நானும் தேடிகொண்டே இருக்கின்றேன் 17 வருடமாக…
அது கல்லூரி பருவகாலம், 1990களின் கிரிக்கெட்டை தவிர ஒரு மண்ணாங்கட்டி விளையாட்டும் தெரியாத சராசரி இந்திய இளைஞர்களில் ஒருவனாகிவிட்டபடியால் அதனை விளையாடியே ஆகவேண்டிய கட்டாயம். ஆனாலும் சர்வகிராம போட்டிகளில் ஒரு போர் கூட அடித்தவனோ அல்லது ஒரு கேட்ச் எடுத்தவனோ அல்ல.
கிரிக்கெட்டின் பெரும் சுவாரஸ்யமே அடுத்தவன் விளையாடுவதை பார்ப்பது, அதுவும் சச்சின், ஜடேஜா போன்றவர்கள் பின்னி எடுத்தகாலம், ஆஸ்திரேலியாவின் வார்ன்,ஸ்டீவ் வா,மெக்ரத். பாகிஸ்தானின் இன்சமாம்,முஷ்டாக் என பல ஜாம்பவான்களை ரசித்தகாலம்.
பாலா சினிமா போல தனியாக பார்த்து அழவேண்டியதல்ல கிரிக்கெட், பாக்கியராஜ் படம்போல கூட்டமாக கைதட்டி பார்க்கவேண்டியது. அந்த காலத்தில் வராமல் வந்த மாமணிதான் அந்த டிவி.
அது 1999 காலகட்டங்கள், தமிழக அரசு ஊருக்கொரு கலர் டிவி வழங்கி கொண்டிருந்தது. அப்படியாக எமது ஊருக்கும் ஒன்று வந்திருந்தது.
8 மாதங்களாக, உலகெங்கும் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளை அந்த டிவிதான் எமக்கு வியாசரின் ஞானதிருஷ்டியாக, மாயகண்ணாடியாக எமக்கு காட்டிகொண்டிருந்தது.
அந்த வயது அப்படியானது, கூட்டம், கைதட்டல் ஆரவாரம், விவாதங்கள் என ஏதேதோ செய்துகொண்டிருந்த காலங்கள்.
ஜாதகத்தின் எந்த கட்டம் எமக்கு சிரமம்? அல்லது மொத்த கட்டமும் ஓட்டையா என இன்றுவரை தெரியவில்லை. சனிதிசை என்றால் நாக்கில் வரும் என்பார்கள். கண்ணில் சனிவந்தது எனக்கு மட்டுமாகத்தான் இருக்கும். அந்த தொலைகாட்சி வடிவில் வந்திருந்தவன் சனிபகவான் என அப்பொழுது தெரியாது.
அதனால் கிரிக்கெட்டை உற்சாகமாக பார்ப்பதும் இந்தியா ஜெயித்துவிட்டால் திண்ணையில் இருக்கும் கிழவிகள் வாயில் கடலை மிட்டாய் திணிப்பதும், இந்தியா தோற்றுவிட்டால் அவர்கள் வீட்டு பல்பை திருகி இருட்டாக்குவதுமாக காலங்கள் கடந்துகொண்டிருந்தன
என்னமோ தெரியவில்லை. எமக்கு எதிரிகள் இல்லை என நானாக முடிவு செய்துகொள்வேன், காரணம் அப்படி யாரிடமும் தகறாறும் இல்லை, (உறவுகளின் சொத்துதகறாறு வேறு வகையறா, சாலமோன் அரசராலும் தீர்க்கமுடியா சர்சை அது). ஆனால் இன்றுவரை எமக்கு எதிரிகள் இல்லை. அடித்தவர்களும் கண்ணுக்கு தெரியாமல்தான் அடிப்பார்கள், ஜாதகம் அப்படி.
அந்த சம்பவத்தில் பலர் கிடா வெட்டி கொண்டாடும் அளவிற்கு தயாராக இருந்திருக்கின்றார்கள். சிலருக்கு பிறவி எடுத்த பலன் கண்ட திருப்தி. சாக கூட தயாராக இருந்தார்கள். அந்த சம்பவம் அவர்களுக்கு 2 நாள் மகிழ்வினை அப்படி கொடுத்தது.
அவர்கள் மிக மகிழ்வாக இருந்த காலங்கள். நட்போடு முன்னால் அழுதுவிட்டு பின்னால் இருந்து விரல் உயர்த்தி புன்னகைத்த சம்பவம் அது. எமக்கு அக்காலத்தில் அமைந்ததெல்லாம் அப்படித்தான். இப்பொழுது வெளியூர் வாசம் என்பதால் சிக்கலில்லை.
அப்பொழுது கல்லூரி இறுதி தேர்வு, 6 தாள்கள். 3 முடிந்தது இன்னும் 3 பாக்கி இருந்தபொழுதுதான் அந்த விபரீதம் நிகழ்ந்தது. யாரோ அந்த டிவியினை களவாடி இருந்தார்கள், அதுவும் பூட்டை உடைத்து தூக்கி இருந்தார்கள்.
காவல்துறை களத்தில் இறங்கியது, சந்தேக நபர்களை விசாரிக்க தொடங்கியது. சந்தேக நபர்கள் என்றால் டிவி பார்த்த அனைவருமே, அப்படித்தான் அவர்களுக்கு தகவல் கிடைத்திருக்கின்றது. யாரோ மிக நல்ல எமகண்டத்தில் எமது பெயரையும் கோர்த்துவிட, வீட்டு வாசலுக்கு வந்துவிட்டது அழைப்பு.
கல்லூரி முடியும் காலம் 3 தேர்வு முடிந்து அடுத்த தேர்வுகளுக்கு தயாராகும் ஒருவன், திடீரென காவல்நிலையத்தில் நிறுத்தபட்டால் எப்படி இருக்கும்? அதுவும் முதன்முறையாக சென்றால் சர்வமும் கலங்கிவிடும்.
கடுமையாக மிரட்டினார்கள், பல வகையான கேள்விகளை கேட்டார்கள், ஆனால் அடிக்கவில்லை. அவர்களின் கேள்விகள் இப்படியாக இருந்தன, அதாவது டிவி உங்களிடம்தான் இருக்கின்றது, தேர்தல் தகராறில் எடுத்திருக்கின்றீர்கள் (எப்படித்தான் சிந்தித்தார்களோ?), கொடுத்துவிடுங்கள் அது அரசாங்க சொத்து, விட்டுவிடுகின்றோம், இல்லாவிட்டால் எம்மால் வெளிவிட முடியாது, உங்களுக்கு பாளையங்கோட்டை சிறை தான்.
உலகம் கண்முன்னே பலவாறு உடைந்தது, தலை சுழன்று பாதாளத்தில் இறங்குவது போல உணர்ச்சி. எவ்வளவு கொன்னாலும் அவர்கள் காதில் போட்டுகொள்ளவில்லை.
படிப்பு போனது, கனவுகள் நொறுங்கியது, இனி எதிர்காலமே இல்லை. திருட்டு முத்திரையுடன் வெளிவந்தாலும் தாவூத் இப்ராகிம் தவிர யார் வேலைதருவார்கள்?. வெளிநாடு என்றாலும் கொலம்பிய கடத்தல் கும்பல் தவிர யார் அழைப்பார்கள்?.
ஊர் மக்களில் சிலர் வந்து சொல்லியும் காவல்துறை சமாதானம் ஆகவில்லை. தீவிர கடமையாற்றினர். சில காவல்காரர்களுக்க்கு தெற்கத்திய வீரப்பனை பிடித்த திருப்தி. சிலருக்கோ சோட்டா ஷகீல் அகப்பட்டது போலவும் தாவூத்தின் ரகசியங்களை அவன் மறைப்பது போலவும் கடும் எரிச்சல் அல்லது எதிர்பார்ப்பு.
சகல நாடிகளும் அடங்கி, கண்ணீரும் வற்றி தற்கொலை வரை நான் சிந்தித்த காலம். காரணம் அப்பக்கம் பெற்றோர் அழுதுகொண்டிருந்தார்கள். அவர்களின் ஒரே எதிர்கால நம்பிக்கை முற்றிலுமாக மூழ்கும் நேரம். அவர்கள் என்ன செய்வார்கள்? பாளையங்கோட்டை கல்லூரியில் சென்று பார்க்கும் மகனை இனி பாளை சிறைக்கு சென்று பார்க்க நேருமோ எனும் கலக்கம்.
தேர்வு இருநாட்களில் தொடரும், இடையில் இருப்பது ஒரே ஒரு நாள். ஒரு ஆதரவுமற்ற அனாதையான அப்பாவியின் நியாயம் எந்த இடத்திலும் எடுபடாது என அனுபவபூர்வமாக அனுபவித்த தருணங்கள்.
யாரோ ஒருவர் அவரின் பார்வைக்கு இதனை கொண்டு சென்றிருக்கின்றார்கள். அவர் அப்பொழுது டிஎஸ்பியாக வள்ளியூரில் பணியாற்றிகொண்டிருந்தார்.
அவர் முன்னால் நிறுத்தபட்டேன், மிக கண்ணியமாக ஆனால் கடுமையாக பேசினார். விளையாட்டிற்கு எடுத்திருப்பீர்கள், கொடுத்துவிடுங்கள் என்பது அவரின் வாதமாயிருந்தது. இறுதியில் மனமிரங்கி தேர்வு எழுத மட்டும் அனுமதி கொடுத்தார்.
சந்திரமதியின் தாலி அரிச்சந்திரனின் கண்ணுக்கு மட்டும் தெரிந்தது போல என் துயரம் அவருக்கு மட்டும் புரிந்திருக்கின்றது.
அவர் அப்பொழுது அதிகாரியாக தெரியவில்லை, அந்தோணியாராகவே தெரிந்தார்.
அவர் சட்டத்தையும், நிகழ்கால தீர்ப்புக்களையும் கலந்து சிந்தித்த ஒரு நல்ல மனது அதிகாரி, என்னை போகவிட்டு பின் சொன்னார் “குற்றவாளி என தீர்பிடபட்டவனையே படிக்க அனுமதிக்கும் நாடு இந்தியா. எத்தனையோ கொடும் சிறைவாசிகள் எல்லாம் பட்டம் வாங்குகின்றார்கள். இவன் வெறும் சந்தேக குற்றவாளி, தேர்வு எழுதட்டும் பின்னர் பார்க்கலாம்.”
அவரை போன்ற பெரும் உத்தமர்கள் பணியாற்றியதுதான் வள்ளியூர் டிஎஸ்பி அலுவலகம்.
மரணத்தின் விளிபிற்கு சென்று வந்த உணர்வு, ஏதோ எழுதினேன். அந்த டிவி திருடர்கள் எமக்கொரு உபயமும் செய்தனர். அதாவது தேர்வு முடிவதற்குள் பக்கத்து ஊர்களில் எல்லாம் டிவில்லியர்ஸ் தொடர்ந்து சிக்ஸர் அடிப்பது போல தொடர்ந்து சரமாரியாக தூக்க தொடங்கினர்.
விளைவு எமது மீதிருந்த சந்தேகம் நீங்கியது. அதன் பின் அங்கிருந்து அழைப்பு இல்லை. இதோடு இவன் முடிந்தான் என ஆடுவெட்டி கொண்டாட கத்தி ஓங்கியவர்கள் எல்லாம் அதோடு ஆட்டை அவிழ்த்துவிட்டு சைவமாகி விட்டார்கள் என்றார்கள்.
இன்று சமூகத்தில் நான் ஒரு பட்டதாரியாக பணிபுரிகின்றேன் என்றால் அதற்கு முழு காரணம் அந்த டிஎஸ்பி.
நல்ல காவல்துறை அதிகாரி என்றால் அவர் முகம் நிச்சயம் கண்முன் வந்து போகும், அவர் மட்டும் அன்று தேர்வு எழுத அனுமதிக்காவிட்டால் நிச்சயம் சமூகத்தில் வாழ தகுதியற்ற மனிதர்களில் நானும் ஒருவனாக மாறி இருப்பேன்.
இந்த முகநூலிலும் ஒரு சிக்கலும் இருந்திருக்காது.
என் வாழ்வில் மறக்கமுடியாத பெரும் மனிதர்களில் அவரும் ஒருவர். ஒரு முறைதான் அவரை பார்த்திருக்கின்றேன். அவர் பேசியதில் கொஞ்சம் கொங்கு நாட்டு தமிழும் இருந்தது.
“தேர்வு எழுது போ..” என அவர் அனுமதித்தபொழுது, நான் அவரை காலில் விழுந்து வணங்கியபொழுது தூக்கி நிறுத்தினார். அப்பொழுது அவர் நெஞ்சில் இருந்த பெயர் பட்டையில் திரு.சின்னச்சாமி என எழுதியிருந்தது. அது ஒருக்காலும் மறக்காது.
அந்த அதிகாரி திரு.சின்னச்சாமி, அதுதான் அவர் பெயர், ஆனால் எனக்கு அவர்தான் குலசாமி.
நிச்சயம் ஒருமுறை அவரை பார்க்கவேண்டும், பெரும் நன்றியினை என் மகளோடு சென்று தெரிவிக்க வேண்டும். தன் தந்தையினை காத்து வாழ்வளித்த அவரை அவளும் பார்த்து நன்றிகுரிய பெரியவர்கள் பட்டியலில் இணைத்துகொள்ளட்டும்.
எமது சந்ததிக்கெல்லாம் அவர் நினைவில் நிற்கட்டும். அவரை தேடிகொண்டிருக்கின்றேன், யாருக்காவது தெரிந்தால் தயவு செய்து எமக்கு தெரியபடுத்துங்கள்.
நானும் தேடிகொண்டே இருக்கின்றேன் 17 வருடமாக.