பழமொழி நானூறு : 02

“சொற்றொறும் சோர்வு படுதலால் சோர்வு இன்றிக்
கற்றொறும், “கல்லாதேன்” என்று, வழி இரங்கி,
உற்று ஒன்று சிந்தித்து உழந்து ஒன்று அறியுமேல்
கற்றொறும் தான் கல்லாத வாறு”

தம்மினும் கல்வியுடையார் முன்னர்ச்சென்று சொல்லும் பொழுதிலெல்லாம் சொல்வதிலே தளர்ச்சியானது தோன்றலாம்.அதனால், சோர்வு அடையவே கூடாது. புதிதாக ஒன்றைக் கற்குந்தொறும், தான் கல்லாதவன் என்று கருதி, அதனைக் கற்கும், வழியினை நினைத்து இரங்கி மனம் ஒருமைப்பட அது ஒன்றையே சிந்தித்து, வருந்தியாயினும் அந்த ஒன்றை அறிய முற்படவேண்டும்.இப்படியாவதனால், புதிதாக ஒவ்வொன் றையும் கற்குந்தொறும் தான் அதனை முன்னர் கல்லாத தன்மையே தோன்றும் என்க.

நம்மைவிட அதிகம் கற்றவர் முன் சென்று ஒருவிஷயத்தை சொல்லி அது சரிவராமல் அவமானமானாமோ இல்லை சறுக்கினாலோ தளர்ச்சி அடைய கூடாது, ஒரு விஷயத்தை கற்கும் பொழுது அது தெரிந்த விஷயமாக இருந்தாலும் அதை புதிதாக கற்பவன் போல கற்க வேண்டும், அது சிரமமானதாயினும் அதையே சிந்தித்து எப்பாடுபட்டேனும் அதனை அறிதல் வேண்டும்

ஒவ்வொரு விஷயத்தை கற்கும் போதும், நமக்கு ஒன்றுமே தெரியாது எனும் சிந்தையுடனேதான் கற்க தொடங்க வேண்டும் என்பது பாடலின் பொருள்

அதாவது நாம் ஒன்றை கற்கும்பொழுது மிகுந்த சிரத்தையுடன் நமக்கு ஒன்றுமே தெரியாது என்ற மாணவ மனப்பான்மையுடன் கற்க வேண்டும், தொடர்ந்து மிக்க முயற்சியுடன் கற்க முயன்றுகொண்டே இருக்க வேண்டும் என்பது புலவர் சொல்லும் தத்துவம்