பாலஸ்தீனிற்கு இன்றுதான் அந்த அழுகை தொடங்கிய நாள்

Image may contain: 2 people, people standing and outdoor

70 வருடமாக அழும் பாலஸ்தீனிற்கு இன்றுதான் அந்த அழுகை தொடங்கிய நாள். 1947ல் இதேநாளில்தான் பாலஸ்தீன் பிளக்கபடும் என அறிவிக்கபட்டது, அன்று அழ ஆரம்பித்த பாலஸ்தீன் இன்றுவரை அழுகின்றது

கெஞ்சினார்கள், அழுதார்கள் தீரா கோபத்தில் கலவரத்தில் இறங்கினார்கள் எதுவும் வேலைக்கு ஆகவில்லை

பின் 1948 மேமாதம் பிரிக்கபட்டதில் இருந்து நடந்த சண்டை இன்னும் ஓயவில்லை, ஓயவும் ஓயாது

பாலஸ்தீனம் பிரிக்கபட்ட மறுநாளே போர், அன்று இஸ்ரேல் வென்றது காரணங்கள் இருந்தன‌

யூதர்களின் அன்றைய வெற்றி ஆச்சரியமானது அல்ல, பல விஷயங்கள் அவர்களுக்கு சாதகாமாக இருந்தது.

Image may contain: 1 person, outdoorஅதாவது அவர்கள் ஐரோப்பாவில் வாழ்ந்தவர்கள், நவீன போர்முறை அறிந்தவர்கள். பல நாட்டு ராணுவத்தில் பணியாற்றிவர்கள்.

அதனால் யுத்தநேர்த்தி இயல்பாய் வந்தது. நேர்மாறாக பாலஸ்தீன் கூட்டணியிடம் கோபம் இருந்ததே தவிர முறையான பயிற்சி இல்லை.

மொத்தமக்களையும் ராணுவமாக மாற்றி, தாகுதல்,தற்காப்பு என களத்தில் பின்னி எடுத்தது இஸ்ரேல். போர்காலத்தில் எப்படி தப்பிக்கவேண்டும் என்பதில் ஹிட்லர் புண்ணியத்தி யூத இனம் நன்றாக அனுபவட்டிருந்தது.

ஆனால் அராபியருக்கு இது புதிது. தடுமாறினார்கள். ஐரோப்பா ஓட அடித்த ஓணான் இது என நினைத்து அவர்கள் அடித்தது ஓணானை அல்ல டைனோசரை என பின்னால் புரிந்துகொண்டார்கள்.

ராணுவமும், உளவுதுறையும் இல்லை என்றால் இஸ்ரேல் இல்லை என்பதை இஸ்ரேல் அனுபவபூர்வமாக உணர்ந்தது.
பாதிபாலஸ்தீனில் இஸ்ரேலாக இருந்தவர்களுக்கு அகண்ட இஸ்ரேல் கனவு தோன்ற்றிற்று,

இந்த போரின் மூலம் அந்த கனவில் எண்ணெய் ஊற்றினார்கள்.

கோடு போட்டு தீர்த்திருக்கவேண்டிய பிரச்சினைதான், ஆனால் கோடே வேண்டாம் அது தொல்லை, இது எல்லை என்பான் சிக்கல்வரும், ஒரு சொத்தை முழுவதும் அபகரிக்க கோடு என்பது இருக்கவே கூடாது என்பது இஸ்ரேல் கொள்கை.

பணமும், உலக ஆதரவும் அவர்க்ளுக்கு குவிந்தது, ஆனால் பாலஸ்தீனியர் ஏழைகள் எப்படி அவர்கள் குரல் சபையேறும்?,

ஆனால் அதிர்ஷ்ட வசமாக எகிப்து சூயஸ் கால்வாய் மூலமும், அரபுலகம் எண்ணேய் மூலமும் பணம் குவிக்க அடுத்த போர்கள் ஆரம்பமானது.

விஸ்வரூபமெடுத்து ஆடியது இஸ்ரேல், சகல நாடுகளும் சமாதான உடன்படிக்கை என விலகிவிட்டன. அதாவது எண்ணெய்பணமோ அல்லது வேறுபணமோ நாங்கள் பணக்காரராய் வாழ்கின்றோம், எமக்கு அமெரிக்க உறவு வேண்டும் அவ்வளவுதான்,

பாலஸ்தீனர்களை அப்படித்தான் அந்த தேசங்கள் கைகழுவின.

மிகசில தேசங்களின் ஆதரவில்தான் அராபத் போராடினார், ஆனால் அவராலும் முழுவெற்றி பெறமுடியவில்லை. ஆனால் எல்லை போட்டு இதுதான் பாலஸ்தீனம் என்றொரு அஸ்திவாரத்தை காட்டிவிட்டார்

உலகில் யாருக்குமே நடக்காத அநியாயம் பாலஸ்தீனுக்கு நடந்தது.

பாலஸ்தீன் என ஒரு நாடு, அதனை பிரித்து ஒரு குடியேற்ற நாட்டை உருவாக்கி, குடிவந்த இனம் மொத்த தேசத்தையும் கபளீகரம் செய்த ஆச்சரியம் அங்குதான் நடந்தது.

சுருக்கமாக சொன்னால் ஒரு தேசம் திட்டமிட்டு அழிக்கபட்டது, மண்ணின் சொந்தமக்கள் அனாதைகளாக்கபட்டனர், கேட்பாரில்லை.

எல்லை தாண்டிய பயங்கரவாதம் என சிலவிஷயங்களில் ஒப்பாரி வைக்கும் வல்லரசுகள், இந்த பச்சையான அக்கிரமத்தினை கண்டுகொள்வதே இல்லை.

இன்றும் கூட பாலஸ்தீனை ஆக்கிரமித்து பட்டினிபோட்டு, அவ்வப்போது மற்ற நாடுகளின் எல்லையில் அத்துமீறி தாக்கும் இஸ்ரேல், அது தற்காப்பு என வாசிக்கும் அமெரிக்கா.

பாலஸ்தீனருக்கு முன்பு ஆதரவான நாடுகளில் முன்பு இந்தியாவும் ஒன்று, இந்திராவும் அவர்களின் அலுவலகத்தை டெல்லியில் திறக்க அனுமதித்தனர். அராபத் மீது அவர்களுக்கு அனுதாபம் இருந்தது. இன்று இந்தியா அப்படியே இஸ்ரேலிடம் சரண்டர்.

இன்று எங்காவது பாலஸ்தீன் நாடு என்று நாம் கேட்கமுடியுமா?, பாலஸ்தீன் என்றால் ஹமாஸ், அவர்கள் தீவிரவாதிகள், இஸ்ரேலின் அமைதியை கெடுப்பவர்கள் என்றே இந்த தலைமுறை நம்புகின்றது.

பாலஸ்தீனியரின் வலியை புரிந்துகொள்ள அவர்களின் வரலாற்றை தெரிந்துகொள்ளவேண்டும், பெரும் துரோகத்தால் சிதைக்கபட்டவர்கள் அவர்கள்.

கர்த்தராகிய தேவன் இஸ்ரேலுக்கு வெற்றியை கொடுத்தார் என பைபிளை கையில் வைத்துகொண்டு கதறுபவர்களை விடுங்கள், அவர்களில் ஜெயாவின் பெங்களூர் தீர்ப்பினுக்கு கூட வெற்றிசெபம் செய்து நன்றியை தெரிவித்த கூட்டங்கள் உண்டு.

பைபிளை தாண்டி, தோராவை தாண்டி,குரானையும் தாண்டி சிந்தித்தால் ஒன்றே ஒன்றுதான் உங்கள் காதுகளில் கேட்கும்.

அது பாலஸ்தீனத்தின் அழுகுரல், நெஞ்சை விம்மி , வெடித்து அழ வைக்கும் அழுகுரல்

அதுவும் அக்குழந்தைகளின் அழுகுரல், “நேற்றுகூட எங்கள் வீட்டில் குண்டு விழுந்தது, ஆனால் எங்கள் அப்பாவை போல‌ நாங்கள் சாகவில்லை..” என அக்குழதைகள் மழலையில் சொல்வதை கேட்டபின்னுமா கடவுளும், மதமும் பெரியவை??

70 வருடமாக தொடரும் அழுகை நிச்சயம் ஒருநாள் நீங்கும். இறைவன் எல்லாவற்றிற்கும் ஒரு கணக்கு வைத்திருப்பான்