நெடுநாளைக்கு பின் மேட்டூர் அணை நிரம்பிவிட்டது
நெடுநாளைக்கு பின் மேட்டூர் அணை நிரம்பிவிட்டது, நீர் வரத்து அதையும் தாண்டி வருவதால் காவேரியில் பெரும் வெள்ளம் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது
இந்நிலையில் தண்ணீரை கடலுக்கு விடாமல் இருக்க தமிழகம் கூடுதல் அணை கட்ட வேண்டும் என பல திடீர் புவியியல் நிபுணர்கள் கருத்து சொல்ல தொடங்கியாகிவிட்டது
உண்மையில் காவேரியில் இருக்கும் அணைகளில் மேட்டூரே மிக பெரிது, தமிழக பாசன பரப்புகளை கருத்தில் கொண்டு அன்றே அப்படி கட்டபட்டிருக்கின்றது, வெள்ளையன் அப்படித்தான் கட்டி இருக்கின்றான்
அதனை ஒப்பிடும் பொழுது கன்னட அணைகள் எல்லாம் சிறியவை
அணை கட்டுதல் என்பது யாரும் தமிழகத்தில் கட்சி தொடங்கலாம் என்பது போன்ற எளிதான விஷயம் அல்ல அதற்கு புவியில அமைப்பு முக்கியமானது
மலைகளும் இன்னும் பல அமைப்புகளும் தோதாக அமைய வேண்டும், கல்லணை கூட நீரை தேக்காது மாறாக திருப்பிவிடும் அமைப்பே
காவேரி என்பது ஆற்று நீரால் மட்டுமல்ல, ஊற்று நீராலும் வாழ வைக்கும் நதி என்பதால் அது கடல் வரை சென்றாக வேண்டும்
கடல்வரை அது சென்று கலந்தால்தவிர இங்கு ஊற்று நீர் கிடைக்காது, உவர்ப்பு நீர் நன்னீராக மாறாது
இயற்கை இப்படி பல விஷயங்களை வைத்திருப்பதால் கடும் வெள்ள காலங்களில் அதன் போக்கிலே அதனை விடுவதே நல்லது
இதற்கு மேல் காவேரியின் நில அமைப்புபடி சில தடுப்பணைகளை கட்டலாம், கல்லணை போல அமைத்து திசை திருப்பலாம்
அதில் சில குளங்களை நிரப்பலாம்
ஆனால் அவை எல்லாம் எப்பொழுதாவது வரும் வெள்ளத்தில் நிரம்புமே அன்றி சராசரி காலங்களில் நிரம்பாது
பின் சராசரி மழை அளவு உள்ள காலங்களில் அதற்கும் சேர்த்து காவேரியில் மல்லுகட்ட வேண்டும், இல்லாவிட்டால் வரும் நீர் கல்லணைக்கு செல்லாமல் வழியில் தடுப்பு அணைகளிலே திசை மாறும், சிக்கல் உருவாகும்
இப்படி ஏக விஷயங்கள் உண்டு
மேட்டூரை தாண்டி அணை கட்ட பொருத்தமான இடம் இருந்திருந்தால் அன்றே வெள்ளையன் விட்டிருப்பானா? நிச்சயம் இல்லை
எதிர்பாராத வெள்ளத்தை கொண்டு நிரந்தர திட்டங்களை தீட்டுவது எதிர்காலத்தில் பலத்த சிக்கலை உருவாக்கும்.
எனினும் காவேரியில் சிறிய தடுப்பணை கட்டினால் என்ன என தமிழக அமைச்சர்களிடம் கேட்டால் என்ன சொல்வார்கள் தெரியுமா?
“தடுப்பணை கட்ட ஆற்றில் பள்ளம் தோண்ட வேண்டும் , பள்ளம் தோண்ட மணலை அள்ள வேண்டும், அதனால்தான் மகா அவசரமாக மணலை அள்ளி கொண்டிருந்தோம் அதற்குள் வெள்ளம் வந்துவிட்டது..”