பெட்ரோலுக்கான வரி

பெட்ரோலுக்கான வரியினை ஏன் இந்த அரசு குறைக்கவில்லை, இதனால் மக்கள் படும் சிரமம் ஏராளம் என பல கட்டுரைகள்

அதில் உண்மை இல்லாமல் இல்லை, இந்தியாவில் பெட்ரோலுக்கான வரி அதிகம், ஏன்?

இதுதான் இந்திய அதிகார வர்க்கத்தின் குறுக்கு மூளை என்பது, அதாவது வேறு ஒரு பொருளுக்கு இத்தனை சதவீத வரியினை விதித்தால் அந்த துறையே முடங்கும்

ஏன் தங்கமே ஆனாலும் மக்கள் தயங்குவார்கள்

ஆனால் பெட்ரோல் என்பது வாங்கி தீரவேண்டிய பொருள், வளரும் நாடு எனும் வகையில் அது மகா அவசியம், அதனால் மிக நுட்பமாக அதில் அவ்வளவு வரியினை வைத்தார்கள்

ஏன் வரியினை குறைக்கமுடியாதா என்றால் நிச்சயம் குறைக்கலாம் ஆனால் எதில் வெடிக்கும்?

பெட்ரோலியதுறை முதலான மத்திய அரசு துறைகளின் சம்பள கணக்கினை பாருங்கள், கடைநிலை ஊழியனுக்கே சில பத்தாயிரம் கிடைக்கும்

அவ்வளவு வெட்டி சம்பளம் கொடுக்கின்றார்கள், வரியினை குறைத்தால் சம்பளத்தை குறைக்க வேண்டி இருக்கும், இன்னும் பல சலுகைகளை குறைக்க வேண்டி இருக்கும்

விடுவார்களா?

பெட்ரோல் விலை குறையவேண்டும் என ஒப்பாரி வைக்கும் மத்திய அரசு ஊழியனே ஒப்புகொள்ளமாட்டான்

மாநில அரசு டாஸ்மாக்கில் ஓடுவது போல மத்திய அரசு இந்த மிக அதிகமான பெட்ரோல் வரியிலே இயங்குகின்றது

ஆனால் ஒரு விஷயம் சொல்ல வேண்டும்

பெட்ரோலுக்கு அதிக வரி என்பது காங்கிரஸ் ஆட்சியிலே வைக்கபட்ட நிதி ஆதாரம்

அக்காலத்தில் வசதியானவர்கள் மட்டுமே கார் பைக் எல்லாம் வைத்திருந்ததால் அவர்களிடம் நன்றாய் வசூலிப்பது தவறில்லை என அரசு முடிவெடுத்தது, அது தவறென்றும் சொல்ல முடியாது

ஆனால் மன்மோகன் சிங் போன்றோர் பேரல் 120 டாலருக்கு விற்றபொழுதும் தங்கள் நிர்வாகத்தால் விலை உயராமல் காத்தார்கள்

இந்த அபலைகளுக்கு அந்த நிர்வாகம் தெரியவில்லை , இதற்கு மேல் கேட்டால் ராமர் முன் அழுவார்கள், கண்ணன் முன் கதறுவார்கள்

உச்சமாக ஏழைதாயின் மகனிடம் பெட்ரோல் விலையினை கேட்கலாமா என்பார்கள்

ஆக பெட்ரோலிய வரியினை குறைத்தால் அரசு ஊழியர்களின் சம்பளம் குறைக்கபட வேண்டும், யார் சம்மதிப்பர்?

கருப்புபணத்தை ஒழிக்க சவால் எடுத்த மோடி இதனை செய்யலாம், செய்து பார்க்கலாம் ஆனால் செய்யமாட்டார் காரணம் அதன் பின் ஆட்சி கனவே காணமுடியாது

இல்லை திறமையாக மன்மோகன்சிங் போல செய்யவேண்டும் அதற்கும் அவர்களுக்கு தெரியாது

ஆக ஒருவழியும் இல்லாமல் அரசு ஊழியர் வாழ, அரசு நிதிபெருக்க ஒவ்வொரு இந்தியனும் அநியாயமாக பெட்ரோலுக்கு செலவழித்துகொண்டே இருக்கின்றான்

எவ்வளவு அழுதாலும் அவன் வாங்கிதான் தீரவேண்டும் என்பதால் அரசு அதற்கு அஞ்சபோவதில்லை

மத்திய அரசு அரபு நாட்டு எண்ணையினாலும், மாநில அரசு இவர்களே காய்ச்ச அனுமதித்து விற்கும் மது வியாபாரத்திலும் இயங்குகின்றது

டாஸ்மாக் இல்லை என்றால் இங்கு அரசு இயங்காது என்பதுதான் தமிழக நிலவரம்

மத்திய அரசு இந்தியன் பெட்ரோலை வாங்கித்தான் தீரவேண்டும் என நம்புவதை போல தமிழன் எப்படி போனாலும் குடிப்பான் என தமிழக அரசும் நம்புகின்றது

ஆச்சரியமாக அது நடந்துகொண்டே இருக்கின்றது, இரு அரசுகளும் இயங்கிகொண்டே இருக்கின்றன‌

அதே நேரம் பெட்ரோலுக்கு கொடுக்கும் அதிகபடியான வரியின் பகுதி மக்கள் நல திட்டம் என மக்களுக்கே திரும்புவதையும் பார்க்க வேண்டும், அதை எல்லாம் யாரும் நோக்குவதில்லை

பல அரசு சேவைகள் மிக குறைந்த விலையிலும் இலவசமாகவும் மக்களுக்கு வழங்கபடுவது இப்படித்தான்

மற்ற நாடுகளை விட இங்கு வருமான வரியும் இன்னபிற அரசின் வருமானங்களும் குறைவு, இதெல்லாம் இப்படி ஈடுகட்டபடுகின்றன என்பதும் இன்னொரு கோணம்..

ஒருவேளை பெட்ரோலுக்கான வரியினை அரசு குறைத்தால் மற்ற வரிகள் மகா அதிகமாகும், ஆகியே தீரும் இல்லாவிட்டால் தேசம் இயங்க முடியாது