நெல்லை காங்கிரசில் தலைவி குஷ்புவிற்கு எதிராக நடந்ததுதான் என்ன?

Image may contain: 1 person, smiling

நெல்லை காங்கிரசில் தலைவி குஷ்புவிற்கு எதிராக நடந்த விஷயங்களை சங்கம் சும்மா விடுமா? தீவிர புலனாய்வில் சங்கத்தின் உளவுபடை இறங்கியது, அது கொடுத்த தகவல் அறிக்கை இப்படி சொல்கின்றது

மொத்த உறுப்பினர் எண்ணிக்கையினை விட குழப்பங்கள் அதிகமுள்ள கட்சி காங்கிரஸ் என்பது உலகறிந்தது. கோஷ்டிக்குள்ளும் கோஷ்டிகள் இருக்கின்றது என்பது யாரும் அறியாதது

அதாகபட்டது நெல்லை பகுதி பொறுப்பில் இருப்பவர்கள் சங்கரபாண்டியன் எனும் கோஷ்டியினராம். இவர்கள் பெயரை பார்த்தாலே சில விஷயங்கள் உங்களுக்கு புரியலாம்

ஆம், இவர்கள் சில பாசம் காரணமாக அந்த திருநாவுக்கரசர் என்பவருக்கு வால்பிடித்து அலைபவர்கள், இவர்கள்தான் முதல்காராணம். என்ன பேசுகின்றோம், ஏன் பேசுகின்றோம் என தெரியாமலே வலம் வரும் திருநாவுக்கரசை கட்சி தலைவராக வைத்தது டெல்லியின் குற்றம்

ஏன் வைத்தார்கள் என்றால் அவர்கள் சொல்லும் காரணம் விழுந்து சிரிக்க கூடியது. அதாவது ஜெயலலிதாவிடம் கூட்டணி வைத்து திருநாவுக்கரசர் காங்கிரசுக்கு நிறைய இடம் பெற்று தருவாராம்

வெறும் முறைப்பிலே திருநாவுக்கரசரை ஓட அடித்தவர் ஜெயலலிதா, இவர் சென்று கேட்டால் 10 பைசா பிச்சை போட்டாலே பெரும் விஷயம். இதில் இவர் காங்கிரசை வாழ வைப்பாராம், இப்படி எல்லாம் ஒருவர் சொன்னால் ராகுல் காந்தி என்பவருக்கு அறிவு எங்கே போயிற்று?

மனிதர் தலையில் எப்படி எல்லாம் மிளகாய் அரைத்திருக்கின்றார்கள்? அவருக்கு கல்யாணம் ஆகாத விஷயத்தின் காரணம் இப்பொழுதுதான் புரிகின்றது

ராகுலை விடுங்கள், நெல்லைக்கு வரலாம்

நெல்லையில் பீட்டர் அல்போன்ஸ் ஒரு கோஷ்டி, தனுஷ்கோடி ஆதித்தன் ஒரு கோஷ்டி, வசந்தகுமார் கோஷ்டி இது போக சில தனி கோஷ்டி என ஏகபட்ட கோஷ்டிகள் இருக்கின்றன‌

காங்கிரசுக்கு எப்பொழுதுமே காங்கிரசார் எதிரிகள் என்பது நேருகாலத்திலிருந்தே வரும் விஷயம், நெல்லைக்கு அதே சிக்கல் வந்ததில் ஆச்சரியமில்லை

இந்த பீட்டர் அல்போன்ஸ் கோஷ்டி திமுகவின் பி அணி, தனுஷ்கோடி ஆதித்தன் கோஷ்டி ஆதித்தனின் ஒரே குறி சாவதற்குள் வைகுண்டராஜனை அசைத்து பார்த்துவிட வேண்டும் என்பது அதற்காக எங்கும் கூட்டணி வைக்க அவர் தயார்

வசந்தகுமாரின் ஒரே நோக்கம் எப்படியாவது ஒரு பதவியில் அமரவேண்டும் என்பது

இந்த சங்கரபாண்டியன் கோஷ்டியின் நோக்கம் அவர்களுக்கே தெரியாது, திருநாவுக்கரசரின் எதிரிகள் எல்லாம் அவர்களுக்கு எதிரிகள்

இப்பொழுதைய நிலவரப்படி தனுஷ்கோடி ஆதித்தனை பெரும்பாலும் பலர் மறந்தே விட்டனர், பீட்டர் அல்போன்ஸை அவரின் சொந்த கல்லூரி மாணவர்களுக்கே தெரியாது

வசந்த் & கோ விளம்பரத்தில் வருவதால் வசந்தகுமார் கொஞ்சம் தெரிவார், ஆனால் அவர் பேசுகின்றார் என்றால் காலி நாற்காலி கூட வராது

இவர்கள் ஆசையும் கணக்கும் இதுதானே தவிர கொஞ்சமும் காங்கிரஸ் நலன் அல்லவே அல்ல. அது இருந்தால் ஏன் இப்படி குதிக்க போகின்றார்கள்?

தமிழக காங்கிரசின் இப்போதைய ஒரே நம்பிக்கை குஷ்பு. அவர் பேசுகின்றார் என்றால் கூட்டம் அள்ளுகின்றது, 1989களில் ஜெயலலிதாவிற்கு இருந்த அதே வரவேற்பு குஷ்புவிற்கும் இருக்கின்றது

நன்றாக தெரிகின்றது எல்லா தேசிய கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகின்றன. சம்பிரதாயத்திற்கு பட்ஜெட்டை முடித்துவிட்டு பாஜகவும் கங்கணம் கட்டியாயிற்று

இந்த தேசவிரோத பட்ஜெட்டை இந்தியா முழுக்க கொண்டு சேர்த்து தன் தேர்தல் கணக்கை தொடங்க காங்கிரசும் தயாராகின்றது, இல்லாவிட்டால் குஷ்பு இப்படி இறங்கி பேச வரமாட்டார்

ஆக சும்மா அடுப்படியில் உறங்கும்வரை பூனைகள் கணக்கு தெரியாது, அடுப்பை சுத்தம் செய்து உலைவைக்கும் நேரம் வரும்பொழுதுதான் கணக்கு தெரியும்

அப்படி நெல்லை சோம்பேறி பூனைகளின் கணக்கு இப்பொழுது தெரிகின்றது.

தொகுதியில் நாங்கள் வைத்ததுதான் சட்டம் என மாஸ் காட்டி இப்பொழுதே இடம்பிடிக்க வந்து நிற்கின்றார்கள், பூட்டு போட்ட அர்த்தம் இதுதான்

இந்த பூட்டு விஷயம் காட்டுவது அதனைத்தான், எத்தனை கோஷ்டிகள் உண்டு என்பது பட்டவர்த்தனமாக தெரிகின்றது

நெல்லையில் நாங்கள்தான் பெரியவர்கள், தங்களுக்கே சீட் எனும் போட்டி விவகாரத்தில் குஷ்பு வருகையினை அவர்கள் பயன்படுத்திகொண்டார்கள் அவ்வளவுதான் செய்தி

இப்படி போட்டி போட்டு பிடிக்க நெல்லை பகுதியில் காங்கிரசுக்கு என்ன இருக்கின்றது?

ஒன்றுமே இல்லை, எல்லாம் இழந்தாயிற்று. தேர்தல் வந்தால் திமுகவிடம் கெஞ்சவேண்டும் அவர்கள் எது காங்கிரஸ் வெற்றிபெற முடியாத தொகுதியோ அதனை கொடுப்பார்கள், இவர்கள் அதில் கட்டிபுரண்டு 1 டிஜிட் எம்.எல்.ஏக்களோடு வருவார்கள்

ஆனால் திமுக சாமாத்தியமாக பாராளுமன்ற தேர்தலில் அள்ளிவிட்டு டெல்லியில் மல்லுகட்டும்

அவர்கள் தலமை அப்படி, இவர்கள் தலமை இப்படி. திருநாவுக்கரசர் எல்லாம் தமிழக காங்கிரசை கரையேற்றுவார் என நம்பினால் அந்த தலமையினை என்ன சொல்ல?

ஒரு விஷயம் உறுதியாக சொல்லலாம்

1965லே சம்பத் காங்கிரசில் இணைந்தபொழுது அது திமுகவினை வெல்ல அருமையான காலம் இருந்தது, திமுக மிக அஞ்சிய காலம் அது

ஆனால் காமராஜர் அதனை வீணடித்தார், காங்கிரஸ் பலமிழந்தது

பின் ராமசந்திரனை அணைத்து பலம்பெற்றிருக்க வேண்டிய காங்கிரஸ் காமராஜரின் செயல்களால் இன்னும் வலுவிழந்தது

இந்திரா, ராஜிவ் மரணம் எனும் அனுதாப வாய்ப்புகளையும் அது வீனாக்கியது

மூப்பனாரின் எழுச்சியினையும் பயன்படுத்த காங்கிரஸ் தவறியது

மன்மோகன்சிங் போன்றோரின் பெயரை பயன்படுத்தி கட்சி வளர்க்கவும் அதற்கு தெரியவில்லை

இப்போதைக்கு காங்கிரஸின் ஒரே தமிழக வாய்ப்பு குஷ்பு மட்டுமே

இந்த அல்லக்கை சங்கரபாண்டியனையும் அவருக்கோர் அல்லக்கையான திருநாவுக்கரசருக்காவும் பூட்டு போடுவதை பார்த்து கண்ணை மூடிகொண்டிருந்தால் அந்த இருவரின் வோட்டை தவிர வேறு வோட்டு காங்கிரசுக்கு விழாது

அந்த இரண்டு வோட்டுக்கா காங்கிரஸ் ஆசைபடுகின்றது?

தமிழக காங்கிரசின் கடைசி வாய்ப்பு தலைவி குஷ்பு. காமராஜருக்கு பின் தமிழக காங்கிரஸ் என்ன கிழித்துவிட்டது? ஒன்றுமே இல்லை

மூப்பனார் கூட தனிகட்சி கண்டுதான் உச்சம் பெற்றார்

ஆக குஷ்புவினை முன்னிலைபடுத்தினால் அக்கட்சி உருப்படும் இல்லாவிட்டால் நாம் தமிழர் கட்சியினை விட அதாள பாதாளத்தில் விழும்

அப்பொழுது இந்த சங்கரபாண்டியனையும், திருநாவுக்கரசரும் தயக்கமே இன்றி சீமான் கோஷ்டிக்கு செல்வார்கள்

திருநாவுக்கரசர் இன்னும் செல்லாத கட்சி அது ஒன்றுதான்

ஏதேனும் நல்ல காங்கிரசார் ஒருவன் இருந்தாலும் , உங்கள் கட்சி உருப்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தாலும் செய்ய வேண்டியதை செய்யுங்கள்.

கோஷ்டியினை ஒழிக்க முடியாது எனினும் 4 காசுக்கு பிரயோசனபடாத இந்த இம்சைகளை முதலில் தள்ளிவிடுங்கள். கட்சி ஒன்றும் கெட்டு போகாது

அல்லது கெட்டு போக இனி என்ன இருக்கின்றது?

சங்கம் இந்த நெல்லை ரவுடிகளுக்கு சொல்வது ஒன்றுதான், நீங்கள் நெல்லை ரவுடியாக இருக்கலாம் இருங்கள்

காங்கிரஸ் குஷ்பு என நீங்கள் நினைத்தால் அது தப்பு கணக்கு, தலைவிக்கு அகில உலகெங்கும் ஏராளமான ரசிகர்கள் உண்டு. இது இண்டர்நேஷனல் லெவல் சங்கம்

உங்களுக்கு தெரிந்தது நெல்லை, அலுவலகம் , பூட்டு , அரிவாள் என்றால் சங்கத்திற்கு தெரிந்தது அணுகுண்டு, ஏவுகனை, சர்வதேச தொடர்பு என ஏராளாம்.

ஏதும் தலைவியிடம் வம்பு செய்ய வருவீர்கள் என்றால், நீங்கள் அரிவாள் எடுத்தால் நாங்கள் வடகொரிய அதிபரிடம் அணுகுண்டே வாங்கிவருவோம், அந்த எச்சரிக்கையினை சங்கம் உங்கள் கைசின்னம் மீது சத்தியமாக சொல்லி கொள்கின்றது, கவனமாக நீங்கள் இருப்பது நெல்லைக்கும் தமிழகத்திற்கும் மிக்க நல்லது

சங்கம் இதனை மிக கடுமையாக கருதுகின்றது, இனியொரு முறை இப்படி நடக்குமாயின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகனை நெல்லை காங்கிரஸ் அலுவலகத்தை குறிவைத்து நிறுத்தபடும்.

அதனை ஏவினால் அலுவலகமும் இருக்காது, பூட்டும் இருக்காது , சாவியும் இருக்காது. இதனை மனதில் வைத்து கட்சிக்கு ஏதும் செய்வதாக இருந்தால் செய்யுங்கள்

அதாவது கட்சியினை விட்டு ஓடிவிடுங்கள், அதனை விட ஒரு நல்ல காரியமும் உங்களால் ஒருநாளும் செய்துவிட முடியாது.

தலைவிக்கு தொடுக்கபடும் மிரட்டலுக்கோ இன்னும் சில அழிச்சாட்டியங்களுக்கோ சங்கம் கொஞ்சமும் விட்டுகொடுக்கும் போக்கினை கடைபிடிக்காது என்பதை சொல்லிகொள்கின்றோம்.