நாச்சியார் திருமொழி : 19
அன்று ஆண்டாளுக்கு எங்கு திரும்பினாலும் கண்ணன் முகமாக இருந்தது, நினைவுகளில் எப்பொழுதும் இருக்கும் கண்ணன் அன்று திரும்பும் இடமெல்லாம் முகத்தை காட்டி புன்னகைத்தான்
அவளால் இயல்பாக அன்று வேலை செய்யமுடியவில்லை, வீட்டை துடைப்பது , பால் எடுப்பது, சமையலறை என எங்கும் அவனே மலையினை மேகம் மூடுவது போல் நினைவுகளால் நிறைந்திருந்தான்
மனம் ஒட்டாத வேலையினை செய்யமுடியாமல் அவ்வப்போது அவன் முகமே அவள் கண்முன் வந்து வந்து சென்ற நிலையில் வீட்டை விட்டு வந்த ஆண்டாள் அந்த சிறுமியரோடு அமர்ந்தாள்
வழக்கம் போல் சிறுமியர் அவளை பாடசொன்னார்கள், ஆண்டாளே அவனை பாடி மன்றாடி கேட்டுகொள் இல்லையேல் அவன் வந்துவந்து தன் காலால் இந்த மணல் வீட்டை கலைத்துவிடுவான் என்றார்கள்
ஆண்டாள் அவன் கால்களை மனமார நினைத்தாள், காலையில் இருந்து அவள் கண்ணுக்குள்ளே வந்த முகமும் அவன் கால்களும் அவளுக்குள் மாறி மாறி வந்து பாடலை ஊற்றேடுக்க வைத்தது
ஆண்டாள் பாடினாள், சிறுமிகள் குரலாக பாடினாள்
“முற்றத்து ஊடு புகுந்து நின்
முகம் காட்டிப் புன்முறுவல் செய்து
சிற்றிலோடு எங்கள் சிந்தையும்
சிதைக்கக் கடவையோ கோவிந்தா
முற்ற மண்ணிடம் தாவி விண்ணுற
நீண்டு அளந்து கொண்டாய் எம்மைப்
பற்றி மெய்ப்பிணக்கு இட்டக்கால்
இந்தப் பக்கம் நின்றவர் என் சொல்லார்”
(கோவிந்தா!, நாங்கள் சிற்றில் கட்டி விளையாடிக்கொண்டிருக்கும் எங்கள் வீட்டின் முற்றத்தினுள் நீ புகுந்து, உன் முகத்தைக் காட்டி, புன்முறுவல் செய்தாய். அவ்வாறு நீ செய்ததில் எங்கள் சிந்தை சிதைந்தது (எங்கள் வசம் அது இல்லை). நீ வந்து உதைத்ததில் எங்கள் சிற்றில் சிதைந்தது. அன்று, மாவலியிடம் மூன்று அடி மண் பெற்று, ஓரடியால் இந்த பூவுலகம் முழுவதையும் அளந்து, மற்றொரு அடியால் விண்ணுலகையும் அளந்தவனே! எங்களுக்கு, நீ ஒரு இக்கட்டினை உண்டாக்கினால், பெரியோர்கள் என்ன சொல்வார்கள்? )
பாடி முடித்ததும் ஆண்டாள் அவன்நினைவோடு அமர்ந்திருந்தாள், கண்ணன் முகம் மாறி மாறி மனதில் கண்ணன் முகம் வந்து கொண்டிருந்தது
அவன் நினைவுகளில் அவள் சுழன்ற நேரம் மெல்ல குளிர்காற்று வீசிற்று, மெல்ல தூறல் விழுந்தது , நறுமணம் எங்கும் சூழ்ந்தது, அவளின் தோளில் இருந்த கிளி “கண்ணா, கண்ணா” என்றது
ஆண்டாள் அந்த பெயரை தவிர எதையும் உச்சரித்ததில்லை என்பதால் அக்கிளி அந்த ஒரு பெயரையும் கற்று வைத்திருந்தது
ஆண்டாள் கண்ணன் வந்ததை உணர்ந்தாள், அவளுக்கு மகிழ்ச்சியும் ஆனந்தமும் பெருகி வழிந்தது என்றாலும் ஒன்றுமே அறியாதவள் போல் இருந்துகொண்டாள்
அவளின் நடிப்பினை புரிந்துகொண்ட கண்ணன் மெல்ல புன்னகைத்தபடி வந்தான், அவளோ அவள் போக்கில் இருந்தான்
“ஆண்டாளே…” என்றான் கண்ணன்
அவளிடம் பதிலே இல்லை, மறுபடியும் அழைத்தான் கண்ணன், பதிலே இல்லை
கண்ணன் அவள் கரம் தொட்டு உலுக்கினான் “நிஜமாகவே வந்துவிட்டாயா கண்ணா” என தெரியாதவள் போல் கேட்டாள் ஆண்டாள்
“நிஜமாகவா என்றால் பொய்யாகவும் அடிக்கடி வருவேனா?” என கண்ணன் கேட்டான். “உனக்கு அதுதானே வேலை கண்ணா, என் கண்முன் எப்படியெல்லாம் வந்து முகம் காட்டுவாய் தெரியுமா?” என்றவளுக்கு நாணம் கூடியது
“அதைத்தான் பாடலாக படித்தாயா?” என சிரித்து கொண்டே கேட்டான் கண்ணன்
“ஆமாம் கண்ணா, அந்த முகம் என்னை என்னவெல்லாமோ செய்கின்றது, நான் நானாக இல்லாதவகையில் என்னை நீ ஆக்கிரமித்திருகின்றாய், உன் முகம் அந்த அளவு என் கண்ணின் மணியில் நிறைந்துள்ளது, அந்த கண்ணின் வழியாக உலகை நான் காணும் பொழுது எல்லாமும் நீயாக தெரிகின்றாய்
காணும் காட்சியெல்லாம் நீ கண்ணா, எல்லா உருவிலும் தெரிவது நீ கண்ணா, திரும்பும் திசையெல்லாம் காணும் கனவெல்லாம் நீ கண்ணா” என்றவள் அவன் கால்களையே நோக்கி கொண்டிருந்தாள்
கண்ணன் அதனை கவனித்தான்
“ஆண்டாளே, ஏன் முகம் நோக்காமல் கால்களையே நோக்குகின்றாய்” என்றான்
“இந்த கால்கள்தானே சிறுமியரின் மணல் வீட்டை இடிக்கும் என அஞ்சினார்கள், அதைத்தான் பார்க்கின்றேன்” என மெல்ல சிரித்தாள் ஆண்டாள்
கண்ணன் புன்னகைத்தான், “காரணமின்றி இக்கால்கள் எங்கும் செல்வதுமில்லை, செயலாற்றுவதுமில்லை” என்றான் கண்ணன்
“அதனால்தானே என்னை தேடி கூட வராத கால்கள் இவை” என சொல்லி நகைத்தாள், கண்ணன் வாய்விட்டு சிரித்தான்
ஆண்டாள் அவன் கால்களையே பார்த்து கொண்டிருந்தாள்
“என்ன ஆண்டாளே, இதே கால்களை பாடலிலும் பாடினாய்…” என்ற கண்ணனிடம் முகத்தை தூக்கி பார்க்காமல் “உலகில் அதி சிறந்த கால்களை பாடாமல் ” எப்படி என மெல்லிய புன்னகையும் ஏக்கமும் கலந்த குரலில் சொன்னாள் ஆண்டாள்
“என்ன ஆண்டாளே..” என்றான் கண்ணன்
அவன் காலடியில் அமர்ந்து அந்த பாதங்களை வருடியபடி சொன்னாள்
“இந்த கால்கள் எப்படிபட்ட கால்கள்? எவ்வளவு அசுரர்களை கொன்று ஆயர்பாடியினை காத்த கால்கள், எவ்வளவு பெரும் அசுர கூட்டத்தை மிதிதொழித்த கால்கள்
இந்த கால்களின் அருளால்தானே நீ செல்லுமிடமெல்லாம் தர்மம் மீண்டது, எவ்வளவு பெரும் அரக்க சக்திகளெல்லாம் இந்த காலால் அழிந்தது
அகலிகை இக்காலினாலே மீண்டாள், இன்னும் எவ்வளவு பெண்களின் துயரம் இந்த கால்களால் தீர்ந்தது தாரா உள்பட
இது முனிவரும் ரிஷிகளும் வணங்கிய பாதம், பாண்டவர் பணிந்த பாதம், திரவுபதியினை காத்த பாதம், இந்த பாதத்தை பணிந்துதானே கீதை எனும் பெரும் ஞானத்தை எல்லோரும் பெற வழி செய்தான் அர்ஜூனன்
ஆனால்…” என நிறுத்தி கொண்டாள்
“என்ன ஆண்டாளே..” என்றான் கண்ணன்
“ஆனாலும் இந்த கால்கள் பாண்டவர்கள் சூதாட சென்றபொழுது தடுக்கவில்லை, அப்படி தடுத்திருந்தால் அவர்களுக்கு அத்துயரம் வந்திருக்குமா? என அக்காலை கொஞ்சம் கடுமையாக வருடினாள்
“அவரவர் கர்மவினையினை அவரவர் செய்ய துணையிருப்பவன் நான், அதனால் செல்லவில்லை” என்றான்
“அப்படியானால் உன்னையே நம்பியிருக்கும் எனக்கு ஆபத்துஎன்றாலும் வரமாட்டயா? கண்ணா” என ஏக்கமாக கேட்டாள் ஆண்டாள்
“ஆண்டாளே எப்பொழுதும் என்னை நினைக்கும் பாண்டவர்கள், சூதாட போகும்பொழுது என்னை நினைத்தார்களா இல்லையே, ஆனால் நீயோ எப்பொழுதும் என்னையே நீ நினைத்துகொண்டிருக்கும் பொழுது நான் உன்னை எப்படி கைவிடுவேன் ஆண்டாளே..” என்றான்
“கண்ணா…” என அவன் பாதம் பற்றி கொண்டாள், அவளின் சில சொட்டு கண்ணீர் அந்த பாதத்தில் விழுந்தது, உடல் சிலிர்த்த கண்ணன் அவள் தோளை தொட்டு தூக்கினான், ஆண்டாளின் முகத்தில் மகிழ்ச்சியும் திருப்தியும் குடிகொண்டிருந்தன
“கண்ணா .. ” என்றவள் அந்த பாதங்களை தன் மடியில் வைத்து பார்த்து கொண்டே இருந்தாள், “கண்ணா இப்பாதத்தில் அமர்ந்து இப்படி பிடிக்கும் பாக்கியமாவது தருவாயா
எனக்கு உன் இதயத்தில் இடம் வேண்டாம் , உன் கரம் பிடிக்கும் தகுதியும் எனக்கில்லை, இந்த பாதத்தை தாங்கும் பாக்கியமாவது தருவாயா… என்றவள் அந்த பாதத்தில் முகம் புதைத்து முத்தி செய்தாள்
கண்ணன் புன்னகை மறைந்தது, அவனின் விளையாட்டுதனமும் மறைந்தது, தன் பாதத்தில் முகம் புதைத்த ஆண்டாளை பரிதாபமாக நோக்கினான், அவள் மேல் அன்பும் பாசமும் அவனுக்கு பொங்கிற்று, அப்பொழுதே அவளை ஊரறிய ஏற்றுகொள்ள எண்ணினான், ஆனால் தானும் கால்நேரத்துக்கு கட்டுபட்டவன் என்பதால் மெல்ல இயல்பானான்
“ஆண்டாளே, அந்த மகாபலி கதையினை ஏன் பாடினாய்?” என்றான்
“ஆமாம், மூவுலகையும் அளந்த அந்த கால்கள் இந்த அற்ப சிறுமியரின் மணல் வீட்டையா இடிக்க வரும், வராதுதான். ஆனால் சாதாரண மன்னனை பாடும்பொழுதே அவனின் பராகிரமங்களை சொல்லவேண்டும் , நீ எல்லா உலகுக்கும் அரசன் அல்லவா? உன் புகழை பாடாவிட்டால் எப்படி
இந்த கால்களால்தானே உலகை அளந்தாய் கண்ணா…” என்றவள் குரல் மெல்ல தேம்பிற்று
“கண்ணா, அந்த மகாபலி யாகம் பல செய்தவன். அதுவும் யாகத்தோடு தானமும் செய்தவன், அதனால்தானே அவனை தேடி சென்றாய்..” என நிறுத்தி கொண்டாள்
“அதனால் என்ன ஆண்டாளே…” என ஒன்றுமறியாமல் கேட்டான் கண்ணன்
“அவன் தவமும் தானமும் செய்தவன், பெரும் தர்மமும் யாகமும் நிரம்ப செய்தவன் அதானால்தானே இந்த கால்கள் அவனுக்கு வரமருளின, மூன்று உலகையும் அளந்து அவனுக்கு காட்டின, நான் ஒரு தவமும் தானமும் செய்யவில்லை என்றுதானே என்னிடம் வரமறுக்கின்றன” என மெல்ல குரலுடைந்தாள்
கண்ணன் தன் கால்களை விடுவித்து அவள் கரம்பற்றி சொன்னான், அவள் விழிகளை ஊடுருவி பார்த்தபடி சொன்னான்
“ஆம், ஆண்டாளே உன் முன்னால் என்னால் அப்படி ஈரேழு உலகங்களையும் அளக்க முடியாது” என்றான்
“எல்லாம் வல்ல உன்னால் ஏன் அளக்க முடியாது கண்ணா, என் பக்தி குறைவுதானே முறையான தவமும் தானமும் செய்யாமல் வெட்டியாக உன்னை நினைந்த பாவம்தானே, இந்த அற்ப மானிட பிறவி வேறு என்ன செய்யமுடியும் கண்ணா..” என தலைகுனிந்தாள்
“ஆண்டாளே.. “என அவள் தலைதொட்டு தூக்கினான் கண்ணன், “இந்த பாவியிடம் என்ன உண்டு கண்ணா..” என்றாள் ஆண்டாள்
கண்ணன் சொன்னான் “ஆண்டாளே, அவன் முன்னால் நான் வெல்ல வேண்டிய கட்டாயம் இருந்தது, வானமும் பூமியும் என் காலடியில் என காட்டிவிட அவசியம் இருந்தது.
மூவுலகையும் ஆண்ட அவனிடம், உன் உலகமெல்லாம் என் காலுக்கு போதாது என சொல்லும் அவசியம் இருந்தது, தன்னால் எல்லாம் தரமுடியும் என இருமாந்திருந்த அவனிடம் மூன்றாம் அடிக்கு இடம் தரமுடியாதவன் நீ என அகங்காரம் உடைக்கு கட்டாயம் இருந்தது
அவனை சந்திக்கும் முன்பே நான் வென்றுவிட்டேன், வென்றதை சொல்லத்தான் அவனிடம் சென்றேன், அளந்தேன்
நான் அளந்தது மூவுலகை அல்ல ஆண்டாளே, அவனின் மொத்த மனதை , எதெல்லாம் தன் உலகம் என அவன் மனம் கருதிற்றோ, அதையெல்லாம் என்னால் அளக்கமுடியும் என அளந்தேன்
ஆனால் ஆண்டாளே உன்னிடம் அப்படி அல்ல, உன்னிடம் நான் தோற்றுவிட்டேன். உன் பக்தியின் எல்லை இந்த பிரபஞ்சம் போன்றது, உன் உலகம் என்மேல் நீ கொண்டிருக்கும் அன்பு, பேரன்பு
அந்த பேரன்பினை நான் எதைகொண்டு அளப்பது? சொல். மகாபலி இதெல்லாம் என் உலகம் என காட்டினான் அளந்தேன், நீ காட்டும் பக்தி உலகின் பிரமாண்டம் எவ்வளவு பெரிது, அதை நான் அல்ல ஆண்டாளே யாராலும் அளக்கமுடியாது, என்னை நீ வென்றுவிட்டாய்” என்றான்
“கண்ணா…..” என மார்பில் ஓங்கி ஓட்டி ஓ என அழதொடங்கினாள் ஆண்டாள்
அவள் தலையினைவருடி கொண்டே அவளை அணைத்து கொண்டான் கண்ணன், “ஆண்டாளே, மகாபலிக்கே வரம் அருளிய நான் உனக்கு அருள மாட்டேனா, ஒரு நாள் நிச்சயம் நீ என்னை அடைவாய், நான் உன்னை அழைத்து என்னோடு சேர்த்துகொள்வேன்” என அவள் தலையினை அழுத்தி சொன்னான் கண்ணன்
“கண்ணா …” என உலகின் மிக மகிழ்ச்சியான பெண்ணாக அவனை இறுக்கமாக அணைத்து கொண்டாள் ஆண்டாள், கண்ணன் உருவம் மெல்ல கரைய தொடங்கியது
அவள் மெல்ல கண்விழித்தாள், எதிரே சிறுமியர் தங்கள் சிற்றிலை கண்ணன் அழிக்கவில்லை என ஆனந்தமாய் சொல்லி விளையாடிகொண்டிருந்தனர்
(மானிடர் இவ்வுலகில் அவரவர் விருப்படி ஆடுகின்றனர், பெரும் ஆசையும் கர்வமும் கொண்டு எவ்வளவோ பெரும் திட்டம் தீட்டுகின்றனர், எதையெல்லாமோ கட்டுகின்றனர், ஒவ்வொருவர் நெஞ்சிலும் கர்வமும் பேராசையும் இன்னும் சொல்லனா மாயைகளெல்லாம் நிறைந்திருக்கின்றன
அவர்களெல்லாம் கண்ணன் முகம் நினைவுக்கு வருவதாலும், கண்ணன் மூவுலகையும் அளந்தவன் மகாபலி தலையினையே கால் வைத்து அழுத்தியவன் எனும் அச்சம் இருப்பதாலும் மனிதர்கள் ஓரளவு கட்டுபாடோடு இருகின்றார்கள்
கண்ணன் முகம் நினைவுக்கு வருவதாலும் அவன் மகாபலியின்செருக்கையே அடக்கிய செயலின் அச்சத்தாலுமே மானிடர்கள் தெய்வ பயத்தோடு நடக்கின்றார்கள், கண்ணனும் அவன் பராக்கிரமும் இல்லாவிடில் அந்த அச்சம் இல்லாவிடில் மானிடர் மிகபெரிய அட்டகாசங்களைசெய்வார்கள்
இந்த உலகில் ஒருஅமைதியும் ஒழுங்கும் நிலவுவது கண்ணனாலே என்பது பாடலின் பொருள் )