நவராத்திரி சிந்தனைகள் : 04
மானிட வாழ்வினை இயக்கும் மிகபெரிய சக்தி, ஆதார சக்தி செல்வம் என்பதை உணர்ந்திருந்த இந்து ஞானியர் அதனை பெருக்கவும் காக்கவும் அதன் மூலம் தானும் உய்ந்து சமூகத்தையும் ஒருவன் உய்விக்கலாம் என்பதை உணர்ந்தார்கள்
“பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை” என அதை தெளிவாக சொன்னார் வள்ளுவ நாயனார்.
செல்வம் எல்லோரிடமும் இருப்பதல்ல, திறமையும் அறிவும் இருக்குமிடம் எல்லாம் செல்வம் இருப்பதில்லை என்பதையும், செல்வம் இருந்தாலும் அதை கொண்டாடி அனுவிக்க பலவகை காலசூழலும் வாய்ப்பும் வரவேண்டும் என்பதையும் அதை தெய்வமே அருளமுடியும் என்பதையும் உண்ர்ந்தார்கள்
பல்லாயிரம் மக்கள் வாழும் இடத்தில் ஒரு சிலருக்கே செல்வந்த யோகம் பிறப்பாலோ உழைப்பாலோ இன்னும் சில சந்தர்பங்களாலோ செல்வம் குவிவதை உணர்ந்து இது தெய்வத்தின் அருள் என்றார்கள்
அந்த தெய்வத்துக்கு லட்சுமி என பெயரும் இட்டார்கள்
பாரதம் முழுக்க இருந்த இந்த சனாதான தர்மத்தின் போதனை அந்த ஞானதேசம் கொண்டிருந்த எல்லா மக்களிடமும் உண்டு, அது தமிழக சங்க இலக்கியம் முதல் சமஸ்கிருத இலக்கியங்கள் வரை ஏன் சமண இலக்கியங்களில் கூட அந்த போதனை உண்டு
இன்னும் சமூகத்தை கூர்ந்து நோக்கிய அந்த மதம், செல்வம் ஒன்றே உலகை இயக்கும் சக்தி என்பதையும் உணர்ந்தது
வாழ்வு முக்தி அடையத்தான் ஆனால் எல்லோரும் காவி கட்டி மலை உச்சியில் அமர்ந்தால் உலகம் இயக்க்மில்லை என்பதையும் செல்வத்திற்காக உழைக்காவிடில் மானிடனுக்கும் விலங்குகளுக்கும் வித்தியாசமில்லை என்பதை உணர்ந்தது
செய்யும் தொழிலிலே கர்மமாக ஏற்று அதிலே முக்தி அடையவும் அதுவழி சொன்னது, அதனை கர்ம யோகம் என அது வரையறுத்தது
செல்வம் தேடும் அந்த தேடலே உலகை இயங்க வைக்கின்றது என்பதையும் உணர்ந்தார்கள், செல்வம் தேடும் தேடல் இல்லையென்றால் மனிதன் இன்னொரு விலங்காகத்தான் பூமியில் இருந்திருப்பான்
விலங்குகளில் இருந்து மனிதனை ஆறாம் அறிவு எனும் தெய்வத்தை உணரும் அறிவு மட்டும் பிரிக்கவிலை, அவன் பூமியில் ஒரு பிராணிதான் என்றாலும் மற்ற விலங்குகளை போல் கிடைத்ததை உண்டு அதன் போக்கில் வாழும் அந்த உல்லாச வாழ்வு அவனுக்கு கொடுக்கபடவில்லை
அவனுக்கு தேவைகள் அதிகம் தனி ஒரு மனிதனால் அவன் தன் தேவைகளை உணவினை தாண்டி செய்துவிட முடியாது, அவனுக்கு உடை வேண்டும் உறைவிடம்வேண்டும் குடும்பத்துக்கு உணவூட்ட வேண்டும், அதுவும் வகை வகையாக பொருள் சேர்த்து சமைக்க வேண்டும், காலணி வேண்டும், வாகனம் வேண்டும் இன்னும் என்னென்னவோ வேண்டும்
இந்த பின்னலில் மானிடர் ஒருவருக்கு ஒருவர் உழைத்து கொடுப்பதையும் அதிலும் ஒரு சிலருக்கே லஷ்மி கடாட்சம் இருப்பதையும் அந்த இயக்கமே உலகை நடத்துதலையும் அது சொல்லிற்று
செல்வம் என ஒரு விஷயம் இல்லாவிடில் இங்கே உழைக்கபோவது யார்? உலகை இயக்க போவது யார்?
நிச்சயம் மானிடனின் ஒரே இலக்கு ஞானத்தை அடைவது, சந்தேகமில்லைதான் ஆனால் எல்லோரும் காவிகட்டி அமர்ந்துவிட்டால் எங்கணம் மானிட இனம் தழைக்கும்?
தனித்து தவமிருப்பது மட்டுமல்ல, லவுகீக வாழ்க்கையில் இருந்தபடியே ஞானத்தை அடையலாம் அதற்கு செல்வமும் ஒரு வழி என்பதை உணர்ந்திருந்தது இந்துமதம்
“பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை” என வள்ளுவன் தொடங்கி பண்டைய இலக்கியமெல்லாம் அதை வலியுறுத்தி பொருள் தேடலையும் அதன் அவசியத்தையும் சொல்லிற்று
இந்துக்கள் செல்வத்தின் அதிபதியாக வழிபடும் லட்சுமியினை திருமகள் என குறிப்பிட்டு ஏகபட்ட குறள்களை எழுதினான் இந்து ஞானி வள்ளுவன்
“திரைகடல் ஓடியும் திரவியம் தேடு” என்பதெல்லாம் சாவின் நுனிக்கு செல்லும் அளவு சவால் எடுத்தாவது பொருள் தேடு என்பதாகும்
ஆம், பொருளில்லாதவன் வாழ்வு பூலோக வாழ்வே அல்ல, லவுகீக வாழ்வுக்கு பொருள் அவசியம்
இதைத்தான் லஷ்மி எனும் தேவியின் வழிபாடாக சொன்னது இந்துமதம், அதுவும் வெறும் செல்வம் மட்டும் நிம்மதி என அவர்கள் சொல்லவில்லை
எட்டு திசைகள் இருப்பது போல் மானிட வாழ்வுக்கு நிம்மதியினை கொடுப்பது 8 காரியங்கள் என்பதை உணர்ந்த்ருந்தார்கள்
இந்த எட்டு காரியத்திலும் சில உள்பிரிவுகளும் உண்டு, எனினும் எட்டு வகையாக மானிட ஐஸ்வர்யங்களை பிரித்தார்கள்
உண்மையில் “எட்டு எட்டாக மனித வாழ்வினை” பிரித்தது இப்படித்தான். அஷ்டம் என்றால் வடமொழியில் எட்டு, அந்த ஐஸ்வர்யங்களை வழங்கும் தெய்வத்தை அஷ்ட லட்சுமி என்றார்கள்
செல்வம் என பொருள் இருந்தாலும் அது மலைபோல் குவிந்திருந்தாலும் இந்த எட்டு வகை நிம்மதியும் ஒருவனுக்கு அவசியம்
அது நோயில்லா நிலை, தானியம் நிறைந்திருப்பது, எதிர்ப்புகளை சமாளிக்கும் தைரியம், வாழ்வின் நற்பேறுகள் (நன்மனைவி, நல்ல பிள்ளைகள் என 16 வகை), தீரா புகழ், எடுக்கும் காரியத்தில் சித்தி, கலை மனோபாவம், செல்வம் தொடர்ந்து பெருகும் வழி
இந்த எட்டு வகை செல்வத்தை கொடுப்பவளை அஷ்ட லட்சுமி, எட்டு ஆசிகளையும் தரும் லட்சுமி என்றார்கள்
ஆதிலட்சுமி, தானிய லட்சுமி, வீர லட்சுமி, கஜலட்சுமி (யானை போல அள்ளி தருபவள்), சந்தான லட்சுமி, விஜயலட்சுமி, வித்யா லட்சுமி, தனலட்சுமி
இந்த எட்டு வகை ஐஸ்வர்யமும் இல்லாமல் ஒருவனின் செல்வம் முழுமை அடையாது, அடையவே அடையாது
இதில் ஒன்று குறைந்தாலும் நிம்மதி இராது, அந்த நிம்மதியின்மையால் மற்ற வரங்களையும் அனுமதிக்க முடியாது
இதை பல இடங்களில் காணலாம் கோடி கோடியாக குவித்திருப்பார்கள் ஒரு பிடி அரிசி உண்ணமுடியாது, பெரும் மாளிகை கட்டி வைத்திருப்பார்கள் வாரிசு இருக்காது, பெரும் தனவானாக இருந்தாலும் யாருக்காவது அஞ்சி கப்பம் கட்டுவார்கள், கோடி பணம் இருந்தாலும் நின்று ரசித்து சிரிக்கமாட்டார்கள் ரசனை இருக்காது,
சிலருக்கு முன்னோர் சொத்து இருக்கலாம் ஒரு பிடி கூட சேர்க்க முடியாது
பெரும் பணம் இருந்தாலும் அவனை சிலர் “அவனெல்லாம் மனிதனா?” என இகழ்வார்களே தவிர போற்ற மாட்டார்கள்
பரம்பரை சொத்து பல்லாயிரம் கோடி இருந்தாலும் நீர்வளம் இல்லையென்றால் தானியம் இல்லை, நீரில்லா இடத்தில் எல்லா செல்வமுமே பலனற்றதாகிவிடும்
ஆம், இதெல்லாம் மொத்தமாக தருபவள் லட்சுமி என்றது இந்துமதம், அவளை வணங்கும் முறையினையும் அவளை நிரந்தரமாக தங்க வைக்கவும் பல வழிகளை அது போதித்தது
அதனில் உடல் நலம்,மனோவியல் இருந்தது, வானியல் இருந்தது, சமூகவியல் இருந்தது இன்னும் எவ்வளவோ சூட்சுமங்கள் இருந்தன, ஆழ கவனித்து நுணுக்கமாக செய்யபட்ட ஏற்பாடு அது.
இந்துமதம் எப்படியெல்லாம் லட்சுமியின் அருளை பெறமுடியும் என போதித்தது என்பதை தெரிந்தாலே அதை ஒருவன் செயல்படுத்தினாலே அவனிடம் பொருள் தங்கும், அதாவது லட்சுமி வருவாள்
நோயற்ற வாழ்வே முதல் செல்வம். நல்ல உடல் நலமே எல்லா செல்வத்துக்கும் மூலம் அதை பெறுவதற்குத்தான் துளசி முதல் அரசமரம் வரை பல ஆரோக்கியமான விஷயங்களை இந்துக்கள் சொன்னார்கள்
துளசி போல் மருந்தில்லை என்பதால் துளசியில் லட்சுமி வாசம் செய்கின்றாள் என்றார்கள், அன்னம் எனும் சோற்றில் உடல் வளர்வதால் அன்ன லட்சுமி என்றார்கள்
உணவும் மருந்து மூலிகையும் செல்வம் அடைய மூலமான நல்ல உடலுக்கு மகா அவசியம் என அடிப்படையினை சொன்னது இந்துமதம்
இன்னும் ஏராளம் சொன்னார்கள்.
அதிகாலை எழுதல், வீட்டு முற்றம் பெருக்கி கோலமிட்டு வீட்டை சுத்தமாக வைத்திருந்தல், நகம் வெட்டி உடல் சுத்தம் பேணுதல், இருவேளை குளித்து தலைசீவி பூச்சூடி மங்களகரமாய் நிற்றல், நல்ல மணமும் புகையும் வீட்டில் நிலைக்க செய்தல், இன்னும் மூன்று பொழுதும் வழிபாடு செய்தல், சுற்றதார் மனம் மகிழ உபசரித்தல், நோன்புகளை மேற்கொள்ளுதல் என நுணுக்கமான விஷயங்களை அது சொன்னது
இதை ஒருவன் அன்றாடம் செய்வானாகில் அவனை அறியாமல் ஒரு சுறுசுறுப்பு அவனிடம் குடிகொள்ளும், உடல் சுத்தமும் நல் ஆடையும் அலங்காரமும் அவனுக்கு இன்னொருவரிடம் நல்ல அபிபிராயத்தை கொடுக்கும் அவனுடன் பணியாற்ற எல்லோரும் விரும்புவர்
நல்ல பயிற்சிகளும் நல்ல சூழலும் உடனே வராது, அதை செய்ய செய்ய சோம்பல் ஒழியும் தன்னம்பிக்கை பெருகும் மனம் தெளிவாகும்
பலமான உடலும் தெளிவான சிந்தனையும் ஒருவனை உழைக்க வைக்கும் அந்த உழைப்பு அவனுக்கு செல்வத்தை கொடுக்கும்
வெறும் பணம் மட்டும் கொட்டாமல் ஏன் உழைக்கின்றோம், எதற்கு உழைக்கின்றோம் என சிந்திக்க வைக்கும் அந்த சிந்தனை அவனை மென்மேலும் உயர்த்தும்
ஆம், செல்வம் சேர முதல் வழி சோம்பலை அறவே ஒழிப்பது, உடலையும் மனதையும் நல்லவழியில் வைத்திருப்பது
சோம்பேறின் வீடு சுத்தமாய் இராது, சோம்பேறி இருக்குமிடம் உழைப்பு இருக்காது, சோம்பேறியின் மனம் உற்சாகமாய் இராது, தெளிவாய் சிந்திக்காது.
இதனாலே உடல், மனம், செயல் என மூன்றிலும் சோம்பலை ஒழித்தால் செல்வம் குவியும் என தெளிவாய் சொன்னார்கள்
செல்வம் கூட சேர்த்துவிடலாம் ஆனால் சேர்த்த செல்வத்தை பெருக்குவதும் பெருகிய செல்வத்தை காப்பதும் தனி பயிற்சி
செல்வம் எங்கெல்லாம் வீணாகும் என்பதை கூர்ந்து நோக்கிய சனாதான தர்மம் அதற்கு சில வழிகளையும் பல போதனைகளையும் சொல்லி மானிடன் செல்வத்தோடு வாழ வழி செய்தது
மது, மாது, சூது என மனதை குழப்பும் வழிகள் செல்வம் அழியும் பெரு வழி என சொன்ன இந்துமதம் இன்னும் புகழுக்காக தகுதியில்லாதோருக்கு அள்ளி கொடுக்கும் பணமும் செல்வத்தை குலைத்துவிடும் என்றது
இந்த ஆசைகளை ஒழித்தாலே ஒருவன் நிலைத்த செல்வத்துடன் வாழ்வான் என சொன்னது
மதுவழக்கமும், மாதரார் உறவும் , சூதாட்டமும், ஊதாரிதனமாக தான் தோன்றி துதிபாடிக்கெல்லாம் அள்ளி எறிவதும் அறிவுடையோரை இழிப்பதும் பெரும் செல்வத்தையும் கரைத்துவிடும்
இதை மிக வலியுறுத்தி சொன்ன மதம் அதற்காக புராண கதைமுதல் இதிகாச கதைவரை சொல்லி வைத்தது, இந்துக்கள் சொன்ன புராண கதைகளெல்லாம் ஒருவனின் செல்வமும் புகழும் எப்படி அழியும் என்பதே
அறிவற்றோருடனும் வஞ்சகனுடனும் ஒரு செல்வந்தன் இசைந்தால் அவனின் செல்வமெல்லாம் தவறான வழியில் அழியும் என்பதையும் சொன்னார்கள்
அதே நேரம் உண்மைக்கும் நியாயத்திற்கும் தெய்வத்திற்கும் அதாவது நற்காரியங்களால் ஒருவன் செல்வம் இழக்கபட்டாலும் பின்னாளில் அவனுக்கு அது பன்மடங்காக கொடுக்கபட்டது என்பதையும் அது சொல்லிற்று
மானிட வாழ்வினை இப்படி நோக்கிய இந்துமதம் பிரபஞ்சத்தின் சூட்சும சக்திகள் ஒருவனுக்கு கிடைக்கவும் ஏற்பாடுகளை செய்தது
சுக்கிரன் எனும் கிரகம், வெண்மையான லட்சுமி கடாட்சம் கொண்டது என்பதையும் அதன் நாளான வெள்ளிகிழமை வழிபாடு செய்தல் நல்லது என சொல்லிற்று
வெண்மை என்றால் வளமை என பொருள், அந்த நாள் வழிபாட்டுக்கு உகந்தது என சொல்லிற்று
சனி என்றால் கருமை, சனி எனும் சோதனை கொடுக்கும் கிரகம் கருப்பு நிறமானது, சனியின் ஆதிக்கத்திலேதான் ஒருவனுக்கு பொருள் அழியும் புத்தி தடுமாறும், அதனால் அந்நாளில் இறைவனிடம் வேண்டி கொள்ள சில ஏற்பாடுகளை சொன்னது
செல்வம் ஒரு நாள் வந்தால் சோதனை மறுநாள் வரும் அதனால் முக்காலமும் இறைவனை நாடு என அது அறுதியிட்டு சொன்னது
வானியல் கிரகங்களில் 3 கிரங்களை அது சுகவாழ்வோடு பொருத்தி இம்மூன்றும் வளமையான வாழ்வுக்கு அவசியம் என்றது
குரு, சுக்கிரன், கேது என்ற மூன்றையும் அது சொன்னது, அதாவது அறிவு வேண்டும், பொருள் வேண்டும், இரண்டையும் சரியாக பயன்படுத்தும் தெளிவு வேண்டும் என்பதே அது
இதனால் குருவுக்கு பரம்பொருளையும், சுக்கிரனுக்கு லட்சுமியினையும், கேதுவுக்கு பிள்ளையாரையும் சொல்லிற்று
ஆம்,எந்த செல்வமும் பெருகவும் காக்கபடவும் அது நிலைக்கவும் ஒரு அனுபவமான பெரியவரின் வழிகாட்டுதல் அவசியம், இந்த அனுபவஸ்தர் இறை அருளிலேதான் வருவார்கள்.
“குருவருள் இன்றி திருவருள்” இல்லை என இந்துக்கள் அடித்து சொல்வது இதனாலேதான்.
லட்சுமி என்பவள் எல்லா ஆசியினையும் அருள்வாள், விநாயகர் என்பவர் இந்த அருளையும் பொருளையும் ஒருவன் நல்வழியில் பயன்படுத்தும் தெளிவினை அருள்வார், இதைத்தான் இந்து புலவர் அவ்வையார் மூதுரையில் பாடுகின்றார்
“வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனிகிடங்காது-பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு”
இந்த ஒரு பாடலிலே விநாயகபெருமான் பாதம் பணிந்தால் எல்லா அருளும் கிடைப்பது என்பது தெரிகின்றது
உலக வாழ்க்கைக்கு இன்றிமையாத செல்வம் பற்றி, அதை பெறும் வழிகள் பற்றி மனதாலும் உடலாலும் சிந்தையாலும் இன்னும் பலவகை நிம்மதி பற்றி இந்துமதம் சொன்ன அளவு இன்னொரு மதம் சொன்னதில்லை
ஒரு இடத்தில் எப்பொழுது செல்வம் குவியும் என்பதை செல்வம் குவிந்திருக்கும் இடத்தை நோக்கினால் தெரியும்
அது அமெரிக்காவோ, ஜப்பானோ முழு செல்வந்த நாடுகளை நோக்கினால் சில விஷயங்கள் இந்துக்கள் சொன்ன அடிப்படையிலே இருக்கும்
சுத்தம், அலங்காரம், அழகு, நல் வாசனை, எதிலும் ஒரு அழகுணர்ச்சி, அதிகாலை விழிக்கும் சுறுசுறுப்பு, ஓயாத திட்டமிடல் என அவர்கள் இந்துக்கள் சொன்ன அனைத்தையும் பின்பற்றுவார்கள்
அவர்கள் கோடி கோடியாக மதுபாட்டில் செய்து அந்நிய நாட்டுக்கு விற்பார்களே தவிர அவர்கள் சமூகம் குடியால் வீழாது
அங்கே பெண்களின் அலங்கார உடையும் மிக சிரமபட்டு அவர்கள் பராமரிக்கும் உடற்கட்டும் ஒப்பனையும் ஒரு வசீகரத்தை உருவாக்கி வியாபார நிலையங்களில் பொருள் ஈட்ட பயன்படுகின்றதே அன்றி வெறேதும் இல்லை
அதிகாலை எழுதல், சுறுசுறுப்பாக இருந்த்தல், செல்வம் சேர்க்கும் வழியில் உழைத்தல், முக்கியமாக உற்பத்தியி அடுத்த அடுத்தகட்டம் பற்றி சிந்தித்தல், நிறுவனங்களின் நிதி நிலையினை மகா உன்னிப்பாக கவனித்தல், தேவையற்ற செலவுகளை குறைத்தல் , உலகெல்லாம் புது புது வாய்ப்புகளை பெறுதல் என அவர்கள் இன்று செல்வத்தில் கொழிக்க காரணம் இந்துக்கள் சொன்ன அந்த லட்சுமி தத்துவமே
அறிவும் தெளிவும் இருக்கும் இடத்தில் அமைதியும் உழைப்பும் வரும், செல்வம் கூடும் உதாரணம் மேற்குலகம்
செல்வம் இருந்தாலும் அறிவும் தெளிவும் ஞானமும் இல்லாவிட்டால் நிம்மதி இராது, ஓயா துன்பமே வரும், உதாரணம் அரபு நாடுகள்
அறிவும் இல்லாமல் தெளிவும் இல்லாமல் மதி முழுக்க மயங்கினால் என்னாகும் என்பதற்கு ஆப்ரிக்கா முதல் ஆப்கானிஸ்தான் வரை வரிசையாக காட்டமுடியும்
ஆம், ஞானமும் அறிவுமே செல்வத்தின் திறவுகோல் இதை லட்சுமி தேவியின் தோற்றத்திலேயே சொன்னார்கள் இந்துக்கள், தத்துவ வடிவாக சொன்னார்கள்
பாற்கடலினை கடையும் பொழுது எல்லா செல்வங்களும் வந்தது. எல்லா தேவர்களும் தெய்வங்களும் போட்டி போட்டு ஒவ்வொரு செல்வத்தையும் கைபற்றின
கடைசியாக திருமகள் வந்தாள், அவள் யாருக்கு மாலையிடுவாள் என தேவ உலகமே உற்று பார்த்தது, ஒவ்வொரு தெய்வத்தின் கண்ணிலும் ஆசைகள் மின்னியது, சில மாலையிட ஏதுவாக குனிந்து நின்றன, சில முழங்காலிலே கூட நின்றன
ஆனால் கொஞ்சம் கூட சலனில்லாமல் திருமகள் வந்ததை கூட கவனியாமல் ஓரமாக நின்றார் திருமால், அவரை சென்று சரணடைந்தாள் திருமகள்
ஆம், ஞானம் இருக்குமிடம் செல்வம் சரணடையும் எனும் தத்துவமே இது. இதனாலே திருமால் காலடியில் திருமகள் இருப்பதை சொன்னார்கள்
நாம் முன்பே சொன்னபடி அறிவும் தெளிவும் ஞானமும் பெற, கருப்பு சக்தி எனும் அறியாமையில் இருந்து காக்கபட பகவானை சரணடைந்தால் போதும், அவர் இருக்குமிடம் அன்னை லட்சுமி தானாக வருவாள் பெரும் அறிவினை தருவாள்
இன்னும் சிந்தனைகள் ஏராளம் உண்டு
எதெல்லாம் மங்கா செல்வமோ எதெல்லாம் கால காலத்துக்கும் விலை உயர்ந்ததோ அதையெல்லாம் லட்சுமி என் சொன்ன இந்துமதம் சில நாத்திக கும்பலால் பழிக்கபட்டிருக்கலாம்
ஆனால் அன்றே எதெல்லாம் எக்காலமும் விலையான பொருட்கள் என இந்துக்கள் லட்சுமியின் பெயரால் சொன்னதை இன்று உலகம் உணர்ந்து கொண்டிருக்கின்றது
நிலம், தங்கம், பசுமாடு, நெல் என மிக சிலவற்றைத்தான் லட்சுமியின் ஆசி என்றார்களே தவிர எளிதில் மதிபிழக்கும் பொருள் எதையும் அவர்கள் சொல்லவில்லை
அன்றும் இன்றும் என்றும் நிலம், தங்கம், மாடு, நெல் போன்றவை விலை உயர்ந்து கொண்டே இருக்குமே தவிர குறையாது என்பது அவர்களுக்கு தெரிந்திருக்கின்றது, எதெல்லாம் பாதுகாப்பான முதலீடோ அதை அன்றே லட்சுமி பெயரால் சொன்னது இந்துமதம்
இன்றும் பாருங்கள் 10 லட்ச ரூபாய்க்கு ஒரு கார் வாங்கினாலோ இல்லை உடைகளும் எலெக்ட்ரானிக் சாதனமோ வாங்கினாலும் சில வருடங்களில் அதன் மதிப்பு 1 லட்சமாக சரியும் அல்லது தூர ஏறியவேண்டும்
ஆனால் நிலமோ தங்கமோ பசுமாடோ இன்று 10 லட்சத்துக்கு வாங்கினால் அடுத்த 10 வருடங்களில் அதன் மதிப்பு பன்மடங்கு பெருகும், இதுதான் இந்துக்கள் சொல்லிவைத்த அறிவார்ந்த மூதலீடு, லட்சுமியினை முன்னிட்டு மானிட சமூகத்துக்கு சொல்லிய மாபெரும் பொருள் சேர்க்கும் போதனை.
சிந்திக்க சிந்திக்க பெரும் ஆச்சரியங்களையும், மெய்சிலிரிக்க வைக்கும் தத்துவங்களையும் சொன்ன மதம் இந்துமதம், அந்த சிந்தனை இன்னும் நீள்கின்றது
லட்சுமியினை அலைமகள் என சொன்னாங்களே ஏன்? நீரின் நடுவில் அவள் இருப்பாள் என குறிப்பிட்டு சொன்னார்களே ஏன்?
இன்று ஐரோப்பியர் அறிவின் அடையாளம் என கொண்டாடும் ஆந்தையினை அன்றே லட்சுமிக்கு இந்துக்கள் வாகனமாக வைத்தார்களே ஏன்?
செல்வத்தின் பயனே ஈகை செய்வது, தர்மம் செய்வது என இந்துக்கள் சொன்னார்களே ஏன்? அதுவும் நீரின் பெயரால் கொடைகள் கொடுக்க வேண்டும் என்றார்களே ஏன்?
(தொடரும்..)