நவராத்திரி சிந்தனைகள் : 02
இந்த உலகில் ஒவ்வொரு மனிதனும் வாழ ஒரு தொழில் அவசியம், ஒரு வேலையினை ஏதோ ஒரு வடிவில் அவன் செய்ய வேண்டும், அவனுக்கு ஒரு பலன் வேண்டும்
மானிட வாழ்வில் அவன் இந்த சமூகத்துக்கு ஒன்றை கொடுத்து தனக்குதேவையானதை பெற வேண்டும் இதுதான் அவனுக்கு விதிக்கபட்ட வாழ்வு, மற்ற விலங்குகளில் இருந்து அவன் இங்குதான் வேறுபடுகின்றான்
அவன் ஆறாம் அறிவு பெற்ற பலன் இதுதான், இங்கேதான் கூர்ந்து கவனித்தது இந்துமதம்
ஆம், வேலை செய்வது என்பதை மாடும் செய்யும் யானையும் செய்யும் நாயும் செய்யும், ஆனால் செய்யும் வேலையின் பலன் அல்லது பொருளின் பலன் என்னாகும் என்பதுதான் மானிடன் அறியவேண்டிய ஒன்று
மானிட மனதை இன்னும் கூர்மையாக நோக்கிய இந்து ஞானியர் ஒரு விஷயத்தை கண்டார்கள், அது எல்லா உயிர்களிடமும் உள்ள ஒரு மயக்கம் அல்லது ஈர்ப்பு மானிடனுக்கும் இருக்கின்றது
குயில்கள் அழகிய பொழுதில் இனிய சோலையினை கண்டால் கூவுகின்றன, மயில்கள் மேகத்தையும் ரம்மியமான காலநிலையினை கண்டால் ஆடுகின்றது
பசும்புல்வெளியினை கண்டால் பசுகூட்டம் ஆர்பரித்து ஓடுகின்றது, கனிகள் சூழ் மரங்களை கண்டால் பறவை மயங்கி செல்கின்றது
மழைதுளியும் அழகான புல்வெளியும் கண்டால் மான் துள்ளுகின்றது, தாயின் மடியில் வாய்வைத்து பாலுண்ணும் கன்று துள்ளி குதிக்கின்றது
மீன்கள் மேகம் நிழலிலடும் நீரில் உற்சாகமாக துள்ளி குதித்து விளையாடுகின்றன
மானிடரின் கண்களும் அழகான காட்சிகளில் மயங்குகின்றன, மானிடரின் காதுகள் இனிய இசைக்கும் பாடலுக்கும் மயங்குகின்றது, மானிட மனம் இனியவற்றில் அழகானவற்றில் மயங்குகின்றது என்பதை கண்டார்கள்
அந்த ஈர்ப்பினை ஒவ்வொரு உழைப்பின் பலனிலும் பொருளிலும் காட்ட சொன்னார்கள், ஒவ்வொருவனும் தன் தொழிலில் ஒரு கலைவடிவின் அம்சத்தை அழகியலை பின்பற்ற சொன்னார்கள்
இந்த கலைதான் இந்த கலை உணர்வுதான் ஒவ்வொரு தொழிலையும் வெற்றிகரமாக்கும் என்றார்கள், அந்த வரத்தை கொடுப்பவள் கலைமகள் என சொல்லி அவளை வணங்கவும் சொன்னார்கள்
வெறும் பலனை இயக்கத்தை மட்டும் கொடுப்பதல்ல விஷயம் அதனில் ஒரு அழகியல் கலந்திருக்க வேண்டும் அதுதான் இயற்கையாகவே பரம்பொருள் செய்திருக்கும் விஷயம்
வெறும் எலும்பும் சதையும் ரத்தமும் கொண்ட மானிட உடல் எவ்வளவு அழகாக மூடபட்டு அழகாக தோற்றமளிக்கின்றது
வெறும் எலும்பும் சதையும் கொண்ட பறவைகள் எப்படி அழகான இறகால் போர்த்தபட்டிருக்கின்றன
ஆம், அழகுதான் அந்த வெளிதோற்றம்தான் ஒரு ஈர்ப்பு முக்கியமான ஈர்ப்பு என்பதை இந்துஞானியர் உணர்ந்து அந்த அழகை கலை என வடித்தனர்
அது ஒரு தெய்வத்தின் அருள் என்றனர், தெய்வத்தின் எல்லா படைப்பிலும் ஒரு அழகு இருப்பது போல அழகான விஷயங்களை செய்பனை தெய்வத்தின் அருள் பெற்றவர்கள் என்றார்கள்.
இந்த வழிபாடும் அது கொடுத்த அழகும் கலையும் இந்துக்களின் படைப்பிலெல்லாம் இருந்தன, அவர்கள் விவசாயநிலமும் வயலும் கூட அழகாய் இருந்தது, விவசாய கருவிகள் கூட கலைநயமாய் இருந்தன
மாடுகளை கூட அவ்வளவு அழகாக அலங்கரித்தார்கள், உலகிலே மாடுகளுக்கு அலங்காரம் செய்து மணிகட்டி அதனை பார்வைக்கும் அழகாக்கியவர்கள் இந்துக்கள்
அவர்கள் வயல்வெளி நீர் நிலை வீடு தெருக்கள் என ஒவ்வொரு இடத்திலும் அந்த அழகு இருந்தது
அது ஆடை, மரசாமான், சிலை, வீட்டு பொருள், தூண, சமையல் பாத்திரம் என ஒவ்வொரு பொருளிலும் எதிரொலித்தது
இந்துக்களின் ஆடையும் நகையும் கூட அவ்வளவு அழகாய் கலைநயத்துடன் செய்யபட்டன
இந்த கலை அழகுமிக்க வாழ்வு இருந்ததாலே இந்தியா உலகின் தேட்பட்ட தேசமாயிற்று, உலகின் செல்வந்த நாடாயிற்று
கலைதான் இந்துஸ்தான் எனும் இந்து நாட்டை அவ்வளவு மேன்மையாக்கியது
அந்த கலை உணர்வு ஆடல், பாடல், இசை, சிற்பம், ஆலயம் என எல்லாவற்றிலும் இருந்தது
எதை சொன்னாலும் எதை செய்தாலும் கலை உணர்வுடன் செய்த தேசமிது, அது தொழிலாளிக்கு செல்வத்தை கொடுத்தது ஆன்மீகவாதிக்கு ஆன்மீகத்தை கொடுத்தது
ஆடல், பாடல், இசை, சிற்பம், அழகிய கோவில்கள் என ஒரு பக்கம் அது ஆன்மீகத்தை கலையினை கொண்டு வளர்த்து ஞானம் கொடுத்தது
இன்னொரு பக்கம் கலைநயத்துடன் செய்யபட்ட பொருட்கள் பெரும் செல்வத்தை கொடுத்தன
ஆரோக்கியமான உணவின் சுவையினை ஒருதுளி உப்பு கூட்டவது போல் பயனுள்ள பொருட்களை கலை அழகு இன்னும் விலை உள்ளதாக்கிற்று
வெறும் கல்லைஇந்துக்களின் கலை உணர்வு கல்லை அழகு சிலையாக்கி காசாக்கிற்று, மரத்தை பொன்னாக்கிற்று, விலை உயர்ந்த பொன்னை இன்னும் கலைநயமிக்க நகையாக்கி இன்னும் விலையாக்கிற்று
இந்த கலைநயம் இந்துக்களிடம் சரஸ்வதி வழிபாட்டால் வந்தது, வாழ்வுக்கு தொழில் அடிப்படை அந்த தொழில் கலை இல்லாமல் சிறக்காது என உணர்ந்த இந்துக்கள் கலைமகள் வழிபாட்டை கொடுத்தனர்
அவளின் அருளில்தான் அந்த உணர்வு வரும் எனவும் நம்பினர் , அதனில் தவறேதுமில்லை
இந்துஸ்தான இந்துக்களின் கலைவடிவமே பின்னாளில் வியாபார தந்திரமாயுமாயிற்று, ஐரோப்பியர் இதனை இந்துக்களிடம் இருந்து படித்தனர்
ஆம், இந்துக்களுடன் தொடர்பு கொண்ட பின்பே அலெக்ஸாண்டர் காலத்தில் இருந்து கிழக்கிந்திய கம்பெனி காலம் வரை கொஞ்சம் கொஞ்சமாக கலைவடிவங்களை கற்க தொடங்கினர் ஐரோப்பியர்
அதன் பின் அவர்கள் உற்பத்தி பொருளெல்லாம் அழகு, நேர்த்தி, ஒரு ஈர்ப்பு என வருமாறு பார்த்த்து கொண்டனர், அதன் பின்பே ஐரோப்பா எழுந்தது
இது முதலில் ஐரோப்பா பாரிசில் நடந்தது, அங்கு 15ம் நூற்றாண்டில் அழகுதான் முதலில் புரட்சி செய்தது, அழகான கட்டம், சிலை, ஓவியம், உணவு என எல்லாமும் எழுந்தது
அதன்பின் அவர்கள் துப்பாக்கி கூட அழகாயின, அவர்கள் எந்திரங்களும் அழகாயின, பெண்கள் புது புது ஒப்பனையில் இன்னும் அழகாயினர், ஆடைகள் அவர்கள் அழகை கூட்டின
அவர்கள் குளிப்பதில்லை என்றாலும் உடை அழகாயிற்று, அவர்கள் உணவு சுவையில்லை என்றாலும் பரிமாறும் பாத்திரமும் பாணியும் அழகாயிற்று
அவர்கள் ஊரும் வீதியும் அலங்காரமாயின, மணமிக்க மலர்களோ மரமோ இல்லை என்றாலும் அழகு தென்படும்படி பார்த்துகொண்டனர்
அந்த அழகு அவர்களின் ஒவ்வொரு உற்பத்தியிலும் வந்தது, கலை வடிவம் வந்தது, கலைவடிவமும் கலை நேர்த்தியும் ஒழுங்கையும் சுத்தத்தையும் கொடுத்தது
அதனில் இருந்து எழ ஆரம்பித்த ஐரோப்பா இன்று விஷம் போன்ற குளிர்பானத்திலும் உலகை அழிக்கும் ஏவுகனைகளில்லும் கூட ஒரு அழகை காட்டுகின்றது
அவர்களின் கார், கணினி முதல் கண்மை விளம்பரம் வரை இந்த அழகை நீங்கள் காணமுடியும்
அந்த அழகுதான் அவர்கள் பொருட்களை வசீகர வியாபாரமாக்குகின்றது, அந்த அழகுணர்ச்சிதான் இன்று அவர்களை பணக்கார சமூகமாக்கியிருக்கின்றது
இதெல்லாம் இந்துக்களின் அடிப்படை சித்தாந்தமாயிருந்தது, கீதையில் கலைகளில் நான் ஓவியம் என அதனால்தான் சொன்னான், மானிட கண்கள் அழகான காட்சியில்தான் மயங்கும்
கண்ணன் அதைத்தான் குறிப்பிட்டு தெளிவாக சொன்னான்
ஆம், ஒவ்வொருவனுக்கும் கலை உணர்வு முக்கியம் அந்த கலை உணர்வோடு செய்யும் வேலையும் அதன் பொருளும்தான் பெரும் விலையும் வருமானமும் பெறும் என சொன்னது இந்துமதம்
சரஸ்வதி வழிபாடும் தத்துவமும் அதைத்தான் சொல்கின்றது
நீ யாராகவும் இரு, எத்தொழிலும் செய் ஆனால் செய்யும் தொழிலில் ஒரு சுத்தமும் அழகும் கலையும் இருக்குமாறு பார்த்து கொள் அத்தொழில் உன்னை உயர்த்தும்
ஆம், தொழிலாளி முதல் கவிஞன், விஞ்ஞானி, சிற்பி, எழுத்தாளன் , சிந்தனையாளன் என யாராக இருந்தாலும் இப்படி அவனிடமும் அவன் தொழிலிடமும் ஒரு ஈர்ப்பு இல்லாமல் வெல்லமுடியாது நிலைக்க முடியாது
கலை உணர்வுதான் முதல் அவசியம் அதை பெறத்தான் சரஸ்வதி வழிபாட்டை சொன்னார்கள்
எல்லா விஷயத்தையும் லவுகீகம் ஆன்மீகம் என இருவகையாக சொல்லும் இந்துமதம் இந்த கலையிலும் இரண்டையும் தேட சொன்னது
கலை உணர்வுதான் செல்வத்திற்கான அடிப்படை செல்வத்தை ஈர்த்து பெருக்கும் வழிமுறை அதுதான் அடிப்படை என சொன்ன இந்துமதம் செய்யும் தொழிலையும் அதன் பொருளையும் கலைநயத்துடன் இருக்குமாறு போதித்தது
அப்படியே அந்த கலையில் இறைவனை மக்களிடம் சேர்க்கவும் ஆன்மீகமும் ஞானமும் தேட வழி செய்யும்படியும் பார்த்து கொண்டது
சுருக்கமாக சொன்னால் நெருப்பு குச்சியினால் அடுப்பில் நெருப்பேற்றி வைத்து அந்த குச்சியினையே அதில் இடுவது போல கலை உணர்வினால் வாழ்வு பெற்று அந்த வாழ்விலே ஞானத்தையும் தேட வைத்தது இந்துமதம்
காவேரி ஆறு இரண்டாக பிரிந்து திருவரங்கத்தை சுற்றி மீண்டும் இணைவது போல, பொருள் வழி கலையும், ஆன்மீக வழி கலையுமாக அது கலைகளை பிரித்து பின் கூட வைத்தது
கலையால் பொருள் குவிக்கலாம் கலையால் கலை வளர்க்கலாம் என இரு பிரிவுகளாக பிரிந்து செயலாற்றினாலும் கடைசியில் இறை ஞானத்தை தேடி சரணடைய சொன்னது
கலை என்பது வாழ்வின் அடிப்படை
கலைதான் செல்வத்தை கொடுக்கும் கலை உணர்ச்சித்தான் வியாபார நுணுக்கத்தின் அடிப்படை, கலைதான் மனிதனை மனிதனாக வைக்கும் அந்த கலையால் வாழலாம் அந்த கலையாலும் அதன் ஈர்ப்பாலும் இறைவனை தேடி அடையாலாம் பலரை அடையவும் வைக்கலாம் என்றதும் இந்துமதம்
இந்திய இசை மேதைகளும், கவிஞர்களும், சிற்பிகளும் அதை அழகுற செய்துவைத்தார்கள் இன்றும் அவை ஆலயமும் ஆலய வழிபாடுமாக நிற்கின்றது, பூக்களை கூட கலைநயமாய் தொடுத்து சாற்றிய அழகு மதம் இது
அந்த அடிப்படை அறிவும் உணர்வுமான, மனிதனின் பகுத்தறிவில் நுணுகமான அறிவான அந்த கலைநயம் மட்டும் இல்லையென்றால் மனிதன் ஒரு காட்டுமிராண்டி, காட்டுவாசி
காட்டுவாசியான மனிதன் கலை நயம் என ஒன்றாலே மேம்பட்டான் , அந்த வரத்தை தருபவள்தான் சரஸ்வதி
அவளே கலையும் நுணுக்கமான ரசனையும் ஈர்ப்பும் தருபவள் என அவளை வழிபட சொன்னார்கள், அறிவு அவளால் பெருகும் என்றார்கள்
அதனாலே அவளை வழிபட சொன்னார்கள், அவள் வரத்தை வேண்டி செய்யும் தொழிலெல்லாம் கலையாக ரசனையாக செய்ய சொன்னார்கள்
அவளை ஏன் அன்னபறவையில் வைத்தார்கள்?, வைத்து அவள் கையில் சுவடியும் வீணையும் தந்தார்கள்?
(தொடரும்..)