பழமொழி நானூறு : 29
“ஆணம் உடைய அறிவினார் தம்நலம்
மானும் அறிவினவரைத் தலைப்படுத்தல்
மானமர்க் கண்ணாய் மறம்கெழு மாமன்னர்
யானையால் யானையாத் தற்று”
ஆணம் என்றால் அன்பு, நேசம் என பொருளில் வரும்
மான் விரும்பும் கண்களை உண்டைவளே, நல்ல அன்புடைய அறிவார்ந்த மக்கள் தங்களை போன்ற அறிவுடையவர்களையே நண்பராக்கி கொள்ளமுயல்வது எப்படி என்றால் அரசர்கள் யானைகளை கொண்டே யானைகளை கட்டுபடுத்தி இழுத்துவந்து தங்களுக்கு தோதாக பழக்கி வைப்பதை போல் அறிவால் அறிவார்ந்தவர்களை வசபடுத்தி தன்னோடு வைப்பார்கள் என்பது பாடலின் பொருள்
காட்டிலோ இல்லை பகைவரின் படையில் இருந்தோ பிடிபடும் யானையினை இன்னொரு யானையினை வைத்துத்தான் அடக்கமுடியும், பழக்கபட்ட யானையினை கொண்டுதான் இன்னொரு யானையினை வழிக்கு கொண்டுவரமுடியும்
இன்றும் இது காட்டுயானையினை அடக்கும் கும்கி யானையாக இவ்வழக்கம் உண்டு
மற்றபடி யானையினை வேறு எதனாலும் வழிக்கு கொண்டுவரமுடியாது அல்லது அதற்கு புரியாது
யானைமொழி இன்னொரு யானைக்கு புரிவது போல அறிவுடையாரின் மொழி இன்னொரு அறிவாளிக்கே தெரியும், அறிவற்றோரால் அறிவுடையோரை புரிந்துகொள்ளமுடியாது அவர்கள் நண்பராக முடியாது, அறிவுடையோர் அறிவற்றவரையும், அறிவற்றோர் அறிவுடையவரையும் வசபடுத்தமுடியாது
அறிவுடையோரை அறிவுடையோர்தான் நண்பராக்கி வசபடுத்த முடியும் என்பது பாடலின் பொருள்
“இனம் இனத்தோடு” “பாம்பின் கால் பாம்பறியும்” எனும் பழமொழியின் இன்னொரு பெயரே “யானையால் யானையாத் தற்று”