பாலஸ்தீன் அழுகைக்கு வயது 71 : 01

பாலஸ்தீன் அழுகைக்கு வயது 71 : 01

(இஸ்ரேலிய சுதந்திர நாள் மே 15, ஆனால் அவர்கள் காலண்டர் படி இன்றுதான் அந்த நாள், அவர்கள் கொண்டாட ஆரம்பித்தாயிற்று

ஆயினும் நியாயம் என்பது பாலஸ்தீன் பக்கம் இருப்பதால் அவர்கள் அழுகின்றார்கள், நாம் அவர்களுக்காக அழுவோம்)

71 ஆண்டுக்கு முன்னால் அழதொடங்கிய பாலஸ்தீனம், இன்னும் அழும். ஒரு பெருந்தலைவன் வரும்வரை அழத்தான் வேண்டும்.

4000 வருடத்திற்கு முன்ஆபிராகாம் வருமுன்னே கானான் என்றும், ஆபிராமின் கொள்ளுபேரன்கள் எகிப்தில் பிரமீடு கட்டிகொட்டிருந்தபொழது பெலிஸ்தின் அல்லது பாலஸ்தீன் என அந்த தேசம் இருந்தது.

பின்னாளில் புகழ்பெற்ற தாவீது,சாலமோன் அரசர்கள் ஜெருசலேமை ஆளும்பொழுது கூட பெலிஸ்தியர் தேசம் இருந்தது, கோலியாத் கதை அதனைத்தான் சொல்கின்றது.

யூதர்களின் சிறிய தேசம் ரோமானியர்களால் சிதறடிக்கபட்ட பின் 2000 வருடமாக இருந்த‌து பாலஸ்தீன்.

இறுதி 400 வருடம் அது ஓட்டோமான் அரசின் ஒரு பகுதி, முதல் உலகப்போர் முடிந்த பின் அது பிரிட்டன் பகுதி.

அன்று அரேபியாவும் மேற்காசியாவும் தரித்திர தேசங்கள், சீண்டுவாரில்லை. எண்ணெய் மட்டும் 1900களில் கண்டுபிடிக்கபட்டிருக்குமானால் ஹிட்லரும் விட்டுவைத்திருக்கமாட்டார், ஏன் பிரிட்டன் கூட விலகியிருக்காது. உலக வரலாறே மாறியிருக்கும்.

இன்று பணக்கார பூமி, ஏராளமான மக்களுக்கு வாழ்வளிக்கின்றது என்பது உண்மை, தமிழக‌ பகுதியிலே அங்கு பணியாற்றாத நண்பர்களோ அல்லது உறவினர்களோ இல்லாமல் யாரும் இல்லை. அவர்கள் அங்கு பணியாற்றி இந்தியாவிற்கு என்னவெல்லாமோ அனுப்புகின்றார்கள்,

பலர் முகநூலில் ஸ்டேட்டஸ் போட்டே கொல்லுவார்கள்.

ஆனால் அன்று அப்படியல்ல, ஒட்டகமும்,பேரீச்சைபழமும் வேண்டாம் என சொல்லி உதற தயாரானது பிரிட்டன். வேறு ஒன்றும் பிரமாதமாக அங்கு இல்லை.

அந்த பக்கம் 2000 ஆண்டுகளாய் ஐரோப்பா முழுதும் அடிவாங்கி, அதுவும் ஹிட்லர் காலத்தில் குற்றுயிராக்கபட்ட யூத இனம் தனிநாடு வேண்டும் என அடபிடித்தது, உலகத்தாருக்கு அவர்கள்மேல் பரிதாபமும் உண்டாயிற்று.

உங்களுக்கு ஆப்ரிக்காவில் ஒருநாடு அல்லது ஆஸ்திரேலியாவில் ஒரு தீவு என வல்லரசுகள் பேரம்பேசும் பொழுதே, அதெல்லாம் ஏற்கமுடியாது என ஒரு பெரும் தந்திரதிட்டத்தை அவர்கள் முன் காட்டியது யூத இனம்.

அதாவது நிலவங்கி என ஒன்றை தொடங்கி இருந்தார்கள். கிட்டதட்ட வட்டிமேல் வட்டி என அன்றே பாலஸ்தீனில் பாதியை விலக்கு வாங்கியே இருந்தது யூத இனம், பாலஸ்தீனருக்கு அது தெரியவே இல்லை. ஏதோ ஐரோப்பிய வங்கி என நினைத்து பாதியை இழந்திருந்தார்கள். மசூதிகளை தவிர 80% நிலம் அந்த வங்கிக்கு இருந்தது அதாவது யூதருக்கு இருந்தது.

அதையயும் கூட‌ உலகம் ஏற்கமறுத்தபொழுது அடுத்த அஸ்திரத்தை எடுத்தது யூத இனம்.

யூதர்களின் தோரா கிடைப்பதற்கரிது, ஆனால் கிறிஸ்தவ பழைய ஏற்பாடு கிடைக்குமல்லவா? வாசியுங்கள், அவர்கள் செய்வதெல்லாம் தந்திரமான காரியம், ஆபிரகாம் காலம் தொடங்கி யூதாஸ் வரைக்கும் ஏராளம் கொட்டிகிடக்கும்.

அப்படித்தான் சூயஸ் கால்வாயை காட்டினார்கள், எகிப்தில் இருக்கும் கால்வாய் அது இல்லை என்றால் ஐரோப்பிய கப்பல்கள் ஆசியா வர கொஞ்சகாலம் ஆகும். கொஞ்ச காலம் என்றால் 3 முதல் 5 மாதம் அவ்வளவுதான்.

அது மகா முக்கியமான சூயஸ் கால்வாய். அது அமைந்திருக்கும் எகிப்தினை மிரட்ட அருகில் ஒரு வெள்ளை ஆதரவு நாடு அவசியம் என காட்டினார்கள். ஒப்புகொண்டது பிரிட்டன் காரணம் இலங்கை,சிங்கப்பூர் எல்லாம் அப்பொழுதும் பிரிட்டன் ஆளுகை.

ஒப்புகொண்ட பிரிட்டன், பாலஸ்தீனை 2 ஆக பிரித்து இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் என தீர்ர்பு எழுதிவிட்டு மூட்டைகட்டியது.

1948 மே 14ல் பிரிட்டன் கப்பலேறி போய்விட்டது. மறுநாள் வரலாறு திரும்பியது.

என்ன வரலாறு, அதேதான் ஆபிரகாம் காலமுதல் இயேசுகாலம் வரை பைபிள் சொல்லுமல்லவா? சீரியர்,அமோனியர்,ஏத்தையர் இன்னும் பல இனங்களுக்கும் யூதருக்கும் நடந்த சண்டைகள், அதே தான்.

சீரியர்கள் இன்று சிரியர்கள், அம்மோனியர்கள் இன்று ஜோர்டான், ஏத்தையர் லெபனான் பகுதி, பெலிஸ்தியர் இன்றைய பாலஸ்தீனியர் அவர்கள் எல்லாம் இஸ்ரேல் மீது போர் தொடுத்தார்கள், அன்றைய அரபு நாட்டின் ஒரே பெயர் சொல்லும் நாடான எகிப்தும் கலந்துகொண்டது.

என்று தொடுத்தார்கள், மறுநாள் அதாவது 1948, மே 15.

அன்று பிறந்த தேசம் அன்று இரவே போரினை எதிர்கொண்ட விசித்திரம் அன்றுதான் உலகில் நடந்தது.

இன்றைய தீரா பாலஸ்தீனியரின் கண்ணீர் அன்றுதான் முதலில் தொடங்கியது.

யார்தவறு? எதில் தவறவிட்டார்கள்? எப்படி கணக்கு தப்பிற்று?

போரில் வென்றது இஸ்ரேல்தான் (அல்லேலூயா..இஸ்ரேலின் கடவுளுக்கு ஜெயம் என சில குரல்கள் கேட்கலாம், விடுங்கள் அவர்கள் அப்படித்தான், இஸ்ரேலில் என்ன நடந்தாலும் இந்த வசனத்தை மாற்றமாட்டர்கள்), ஆனால் இஸ்ரேலியருக்கு அனுகூலமானது நிறைய இருந்தன.

எப்படி சறுக்கினார்கள் அரேபியர்கள்? உண்மையிலே கர்த்தரின் சேனை வந்து போரிட்டதா? எது வெற்றியை தீர்மானித்தது.

பாலஸ்தீன் எப்படி அனாதை ஆக்கபட்டது? பார்க்கலாம்..

(தொடரும்)