நவராத்திரி சிந்தனைகள் : 9.1
நவராத்திரி பண்டிகை அன்னை மகிஷாசூரனை கொன்றாள், ராவணனை ராமன் வீழ்த்தினான் என கொண்டாடுகின்றது இது இந்த நவராத்திரியின் தத்துவம்
உண்மையில் இந்துக்களுக்கு 4 நவராத்திரி உண்டு ஒவ்வொரு 3 மாதங்களுக்கும் ஒரு நவராத்திரி என நான்கு நவராத்திரிகள் வருடம் முழுக்க உண்டு, இந்த நவராத்திரிகளில் இரண்டு நவராத்திரி காலம் சிறப்பானது
குளிர்காலம் முடிந்து கோடைகாலம் தொடங்கும் அந்த பங்குனி சித்திரை மாத நவராத்திரி எனும் சைத்ர நவராத்திரி, வெயில்காலம் முடிந்து மழையும் குளிரும் தொடங்கும் சாரதா நவராத்திரியான இந்த புரட்டாசி நவராத்திரியும் சிறப்பானவை
ஏன் இந்த புரட்டாசி நவராத்திரி சிறப்பானது அதுவும் அறிவும் ஞானமும் வேண்டும் பண்டிகை என்றால் இந்த புரட்டாசியில்தான் சூரியன் கன்னிராசிக்கு வருவார், அந்த ராசியின் அதிபதியான புதன் அப்பொழுது பலம் பெற்று பிரகாசிப்பார், அந்த வளர்பிறையில் வேண்டினால் பிரபஞ்ச பலன் கூடுதலாக கிடைக்கும் என்பதால் வெகு ஞானமாக இக்காலத்தை வைத்தார்கள்
பொதுவாக பொழுதுகள் மாறும் நேரம் பூஜை செய்வது,ஒரு பொழுது முடிந்து இன்னொரு பொழுது எழும்பொழுது பிரார்த்திப்பது இந்துக்களின் வழமை, கிரகங்கள் மற்றும் கதிர்வீச்சினால் ஏற்படும் மன அழுத்தம் பிரபஞ்ச நிலையின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க இந்த சந்திபொழுதுகளில் , இரு பொழுதுகள் சந்திக்கும் இடத்தில் பூஜிக்கும் சந்தியா வந்தனம் நடைமுறை உண்டு
இந்த நவராத்திரியும் அப்படி பருவங்கள் சந்திக்கும் காலத்தில் நடக்கும் பூஜையே
சந்தி பொழுதுகளில் சக்தி மாறும், இருளில் இருந்து மெல்லிய வெயில் , மெல்லிய வெயிலிலிருந்து கடும் வெயில், பின் குறையும் வெயில், பின் மறுபடியும் இருள் என வெப்பசக்தி மாற தொடங்கும் நேரமெல்லாம் சரியாக சில வழிபாடுகளை செய்ய குறித்து வைத்தார்கள் இந்துக்கள்
இந்த நவராத்திரியும் அப்படி பிரபஞ்ச பெரும் சக்திகளை குறித்தே செய்யபட்டது
இங்கு சக்தி என்பது மூலசக்தியாக அசையா சக்தியாக வீற்றிருக்கின்றது, அது அள்ள அள்ள குறையவுமில்லை அது தன் நிலையில் மாறுவதுமில்லை எப்பொழுதும் ஒரே சக்தியாக ஒரே அளவில் இருக்கின்றது
அந்த பெரும் மூல சக்திதான் பரம்பொருள், அதனிலிருந்தே அசையும் சக்திகளெல்லாம் தோன்றின அந்த மூலபரம்பொருளிடமிருந்தே சக்திகளும் பெற்றன
அவ்வகையில் சூரியனும் இன்னும் பல கண்ணுக்கு தெரியும் சக்திகளும், ஈர்ர்பு விசை போன்ற சக்திகளும் அங்கிருந்துதான் உருவாயின
அந்த மூலசக்தியினை Potential Energy என்றும், அசையும் சக்தியினை Kinetic Energy என்றும் சொல்வார்கள்
இந்த சக்திகளே பிரபஞ்சம் முதல் மானிட உயிர்கள் வரை காத்தல் அழித்தல் படைத்தல் எனும் முத்தொழிலையும் செய்வதால் அவற்றை பெண் என்றார்கள்
அந்த சக்திகளை பெண் என்றார்களே ஏன்?
பெண் என்பதே எல்லா இடத்திலும் உயிர்களை பெருக்கும் மூலம், உயிர்கள் என்றல்ல எல்லா சக்தி வடிவங்களும் பெண்களே
ஒரு அசையாத பொருளில் இருந்து பெரும் சக்தி எழ ஒரு தூண்டும் இயக்கம் அவசியம், இயங்கற்ற தன்மையில் இருந்து இயங்கு நிலைக்கு ஒரு பொருளை மாற்ற ஒரு சக்தி அவசியம்
எண்ணெய் எரியும் தன்மை கொண்டது ஆனால் தீ பற்றாமல் எரியாது, கல்லுக்குள் வெப்பம் உண்டு என்றாலும் இரு கற்கள் உரசும்பொழுதுதான் நெருப்பு பறக்கும்
அதாவது ஒரு பொருளில் மறைந்திருக்கும் அல்லது உறங்கி கொண்டிருக்கும் சக்தியினை வெளிகொண்டுவர அது தொடர்ந்து இயங்க செய்ய ஒரு சக்தி அவசியம்
அந்த சக்தியாலே இயக்கம் உண்டு, எது இயங்கா பொருளை இயங்க வைக்குமோ, எது தொடர்ந்து தன்னில் இருந்து சக்தியினை உருவாக்கி கொண்டே இருக்குமோ அந்த சக்திக்கு பெண் சாயல் உண்டு என்பதால் அதை பெண் என்றார்கள்
அதாவது அசையா நிலையில் இருக்கும் சக்தியினை ஆண்சக்தியாகவும் அதை இயங்க வைக்கும் சக்தியினை பெண் சக்தியாகவும் சொன்னார்கள், பெண் என்பது இயக்கத்தை குறிக்கும் சொல்லாகவும் கருதபடும்
ஒரு ஆற்றல் இன்னொரு பெரும் ஆற்றலாக மாற்றபடுவதைத்தான் பெண் தன்மை என்றார்கள், பெண்ணில் இருந்து உயிர்கள் தோன்றி வளரும் என்பது போல ஒரு ஆற்றல் இயக்கத்தை கொடுத்துகொண்டே இருக்கும் என்பதை பெண் பெயரால் சொன்னார்கள்
அந்த சக்திதான், அவர்கள்தான் அந்த முத்தொழிலையும் இயக்குகின்றார்கள் என்பதை உறுதியாய் சொன்னார்கள்
இந்த உலகம் சக்தி மாற்றத்தால் இயங்குகின்றது, ஆற்றல் அழியாது ஒரு ஆற்றல் இன்னொரு ஆற்றலாக மாறும் எனும் விஞ்ஞானத்தை என்றோ உணர்ந்துதான் இந்த நவராத்திரியும் ஆயுத பூஜையும் ஏற்பாடு செய்யபட்டது , ரிஷிகள் அதை செய்தார்கள்
இங்கு எல்லாமே சக்திமயம், அந்த சக்தியினை பயன்படுத்துவதை பொறுத்தே மானிட இயக்கம் நடக்கும்
நெருப்பை தீபமென ஏற்றினால் தீபம் அது ஒளிகொடுக்கும், அதே நெருப்பை அடுப்பில் இட்டால் அது சமையலை படைக்கும், அதே நெருப்பை கூரையில் இட்டால் வீடு பஸ்பமாகும்
இதேதான் நீருக்கும் பொருந்தும் இன்னும் எல்லா சக்திக்கும் பொருந்தும், அதாவது இந்த சக்திகளை எப்படி பயன்படுத்தவேண்டுமோ அப்படி பயன்படுத்தவேண்டும் என்பது
இந்த சக்திமாற்றத்தில்தான் கடல் நீர் ஆவியாகின்றது, ஆவி மழையாகின்றது, மழைநதியாகின்றது உலகம் செழிக்கின்றது கடைசியில் நதி கடலை அடைகின்றது
இங்கு எல்லாமே ஒரு நிலையில் இருந்து இன்னொரு நிலைக்குமாறும் சுழற்சி அதாவது சக்தியின் தொடர்ச்சி இருந்து கொண்டே இருக்கின்றது, அதில்தான் உலக இயக்கமும் வாழ்வும் நடக்கின்றது
ஆகாய கோள்கள் முதல் பூமியின் இயக்கம் அதன் உயிர்களின் இயக்கம் வரை அதுதான், அந்த சக்தியின் வடிவம்மாறி கொண்டே இருப்பதுதான்
ஆயுத பூஜையின் தத்துவமும் இதுதான்
மருத்துவன் கையின் கத்தி உயிரை காக்கும், சமையலறை கத்தி உணவை உருவாக்கும், கொலைகாரன் கையில் இருக்கும் கத்தி உயிரை அழிக்கும்
ஆக கத்தி எனும் ஆயுதம் ஒன்றேதான் தவிர அது பயன்படும் இடத்தை பொருத்து காக்குமா, அழிக்குமா, உருவாக்குமா என்பது நடக்கும்
இந்த தத்துவம்தான் ஆயுத பூஜை விழா, ஒவ்வொருனுக்கும் ஒரு தொழில் என்பதும் ஒரு ஆயுதமென்பதும் தேவை, அதனை அவன் எப்படி பயன்படுத்துகின்றான் என்பதை பொறுத்து வாழ்வு அமையும் என குறிப்பால் சொன்னார்கள்
எல்லா விஷயத்தை உருவாக்க கருவி தேவை, அப்படி ஞான வாழ்வுக்கும் ஆயுதம் தேவை, ஞானமான ஆயுதம் தேவை
ஞானத்தை பொறுத்தே ஆயுதத்தால் பலன் உண்டு என்பதை உணர்ந்து அதனை வழிபட சொன்னார்கள்
இந்த படைத்தல் காத்தல் அழித்தல் என்பதுதான் உலக இயக்கமாயிற்று, பிரபஞ்ச இயக்கமும் அதுதான், அந்த இயக்கமே எல்லா இடத்திலும் நடக்கின்றது, அண்ட சராசரத்தில் நடக்கின்றது , பிரபஞ்சத்தில் நடக்கின்றது அதுவே பூமியிலும் நடக்கின்றது, ஏன் ஒவ்வொரு உயிரிலும் நடக்கின்றது
மானிட உடல் கூட அனுதினனும் கோடான கோடி செல் தோன்றி பல கோடி செல்கள் மறைந்துதான் இயங்கி கொண்டிருக்கின்றது என்கின்றது விஞ்ஞானம், ஆம் அண்டத்தில் விண்மீன்கள் தோன்றி மறைவது போல மானிட உடலிலும் அந்த மாற்றம் நடந்துகொண்டேதான் இருக்கின்றது
ஒவ்வொன்றுக்கும் ஒரு காலம் உண்டே தவிர இந்த படைப்பும் அது சில காலம் இருப்பதும் பின் அழிவதும் தொடர்ந்து வந்துகொண்டேதான் இருக்கும்,இதற்கு பிரபஞ்சத்தில் இருக்கும் யாரும் தப்பமுடியாது மனிதர்கள் உள்பட
இந்த சக்திகள் மானிட வாழ்வில் எப்படி பங்காற்றுகின்றன என்பதை கூர்ந்து கவனித்த இந்துமதம் அதை மூன்றாக பிரித்தது
இந்த சகதிகளை கிரியா சக்தி, இச்சா சக்தி, ஞானசக்தி என பிரிந்ததது இந்துமதம் அதாவது படைக்கும் சக்தி என சரியாக பிரித்தது படைக்கும் சக்தி இயக்கும் சக்தி இதனை காக்க அறிவுகொடுக்கும் சக்தி என மூன்று சக்திகளை அது அடையாளம் கண்டது
மானிட வாழ்வு வெற்றி பெற அது சில காட்சிகளை மகிஷன் மூலம் சொன்னது
எருமை போன்ற சகதியில் படுத்திருக்கும் குணத்த்தில் இருந்து வெளிவந்து உழைப்பு பெற்றும், வறுமை எனும் எருமையில் இருந்து விடுபட்டு செல்வமும், மடமை எனும் எருமையில் இருந்து வெளிவந்து ஞானமும் பெற வழி சொன்னார்கள்
உண்மையில் எருமை பலமானது ஆனால் அதன் சோம்பேறி குணமே அதனை வீழ்த்தி வைக்கும், அந்த குணத்தை மாற்றி அறிவும், செல்வமும், ஞானதெளிவினை பெற இக்காலத்தில் வேண்ட வேண்டிய அவசியசித்தை குறிப்பால் சொன்னார்கள்
இந்த இயக்க தத்துவத்தைத்தான் நவராத்திரியில் சொன்னார்கள், இதனை வட இந்தியாவில் நடக்கும் ஒரு விழாவோடு ஒப்பிடலாம்
வட இந்தியாவில் ஒரு கும்பத்தை நடுவில் வைத்து “கர்ப்ப” நடனம் என ஒன்றை ஆடுவார்கள், அதை ஒரே ரிதமாக ஆடுவார்கள், அதாவது பிரபஞ்ச இயக்கத்தை போல ஒன்றாக ஒரே ரிதத்தில் ஆடுவார்கள்
அது பார்ப்பதற்கு வெறும் நடனமாக இருந்தாலும் பெரும் தத்துவத்தை போதிக்கும
நடுவில் இருக்கும் கும்பம் பெரும் படைக்கும் சக்தியினை குறிக்கின்றது, அங்கிருந்துதான் எல்லாம் வருகின்றது என்பதை “கர்ப்பம்” என சொல்கின்றது, அதை சுற்றி ஒரே லயமாக ஒரே நடனமாக ஆடும் நடனம் நாம் இந்த பிரபஞ்சத்தோடு இணைந்து செல்லவேண்டுமே தவிர தனியாக ஆடினாலோ இல்லை ஆட்டத்துக்கு முரணாக ஆடினாலோ அர்த்தமில்லாதது என்பதை காட்டுகின்றது
(இந்த கர்ப்ப நடனத்தின் மையத்தில் இருக்கும் கும்பமேதான் நவராத்திரியிலும் இதர விஷேஷ நாட்களிலும் சக்தி உருவாக்கும் கும்பமாக ஆலயங்களிலும் வீடுகளிலும் வைக்கபடுகின்றது, அதுவும் அம்மனுக்கு அது வைக்கபடும் தத்துவமே அவளே எல்லாமும் உருவாக்கும் சக்தி என்பதன்றி வேறல்ல
அங்கு தத்துவமும் இருக்கின்றது, செப்பு கலசத்தில் வைக்கபடும் சில பொருட்களால் பிரபஞ்சத்தின் நல்ல ஈர்ப்புகளையும் பெறமுடிகின்றது )
இந்த நடனமும் வழிபாடுமே மானிடனை பிரபஞ்ச அசைவோடு இசைந்திருப்பதை சொல்கின்றது, அவளே படைக்கின்றாள், அவளே இயக்குகின்றாள், அவளே அழிக்கின்றாள் என்பதை சொல்கின்றது
இங்கு பிறந்தோர் அனைவரும் ஒரு நாள் மறைய வேண்டும், அது பிரபஞ்ச விதி, இந்த விதிக்கு முரண்பட்டவர்களே பேராசை மிக்க அசுரர்கள்
அவர்கள் அழியமாட்டோம் சாகாவரம் வேண்டும் என்றார்கள், பிரபஞ்சத விதியினை மாற்றுவோம் என்றார்கள் இன்னும் என்னென்ன அட்டகாசத்தையோ செய்தார்கள், அவர்களை அன்னை வந்து அழித்தாள்
ஆம், இந்த பிரபஞ்சத்தின் விதிக்கு கட்டுபடாவிட்டால் அந்த பெரும் சக்தி நம்மை அழிக்கும் என்பதே இங்கு கவனிக்கதக்க பெரும் தத்துவம்
இதனைத்தான் கொலுபடிகளிலும் வைத்தார்கள், கொலு வைக்கும் தத்துவே அதுதான்
கொலுவில் ஒவ்வொருபடியிலும் ஓருயிர் ஈருயிர் என வைத்து கடைசியில் தெய்வ உருவங்களை வைக்க வேண்டும் என்பது விதி, அதாவது வளர்ச்சி என்பது அற்ப உயிரில் இருந்து தெய்வ நிலையினை அடைய வேண்டும் என்பது அதன் போதனை
இப்பொழுது யாரும் அதை பின்பற்றாவிட்டாலும் கொலுவின் விதி அதுதான்
அங்கு மானிடன் ஆறு அறிவாக விலங்குக்கு மேம்பட்ட நிலையிலும் மகான்களுக்கும் தெய்வங்களுக்கும் கீழாகவும் இருப்பான், அங்குதான் சிந்திக்க சொன்னது இந்துமதம்
இந்த படியில் இருந்து மேல் ஏறுவதும் இப்படியில் இருந்து சறுக்கி வீழ்வதும் அவனன் கையில் இருக்கும் ஆயுதம், ஞானம், அறிவு, செல்வத்தை பொறுத்தது என்றார்கள்
இந்த நவராத்திரியில் அதனை மகிஷனோடும் ராவணனோடும் ஒப்பிட்டு சொன்னார்கள்
சக்திவாய்ந்த அந்த அசுரன் பிரபஞ்ச விதியினை தன் வரத்தால் பலமான ஆயுதத்தால் மாற்ற எண்ணினான், ஆனால் வீழ்ந்தான், அவனின் ஆசை அவனை தூண்டியது அந்த ஆசைக்கு அவனின் ஆயுதங்கள் வலுசேர்ர்த்தன, அந்த பலத்தில் போருக்கு வந்தவன் வீழ்ந்து அழிந்தான்
ராவணும் அப்படியே, அவனின் பத்து தலையும் ஆசை, காமம், குரோதம். அகங்காரம், மயக்கம் என ஒவ்வொரு குணத்தால் இருந்தது, மானிடர் ஆசைகளும் அப்படியே
ராமாயணம் அதை இன்னும் அழகாக சொல்லும் அவனின் 10 தலையும் அறுக்க அறுக்க வளர்ந்துகொண்டே வந்தது , இதயத்தில் ஆசை இருக்கும் வரை மயக்கத்தை வேறறுக்க முடியாது என்பதே அந்த தத்துவம்
ராவணனின் பெரும் ஆயுதமும், செல்வமும் அவனை அந்த மயக்கத்துக்கு தள்ளின, பிரபஞ்சத்தையே எதிர்க்க துணிந்த அவன் வீழ்ந்தான்
நவராத்திரி இப்படியெல்லாம் சொல்லி விளக்கும் தத்துவம் இதுதான்
இங்கு படைத்தல் காத்தல் அழித்தல் என எல்லாமும் பிரபஞ்ச தத்துவம், அது இங்கு எல்லா இடத்திலும் நடக்கும் அந்த தத்துவமே மானிட வாழ்விலும் உண்டு, இதனை அந்த முப்பெரும் சக்திகள் மூன்று தேவியர்களாக நடத்துகின்றார்கள்
இங்கே நான் படைப்பாளி என ஆடவோ, நான் செல்வந்தன் என கொக்கரிக்கவோ, நான் பலமிக்கவன் எல்லோரையும் அழிப்பேன் என மிரட்டவோ ஒன்றுமில்லை, பிரபஞ்சத்தில் எல்லாமும் அதனதன் கடமையினை செய்வது போல மானிடனும் அவன் கர்மாவினை செய்கின்றான்
இந்த கர்மாவில்தான் ஆசை, மயக்கம், பேராசை, வஞ்சகமெல்லாம் கூடி அவனை வீழ்த்துகின்றது, பிரபஞ்சத்தின் அசைவில் இருந்து பிரித்து அதற்கு எதிராக செயல்பட சொல்கின்றது
எந்த இடத்தில் அவன் அப்படிசிந்தித்து தான் தனது என அகங்காரம் கொள்கின்றானோ அப்பொழுது பிரபஞ்சம் அவனை அழிக்கும் அல்லது அகற்றும்
அவன் மானிட நிலையில் இருந்து தெய்வநிலைக்கு உயராமல் கீழே சரிந்து விலங்கு நிலைக்கு செல்வான்
ஆம், ஒருவன் அப்படி வீழவே கூடாது தன் இயல்பில் இருக்க வேண்டும், எதெல்லாம் அவனை விழ வைக்குமோ அதை அகற்ற சிந்திக்கும் காலத்தை “விழா” என்றார்கள்
விழா என்றால் அது வெற்று கொண்டாட்டம் அல்ல, பத்தாடை அணிந்து பகட்டை காட்டும் பண்டிகைஅல்ல, கொலுவும் நகையும் கொட்டி ஆடும் பெரும் ஆட்டம் அல்ல
அவையெல்லாம் சோர்ந்திருக்கும் மனதுக்கு ஒரு உற்சாகம்தருமே அன்றி “விழா” என்பதுஅல்ல
“விழா” என்பது மானிடனை மானிட நிலையில் இருந்து விழாமல் தாங்கும் சிந்தனையினை தருவது, மானிடனை ஆசையும் காமமும் குரோதமும் அகங்காரமும் மயக்கி வீழ வைக்கும், அப்படி விழாமல் இருக்க மானுடன் தன் கடமையினை மட்டும் செய்யவேண்டும்
அது எவ்வகை தொழிலோ ஆயுதமோ ஞானமோ அறிவோ இருந்தாலும் சரி, தன் கடமையினை கர்மாவாக நினைந்து செய்தல் வேண்டும்
அங்கு ஆர்பரிக்க ஒன்றுமில்லை, அழுது புலம்பவும் ஒன்றுமில்லை, ஏங்கி தவிக்கவோ, அழவோ மகிழவோ ஒன்றுமில்லை
ஒருவகையில் நவராத்திரி சிந்தனையும் போதனையும் பகவத்கீதையினை சார்ந்திருப்பதை காணலாம், ஆம் கீதையில் சொல்லும் தத்துவமே நவராத்திரி பண்டிகை
அதுவே ஆயுத பூஜையின் அஸ்திபாரம், அதுவே விஜயதசமியின் வித்யார்த்தம்
உன் கையில் இருக்கும் ஆயுதமும், அறிவும், ஞானமும் செல்வமும் இன்னும் அந்த முப்பெரும் தேவிய்ரால் மேம்பட்டு மேல் நோக்கி செல்லவேண்டும் சிந்தனையும் மனமும் தெய்வ நிலைக்கு உயர வழிசெய்யவேண்டுமே தவிர அவை ஆசை வயபட்டு உன்னை மகிஷன் போல, ராவணன் போல வீழ்த்திவிட கூடாது என்பதுதான் இந்நாட்களின் போதனை
ஆயுதம் என்பது ஒரு சக்தி இன்னொரு சக்தியாக வந்திருக்கும் சக்தி வடிவம், அந்த சக்தியினை மானுடன் தன் மேல்நோக்கிய நிலைக்கு பயன்படுத்தவேண்டுமே அன்றி கீழான நிலைக்கு பயன்படுத்தி சரிய கூடாது என்பதே இந்நாளின் தத்துவம்
தொழிலோ, ஆயுதமோ, சிந்தனையோ, அறிவோ ஒருவனை வீழாமல் போதிக்கும் சிந்தனையினை கொடுக்கும் நாள்தான் “விழா”
தனக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பும் ஆயுதமும் செல்வமும் தன்னை வீழ்த்த கூடாது, அதனால் வீழாமல் இருக்க வேண்டும் என மன்றாடுவதுதான் உண்மையான “விழா”
இந்த உணர்ந்தவன் இந்த விழாவினை வெறும் ஆடம்பரமாக பகட்டாக கொண்டாடமாட்டான், அவனால் முடிந்த தர்மங்களை செய்து தன் அறிவின் பலனை, தன் ஆயுதங்களின் பலனை, தன் செல்வத்தின் பலனை இல்லாதோருக்கு வழங்கி அவர்களை “விழா”மல் காப்பான்
ஆம் தன்னைமட்டுமல்ல தன்னை அண்டியிருப்போரையும் “விழா”மல் காப்பதே விழா
அந்த நல்ல அறிவையும் ஞானத்தையும் அன்னை சக்தி எல்லாருக்கும் வழங்கட்டும், ஞானமும் அறிவும் பெருகட்டும், பெருகும் ஞானமும் அறிவும் செல்வமும் ஆயுதங்களும் தேசத்தை காக்கட்டும்
தேசம் அறிவாகட்டும், தேசத்தில் செல்வம் கொழிக்கட்டும், தேசம் எல்லா ஆயுதங்களுடனும் பலமாகட்டும்