பழமொழி நானூறு : 28
“நற்கு அறிவு இல்லாரை நாட்டவும் மாட்டாதே
சொல் குறிகொண்டு துடி பண்ணுறுத்ததுபோல்
வெற்பு அறைமேல் தாழும் விலங்கு அருவி நல் நாட
கற்றறிவு போகா கடை”
அதாவது ஒரு கவிதை வரிக்கு இயல்பாய் இசை அமைப்பவன் பண் இசைப்பதை போல ஒருவனின் இயல்பான அறிவே அவன் கற்ற கல்விக்கு ஏற்ப வெளிபடும், இயல்பான அறிவின்றி என்ன கற்றாலும் அதனால் பலனேதுமில்லை நல்ல அருவி வீழும் பாறை கொண்ட நாடனே என்கின்றார் புலவர்
இங்கு குறிப்பால் பாறைமேல் அருவி என அவர் சொல்வதிலும் அர்த்தம் இல்லாமல் இல்லை, பாறையில் எவ்வளவு வெள்ளம் வந்தாலும் அது தன்னுள் ஏற்காமல் வடிய செய்துவிடும் அதன் இயல்பு அது, அப்படி இயல்பான அறிவு இல்லாதவர்களுக்கு என்ன கல்வி கொடுத்தாலும் அதனால் பலனில்லை என்பதை தன் உருவகத்தால் சொல்கின்றார் புலவர்
இதனையே “மாந்தர் தம் உள்ளதனைய உயர்வு” என்றான் வள்ளுவன், ஒருவன் என்ன கற்றாலும் அவன் மனதின் இயல்பான அறிவே மேலோங்கும் என்பதே வள்ளுவனும் சொல்வது
சந்தணத்தில் பாத்திகட்டி பன்னீர் ஊற்றி ஏலக்காய் உரமிட்டு வளர்த்தாலும் பூண்டின் மணத்தை மாற்றமுடியாது என்பது போல கல்வி என்பது ஒருவனின் இயல்பானகுணத்தை மாற்றாது, அந்த கல்வியிலும் அவனின் இயல்பான குணமே மேலோங்கியிருக்கும் என்கின்றார் புலவர், அது மிக சரியானதும் கூட