நிலமை எப்படி இருக்கின்றது?
இதோ இரட்டை இலையில் சசிகலாவும் பன்னீரும் ஆளாளுக்கு ஒரு இலையினை பிடித்து தொங்குகின்றார்கள்
முன்பு ஜெயாவும் ஜாணகியும் இப்படித்தான் தொங்கினார்கள், பின் சேவல், இரட்டை புறா என பறவை பிடித்தார்கள். ஜெயா ஜாணகியினை பெரும் எதிரியாக எண்ணி வரிந்து கட்டி நின்றார், கொலைபழி எல்லாம் கூட சுமத்தினார்
ஜாணகியின் அணுகுமுறை உன்னை பற்றி தெரியாதா? என்பது போல் இருந்தது, ஆனாலும் டெல்லி பலத்தில் ஜெயா வென்றார்
இருவரும் போட்ட சண்டைகள் ஏராளம், வசவுகள் ஏராளம்.
இன்று பன்னீர் சசிகலா என காலம் திரும்பியிருக்கின்றது, முழு ரகசியமும் சொல்லட்டுமா? என பன்னீர் சீறிகொண்டிருக்கின்றார், கட்சிகள் உடையும் பொழுது அப்படித்தான் பெரும் ஓசை எழும்பும்
ஆனால் திமுக உடையும் பொழுது எப்பொழுதுமே ஆச்சரியமாக இம்மாதிரி விஷயம் நடக்காது, சம்பத்தினை கண்ணீரோடு வழி அனுப்பினார் அண்ணா
பின் ராமசந்திரன் அரிசந்திரனாகி தனி கட்சி கண்டவுடன், கலைஞரிடம் அது பற்றி கேட்டார்கள்
நிலமை எப்படி இருக்கின்றது?
அதிமுக என்றொரு கட்சி உருவாகியிருக்கின்றது, இனி அது தேர்தலில் எல்லாம் நிற்கும், அதற்கும் ஒரு தலைவர் இருக்கின்றார்
அக்கட்சியின் செயல்பாடு எப்படி இருக்கும்?
தமிழில் சில எதிர் வார்த்தைகள் உண்டு, நியாயம் x அநியாயம், நீதி x அநீதி, சகுணம் x அபசகுணம் அப்படி திமுகxஅதிமுக. இனி அவர்கள் எதிர்கட்சி
அக்கட்சி பற்றி உங்கள் கருத்து?
இந்த ஜனநாயக நாட்டில் யார் கட்சி தொடங்கவும் உரிமை உண்டு
உங்களை கடுமையாக விமர்சிப்பது பற்றி?
வாழ்க வசவாளர்கள் என்பார் அண்ணா, அப்படி நாங்களும் அவர்களை வாழ்த்துகின்றோம், எங்கிருந்தாலும் வாழ்க..”
தன் கட்சி உடையும் பொழுதும் மனிதர் எவ்வளவு சுவாரஸ்யமாய் வலியினை தன்னில் தாங்கி பேசியிருக்கின்றார் பார்த்தீர்களா?
இதுதான் கலைஞர்
கட்சிகள் உடையும் களபேர காலங்களில் எப்படி பொறுப்பாக ஒரு தலைவன் நடந்துகொள்ளவேண்டும் என்பதற்கு பெரும் எடுத்துகாட்டு அவர்.
அன்று யாரையும் கலைஞர் கடத்தியதாகவோ மிரட்டி நடுகடலுக்கு அழைத்து சென்றதாகவோ வரலாற்றின் எந்த பக்கமும் இல்லை
இந்த எம் எல் ஏக்களை கடத்துவது, மிரட்டி கையெழுத்து வாங்குவது , திரும்பி பார்க்காமல் ஓட சொல்வது எல்லாம் ராமசந்திரன் ஸ்டைல்.
மிரட்டல், பலாத்கார, அடிமை அரசியலை தமிழகத்தில் அவர்தான் ஆரம்பித்து வைத்தவர்.
பின்னர் அவர் கட்சியிலும், அவர் கட்டி வைத்த அலுவலகத்திலும் இதுதான் நடக்கும், இதில் ஆச்சரியபட என்ன இருக்கின்றது?
தலைவன் எவ்வழியோ, கட்சியும் அவ்வழி, அது அவர்கள் கலாச்சாரம்.