நவராத்திரி சிந்தனைகள் : 9.2

தத்துவங்களும் போதனைகளும் இறை நம்பிக்கையும் அன்னை சக்தியின் மாபெரும் வல்லமையினையும் விளக்கி சொன்ன நவராத்திரி போதனை பண்டிகைகளின் உச்சநாள் இந்த விஜயதசமி எனும் நன்னாள்
விஜய என்றால் வெற்றி, தசம் என்றால் பத்து. பத்தாம் நாள் வெற்றிநாள் என கொண்டாடும் பெருநாள் இது
அன்னையின் மூன்று வடிவங்கள் போல லவுகீகம், ஆன்மீகம், சூட்சுமம் என மூன்று பெரும் தத்துவங்களை சொல்லும் நாள் இது

முதலாவது சூட்சும விளக்கமாக தன் பக்தர்களை மிக கொடுமைபடுத்திய அசுரனை அன்னையே இறங்கி வந்து அழித்தாள், எக்காலமும் தன்னை நோக்கி அழைக்கும் எல்லா மக்களுக்கும் அவள் காவலாய் நிற்கின்றாள், அந்த பெரும் சக்தி தன்னை வேண்டுவோரை காக்கும் என்பதை இந்நாள் சொல்லும்
அவ்வளவுக்கும் அந்த அசுர கூட்டம் இறைவனிடம் வரம் வாங்கி வந்த கூட்டம், பக்தி நிறைந்த கூட்டம்தான், ஆனால் எண்ணெய் கோவிலில் விளக்காய் எரிந்தால் நல்லது, கொள்ளை கூட்டத்துக்கு தீ பந்தமாய் எரிந்தால் எப்படி?

பக்திமிக்கவன் என்றாலும் அதர்மம் செய்தால் அழிவான் என பொருள், இதில் அன்னையினை முன்னிறுத்தி இந்த அசுரவதம் இன்னொரு போதனையினையும் சூசகமாக சொல்லிற்று

அந்த அசுரன் அந்த அசுரன் பெண்ணை தவிர யாராலும் தனக்கு அழிவு வர கூடாது என வரம் பெற்றான் பெண் என்பவள் ஒரு காலமும் சண்டைக்கு வரமாட்டாள் என்பதும் இந்த ரகசியம் தனக்கும் பரம்பொருளுக்கும் தவிர யாருக்கும் தெரியாது என்பதும் அவன் நம்பிக்கையாயிற்று

அவனின் பலம் என அவன் நம்பிகொண்டிருந்த விஷயத்தில் அதில் இருந்த பலவீனத்தை குறிவைத்து அவனை வீழ்த்தினாள் அன்னை

ஆம், அதர்மகாரன் எது தன் பலம் என நினைப்பானோ அதுவே அவன் பலவீனமுமாகும், தெய்வம் அந்த பலவீனத்தை இடம் பார்த்து அடித்து அவனை ஒழிக்கும்

அதுவும் பெண் என அவன் இகழ்ந்த இடத்தில் ஒரு பெண்ணாக வந்து அவனை அழித்தாள் அன்னை என சொல்லும் இந்த புராணம் பெண்களை ஒரு காலமும் இகழகூடாது, பெண்ணை இழ்ந்தால் தெய்வத்துக்கே பொறுக்காது என்பதையும் சொல்கின்றது

இன்னும் ஆழமாக நோக்கினால், விரதங்களும் அதுவும் மூன்று வடிவ தத்துவங்களும் ஒரு விஷயத்தை கவனமாக சொல்வதை காணமுடியும்

அன்னை சாதாரணமாய் வரவில்லை நோன்பிருந்து வந்தாள், கடும் நோன்பிருந்து 9 இரவுகள் தவமிருந்து ஆயுதம் பெற்று வந்தாள் என்கின்றது அந்த புராணத்தின் வரிகள்

அது எதை சொல்கின்றது என்றால் அதர்மம் என்பது எப்பொழுதும் வெறும் வலிமையோடு இராது, அங்கு அறிவு, செல்வம், வீரம் என எல்லாம் கலந்ததாய் இருக்கும் அதை வீழ்த்த கடும் தவமிருந்து தேடினால் அந்த வல்லமையான அதர்மத்தை அழிக்கும் ஆயுதமாய் அன்னையே வருவாள் என்பதை சொல்லிற்று

அன்னையினை வணங்குவோருக்கு கல்வி, அறிவு, வீரம் என மூன்றும் ஒரு காலமும் குறைவுபடாது என சொல்லி வைத்தது இந்த வழிபாடு

அன்னையினை எல்லா சோதனையிலும் நிலைத்திருந்து வணங்கினால் அது வெற்றியாக முடியும் என்பதை வலியுறுத்தவே நோன்பும் விரதமும் 10 ம் நாள் விஜயதசமி எனும் கொண்டாட்டமும் உருவாயிற்று

9 நாட்களும் வெறும் உணவு மட்டும் விரதம் அல்ல, எல்லா வகை சோதனைகளையும் தாண்டி அந்த விரதம் அமைய வேண்டும். அது ஒரே சிந்தையாக அன்னையினை தேடினால் உலகின் எல்லா சுகங்களையும் துறந்து அவை கொடுக்கும் மயக்கங்களை மீறி அன்னையினை தேடி சரணடைந்தால் அது அன்னையின் அருள் எனும் வெற்றியாக அமையும் என்பதே விஜய தசமியின் போதனை

இரண்டாவதாக லவுகீக வாழ்வுக்கு போதனை சொன்னது இந்த நாட்கள்

ஒரு மனிதமும் சமூகமும் வாழ்வாங்கு வாழ கல்வி, செல்வம், வீரம் என்ற மூன்றும் அவசியம் என்பதை சொன்னார்கள், இவையன்றி ஒரு சமூகம் சிறக்காது என்றும் தெளிவுடன் சொன்னார்கள் இந்துமத முன்னோர்கள்

இன்றும் பாருங்கள் இது அப்படியே பொருந்தும், இந்திய நாடு கல்விக்கு சிறந்த நாடு ஆனால் பெரும் செல்வம் இல்லாததால் சில இடங்களில் அதனால் சோபிக்க முடியவில்லை

வெறும் வீரம் மட்டும் முரட்டுதனமாகி என்னாகும் என்பதை ஆப்கனிலே பார்க்கின்றோம், இன்னும் அழிந்து போன தீவிரவாத இயக்கமெல்லாம் இவ்வகையே

செல்வம் மட்டும் கொண்டிருக்கும் அரபுநாடுகள் நிலை பரிதாபம், அவை தங்களை காக்க வல்லரசுகளிடமே சரணடைகின்றன‌

ஆம், இந்த மூன்றில் ஒன்று குறைந்தாலும் அந்நாடு செழிக்காது. மூவகை ஆசியும் கொண்ட அமெரிக்கா போன்ற நாடுகள் தாளாது

கல்வியால் எழும் செல்வமும் அந்த செல்வத்தை காக்க உருவாகும் வீரமும் வலுவான ஆயுதங்களை கொடுக்கும் என ஆயுத பூஜையும் சொன்னார்கள் இந்துக்கள், ஆயுதம் வெற்றியினை கொடுக்கும் என்றார்கள்
அதர்மத்தை ஒழிக்க அந்த ஆயுதமே காவலாகும் என்பது சாதாரணம் அல்ல, ஆப்கானியரிடம் இருந்து இந்தியா தப்பியதும்,சர்வாதிகாரிகளிடம் இருந்து உலகம் தப்பியதும் இந்த மூவகை ஆசியால் எழுந்த ஆயுதங்களாலேதான்

கோட்டை முதல் அணுகுண்டு வரை செய்ய கல்வி, செல்வம், வீரம் என மூன்றும் வேண்டும் அது அல்லாது வாய்க்காது பலமான ஆயுதங்கள்.

பலமான ஆயுதமில்லா நாடு பலரின் வேட்டைக்காடு என்பது கண்கூடு.

வாழ்வில் கல்வி, செல்வம், வீரம் என மூன்றும் அவசியம் என உணர்ந்து சொன்னது இந்துமதம், அதையும் சொல்லி அவற்றின் பலன் தர்மத்தை காப்பதே எனவும் வலியுறுத்தி அந்த மூன்றின் முடிவும் தெய்வத்தை உணர்வதே இம்மூன்றிலும் அன்னை தெரிவாள் என அறுதியிட்டு சொன்னது இந்துமதம்

மூன்றாவதாக அது ஆன்மீகத்தை இந்நாளில் சொன்னது

மானிட சுபாவத்தை மூன்று குணங்களால் அளந்தது இந்துமதம், ரஜோ குணம், தமஸ் குணம், சத்வ குணம் என மூவகை குணங்களை அது சொல்லிற்று

இந்த மூன்று குணங்களும் மனிதனை வழிநடத்துகின்றன, இந்த மூவகை குணத்தையும் கர்மாவால் வென்று இறைவனை அடைவது எப்படி என விளக்கியதுதான் புனிதமான பகவத் கீதை

அது சத்வ குணத்தால் தமஸை வென்று அதை கொண்டு ரஜோ குணத்தினை வென்று கடைசியில் சத்வ குணத்தையும் துறந்து நிர்மூலமாக எந்த ஆன்மா இறை சிந்தையில் ஒடுங்குமோ அது முக்தி அடையும் என சொன்னது

சத்வ குணம் என்பது அறிவு, தமஸ் என்பது உலக சுகங்களில் சிக்கி கிடக்கும் போகம், ரஜோ என்பது எல்லாவற்றையும் பலத்காரத்தால் அடையும் மனோபாவம்

ஆம் அறிவால் ஆசைகளை வெல் ஆசைகளை வென்றால் உள்ளே இருக்கும் அசுர இயல்பான ரஜோ குணம் தானாக அழியும், அதன்பின்னும் அறிவும் ஞானமுமே சிறந்தது என கர்வம் கொள்ளாமல் அதையும் துறந்து இறைவனை சரணடை என்றது இந்துக்களின் போதனை

இந்த மூன்று நிலைகளையும் கடந்தால் அது பிறவியின் வெற்றி என்றது, இதை பக்குவமாக கடந்தால் வாழ்வில் முக்தி என்பதை வலியுறுத்திற்று இந்நாள்

முதலில் முக்தி பெற துணிவு வேண்டும், அந்த தைரியம்தான் அதாவது நான் ஒன்றுமில்லாதவன் ஏதும் அறியாதவன் என ஒப்புகொண்டு இறைவனிடம் சரண்டைய தைரியம் வேண்டும்

“நான்” பார்த்து கொள்வேன், “என்னால் முடியும்” எனும் அகங்காரமும், உலகுக்கு அஞ்சி தன்னால் முடியாததை ஒப்பு கொள்ளும் தைரியமும் இருக்கும் வரை ஞானம் வராது

அந்த ஞான தெளிவு வர துணிந்து உலக வாழ்விலும் அதன் மாய நியதிகளிலும் இருந்து வெளிவரும் தைரியம் வேண்டும், அதைத்தான் துர்கா பூஜை என முதலில் குறிப்பால் சொன்னார்கள்

அப்படி சரணைந்தால் தெளிவும் அறிவும் வரும் அதை சரஸ்வதி என சொன்னார்கள்

அறிவும், தெளிவும் சிந்தனையினை கூட்டும் அது மிக பெரிய சக்திகளாய் செல்வம் புகழ் உள்ளிட்டவற்றை தரும், அதில் சிக்கிவிட கூடாது என்பதை சொல்ல லட்சுமி வழிபாட்டை சொன்னார்கள்

செல்வத்தை தருபவளிடம்தானே செல்வத்தால் வரும் சோதனையினயும் தராதே என கேட்கவும் முடியும்? அதைத்தான் கேட்க சொன்னார்கள்

ஆம், அறிவும் கலையும் ஞானமும் செல்வத்தின் பாலும் அது கொடுக்கும் சுகங்களின் பின்னாலும் இழுத்து செல்லும் அதில் மயங்கிடல் கூடாது

இந்த நிலைகளை கடந்தால் பெரும் போராட்டம் வெடிக்கும் லவுகீக மயக்கங்கள் இன்னும் வந்து வந்து மோதும், அவற்றை தொடர்ந்து விடாமல் போராடினால் தெய்வத்தை அடையலாம் போராட்டம் வெற்றியாக முடியும் என்பதே இக்காலம் சொல்லும் ஆன்மீக தத்துவம்

இதை எருமை தலையாக சொன்னார்கள், மானிட ஆன்மா உலக சேற்றில் எருமைபோல் சிக்கி சுகம் கண்டு கிடக்கின்றது அதை மீட்க தெய்வத்தின் துணையோடு போராவேண்டும் என்பதே மகிஷாசூரனின் தத்துவம்
ராம்லீலா எனும் ராவண வதமும் இந்நாளில் கொண்டாடபடுவதை கொண்டு இன்னும் இந்த தத்துவத்தை விளக்கலாம்

தசம் என்றால் பத்து, தசரா பண்டிகை என அழைக்கபடும் இந்த பண்டிகைக்கும் ராவண வதத்துக்கும் சில மெல்லிய இழைகளாக தொடர்புகள் உண்டு

ராவணனின் 10 தலைகள் என்பது, மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை, பொறாமை, தற்பெருமை, வஞ்சகம், அகங்காரம், கோபம், பேராசை, புகழ் ஆசை என பத்து தலைகளை குறிக்கும்

இவை ஒவ்வொன்றையும் வெட்டி வெட்டி போட்டாலும் அவை வளரும் அந்த போராட்டம் தொடரும் , தொடர்ந்து கொண்டே இருக்க்கும், தெய்வம் கொடுக்கும் ஞான ஆயுதம் ஒன்றே அவளை சரணடைந்தால் கொடுக்கும் அந்த தெளிவான மனம் ஒன்றே இவைகளை வேரறுக்கும் என சொன்னார்கள்

ராவணனின் தலைகளை வெட்டி வெட்டி களைத்த ராமன் , ராவணின் மார்பில் அம்புவிட்டான் எனும் தத்துவம் இதுதான்

ஒவ்வொருவன் மனதிலும் ஒரு அசுர வடிவம் உண்டு அதே நேரம் ஒவ்வொருவனுக்குள்ளும் அன்னையானவள் ஏதோ ஒரு வடிவில் நிற்கின்றாள், அவளிடம் சரணடைந்தால், தவமிருந்து அவளை தியானித்து அழைத்தால் அவள் துணையோடு அந்த அசுர குணத்தை வெல்லலாம், அசுர குணம் நீங்கிய மனிதன் தெய்வமாவான் என்பதே விஜயதசமி நன்னாளின் மறைபொருள்

இப்படி ஆன்மீகம், லவுகீகம், சூட்சுமம் என மூவகை தத்துவங்களை விளக்கி சொல்லும் பண்டிகை உலகில் எங்கும் இல்லை எனும் அளவில் மிக மிக ஞானமாய் இந்து முன்னோர்களால் அது தொடங்கபட்டு வழி வழியாக இந்து சமூகத்தால் காத்து கொண்டுவரபடுகின்றது

இந்த வாழ்வும் வளமும் ஞானமும் கொண்டாடும் பண்டிகையினை கொண்டாடுவதை பெருமையாக கருதுதல் வேண்டும், உலகின் எந்த சமூகத்துக்கும் கிடைக்காத ஞானபெரும் வழி இந்துக்களுக்கு கிடைத்திருக்கின்றது
அன்னையினை வேண்டிவிட்டு புதிதாக வாழ்வினை தொடர்தல் இந்துக்கள் இயல்பு . இதனாலே விஜயதசமி அன்று கல்வி முதல் கலைகள் வரை தொடக்க நாளாக வைத்தார்கள் இந்துக்கள்

இன்றும் அப்படி அன்னையினை வணங்கி அவரவர் காரியங்களை தொடங்குகின்றார்கள், அவற்றை ஆசீர்வதிக்கவும் அன்னை தயாராக இருக்கின்றாள்

இந்த மக்களையும் இந்த நாட்டையும் அந்த வல்லமை மிக்க பராசக்தி, பல்வேறு வடிவில் கொலுவாக வீற்றிருந்து எல்லாம் என் உருவமே என 9 நாட்களும் சொன்ன அந்த பரசக்தி நிரம்ப ஆசீர்வதித்து நுண் கலையும் கல்வியும், தீரா செல்வமும், வெல்லமுடியா வீரமும் கொடுத்து ஆசீர்வதிக்கட்டும்

நாடும், நாட்டு மக்களும் மூவகை ஆசியால் நிறைந்து வாழட்டும் அன்னையின் பக்தியோடு வாழ்ந்து உயரட்டும்..