பங்குனி உத்திர நாளுக்கு தமிழகத்திற்கு தனி சிறப்பு உண்டு

Image may contain: 1 person

பங்குனி உத்திர நாளுக்கு தமிழகத்திற்கு தனி சிறப்பு உண்டு.

பங்குனி என்றால் வடமொழியில் “உச்சம்” என்று பொருள், சமஸ்கிருத கலப்புள்ள மலாய் மொழியிலும் உச்சிற்கு பங்குனி என்றே பெயர்.

சூரியன் உச்சிக்கு வரும் மாதம் பங்குனி,பொதுவாக வெயில் அதிகம். இம்மாதம் அது தலையின் உச்சியில் இறங்குகின்றது என்கின்றார்கள்

நிலா களங்கமுள்ளது என கம்பன் முதல்,வைரமுத்துவரை பாடினாலும், பங்குனி உத்திர பௌர்ணமி களங்கம் இல்லாதது என்பது ஐதீகம்,சூரியன் உச்சத்தில் இருப்பதாலும் உத்திர நட்சத்திர அமைவிடத்தாலும் அந்த நிலவு சற்று கூடுதலாக ஒளிரும் என்பது வானியல் உண்மை.

இந்த மங்கள நாளில்தான் ராமனுக்கும் சீதைக்கும் திருமணம் நடந்தது (நடந்த இடம் தெரியாததால் பெரும் குழப்பங்கள் ஏதும் தற்போது இல்லை),

சிவபெருமான் மன்மதனுக்கு உயிர்கொடுத்து காதலர் தினம் உருவாக அச்சாரமிட்டார், இன்னும் முருகபெருமான் வேல் எறிந்து சூரனின் மலையினை பிளந்தார் என ஏகபட்ட சிறப்புகள் கொண்டது இந்த பங்குனி உத்திரம்.

முருகபெருமானின் ஆலயங்கள் எல்லாம் இந்த விழா கொண்டாடடும், ஆனால் மிக சிறிய சாஸ்தா ஆலயங்களிலும் அது பெரும் விழாவாக கொண்டாடபடும்

நெல்லைமாவட்ட‌ பகுதியின் மிகச்சிறிய ஊராக சித்தூர் இருந்த போதிலும் அப்பகுதியில் நடக்கும் மிக திருவிழாக்களில் சித்தூர் திருவிழா மிக பிரசித்தி பெற்றது.

இன்று மிகச்சிறிய ஊராக சுருங்கிவிட்ட சித்தூர், பண்டைய காலங்களில் குறிப்பிட்ட இடத்தினை பெற்றிருக்கவேண்டும், நம்பியாற்று பாசனம் மூலம் மக்கள் வசித்த மிக தொன்மையான இடம். பின்னாளில் பாண்டிய மன்னர்களின் ஆட்சியிலிருந்து அதன்பின் நாயக்க மன்னர்களின் ஆட்சியில் வந்தது,

திருப்பதி பக்கம் ஆந்திர பகுதி பெயர்களை கவனித்தால் சித்தூர், நாகலாபுரம், முத்துலாபுரம் என பல பெயர்கள் உண்டு, பின்னாளில் இந்த பகுதிக்கு வந்த அம்மக்கள் ஆற்றுபாசான பகுதிகளுக்கு அப்பெயரை பதித்திருக்க வாய்ப்புகள் அதிகம்.

இன்றும் நாயக்கமன்னர்களால் உருவாக்கபட்ட ஏரிகளின்,குளங்களின் கரையிலுள்ள சாஸ்தா ஆலயங்கள் பெரும்பாலும் ஆந்திரசாயல் கொண்டவை.

நாயக்கர் காலத்தில் பல மக்கள் ஆரல்வாய் மொழி தாண்டி சேரநாட்டிற்கும் இன்னும் சிலபேர் பல இடங்கள்ளுக்கும் இடம்பெயர்ந்து சென்றார்கள் என்பது வரலாற்று உண்மை.

இந்த பங்குனி உத்திர திருவிழாவின் போது நாகர்கோவில் பகுதி மக்கள் அலைஅலையாக சித்தூர் ஆலயத்தில் மோதுவது அதனை உறுதிபடுத்துகிறது,

நாகர்கோயில் என்றல்ல நெல்லைநகர பகுதி மக்களுக்கும் குலதெய்வம் சித்தூர் சாஸ்தா.

தென்பகுதியின் பழமையான ஆலயங்களில் ஒன்று சித்தூர் தென்கரை மகராசன் ஆலயம், எல்லா சாதி மக்களும் அதனை எங்கள் குலதெய்வ ஆலயம் என கொண்டாடுவதுதான் தனி சிறப்பு, அவ்வகையில் ஆழ்ந்து கவனிக்கதக்கது.

சித்தூர் மூலவரின் சிலையின் சாயல் அப்படியே சபரிமலை அய்யப்பனை ஒத்திருப்பதை காணமுடியும், அந்த அளவிற்கு பழமையான சாஸ்தா ஆலயம்.

சாஸ்தா என்பவர் காவல்தெய்வம், குறிப்பாக நீர் நிலைகளின் அருகில் அவருக்கு ஆலயம் அமைக்கபட்டிருக்கும், சில உபதேவதைகளோடு அமர்ந்திருப்பார். அவரவர் வலிமைக்கு தக்கபடி 1008 தேவதை, 108 தேவதை அல்லது ஆக கடைசியாக 21 உபதேவதை கொண்ட சாஸ்தாக்கள் உண்டு.

சாத்து எனும் தமிழ்சொல்லுக்கு சேர்ந்து இருப்பது என பொருள், பெரும்பாலும் ரத,கஜ, நாக, துதி பரிவாராங்களுடன் அமர்ந்திருப்பார். மிக கண்டிப்பாக நீர் ஆதாரங்களின் கரையில் மட்டும் இருப்பார், பஞ்சகாலங்கள் அவரை மட்டும் பாதிப்பதே இல்லை.

நாகர்கோவில் முகப்பில் பழையாற்றுகரையில் வீற்றிருக்கும் சாஸ்தா எளிதில் மறக்கமுடியாதவர்.

குளத்திற்கும் குளத்தினை நம்பி நடக்கும் விவசாயத்திற்கும் அவர்தான் காவல் தெய்வம், விவசாயம் வாழ்க்கைக்கு மூலம், விவசாயத்திற்கு சாஸ்தா மூலவர்.

சாத்தன் எனும் சொல்லுக்கு கூட்டத்தின் தலைவன் எனவும் பொருளுண்டு

கொஞ்சம் கொஞ்சமாக சாஸ்தா எனும் சொல் சாத்தா என மாறி,பின்னாளில் சாத்தான் என மாறிற்று, அர்த்தமும் மாறிற்று.

மொழிமாற்றமும்,அடையாள மாற்றமும் எவ்வளவு பெரிய விபரீதத்தினை ஏற்படுத்தும் என்பதற்கு சாஸ்தா, சாத்தானாக மாறியதை தவிர பெரும் உதாரணம் சொல்ல முடியாது.

விவசாயம் பிசாசு தொழிலாக மாறி தொட்டவனை அழித்துவிடும் என நிலை வந்தபொழுது, மூலவர் சாஸ்தாவும் பலருக்கு வேண்டாத சாத்தான் என மாறிற்று.

சாஸ்தா எனும் தெய்வம் சாத்தான் என மாறி இன்று அரைகுறை கிறிஸ்தவர்கள் வாயில் சிக்கியிருப்பது இப்படித்தான்

இன்று பல குளங்கள் அழிந்தது அதோடு பல சாஸ்தா ஆலயங்களும் அடையாளமற்றது.

பங்குனி உத்திர நாளன்று, மறக்காமல் குலதெய்வழிபாடு செய்யவேண்டும் என முன்னோர்கள் வகுத்ததால், ஏராளமான மக்கள் குளக்கரைக்கு சென்று சாஸ்தா வழிபாடு செய்கின்றார்கள்., எல்லா தெய்வமும் வேறு இடங்களுக்கு மாற்றபடலாம்,

ஆனால் சாஸ்தா அந்த இடத்தில்தான் இருப்பார் என்பது அவர்களின் நம்பிக்கை.

இந்த குளமும் இந்த வயல்காடுகளும் தான் நம்மை வாழவைக்கிறது, நமக்கு பின்னால் நம் சந்ததிகள் ஆண்டுக்கு ஒருமுறையாவது வந்து அப்பகுதிகளை பார்வையிட வேண்டும், ஒன்றாக பந்தியமர வேண்டும்,சொந்தங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பினை விட்டுகொள்ளமுடியாதபடி ஒரு சங்கிலி பந்தம் தொடர முன்னோர்களால் ஏற்படுத்தபட்ட தத்துவமே….

“சாஸ்தா எங்கும் செல்லமாட்டார் அங்கேதான் இருப்பார், அவர் குலதெய்வம் நாம்தான் சென்றுபார்க்க வேண்டும்” என்பது

இந்த குலதெய்வத்தின் புண்ணியத்தில் ஆண்டுக்கொரு முறை சந்த்தித்து தொடர்பற்று போகாத சொந்தங்களும்,குடும்பங்களும் உண்டு.

இந்த அறிவார்ந்த தத்துவத்தை கொடுத்துசென்ற முன்னோர்கள் எவ்வளவு நன்றிகடன் பட்டவர்களாகவும், அறிவுள்ளவர்களாகவும் இருந்திருக்க வேண்டும்?

தலைமுறை தலைமுறையாக தமிழர்கள் பின்பற்றும் இந்த பாரம்பரியத்தில் எவ்வளவோ நல்ல விஷயங்கள் உண்டு, தனது அடையாளம் தனது பூர்வீகம் இவற்றையெல்லாம் எக்காலத்திலும் தொலைத்துவிடாததின் சூட்சுமம்.

நெல்லை மாவட்டம் சித்தூருக்கு ஏராளமாவர்கள் வந்து இது எங்கள் குலதெய்வம் ஊர் என சொல்லும்பொழுது அது நன்றாக புரிகின்றது

இன்றைய உலகின் மிகசிறிய குழுவானாலும்,ஒட்டுமொத்த உலகையும் ஆட்டுவிக்கும் யூதர்களின் ஆன்ம வாக்கியம் “தன் மூதாதையர் வாழ்ந்த,உழைத்த,புதைத்த மண்ணை மறந்தவன் சபிக்கபடுவான்”.

அந்த வாக்கியம்தான் ஜெருசலேம் எனும் மந்திர சொல்லையும், அதனை காக்கவேண்டும் எனும் பரம்பரை வைராக்கியத்தியும் அவர்களுக்கு கொடுக்கிறது, வாழவைக்கிறது.

அந்த யூத வாக்கியத்தின் நமது ஆலய வடிவங்களே குலதெய்வம் குடியிருக்கும் குளத்துகரை பீடங்கள், 
ஆயிரமாயிரம் தத்துவங்கள் அதனில் அடங்கியிருக்கிறது

அனாதை இல்லத்தில் சேர்க்கபட்ட தாயை போன்ற நிலைமையில் உள்ள, அல்லது கவனியாது தெருவில் விட்ட‌ குலதெய்வங்களும் உண்டு.

இதனை நினைக்கும்பொழுது அக்காலத்தில் கடல்போல நீர்நிரம்பிய குளங்களும், அதனை சுற்றி பசுமையான கழனிகளும்,மாட்டோடு மாடாய் உழைத்த முன்னோர்களின் நினைவுகளும் கண்களுக்குள் வந்து போகின்றது

.
அந்த குளங்களின் இன்றைய காட்சியும், வறண்ட வாய்கால்களயும், இன்று நடமாடும் மினரல் வாட்டர் பாட்டில்களையும்,ரியல் எஸ்டேட் கல்லையும், கம்பிவேலியையும் காணும் பொழுது ஒரு நீண்ட பெருமூச்சும்,விம்மலும் தானாக நெஞ்சை அடைக்கிறது.

அள்ளி,அள்ளி தந்த அந்த பூமி அன்னைகளுக்கெல்லாம் அன்னை, தெய்வங்களுக்கு எல்லாம் தெய்வம்.

அந்த வறண்ட‌ குளத்தின் ஓரமாக அமர்த்திருக்கின்றது கைவிடபட்ட சாஸ்தா ஆலயம்

அந்த தெய்வங்களை நினைவுகூர்ந்து வணங்குவதற்கு மதம் ஒரு தடையே அல்ல,

காட்டை திருத்தி கழனியாக்கி நமக்கொரு அடையாளம் தந்த முன்னோர்களின் நினவுகளே போதும்.

பங்குனி உத்திரம் கொண்டாடும் அனைவருக்கும் முன்னோர்களின் நினைவுகளோடு வாழ்த்துக்கள்

எங்கள் ஊரில் இன்று பாழடைந்துவிட்ட ஒரு சாஸ்தாகோவில் முன்பு அமர்ந்திருந்தபொழுது வந்த நினைவுகள் இவை….

எல்லோரும் அந்த வயற்காட்டை விட்டு சென்றாகிவிட்டது, குளமும் குளம் போலவே இல்லை, அந்த சாஸ்தாவிற்கான குடும்பத்தார் யாரும் வரவும் இல்லை..

அந்த சாஸ்தா கோயில் இருந்த அடையாளம் மட்டும் இருக்கின்றது

அதனை கடந்து செல்லும்பொழுதெல்லாம் வாழ்ந்து கெட்ட‌ அனாதையாக சாலையோரம் அமர்ந்திருக்கும் பெரியவரை பார்க்கும் வலி வருகின்றது.

கைவிடபட்ட அனாதை முதியவர்களை எங்கு கண்டாலும் அந்த சாஸ்தாவின் நினைவு வந்துவிடுகின்றது, அதுவும் இந்த பங்குனி உத்திரநாளில் அதிகமாக வருகின்றது..

“தண்ணீர் இல்லை விவசாய வீழ்ச்சி என எல்லா மக்களும் போய்விட்டார்கள், நான் எங்கு செல்லமுடியும்? ” என அது கதறுவது போலவே தோன்றும்

உலகெல்லாம் பங்குனி உத்திர விழா நடக்க , நிச்சயம் அந்த சாஸ்தாவும் ஏங்கிகொண்டுதான் இருப்பார், இதனை போல் எத்தனை ஆலய சாஸ்தாக்கள் ஏங்குமோ தெரியாது.

விவசாய வீழ்ச்சி மக்களை மட்டுமல்ல, தெய்வங்களை கூட அனாதை ஆக்கியிருக்கின்றது.

அந்த வரப்பினை கடக்கும்பொழுதெல்லாம் ஏதோ ஒரு அனாதை முதியவர் யாரையோ எதிர்பார்த்து பரிதாபத்துடம் அமர்ந்திருப்பது போல மனதிற்குள் ஒரு கலக்கம் வந்து போகின்றது…..

இதுபோல எத்தனை அனாதை சாஸ்தாக்கள் தமிழகத்தில் இருக்கின்றன என நினைத்தால், எவ்வளவு தூரம் தமிழகம் தன் அடையாளங்களை தொலைக்கின்றது என்பது மட்டும் புரிகின்றது..