அதிமுகவில் பன்னீரை தவிர முதல்வருக்கு பொருத்தமானவர் யார்?

Image may contain: 1 person, smiling, sunglasses

பன்னீரின் திடீர் விஸ்வரூபமும், அதனை தொடர்ந்த நிகழ்வுகளும் ஓரிரவில் தமிழகத்தை பெரும் பரபரப்பாக்கியுள்ளன, இப்பொழுது கலைஞர் நலமாக இருந்தால் அவரிடம் கேள்விகளை கேட்டால் இப்படித்தான் பதில் வரும்

சமீபத்திய நிகழ்வுகளை கவனித்தீர்களா?

உங்களை போலவே நானும் கவனித்தேன், ஆளுநர் “அம்மா” என அலறிகொண்டு ஓடும் வரை கவனித்தேன்.

அதிமுக குழப்பம் பற்றி?

மறைந்த அம்மையார் பலமுறை திமுகவினை அழிப்பேன் என சபதமெல்லாம் எடுத்தார். திமுக என்பது கருங்கல்லில் செதுக்கபட்ட உறுதியான இயக்கம் என்பதை ஏதோ மணல் சிற்பமாக நினைத்து சொன்னார், அவரின் குருநாதர் எம்ஜிஆரால் கூட அழித்துவிட முடியாத இயக்கம் இது

கண்ணுக்கு தெரியும் வரையில் எதிரிகள் இல்லை என எங்களையே பார்த்துசொன்ன அம்மையார், தன் காலடியில் இருந்த சொந்த எதிரிகளை கணிக்க தவறிவிட்டார்.

பன்னீர் செல்வத்தின் எதிர்ப்பு பற்றி?

சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பார்கள், பொறுமைக்கு பெயர்போன பன்னீர்செல்வமே கோபபட்டுவிட்டார் என்றால் அவரின் நிலமையினை நீங்களே புரிந்துகொள்ளுங்கள்.

பன்னீரின் எதிர்ப்புக்கு பின்னால் திமுக இருக்கின்றது என சசிகலா சொல்கின்றாரே?

அது அவருக்கு பதவி காய்ச்சலில் வந்த உளறல், அப்படிபட்ட அவசியம் எல்லாம் திமுகவிற்கு இல்லை. குழப்பத்திற்கும் கலவரங்களுக்கும் என்றுமே திமுக காரணம் இல்லை.

மாற்றான் தோட்டத்து பூவுக்கு மணம் மட்டுமல்ல, முட்களும் இருக்கலாம்

தொங்கு சட்டசபை வந்தால் பன்னீரை ஆதரிப்பீர்களா?

சட்டசபை முதலில் தொங்கட்டும், அதன் பின் பார்க்கலாம்

மாநிலத்தின் ஸ்திரதன்மையினை காக்கும் பொருட்டும், தமிழக நலன் கருதியும் பொதுகுழுவில் விவாதித்து முடிவெடுப்போம், திமுக என்பது முடிவுகளை எடுத்துவிட்டு பொதுகுழு கூட்டும் கட்சி அல்ல, பொதுகுழு கூட்டி முடிவெடுக்கும் கட்சி.

பன்னீர் பிரச்சினையால் தேர்தல் வருமா? அதிக செலவு அல்லவா?

நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள் என நினைக்கின்றேன், 20 ஆண்டுகளுக்கு முன்னால் பாஜகவிற்கு மத்தியில் ஆதரவளித்த ஜெயா, கழக அரசை கலைக்க சொல்லி மிரட்டினார். உத்தமர் வாஜ்பாய் மறுக்க அரசினை கவிழ்த்தார் அம்மையார்

அதன் பின் இந்தியாவிற்கே தேர்தல் நடநத காலம் உண்டு, இப்பொழுது அப்படி அல்ல, தமிழகத்திற்கு மட்டும் தான் அவசியம், அந்த அம்மையாரை நம்பி வாக்களித்த மக்களுக்கு அவர் இல்லாத நிலையில் இன்னொருவர் யார்? என தீர்மானிக்கும் உரிமை கொடுக்கபட வேண்டும் என்பது என் கருத்து

பன்னீர் துரோகம் செய்ததாக நாஞ்சில் சம்பத் போன்றோர் சொல்வது பற்றி?

அது துரோகத்திலே உருவான கட்சி, அருமை நண்பர் எம்ஜிஆர் இந்த அண்ணாவின் கழகத்திற்கு அதனை செய்தார். ஜெயா எம்ஜிஆருக்கு செய்தார், சசிகலா ஜெயலலிதாவிற்கு செய்தார். ஆக அது அவர்கள் கலாச்சாரம்

நன்றியுடன் ஒருவர் அங்கு இருந்தால் அதுதான் ஆச்சரியம்.

இந்த நாஞ்சில் சம்பத்தே திமுக, வைகோ என இருவருக்கு இரட்டை துரோகம் செய்துவிட்டுதானே இரட்டை இலை சுமந்து நிற்கின்றார்.

சசிகலா குடும்பம் அதிமுகவினை தொடக்ககாலத்தில் இருந்தே வளர்த்தது எனும் செய்தி பற்றி?

கிட்டதட்ட 35 ஆண்டுகாலம் எம்ஜிஆரும் நானும் நண்பர்கள், அவருக்கு அரசியல் சொல்லிகொடுத்ததே நான். எங்களை எல்லாம் அழ வைத்து அவர் பிரியும்பொழுது அவரோடு சென்றவர்கள் யார்? எத்தனைபேர், அவருக்கு கொம்பு சீவியது யார்? அரணாக நின்றது யார்? என்பது எல்லோரையும் விட எனக்கு நன்றாய் தெரியும்

அதில் மன்னார்குடி மாபியா கும்பலின் ஆட்கள் ஒருவர் கூட இல்லை என்பது உறுதி, இன்று பேசும் பலர் அன்று பிறந்திருப்பார்களா என்பதே சந்தேகம். ராமவரம் தோட்ட சமையல் காரர்கள் கூட எனக்கு தெரியும் அதிலும் சசிகலா குடும்பம் இல்லை

நண்பர் எம்ஜிஆர் தனிகட்சி காணும் பொழுது மறைந்த அம்மையாரே இல்லை எனும் பொழுது இந்த அம்மி குழவிகள் ஏது?

வைகோ திமுக திரும்பினால் ஏற்றுகொள்வீர்களா?

தமிழக மக்கள் அவரை ஏற்றுகொள்ளாமல் விரட்டினாலும், என் மனதில் அவருக்கான இடம் அப்படியே இருக்கின்றது, அவருக்காக என் கதவு திறந்தே இருக்கின்றது

பன்னீர் செல்வம் முதல்வரானால் வரவேற்பீர்களா?

ஆரிய பார்ப்பணம் இந்தியாவில் தன் கொடூர கரங்களை இறுக்கிவரும் வேளையில், பெரியாரின் மண்ணில் அண்ணாவின் இயக்கங்களை ஆதரிக்கும் கடப்பாடு எல்லோருக்கும் உண்டு

அதிமுகவில் பன்னீரை தவிர முதல்வருக்கு பொருத்தமானவர் யார்?

அப்படி ஒருவர் இருந்திருந்தால் ஏன் ஜெயலலிதா இருமுறை பன்னீரை மட்டும் முதல்வராக்கினார்?.

அடுத்து என்ன நடக்கும்? சசிகலா விரட்டபடுவாரா?

அவர் சிறைக்கு விரட்டபடவேண்டும் என்ற குன்ஹாவின் தீர்ப்பு செல்லுமா இல்லையா என்பது முதலில் தெரியட்டும்,

தமிழக அரசியல் களத்திலிருந்து அவரை விரட்டும் பொறுப்பினை தமிழக மக்கள் பார்த்துகொள்வார்கள் .

அப்பல்லோ டாக்டர்கள் அறிக்கை பற்றி?

திருத்தவும், அது அறிக்கை அல்ல. யாரோ சொல்லி கொடுத்ததை அவர்கள் படித்த நாடகம், அதனால் யாருக்கும் திருப்தி இல்லை மாறாக எரிச்சலே அதிகரிக்கின்றது.

முன்பு எம்ஜிஆருக்கு விஷம் கொடுத்து கொன்றார்கள் என்ற ஜெயாவின் கூப்பாடு போட்டார் ஜெயலலிதா. இறுதிவரை ஏதும் முடிவு உண்டா?

அவர்கள் நாடகம் அப்படியானது.

அதிமுக விவகாரங்களில் திமுக தலையிடுகின்றது என்பது பற்றி?

எல்லா தலைவர்களும் சசிகலாவின் செயல்பாடு பற்றி முகம் சுளிக்கின்றார்கள், மக்களிடமும் கட்சிக்குள்ளும் அதிருப்தி நிலவுகின்றது.

நாங்கள் போயஸ் தோட்டத்தில் புகுந்து ஏதும் வம்பு வளர்த்தால் தவறு, ஆனால் தமிழகத்தை வழிநடத்தும் ஆட்சிநிர்வாகம் குறித்து, முதல்வர் குறித்து நாங்கள் கவலைபடுவதும் கோரிக்கை வைப்பதும் தவறேன்றால்..

அந்த தவறை ஆயிரம் முறை செய்வான் இந்த கருணாநிதி.

நடக்கும் நிகழ்வுகள் எதனை காட்டுகின்றது?

எந்த சூழலிலும் தமிழகத்திற்கு நிலைத்த ஆட்சியினை கொடுக்கும் வல்லமை திமுகவிற்கு மட்டும் உண்டு என்பதை காட்டுகின்றது

# இம்மாதிரி சூழலில் அவர் நலமாக இருந்தால் எத்தனை விதமாக பதிலளிப்பார் என்பது எந்த கற்பனைக்கும் எட்டாதது, அவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கும்

சிலை இல்லா கோயிலை பார்த்து வரும் வெறுமையினை போல அவர் அறிக்கைகள் பேட்டிகள் இல்லா பத்திரிகையினை பார்த்து அதே வெறுமை மிஞ்சுகின்றது

தெய்வமில்லா தேராக முரசொலி சுற்றி வருகின்றது.

அவரை பம்பரமாக சுழலவிட்ட, அவரை சரமாக வெடிக்க வைத்த காலம், இன்று முடக்கி ஓரமாக வைத்திருக்கின்றது

மகா கொடுமையானது காலம்.