பகைபுதைத்து கைகுலுக்கலாம்
சாம்பாருக்கும் இட்லிக்கும் தமிழரை அடித்து கொள்ளமுடியாது, பிரியாணிக்கு ஐதரபாத் மக்கள்
சப்பாத்திக்கு சர்வ நிச்சயமாக பஞ்சாபியர், அப்படியே இந்த நாண் எனும் இயேசுநாதர் காலத்து ரொட்டி வகையறாவுக்கு பாகிஸ்தானியர் பிரமாதம்
மாவினை பதமாக உருட்டி சுட்டெடுக்கும் பக்குவம் அவர்களுக்கு கை வந்த நாண் வெந்த கலை..
அதை விட சுவை அந்த சைடில் வைக்கும் தொட்டுகொள்ளும் வகைகள்
அப்படி ஒரு பாகிஸ்தானியர் இருக்கின்றார் மனிதர் ஓரளவு படித்தவர், இங்கு நாண் ஸ்பெஷலிஸ்டாக இருக்கின்றார்
காக்கை குருவி எங்கள் சாதி என பாரதி ஏன் பெருமையாக சொன்னானோ தெரியாது, அவை கண்ட இடத்திலும் உண்ணும், அப்படி உண்பவர் எல்லாம் அந்த சாதி என நாமாக நினைத்து, நம்மையும் அந்த சாதியில் இணைத்த வகை நாம்
தேடி தேடி நாணை விழுங்கியபொழுது அவரும் அகபட்டார், நிறைய பேசினார், பாகிஸ்தானின் நிலமை அவர் சொல்ல சொல்ல விளங்கியது.
இம்ரான்கான் பற்றி அவருக்கு நல்ல அபிமானம் இல்லை, அவருக்கு அரசியலோ நிர்வாகமோ தெரியாது என்றார். பாகிஸ்தான் சிக்கலை சமாளிக்கும் ஆற்றல் இம்ரானுக்கு இல்லை என்பது அவர் எண்ணம்
பாகிஸ்தானின் சிக்கல் உண்மையில் பெரிதாகத்தான் இருக்கின்றது, இது எதிர்பார்த்தது என்கின்றார்கள். அவர்கள் சொல்லும் மிக முக்கிய காரணம் பல காரணங்களுக்காக ஆப்கனில் பாகிஸ்தான் நுழைந்ததும் வட எல்லையினை அவர்களுக்காக திறந்ததுமாகும்
இன்னும் நிறைய சொன்னார், பாகிஸ்தான் இனி விற்பனையாகும் நாள் தொலைவில் இல்லை என்பது அவர் கருத்து, நாடு இனி இந்தோனேஷியா போல ஆகலாம்..
அபிநந்தன் விவகாரம் பற்றி அவரின் பார்வை வேறுமாதிரி இருந்தது, இம்ரான்கானை நம்பி யுத்தத்தில் குதிக்க ராணுவம் தயாராக இல்லை என்றார்.
பாகிஸ்தான் ராணுவமும் ஒருவித அதிருப்தியில் இருப்பதாகவும் ஆனால் யாருக்கும் என்ன செய்வது என தெரியாத குழப்பம் நிலவுவதாகவும் சொல்லிகொண்டார்.
முஷாராப் என்பவர் ஓரளவு நல்லாட்சி கொடுத்தார் என்பது அவர் நம்பிக்கை..
மனிதர் பாகிஸ்தான் அணியின் கிரிக்கெட் பற்றி மிகுந்த குறைபட்டார். திறமையான வீரர்கள்தான் ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் நாட்டு சூழலும் அவர்களை அப்படி ஆக்கிவிட்டது என்றார்
இந்தியா நிச்சயம் கோப்பையினை வெல்லும் என்றார், அதைவிட முக்கியம் ஆசிய அணியான இந்தியா கோப்பையினை வெல்வது வாழ்த்துகுரியது என்றார்
பாகிஸ்தானியரின் இந்த சிந்தனை வரவேற்கதக்கது, உறுதியாக சொல்லலாம்
இருநாட்டு மக்களும் தெளிவாக இருக்கின்றார்கள், பாழும் அரசியலே இருநாட்டையும் பகையாக வைத்திருக்கின்றது
வருங்காலத்தில் சிந்தனை மிக்க சமூகம் இருநாட்டிலும் உருவாகி அரசியலை தூக்கி எறிந்துவிட்டு பகைபுதைத்து கைகுலுக்கலாம் என்பது தூரத்தில் தெரிகின்றது.