நவராத்திரி சிந்தனைகள் : 01

கலை என்பது வெறும் ரசிக்க கூடிய படைப்பினை மட்டும் கொடுக்காது, வெறும் தற்காலிக புகழை கொடுக்காது, சில இடங்களில் செல்வத்தை மட்டும் கொடுக்காது. கலையினை தெய்வ நினைவோடு ஒருவன் தொடரும் பொழுது அது அவனை முக்திக்கு சேர்க்கும் ஞான நிலைக்கு இழுத்து செல்கின்றது

“கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்”

என தெளிவாக சொன்னான் வள்ளுவன், ஆம் கலையோ கல்வியோ அதன் உச்சபட்ட நிலை கடவுளை உணர்வது உணர்ந்ததை உணர்த்துவது.

கலை படைப்பு என்பது சாமான்யம் அல்ல எல்லோருக்கும் வராது, இதனால்தான் கலைஞர்களை சரஸ்வதியின் அம்சம் பெற்றோர் என்றது இந்துமதம்

அந்த கலைஞானமும் அது கொடுக்கும் புகழும் ஒருவனை மிகபெரிய இடத்துக்கு இட்டு செல்லும் அக்காலத்தில் புலவனும் ஓவியனும் சிற்பியும் அரச ஆணைகளால் கொண்டாடபட்டார்கள்

இக்காலத்தில் விஞ்ஞான விஷயங்கள் அதை செய்கின்றன, கலைஞர்களால் மக்களின் மனங்களை நெருங்க முடிகின்றது, அப்படியே ஒரு ஜாலத்தில் கட்டி போட முடிகின்றது, அந்த மக்கள்திரளை தனக்கான படைகளாக உருவாக்க கூட அவர்களால் முடிகின்றது

அதுதான் சரஸ்வதி என்ற கலைமகள் கொடுக்கும் பெரும் வரம்

ஆனால் உலகமே கவனிக்கும் அந்த பெரும் இடத்திற்கு கலைமகளின் ஆசியால் வந்தவன் தன்னை கவனிக்கும் கோடான கோடி மக்களுக்கு நல்வழி காட்டினால் தெய்வத்தை காட்டினால் அவன் காலம் காலமாக நிற்பான்
கலைமனம் கொண்டவன் வடிக்கும் படைப்புக்களெல்லாம் தெய்வத்துக்கானவை என்றால் அவை நிலைக்கும், முக்காலமும் நிலைக்கும் ஆனால் தன்சுயநலத்துக்கும் காசுக்கும் குழப்பத்துக்கும் என்றால் நிலைக்காது

தெய்வத்துக்கென படைப்புகளை தரும் ஆத்திகனின் படைப்பும் புகழும் கோவில் கோபுரம் போல் நிற்கும் மாறாக அந்த வரத்தை சுயநலத்துக்காக படைத்து கொள்பவன் காற்றில் பறக்கும் தூசு கோபுரத்தினை விட உயரமாக பறப்பது போல் சில நொடிகள் பறப்பான் பின் காலத்தால் அழிந்தே விடுவான்

கலை என்பது ஒரு வரம், அதை கடவுளுக்கு கொடுத்தவன் முக்காலமும் நிற்பான், அதில் அழியா படைப்புக்களை தெய்வத்துக்கு கொடுத்தவன் எக்காலமும் நிற்பான்

கம்பன், காளிதாசன், சேக்கிழார் போன்ற கவிஞர்கள் முதல் ரவிவர்மா போன்ற ஓவியர்கள் வரை எத்தனையோ அடையாளங்களை காட்ட முடியும், எவ்வளவோ சிற்பிகளையும் இன்னும் சாஸ்திர கல்வி மேதைகளையும் காட்ட முடியும்

இவர்கள் காலத்தில் இவர்களை விட திறமையானவர்கள் அச்சபையில் இருந்தார்கள் ஆனால் அவர்கள் சுயநலத்துக்காய் ஏதேதோ செய்தார்கள் காலத்தால் அழிந்தார்கள், நிலைக்கவில்லை

கலைமகளின் அருள் பெற்றோருக்கு பெரும் கூட்டம் வரும், மக்கள் படை திரளும் ஆனால் அவர்களுக்கு நல்வழி காட்டுதலே அந்த வரம் கொடுத்த தெய்வத்துக்க்கு செய்யும் கைமாறு.அதை செய்தால் வரமருளிய தெய்வம் மகிழும் அவனுக்கு முக்தியும் கிட்டும்

அதுவன்றி தவறான வழிகாட்டினால் தெய்வம் மனம் வருந்தும், அப்படி செய்யும் எந்த கலைஞனின் மரணமும் நிம்மதியாய் இராது, அவன் வம்சமும் வாழா, ஆவன் அழியா புகழை அடையமாட்டான் விரைவில் அவன் அடையாளமற்று போவான், முக்தியும் கிட்டாமல் பிறவி சுழலில் சிக்கி உழலுவான்.

கலைஞன் செய்யும் மிகபெரிய கடமை தெய்வத்தை தானும் உணர்ந்து அதை தன் கலையால் அழகுற‌ படைத்து மக்களுக்கும் காட்டுவதே

கலை என்பது கலைஞனுக்கு ஒரு தவம் போன்றது, அதில் இன்னும் சிறப்பாக செய்ய செய்ய அவன் அதில் மூழ்குகின்றான், அவன் சிந்தனை முழுக்க அதிலே செலுத்தபடுகின்றது

அப்படி அவன் முழு மனமும் அதிலே குவியும் பொழுது அது யோக தவமாகின்றது

இதனாலேதான் ஆகசிறந்த கலைஞர்களான பாடகர்கள், இசை மேதைகள், இன்னும் பெரும் கலா வித்வான்களின் முகத்தில் தவஞானிக்குரிய ஒரு சாந்தமன தேஜஸை கவனிக்க முடியும்

ஆம், கலையினை முழு மனதோடும் ஆன்மாவோடும் செய்பவர்களுக்கு இது சாத்தியம், தன் கர்மாவினை முழு ரசனையோடு அணுகுகின்றவர்களுக்கு இது சாத்தியம்

கலை அறிவு கொண்ட மனம் எவ்வளவு வரமோ அவ்வளவுக்கு அது சாபமும் கூட‌
பிரபஞ்சம் எதையும் சும்மா தருவதில்லை, தான் கொடுக்கும் வரத்தில் பலமும் பலவீனமும் கொண்டேதான் அது வரமருளும்

ஒரு கலைஞன் தன் கலையால் கோடான கோடி மக்களை ஈர்க்கும்பொழுது அது கூர்ந்து பார்க்கும், அவன் அந்த புகழை தலைக்கு ஏற்றாமல் வெற்றி மற்றும் சறுக்காமல் கலங்காமல் இருக்கின்றானா என சோதிக்கும்
இதெல்லாம் என்னால் என்னால் மட்டும்தான் என அவன் ஆடுகின்றானா?, கலையால் கிடைத்த பொன்னையும் புகழையும் கொண்டு தவறான ஆட்டமெல்லாம் ஆடி தீர்க்கின்றானா என கவனித்து கொண்டே இருக்கும்

அவன் அதில் சறுக்கவில்லையென்றால் அது மகிழும் அவனுக்கு தீரா புகழை கொடுத்து அவன் கர்மாவினை முடித்து தன்னோடு அழைத்து கொள்ளும்

காளிதாசன், அவ்வையார் முதல் சீனிவாச ராமானுஜம் என எத்தனையோ பெரும் தனி அருள் பெற்றவர்களை இதில் சொல்லமுடியும்

அவர்கள் தங்கள் கலையில் ஆணவம் கொள்ளவில்லை, ஆடி தீர்க்கவில்லை தவறாக ஒரு அடி எடுத்து வைக்கவில்லை

அதே நேரம் கலை கொடுக்கும் வரத்தை தெய்வம் அருளியது என புரியாமல் அந்த புகழ் போதையிலும் பொருள் குவியலிலும் “நான்” என ஆடி தீர்ப்பவர்களை தெய்வம் குறித்து கொள்கின்றது
“நான்” “எனது” “என்னால்” என தன்னை மட்டும் நம்பும் கலைஞன் தோல்வியில் சறுக்கினால் இல்லை வேறு அவமானத்திலோ வெற்றியிலோ சிக்கினால் தவறான வழக்கங்களில் தன்னை அழித்துவிடுவான்

கலைஞர்களின் மிகபெரிய சாபம் அந்த ரசனையும், இளகிய மனமும், நுண்ணிய மனவோட்டமும், உணர்ச்சி வேகமும்

கலைஞனின் பலம் இதுதான் அதே நேரம் பலவீனமும் இதுதான்

அந்த கலை அவனுக்கு ஆயிரம் வாய்ப்புகளை கொடுக்கும் அதில் வெற்றியில் அவன் ஆடவும் கூடாது, தோல்வியில் கலங்கவும் கூடாது

அவனுக்கு கிடைக்கும் பெயரும் புகழும் எல்லா சுகங்களையும் அவன் காலடியில் கொட்டும், அதையெல்லாம் எவன் பக்குவமாய் கடந்து செல்வானோ அவனே தன் கலை மனம் எனும் சோதனையில் வென்றவன்
எவனெல்லாம் அது தன்னால் கிடைத்தது என கருதி தெய்வத்தை மறந்து அடாதன செய்து ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி தவறான வழி செல்வானோ அவன் வீழ்வான்

வரலாற்றில் கூட வேண்டாம், தமிழ் திரை உலகிலே கூட பாருங்கள் இதற்கான உதாரணம் ஏகபட்டது உண்டு
தெய்வத்தை உணராத எந்த கலைஞனும் நிலைப்பதில்லை, வெகு சில காலம் நிலைத்தாலும் அவன் காலம் காலம் பேசபடுவதுமில்லை

தமிழ் திரையுலகம் எனும் வெகு சிறிய வட்டத்திலும், தமிழ் இலக்கிய உலகம், பாடல் உலகம், இசை உலகம் என்ற சிறிய வட்டத்திலும் பாருங்கள் புரியும்

தெய்வத்துக்காய் பாடிய கவிஞனும் பாடகனும் இசை அமைப்பாளரும் காலத்துக்கும் நிற்பார்கள் நாத்திகனுக்கு அது வாய்க்காது

தெய்வத்துக்காய் எழுதியனின் இலக்கியம் எக்காலமும் பேசபடும் நாத்திகனுக்கு அது சில நாட்கள் கூட வாய்க்காது, அடுத்த தலைமுறை அதை தூக்கி எறியும்

ஆத்திக கலைஞன் படைத்ததெல்லாம் நிலைக்கும், காலத்தால் அது வீழ்ந்தாலும் மீண்டெழும். ஆத்திகனுக்கு அப்படி ஏதும் வாய்க்காது, அவன் படைப்பும் அவனோடு அடையாளமற்று அழியும்

இதைத்தான் நவராத்திரியில் கலைமகளுக்கான நாளில் சிந்திக்க சொன்னார்கள் இந்துக்கள்
தனக்கு கிடைத்த கலை தெய்வத்தின் வரம் என கருதும் கலைஞனின் வாழ்வு நல்ல விதிமுறைக்கு உட்படுகின்றது

அவனுக்கு கடவுள் பக்தி குடிகொள்ளும், அதிகாலை எழுந்து கடவுளை தன் கலையால் தொழுவான், தன் கலையால் தெய்வத்தை வணங்குவான்
அதில் அவனும் மகிழ்வான் அவனால் அவனை கொண்டாடும் கோடான கோடி மக்களும் வணங்குவார்கள், அவன் அவர்களுக்கு நல்வழி காட்டுவான்

தெய்வத்தை கலையால் படைக்கும் தான் கட்டுப்பாடோடு இருக்க அவன் தீர்மானிப்பான், எவ்வகை போதை வழக்கமோ தகாத செயல்களோ அவனை நெருங்காது

எந்த அவமானமும் அவனை நெருங்காது, அவன் வாழ்வு சிறக்கும் கலையினை தெய்வத்துகுரியது என்றும் தான் அதன் அடிமை என கருதுபவன் வாழ்வு அமைதியான நதியாக அழகாக நிம்மதியாக கழியும், அவனும் வாழ்ந்து மற்றவர்களுக்கும் நல்வழி காட்டுவான்

அவன் பாடகனோ, ஓவியனோ, குருவோ, கவிஞனோ,விஞ்ஞானியோ எவனாயிலும் தெய்வத்தில் தன் மனதை நிலைதிருக்கும் வரை அவமானம் அவனை சூழாது, நிம்மதி அவனை கைவிடாது, வெற்றியும் தோல்வியும் அவனை பாதிக்காது

ஆனால் தெய்வத்தை மறந்த கலைஞன் “நான்” என ஆடுவான், எந்த வரையறைக்குள்ளும் அவன் சிக்கமாட்டான், எல்லா பாவமும் குற்றமும் எல்லா கெட்ட வழக்கமும் அவனில் குடிகொள்ளும்

நிச்சயம் அவன் திறமையாளனாக இருப்பான், அதி அற்புத திறமையெல்லாம் அவனிடம் இருக்கும் ஆனால் அவன் நெஞ்சில் தெய்வம் இல்லாததால் சாத்தான் குடிகொண்டு அவனை வீழ்த்திவிடும்
எத்தனையோ உதாரணங்கள் உண்டு

கலை என்பதும் படைக்கும் திறமை என்பதும் சாதாரணம் அல்ல அது மகா கூரிய ரகசிய‌ வாள். அந்த வாளை தெய்வத்தை முன்னிறுத்தி சுழற்றினால் அவன் வாழ்வான் மாறாக அதை மறந்து தன்னை முன்னுறித்தி வீசினால் அவன் அழிவான்

கலைஞனுக்கு மனம் என்பது மென்மையானது ரசனையானது அது எளிதில் மயங்கும், குழம்பும், மகிழும் கொண்டாடும், அழும், சிரிக்கும், உணர்ச்சியில் மூழ்கும் இன்னும் என்னென்னவோ செய்யும்
அதில் இருந்து தப்ப தெய்வத்தை அவன் சரணடைய வேண்டும்

எந்த கலைஞனும் தன் திறமையில் 100% பயன்படுத்தினான் என்பதை சொல்லவே முடியாது, ஒவ்வொரு கலைஞனும் தன் படைப்பில் ஒரு முழுமையின்மையினை உணர்வான்

மற்றவர் கண்ணுக்கு அதில் முழுமை தெரிந்தாலும் கலைஞனின் மனம் அதில் ஏதோ ஒன்று குறைவதை சொல்லி கொண்டே இருக்கும் அதை தேடி கொண்டே இருப்பான்

கலைமகளின் அருள் பெற்றவன் அதை புரிந்து மனிதன் குறைவுள்ளவன், ஒரு காலமும் பரிபூரணமான படைபுக்களை அவனால் படைக்க முடியாது, தெய்வம் பரிபூரணமானது அதன் படைப்பில் ஒரு மாற்றமும் தேவைபடாது என உணர்ந்து நிம்மதி கொள்கின்றான்

நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் சரஸ்வதிக்கானவை என இந்து ஞானியர் சொன்னார்களே ஏன்?

சரஸ் எனும் வார்த்தைக்கு வசீகர கலைகள் என பெயர், அந்த கலைகளின் சொந்தகாரி அதிபதி என பொருள்படும்

பாரத்ததில் கலைகளை குறிக்கும் பெயர் சரஸ் என்பது மேற்குலகில் சாரா என்றாயிற்று, அது இங்கிருந்து சென்ற பெயரே

கலையே வாழ்வின் அடிப்படை, அந்த கலையும் அதன் சிந்தனையுமே படைப்பினை கொடுக்கும். அந்த படைபுத்தான் விலையாகி செல்வத்தை கொடுக்கும், அந்த செல்வத்தை காக்க வீரம் வேண்டும்
இதனால் இந்த நவநாட்களில் எல்லாவற்றுக்கும் அடிப்படையான சிந்தனையினை கல்வியினை வேண்டி வணங்க சொன்னார்கள்

குறிப்பாக கலை மனமும், சிந்தனையும், கல்வி ஞானமும் கொண்டவர்கள் தங்கள் திறமை தெய்வத்தால் வந்தது என்பதை உணர்ந்து நல்வழியில் தானும் நடந்து உலகுக்கும் நல்வழி காட்ட சொன்னார்கள்
எல்லா தெய்வங்களுக்கும் கோவில் கொடுத்த இந்தும்தம் பிரம்மனுக்கும் சரஸ்வதிக்கும் கோவில் கொடுக்கவில்லையே ஏன்?

படைப்பு எனும் கலைவடிவினை கொடுக்கும் தெய்வத்தை தேடி அலையவேண்டாம், அது உன்னுள்ளேதான் இருக்கின்றது, உன் மனதிலேதான் இருக்கின்றது என குறிப்பால் சொன்னார்கள்.

சரஸ்வதிக்கு கோவில் இல்லாமல் போனது இதனாலேதான், ஆம் கலைமகள் எல்லோர் நெஞ்சிலும் குடியிருகின்றாள், சிந்தனையின் ஓரத்தில் கோவிலாக காட்சியளிக்கின்றாள், புத்தியின் நுனியில் அவளுக்கு ராஜகோபுரம் உண்டு, அறிவு எனும் கர்ப்பகிரகத்தில் அவளே வீற்றிருக்கின்றாள்

மனதால் அவளை தேடுங்கள், சிந்தியுங்கள் அவள் அருள் உங்களுக்கு கிடைக்கும் என சொன்னது இந்துமதம், அந்த இந்து தேசமும் அந்த போதனைபடியே கோவில் இல்லாமல் மனதால் அவளை வணங்கி கொண்டிருகின்றது

எல்லா தெய்வங்களையும் கோவிலில் பார்க்கலாம் ஆனால் கலைமகள் மட்டும் மனதில்தான் தெரிவாள் அவள் அருள் மட்டுமே கலைஞனின் படைப்பாக வரும்

அந்த தாத்பரியத்தில் நவராத்திரியின் தொடக்கத்தை அவளுக்காக கொண்டாடிகொண்டிருக்கின்றது இந்துமதம்,

கலைஞர்களும் சிந்தனையாளர்களும் தெய்வத்தில் தோய்ந்து நிலைத்து தன்னையும் தன்னை நம்பும் கூட்டத்துக்கும் எக்காலமும் நல்வழி காட்டவேண்டும், கலை என்பது இறைவனை உணர்ந்து அடையும் வழி இறைவனை காட்டும் வழி என்பதை சரஸ்வதி வழிபாட்டில் கவனமாக போதித்து கொண்டிருக்கின்றது இந்த நவராத்திரி