நாச்சியார் திருமொழி 2.3
நாச்சியார் திருமொழி 2.3
அந்த மணல் பரப்பில் சிறுமியரோடு மணல் வீடு கட்டி கண்ணா இதை இடிக்கவராதே என சொல்லி சொல்லி அவனை அழைக்கும் ஆண்டாள், அன்றும் அப்படி சிறுமிகளோடு அமர்ந்து விளையாடுகின்றாள்
சற்று தொலைவில் கோவில் யானை ஒன்று குளத்திற்கு நீராட வருகின்றது
அது கஜேந்திர மோட்சம் எனும் கொண்டாட்டத்துக்கு தயாராகும்படி குளிக்க வந்திருந்தது, பங்குனி மாதம் கொண்டாடபடும் கஜேந்திர மோட்ச விழா அன்று மாலை கொண்டாடபட இருந்தது
அக்காலத்தில் பங்குனி மாதத்தில் அந்த விழா நடக்கும், ஆண்டாள் பங்குனி மாத நோன்பில் இருப்பதால் அந்த புராண சம்பவம் அவள் மனதில் வடிவமாக எழும்பிற்று
அந்த யானை நீராடும் பொழுது ஆண்டாளுக்கு சாபம் பெற்ற கஜேந்திரன் என்பவனின் மறுபிறப்பான யானை ஆற்றுமுதலையிடம் சிக்கிய காட்சியும் பின் அது “ஆதிமூலமே” என அழைத்ததும் பகவான் அதை மீட்டெடுத்து சாபம் நீக்கிய வரலாறும் நினைவுக்கு வருகின்றது
திரும்பும் இடமெல்லாம் கண்ணனை காணும் ஆண்டாள் அந்த யானை நீராடும் காட்சியிலும் கண்ணனையே காண்கின்றாள், அந்த நினைவில் பாடுகின்றாள்
“குண்டு நீர் உறை கோளரீ மதயானை
கோள் விடுத்தாய் உன்னைக்
கண்டு மால் உறுவோங்களைக்
கடைக் கண்களால் இட்டு வாதியேல்
வண்டல் நுண்மணல் தெள்ளி யாம்
வளைக் கைகளால் சிரமப் பட்டோம்
தெண்டிரைக்கடல் பள்ளியாய் எங்கள்
சிற்றில் வந்து சிதையேலே”
(ஆழம் மிக உடையதும் நீரை உடையதுமான தடாகத்தில் வாழும் சிங்கம் போன்ற கம்பீரமான யானையின் (கஜேந்திரன்) துயரத்தை (கோள்) அழித்தவனே! உன்னைப் பார்த்து மிகவும் ஆசைப்படும் (மால் – ஆசை; உறுதல் – கொள்ளுதல்) எங்களை, உன் கடைக்கண்களால் பார்த்து, இன்னும் வாட்டப்படுத்த வேண்டாம். வண்டல் நிறைந்த நுண்ணிய மணல் கொண்டு, இன்று, எங்கள் வளைகள் அணிந்த கைகளால் மிகவும் சிரமப்பட்டு வீடு கட்டியுள்ளோம். தெளிந்த அலைகள் நிறைந்த கடலில் (தெண்டிரை – தெள் + திரை) பள்ளிகொள்பவனே, எங்கள் சிற்றிலை வந்து சிதைக்க வேண்டாம் என்பது பாடலின் பொருள்)
ஆண்டாள் இந்த பாடலை பாடி முடிக்கின்றாள், பாடி முடித்தவளுக்கு மனம் கனக்கின்றது, ஒரு விம்மலும் ஏக்கமும் அவளை நிரப்புகின்றது, கண்ணனை தேடிய நினைவின் தாக்கம் அது
சற்று தள்ளி சென்றவள் “கண்ணா.. ” என அழைக்கின்றாள் அவன் வரவில்லை
மறுபடியும் “கண்ணா….” என கத்தினாள் அவன் வரவில்லை, “கண்ணா….” என குரல் உடைய அழைத்தாலும் அவன் வரவில்லை
அந்த ஆலமரத்தின் இன்னொரு பக்கம் அப்படியே அமர்ந்தவள் தன் கால்களை கைகளால் கட்டிகொண்டு முகம் புதைத்து அழுதபடி புலம்ப ஆரம்பித்தாள்
“கண்ணா.. அந்த யானை யாருடைய பிறப்பு? முற்பிறவியில் கஜேந்திரன் என்பவனின் பிறப்பு, சாபம் காரணமாக அதுவும் உன் கையால் விமோசனம் பெறுவதற்காக பிறந்த பிறப்பு
ஆற்றில் நீர் அருந்த வந்த அந்த யானையினை முதலை பிடித்து இழுத்தது, நிலத்தில் பலமான யானை நீரில் முதலையிடம் போராடியது அதனால் மீள முடியவில்லை, சக யானைகள் உதவியும் முடியவில்லை
நீரில் பலமான முதலை அதனை உள்ளிழுத்தது, கடைசியில் தாமரை மலர் ஒன்றை பற்றிய யானை உன்னை நினைந்து அழுது அழைத்தபொழுது நீ கருடன் மேல் வந்து அந்த முதலையினை சக்கராயுதம் வீசி கொன்று யானையினை விடுவித்தாய், அந்த சாபம் நீங்கி கஜேந்திரனும் மோட்சமடைந்தான்
அப்படித்தானே நானும்…” என்றவள் மேற்கொண்டு பேசமுடியாமல் தேம்பினாள்
அவள் கண்கள் சிவந்துவிட்டன, முகமெல்லாம் வாடி நீரோடி நீரில் நனைந்த மலர்போல் இருந்தது, கேசமெல்லாம் கலைந்திருந்தது
மெல்ல முகத்தை துடைத்து , தலைமுடியினை ஒதுக்கி மேற்கொண்டு புலம்ப தொடங்கினாள்
“கண்ணா, அந்த யானை நிலைக்கும் எனக்கும் என்ன வித்தியாசம் உண்டு? ஒன்றுமில்லை
நான் எந்த பிறப்பில் என்னபாவம் செய்தேனோ எனக்கு தெரியவில்லை, இப்பிறப்பில் மானிடச்சியாக பிறந்து சிக்கிவிட்டேன்
அந்த யானை ஆற்றின் முதலையிடம் சிக்கியது அதன் விதி
நான் கால நதியில் நீராட வந்து மாய உலகம் எனும் முதலையிடம் சிக்கியிருக்கின்றேன், இந்த லவுகீகம் என்னை மூழ்கடிக்கபார்க்கின்றது
நான் மீள முயல்கின்றேன் என்னால் முடியவில்லை, மாய உலகம் என்னென்ன ஆசைகளிலோ என்னை திசை திருப்ப பார்க்கின்றது
முதலைக்கு இரையாகும் பெரிய மிருகங்கள் போல, இந்த ஆத்மாவினை லவுகீக உலகின் பற்கள் கால நீருக்குள் இழுக்கின்றன, அதன் கொடிய வேகத்தின் முன் யாரால் நிற்க முடியும்?
எவ்வளவு பலமான விலங்கையும் ஏன் யானையினையே நீருக்குள் மடக்கும் முதலை போல இந்த லவுகீக மாயைகள் என்னை இழுக்கின்றன
யானை பலமானதுதான் ஆனால் நீருக்குள் அதனால் என்ன செய்யமுடியும்? அப்படித்தான் மனதால் பலமான நானும் சரீரத்தாலும் பூலோக குழப்பங்களாலும் குழம்புகின்றேன்
கண்ணா, என்னை கைவிட்டுவிடாதே..
லவுகீக மயக்களால் நான் வாழ்க்கை சேற்றில் புதைந்து போகும் படி என்னை விட்டுவிடாதே, என் ஏகநாதா நான் அமிழ்ந்து போகும்படி விட்டுவிடாதே
நிலத்தில் வாழவிரும்பிய யானை கதறியது போல் நானும் உன்னை நோக்கி கதறுகின்றேன்
நீர் முதலையிடம் சிக்கிய யானை மீள்வதற்கு உன்னை அழைத்தது போல கால நதியில் மாய வாழ்வில் சிக்கிய நான் கதறுகின்றேன்
இந்த சேற்றில் சிக்கி நான் திசைமாறி சென்றுவிடாதபடி என்னை வந்து காப்பாய் ஏகநாதா
என் கனவும் வாழ்வும் தவமும் எதிர்பார்ப்பும் நீயல்லவா?
கண்ணா உன்னை நினைந்தே நான் வாழ்ந்திருக்க, நீ வரமாட்டாயாம் உன்னை நம்புவது பைத்தியகாரதனமாம், அதனால் எனக்கு வேறு ஏற்பாடு செய்வார்களாம் என்னவெல்லாமோ பேசுகின்றார்கள் கண்ணா..
கண்ணா அந்த யானை உன்னை முன்பின் பார்த்ததுண்டா, அதற்கு முன் தோன்றி நீ நம்பிக்கை கொடுத்ததுண்டா?
ஆனால் பூர்வ ஜென்ம நினைவில் அது சரியான நேரத்தில் உன்னை அழைத்ததும் நீ வந்தாய் அல்லவா?
அங்குமட்டுமா வந்தாய், பாஞ்சாலி அழைத்ததும் வந்து அவள் மானம் காத்தா கண்ணனே. இந்த அபலை அழைத்தும் ஏன் வர மறுக்கின்றாய்?
என் முற்பிறவி சாபத்தால் இந்த லவுகீக முதலையிடம் சிக்கிவிட்டு கதறிகொண்டிருக்கின்றேன், என் சாபம் தீரத்தானே உன்னை அழைக்கின்றேன், வந்து என்னை காப்பாற்றி ஏற்றுகொள் கண்ணா
கண்ணா, என் கடைசி மூச்சில் அழைக்கின்றேன், வந்துவிடு கண்ணா…” என ஓலமிட்ட்டு சரிகின்றாள்
அந்நேரம் ஒரு பெரும் நிழல் நிலமெங்கும் பரவுகின்றது, திடீரென பிரமாண்ட மேக கூட்டம் திரண்டது போல் சூரியன் மறைகின்றது
ஆண்டாள் ஏறேடுத்து பார்க்கின்றாள், மாபெரும் கருடன் ஒன்று அங்கு பறந்து வருகின்றது, அதன் மேல் கண்ணன் அமர்ந்திருக்கின்றான்
கண்களின் நீரை துடைத்தபடி, எழுந்து நின்று கருடனை நோக்கினாள், கண்ணன் ஒரு தாமரை மலரை வீசினான்
அதை ஆசையோடு கைகளில் வாங்கி கொண்டாள் ஆண்டாள், அந்நேரம் அவள் மனமெல்லாம் பெரும் கவலையில் இருந்து விடுதலைபெற்ற நிம்மதி சூழ்ந்து கொண்டது
(ஆத்மா காலம் எனும் நதியின் மாயை முதலையிடம் சிக்கி கிடக்கின்றது, இறைவனை அழைத்தால் ஆன்மாவினை அவன் வந்து விடுவித்து தன்னோடு சேர்த்து கொள்வான் என்பது பாடலின் பொருள்)
அருமையான விளக்கம்.. ஆண்டாள் எத்தனை மனம் உருகி பாடி உள்ளார் அந்த மாய கண்ணனை நினைத்து… கண்ணன் ஆண்டாளை பாட விட்டு விளையாடுவதில் அப்படி என்ன சுகம் கண்ணனுக்கு.//ஆத்மா காலம் எனும் நதியின் மாயை முதலையிடம் சிக்கி கிடக்கின்றது, இறைவனை அழைத்தால் ஆன்மாவினை அவன் வந்து விடுவித்து தன்னோடு சேர்த்து கொள்வான் என்பது பாடலின் பொருள்// அருமையான பொருள் ஒரே வரியில்….
வாரணமாயிரம் சூழவலஞ் செய்து நாரணா நம்பி நடக்கின்றான் என்றெதிர் பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும் தோரணம் நாட்ட கனாக்கண்டேன் தோழீ! நான்.
வா….. கண்ணா…. வா…. போதும் காக்க வைத்தது…. ஆண்டாள் திருவடிகளே சரணம் 🙏🙏🙏