாம் அபத்தம் , ஒருவேளை வென்றாலும் விஜயகாந்தின் வெற்றிபோல புஸ்வானமாக போகுமே ஒழிய நிலைத்து நிற்காது
ராமசந்திரன் தனியாக கட்சி தொடங்கவில்லை, திராவிட கழகத்தின் முகமாக அறியபட்டு, பின் அது ஆட்சிக்கு வர பாடுபட்டு அது ஆட்சிக்கு வந்தபின் பிரித்து சென்றவர்
அதாவது முழுக்க வளர்ந்த தோப்பினை பாகம் பிரித்தாரே தவிர, அவர் ஆதியிலிருந்து தனியாக நீருற்றி வளர்க்கவில்லை
சிவாஜி எனும் பெரும் ஆளுமை தேர்தலில் தோற்க பெரும் காரணம் இதுதான், ரசிகர் மன்றம் வேறு, அரசியல் தொண்டன் வேறு.
ஜெயலலிதா எப்படி உருவானார் என்பதில் ஏகபட்ட விஷயங்கள், மொத்தத்தில் காலமும் இன்னும் பல விஷயங்களும் அவருக்கு ஒத்துழைத்தன அவரும் தனி கட்சி தொடங்கவில்லை, இருந்த கட்சியினைத்தான் இல்லை இருந்த மந்தையினைத்தான் கட்டியாண்டார்
இப்பொழுது ரஜினி கமல் என ஒருசேர கிளம்புகின்றார்கள், நிச்சயம் இவர்கள் இவ்வளவு நாளும் என்ன செய்தார்கள் என்றால் ஒன்றுமே இல்லை
இப்பொழுது ஏதோ புதிதாக தமிழகத்தை நோக்குவது போல் நோக்கி ஆளாளுக்கு கருத்து சொல்லகிளம்பியாயிற்று
நிச்சயம் இவர்களும் விஜயகாந்த் வரிசை என்பதில் சந்தேகமில்லை. வேரில்லா மரமும், அஸ்திவாரமில்லா கட்டங்களும் நிலைப்பதில்லை
ரஜினியினை விடுங்கள், அவர் வேறுமாதிரியான நடிப்பு கிட்டதட்ட சினிமா வெறுத்து ஆன்மீகத்திற்கு அலையும் மனம் அவருடையது, ஆனால் ஏதோ ஒரு சக்தி அவரை ஆட்டுவிக்கின்றது பாவம்
கமலஹாசன் எப்படிபட்ட நடிகன்? தமிழக சினிமா அடையாளமாக கருதபடுபவர். 6 வயதிலிருந்தே சினிமாவில் கலந்தோடும் நதி
எல்லா விஷயங்களுக்கும் தமிழ் சினிமாவில் அவர்தான் முன்னோடி, அவர் இன்னும் சாதிக்க வேண்டிய விஷயமும் அவர் வாங்க வேண்டிய விருதுகளும் ஏராளம்
மருதநாயகம் இன்னொரு வீரபாண்டிய கட்டபொம்மனாக , பாகுபலியாக வரும் என்றேல்லாம் எதிர்பார்க்கும் நேரத்தில், உலக படங்களை எல்லாம் பார்க்கும் நேரத்தில் இதில் கமலஹாசனாக நடித்திருந்தால் பின்னியிருப்பார் என இன்று வரும் படங்களும் சொல்லும் நிலையில் மனிதர் அரசியலுக்கு செல்வாராம் இனி நடிக்க மாட்டாராம்
இது மாபெரும் அதிர்ச்சி, ஒரு ரசிகனாக சொல்லலாம் கமலஹாசன் யார்? அவர் என்ன அரசியல்வாதியா? கொள்கை குன்றா? சமூக போராளியா? இல்லை நாட்டுபற்றில் துப்பாக்கி தூக்கி அலைந்தவரா?
இப்படியா அவர் அறியபட்டார்?
இல்லை அவர் தனது கலைதிறமையால் மட்டும் அறியபட்டார், கொண்டாடபட்டார்
இன்றும் தமிழகம் அவரிடம் அதனைத்தான் எதிர்பார்க்கின்றதே தவிர வேறு ஒன்றுமல்ல, கலைமான் நான் ஏர் பூண்டு உழபோகின்றேன் என்றோ, மயில் ஒன்று நான் கோழிகளோடு உழலபோகின்றேன் என சொல்லி வந்தாலோ பார்க்க சகிக்குமா?
கமலஹாசன் அதனைத்தான் செய்வேன் என்கின்றார், எது வருகின்றதோ அதனை விட்டுவிட்டு வராத அல்லது வரமுடியாத அரசியலுக்கு வருவேன் என அடம்பிடிக்கின்றார்
இந்த அரசியல் எத்தனை கலைஞர்களை கலைகொலை செய்திருகின்றது?
எஸ்.எஸ் ராஜேந்திரன், சிவாஜி கணேசன் முதல் வடிவேலு வரை அரசியலில் கால்வைத்து அழிந்துபோன கலைஞர்கள் ஏராளம்
அரசியலுக்கு சென்றுவிட்ட எந்த கலைஞனும் அதன் பின் திரையுலகில் தன் இடத்தை பிடிக்கவே முடியவில்லை, தமிழக திரையுல அரசியல் வரலாறு அதனைத்தான் சொல்கின்றது.
கமலஹாசனிடம் தமிழகம் எதிர்பார்ப்பது நிச்சயம் கலைப்பணி, அது மட்டுமே
அரசியலுக்கு வர ஆயிரம் பேர் இருக்கின்றார்கள். இன்னும் வருவார்கள், அந்த சாக்கடையில் விழுந்து புரளுவார்கள்
ஆனால் திரையுலகிற்கு உங்களை விட்டால் யார் இருக்கின்றார்கள் மிஸ்டர் கமலஹாசன்
இன்னொரு கமலஹாசன் பிறந்து வர முடியுமா? அதுவும் நீங்கள் செய்த சாதனை எல்லாம் செய்து அகில இந்திய அளவில் இடம்பெற முடியுமா?
கலைபயணத்தில் உங்களின் சாதனை என்ன? முத்திரை என்ன என்பதை ஒருநிமிடம் திரும்பி பாருங்கள், இன்னொருவனுக்கு அது சாத்தியம் என்றா கருதுகின்றீர்கள்?
பன்றிகள் குளிக்கும் சாக்கடையில் இந்த கலை யானைக்கு என்ன வேலை? வேண்டாம் வந்துவிடுங்கள்
எவ்வளவு அவமானபட்டு சிரமப்ட்டு உங்களை நிரூபித்தவர் நீங்கள், இந்த சிம்மாசனத்தை விட்டு அச்சாக்கடையில் விழுந்து மொத்த புகழையும் இழக்க போகின்றீர்களா?
அதற்கு நீங்கள் தயாரென்றால் செல்லுங்கள்
ஆனால் காந்தி, நேரு, காமராஜர் போன்ற மகான்கள் எல்லாம் திருத்தமுடியா தேசத்தையா நீங்கள் திருத்திவிடுவீர்கள்?
நாங்கள் நடிகன் கமலஹாசனையே நேசிக்கின்றோம், எதிர்பார்க்கின்றோம். அரசியல்வாதி கமலஹாசனை எங்களால் ஏற்றுகொள்ள முடியாது, தன் வாழ்வை எதிர்காலத்தை பாழாக்க போகும் நல்ல நடிகனை நினைத்து கலங்காமல் இருக்க முடியாது
குடிக்காதே என கண்ணதாசனிடம் கெஞ்சிய தமிழகம் போல, குடிக்காதே என நாகேஷிடம் கெஞ்சியவர்கள் போல, அரசியல் வேண்டாம் என சிவாஜியிடம் கெஞ்சியவர்கள் போல உங்களிடமும் கெஞ்சுகின்றோம்
ஒரு மாபெரும் கலைஞன் வீணாய் போய் செத்துகிடக்கும் அந்த “சலங்கை ஒலி’ படம் போல உங்கள் கலைவாழ்வு அரசியலில் விழுந்து சீரழிய கூடாது எனும் ஆதங்கத்தில் சொல்கின்றோம்
“சலங்கை ஒலி”யின் இறுதிகாட்சியில் வரும் கண்ணீர் துளி துளிர்க்க சொல்கின்றோம், அரசியல் உங்களுக்கு வேண்டாம்
அரசியலை விட்டுவிட்டு மருதநாயகமாய் வாருங்கள், உங்களை கொண்டாட தமிழகம் தயராய் இருக்கின்றது
கேட்கமாட்டேன் என செல்வீராயின் மூன்றாம் பிறை கிளைமேக்ஸ் கமலஹாசனாய் திருபுவீர்கள், அப்பொழுது நிச்சயம் பரிதாபம் தவிர எதுவும் யாரும் தரமுடியாது