நவராத்திரி சிந்தனைகள் : 03

நவராத்திரி சிந்தனைகள் : 03

அன்னபறவை வெண்மை நிறமானது, எப்பொழுதும் முழு வெண்மையாக காட்சி அளிப்பது. வெண்மை என்பது தூய்மையின் நிறத்தை குறிப்பது, கலைகளும் அதன் பலனும் எப்பொழுதும் தூய்மையாய் உயர்ந்ததாய் இருக்கவேண்டும் என்ற தத்துவத்தில் அன்னபறவை சரஸ்வதிக்கு சின்னமாக்கபட்டது

அன்னம் எப்பொழுதும் சுத்தமாக காட்சியளிக்கும், சுத்தமில்லாமலோ அழக்கு அடைந்தோ அதனை காண முடியாது, கலைகள் எப்பொழுதும் சுத்தமாக தூய சிந்தனையுடன் இருக்க வேண்டும் என்ற தத்துவம் அதில் இருந்தது

அன்னம் நீர், நிலம், வானம் என எல்லா இடத்திலும் செல்ல கூடியது, நல்ல கலைகள் எல்லாரையும் கவர்தல் வேண்டும், நல்ல கலைஞன் எல்லா சூழலிலும் எந்த நிலையிலும் வாழ்வான் என்பதையும் அவன் எதற்கும் கலங்கமாட்டான் என்பதையும் அந்த பறவை தத்துவம் சொன்னது

அன்னம் சாதுவானது, பாலை மட்டும் பிரித்து உண்ணும் அளவு பக்குவமானது. ஒவ்வொரு படைப்பாளியும் தொழிலாளியும் அப்படி சாதுவாகவும் யாருடனும் வம்புக்கு செல்லாமலும் நிதானமாகவும் தனக்கு தேவையானதை மட்டும் தேர்வு செய்து எடுத்துகொண்டும் செயல்பட வேண்டும்

முக்கியமாக பெரும் தத்துவம் ஒன்றை சொன்னது அது சுத்தம் மற்றும் சூழல்

அன்னம் என்பது மிக சுத்தமான இடத்தில் மட்டும் வாழும், அசுத்தமான சுத்தற்ற இன்னும் ஒருமாதிரியான சூழலில் அது வசிக்காது

தொழிலோ கலையோ நடக்கும் இடம் மிக சுத்தமாக இருத்தல் அவசியம், சலசலப்பும் பரபரப்புமற்ற ஒரு இடம் அவசியம் அங்குதான் புது புது சிந்தனையும் நல்ல அறிவும் தோன்றும் என்பதே தத்துவம்

நீங்கள் யாராகவும் எந்த தொழில் செய்பராகவும் இருங்கள் ஆனால் நீங்கள் வசிக்குமிடமும் தொழில் செய்யுமிடமும் நல்ல சுத்தமாகவும் அமைதியாகவும் இருக்கும்படி பார்த்துகொள்வது அவசியம், நல்ல சூழலே நல்ல சிந்தனைக்கு வழி

இதைத்தான் அன்னபறவையினை கொண்டு அது சரஸ்வதியின் வாகனம் என்றது இந்துமதம்

சுத்தம், அருமையான சூழல், அமைதி, தூய்மை, சச்சரவோ ஆர்பாட்டமோ இல்லாத குணம், நீர் ஆகாயம் நிலம் என எங்கும் தாக்குபிடிக்கும் வலிமை, செயலில் தூய்மை,கலையில் தூய்மை இவையெல்லாம் அன்னத்திடம் கற்க வேண்டியவை என்பதால் அதை கூர்ந்து நோக்க சொன்னார்கள்

அன்னபறவை பெரும்பாலும் இணையுடன் வாழகூடியது, கலைஞன் மனம் எப்பொழுதும் ஏதாவது ஒன்றில் இணைந்திருக்க வேண்டும் மனம் ஒன்றி அதனோடு இணைந்திருக்க வேண்டும் என்பதையும் குறிப்பால் சொன்னார்கள்

அன்னை சரஸ்வதியினை தாமரையிலே அமரவைத்தார்களே ஏன்?

தாமரை ஞானத்தின் குறியீடு, கலையும் தொழிலும் உன்னத ஞானத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும் அதனை அன்னை அருள வேண்டும் என்றார்கள்

அன்னையில் கையில் வீணையினை கொடுத்தார்கள் அதற்கு சில காரணங்கள் இருந்தன‌

வீணை இனிமையானது யாரையும் வசீகரிக்கும் ஆற்றல் கொண்டது, ஒரு கலைஞன் அல்லது தொழிலாளியின் படைப்பு அப்படி இனிதாய் இருத்தல் வேண்டும் அதைவிட முக்கியம் தொழிலாளியும் கலைஞனும் வீணை போல இனிமையான குணமும் பேச்சும் கொண்டவர்களாய் இருத்தல் வேண்டும்

நல்ல இனிமையான பேச்சு ஒரு கலை எல்லா விஷயத்துக்கும் அதுவே அடிப்படை அந்த அருளை அன்னை அருள வேண்டும் என வேண்ட சொன்னார்கள்

வீணையின் ஏழு ஸ்வரங்களில் இருந்து ராகங்கள் பிறப்பது போல உடலின் ஏழு சக்தி சக்கரங்களில் இருந்தும் இனிமையான சக்திகள் எழ வேண்டினார்கள்

அன்னையின் கையில்சுவடி கொடுத்தார்களே ஏன்?

அன்னை சரஸ்வதி அறிவை சிந்தனையினை கலையினை வழங்குபவள் அதனை நாம் சுவடிகளில் பதிய வேண்டும், நமக்கு தெரிந்ததை பிறருக்கு சொல்லி கொடுக்க வேண்டும் தெரியாததை கற்றுகொள்ள வேண்டும்

தன் கலையில் தன் தொழிலில் புது புது பாடங்களை உருவாக்கவும் வேண்டும் கற்கவும் வேண்டும், இந்த வரதைதான் தவமிருந்து வேண்ட சொன்னார்கள்

ஆம் லவுகீக வாழ்வின் அடிப்படை தேவை ஒரு வருமானம், கொஞ்சமாவது செல்வம்

அந்த வருமானமும் செல்வமும் வர தொழிலோ கலையோ அவசியம், சுருக்கமாக சொன்னால் ஒவ்வொருவனும் தன் கடமையினை செய்ய செல்வமோ ஒரு கலையோ அறிவுடன் கூடிய உழைப்போ அவசியம்

அந்த கலையும் அறிவும் தொழிலுமே ஒருவனுக்கு செல்வத்தையும் புகழையும் தரும், செல்வத்தையும் புகழையும் ஒருவன்பால் ஈர்த்துவரும் சக்தி கலை எனும் நுண் அறிவுக்க்கு உண்டு

அதுதான் அடிப்படை, அந்த கலை எனும் நுணுக்கமான அறிவுதான் வாழ்வின் முதல் தேவை. அது இருந்தால் செல்வம் வரும், செல்வம் இருந்தா காவலை உருவாக்கமுடியும்

வாழ்வில் பெரும் இடம் பிடித்தவர்களையெல்லாம் பாருங்கள், அவர்களும் சாமானியரை போல் உழைப்பாளிகள்தான் ஆனால் ஒரு நுணுக்கமான நுண் அறிவு அவர்களை உயர்த்தியிருக்கும்

ஆம், வாழ்வின் மிக முக்கியமான நுண் அறிவினை வேண்டத்தான் கலைமகள் என்றொரு தெய்வத்தை ஆதிபராசக்தியின் வடிவத்தை காட்டி அதன் கையில் வீணையும் சுவடியும் அதன் காலில் அன்னத்தையும் குறியீடாக வைத்து வேண்ட சொன்னது இந்துமதம்

அந்நாள்தான் சரஸ்வதி பூஜையின் நாட்கள், வாழ்வில் ஒவ்வொரு மனிதனுக்கும் அடிப்படையாயன் ஞானத்தை கேட்டு தவமிருக்கும் நாட்கள்

ஞானமே எல்லா மனிதனின் தொழிலுக்கும் கலைக்கும் வாழ்வுக்கும் அவசியம், அந்த நுணுக்கமான அறிவும் ரசனையும் ஈர்ப்புமேதான் அவன் வாழ்வினை உயர்த்தும்

அன்னம் போல் வெண்மையான தூய ஞானத்தை, வெள்ளை தாமரையில் அமர்ந்திருக்கும் அன்னை தருவாள் என்பதால் அந்நாளில் வேண்ட சொன்னார்கள்

இந்துக்களில் ஏகபட்ட தெய்வ வடிவங்கள் உண்டு, அவர்களுக்கெல்லாம் பெரும் ஆலயங்கள் உண்டு குறைந்தது சன்னதிகளாவது உண்டு

ஆனால் சரஸ்வதிக்கு ஏன் ஆலயமில்லை?

அதற்கு புராணத்தில் பல கதைகள் இருந்தாலும் அதன் தத்துவம் எளிதானது, புரிந்துகொள்ள புன்னகையானது

ஆம், செல்வமும் வீரமும் வேண்ட ஒருவன் ஓட வேண்டும் எங்கெல்லாமோ அலைய வேண்டும். அலைந்து திரிந்து பலரை கண்டு அடுத்தவர் உதவியுடனேதான் செல்வமும் வீரமும் அடைய முடியும்

செல்வம் தேட ஆட்கள் தேவை, படை திரட்ட ஆட்கள் தேவை. இன்னொருவர் உதவியின்றி இவை வராது

தேடி தேடி அடையவேண்டியவற்றை அடைய தெய்வத்தை தேடி செல்லும்படி அந்த தெய்வங்களுக்கு கோவில் அமைத்தார்கள்

ஆனால் சரஸ்வதியின் அருள் அவள் கொடுக்கும் ஞானம் அப்படி அல்ல, அது ஒவ்வொருவனுக்குள்ளும் இருக்கின்றது, அதை தன்னை அறிந்தால் கண்டறியலாம்

அதாவது ஒவ்வொருவனுக்கும் ஒவ்வொரு திறமை இருக்கும் அது அவனுள் புதைந்திருக்கும் அதை உணர்ந்தால் அவன் பிரகாசிப்பான், பிரகாசிப்பவன் வெற்றி பெறுவான்

ஒவ்வொருவன் உள்ளும் ஒரு திறமை உண்டு அதில் சரஸவதி இருக்கின்றாள் அவள் கோவிலில் இல்லை வேறெங்கும் இல்லை அவனவன் மனதில் மறைந்திருக்கின்றாள் அவளை வேண்டினால் அவன் ஞானத்தில் செயலில் கலையில் அவள் துலங்குவாள் என்பதால்தான் சரஸ்வதிக்கு தனியாக கோவில் இல்லை

ஞானத்தையும் அறிவையும் நுண் அறிவினையும் கலைகளையும் தருபவள் அன்னை சரஸ்வதி, அவளின் அருளே ஞானத்தை தந்து தெளிவை தரும், தெளிவான சிந்தையுடன் செய்யபடும் எல்லாமும் புகழடையும்

சரஸ்வதியின் அருள் ஒவ்வொரு படைப்பாளிக்கும் ஞானம் தரும், அந்த ஞானத்தினால் வரும் படைப்பு ஈர்ப்பை தரும், அந்த ஈர்ப்பு செல்வமும் புகழையும் அவன் காலடியில் கொட்டும்

இந்த அருளை வெறும் காசுக்கு பயன்படுத்துபவன் காலத்தால் அழிவான்

அன்னை சரஸ்வதியின் அருளை ஆன்மீகத்துக்கும் தெய்வத்தின் புகழுக்கும் பக்திக்கும் பயன்படுத்தி நிற்பவன் காளிதாசனை போல் , கம்பனை போல், பழம் சிற்பிகளை போல், அழியா ஆலயங்களை எழுப்பிய மன்னர்கள் போல் , நாயன்மார்கதையில் வரும் மதங்க சூளாமணி அம்மையார் போல், அருணகிரியார், அபிராமிபட்டர் போல் ராஜராஜ சோழனை போல் நிலைப்பார்கள் காலமெல்லாம் நிலைப்பார்கள் இது சத்தியம்

அன்னம்போல் மனம் இருந்தால் கலைமகள் அருள் தானாய் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு தொடர்கின்றது புனிதமான நவராத்திரி

(தொடரும்..)