நீதிகேட்டு பன்னீர் தமிழமெங்கும் சுற்றுபயணம்

நீதிகேட்டு பன்னீர் தமிழமெங்கும் சுற்றுபயணம்

இந்தியாவிலே, இல்லை இல்லை இந்த உலகிலே இப்படி ஒரு காமெடியான காட்சியினை பார்க்கமுடியாது

ஜெயா மருத்துமனையில் இருந்தபொழுது இவர்தான் முதல்வர், இவருக்கு தெரியாமல் அங்கு ஒன்றும் நடந்திருக்கமுடியாது. அப்பொழுதெல்லாம் அமைதியாக இருந்தார்

பின் முதல்வராக தொடரும்பொழுதும் சசிகலா போலவே அழுதுகொண்டார்

இன்று ஆட்சியில்லை என்றவுடன் நீதிகேட்டு நடக்கின்றாராம், எங்கே நடக்கின்றார்? தமிழக மக்களை நோக்கி நடக்கின்றார்

நிச்சயம் இது உட்கட்சி பிரச்சினை அல்லது உள்மர்மம். இது சசிகலாவிற்கும் அவருக்குமான பிரச்சினை

மர்மம் இருந்தால் இவர் முதல்வராக இருக்கும்பொழுது சொல்லியிருக்கலாம், அல்லது இவருக்கு தெரிந்த தகவலை சொல்லியிருக்கலாம், பொதுநல வழக்கு கொண்டுவந்திருக்கலாம்

ஆனால் அன்னார் ஒரு மண்ணாங்கட்டியும் செய்யவில்லை

ஆக இவர் நடக்கவேண்டியது மன்னார்குடி நோக்கியோ அல்லது பெங்களூர் சிறை நோக்கியோ அன்றி தமிழக மக்களிடம் அல்ல‌

புரூட்டஸ் சீசரின் கொலைக்கு நீதிகேட்டு நடந்தால் எப்படி ரோமாபுரி செருப்பால் அடித்திருக்குமோ, அப்படி ஒரு காட்சிக்கு தமிழகம் தயாராகின்றது

சிலம்பை திருடிய பொற்கொல்லன் நெடுஞ்செழியனிடம் நீதி கேட்டால் எப்படி இருக்கும்? அதுதான் இது.

இன்றிருக்கும் அரசியல்வாதிகளிலே மகா ஆபத்தானவர் பன்னீர் செல்வம்

மன்னார்குடி கும்பலாவது நாங்கள் திருந்தவில்லை, திருந்தவும் மாட்டோம் நாங்கள் இப்படித்தான் என சொல்லிகொண்டிருக்கின்றது

ஆனால் எல்லா அயோக்கியதனத்திலும் கூடவே இருந்துவிட்டு, இன்று உத்தமர் வேடமிடும் பன்னீர் மிக மிக ஆபத்தான அரசியல்வாதி