பாலியல் கல்வி கொண்ட, பெண்களை மதிக்கும் சமூகமாக மாற வேண்டும்
இந்தியாவில் பாலியல் தொல்லைகளும் அதனால் பெரும் சிக்கல்களும் ஏற்பட்டாயிற்று என கொந்தளிக்க தொடங்கிவிட்டார்கள்
இது மோடி ஆட்சியில் அதிகரித்தது என புலம்பல் வேறு, மோடி ஆட்சிக்கும் அதற்கும் என்ன தொடர்பு?
இது மன்னர்கள் ஆட்சி, மதகுருமார் ஆட்சியிலிருந்து இக்காலம் வரை நீடிக்கின்றது என்பதுதான் விஷயம்
மனிதனுக்கு பசி, தூக்கம் போல இயல்பான விஷயம் அது, அவன் அப்படித்தான் படைக்கபட்டிருக்கின்றான்,
அதனை வென்றவன் எவனுமில்லை, வென்றவன் நீண்டகாலம் வாழ்ந்ததுமில்லை
ஒரு மனிதன் 10 நாள் உணவின்றி இருந்தால் கூட 11ம் நாள் அவன் முன் பெண்ணையும் உணவினையும் வைத்தால் அவன் மனம் பெண்பால் விழும் என்றனர் ஞானிகள்
அலெக்ஸாண்டர் காலத்தில் இருந்து இரண்டாம் உலகப்போர் வரை இவ்வுலகம் கண்டது என்னவென்றால் வென்ற வீரர்கள் முதலில் தேடுவது பெண்களையே
மானிட சுபாவம் அது.
ஞானிகள் காடு சென்று காமத்தை கடக்க முனைந்தாலும் விஸ்மாமித்திரர் போல பலரால் வெல்ல முடியவில்லை மானிட சுபாவம் அது
எது முறையான காமம், எது முறையற்ற காமம் என இந்து புராணங்கள் சொன்ன அளவு இன்னொரு மதம் சொல்லவில்லை
அகலிகை, தாரா முதல் எத்தனையோ நிகழ்வுகளை அது முறையற்ற தொடர்புக்கு காட்டிற்று, அதில் அளவுக்கு மீறி மூழ்கினால் இந்திரனும் தப்பமுடியாது என சொன்ன மதம் அது
ராமாயணம் எனும் இதிகாசமே அதையொட்டித்தான் எழும்பியது
பெண்களை மதித்து அவளுக்கு பூரண சுதந்திரம் கொடுத்தது இந்து மதம், பெண்ணை மதியாமல் மிதித்தவர் வாழவுமில்லை என சொன்ன பாத்திரங்கள் இந்து பாத்திரங்களே
ஆதிகால மதம் அப்படித்தான் இருந்திருக்கின்றது, பிற்கால கட்டுபாடுகள் பிராமண காலத்தில் வந்தவையே
ராமனை அது வணங்கியது, கண்ணனை பழிக்கவுமில்லை
பண்டைய இந்தியாவில் பாலியல் சுதந்திரம் இருந்திருக்கின்றது, பல விவாகங்களோ வேறு தொடர்புகளோ சிக்கல் என இல்லவே இல்லை
ஆலய சிற்பம் முதல், குகை ஓவியங்கள் காமசாஸ்திர நூல் வரை காமத்தை கொண்டாடிய தேசம் இது.
காடு சென்ற முனிவர்களும் அந்த ஆராய்ச்சியில்தான் இருந்திருக்கின்றார்கள், தோல்வியினை ஒப்புகொண்டு திரும்பியிருக்கின்றார்கள்
மனிதனுக்கு இயற்கையான உணர்ச்சியினை சட்டம் போட்டு தடுத்தால் அது வேறுவகையான விளைவுகளை ஏற்படுத்தும் என்றுதான் அக்கால சமூகம் சில ஏற்பாடுகளை செய்திருந்தது
கணிகையர், பரத்தையர் என்ற கூட்டம் என சொல்லபடுவது அதுதான், பின்னாளில் ஆலயபணி செய்த கோவில் அடிமைகளான தேவதாசிக்கும் அந்த பெயரே நிலைத்தது
இதெல்லாம் இருந்ததால் பெரும் சமூக சீர்கேடுகள் தவிர்க்கபட்டன
இக்காலத்திலும் அதனை தவிர்த்தால் என்னாகும் என உணர்ந்த நாடுகள், பேசாமல் வரிவிதித்து விட்டு அனுமதிக்கின்றன
இங்கு சமூக சீர்கேடு என அப்படி அனுமதிக்கமாட்டார்கள், அப்படி இல்லா பட்சத்தில் பாலியல் கல்வியாவது கொடுக்கபட வேண்டும்
அதுவும் இல்லை
இதனால் இத்தலைமுறை தறிகெட்டு திரிகின்றது, இப்போதுள்ள தொடர்பு சாதனங்கள் அவர்களை இன்னும் தூண்டுகின்றன
விளைவு சிறு குழந்தைகள் முதல் மூதாட்டிகள் வரை பாதிக்கபடுகின்றார்கள்
தன் தேவைகள் தீர்க்கபடாத எந்த பிராணியும் ஒரு கட்டத்தில் தடம் தவறுகின்றது, அதில் யானையும் அடக்கம் மனிதனும் அடக்கம்
நிச்சயம் மது, மாது விவகாரங்களை எல்லாம் சட்டம் போட்டு தடுக்கவே முடியாது, எங்கேனும் ஒரு பாதிப்பினை அது கொடுத்துகொண்டேதான் இருக்கும்
வேறு ஏற்பாடுகளை செய்யவும் கலாச்சாரம் ஒப்புகொள்ளாது என்பார்கள், இவ்வளவிற்கும் அக்காலத்திலே இருந்த கலாச்சாரம்தான்
அதனால் பாலியல் கல்வி இதனை ஓரளவு குறைக்கும், இதனைத்தான் அன்றே மிக தைரியமாக குஷ்பு சொன்னார். அவரை ஓட விரட்டினார்கள், படு மட்டமாக விமர்சித்தார்கள்
கடும் தண்டனைகள் குற்றத்தை குறைக்குமென்றால் அரபு நாடுகளில் கற்பழிப்புகள் எல்லாம் நின்றிருக்க வேண்டும் ஆனால் தலைபோனாலும் பரவாயில்லை என உள்ளுக்குள் எரியும் தரப்பு சவால் எடுக்கின்றது
இதற்கென தனி குழு அமைக்கபட்டு தகுந்த கல்வியும் , இன்னபிற எச்சரிக்கையும் கொண்ட இளம் சமூகத்தை உருவாக்க வேண்டும்
மேல் நாடுகள் இப்படித்தான் இச்சிக்கலை கடந்து செல்கின்றன, பெண்ணை மதிக்க தெரிந்த சமூகத்தில் இச்சிக்கல் இல்லவே இல்லை
குறைந்த பட்சம் பெண்களை மதிக்கவும், அவர்ளுக்கும் மனம் உண்டு , விருப்பம் உண்டு வெறுப்பு உண்டு என புரிந்துகொள்ளும் ஆண் சமூகத்தை உருவாக்க வேண்டும்.
அதுவே பிற்காலத்தில் இம்மாதிரி சிக்கலில் இருந்து இந்திய எதிர்கால சமூகத்தை காக்கும்
இல்லையேல் இம்மாதிரி சர்ச்சைகள் வரவர பெருகுமே அன்றி குறையாது
பாலியல் கல்வி கொண்ட, பெண்களை மதிக்கும் சமூகமாக இது உருவாகும் வரை இச்சிக்கலுக்கு தீர்வில்லை