பெரும் அழிச்சாட்டியம் செய்கின்றது ஊடகங்கள்

தமிழ்நாட்டிக்கு ஒரு சோகமான நேரமிது. என்கின்றன ஊடகங்கள். தமிழ்நாட்டின் தலைவிதியே 23ம் தேதிதான் தெரியுமாம்

தமிழக மாபெரும் கொள்கைவாதிகளும், சிந்தனையாளர்களும் நாட்டையும் மக்களையும் பற்றி மட்டுமே சிந்திக்கும் அந்த கூட்டம் இரு பிரிவாக மோதிகொள்வது உலகையே வருத்ததிற்குள்ளாக்கிவிட்டது

ஆம் மகாத்மா காந்தி வழி இந்திய தேசிய தியாகிகளான ராதாரவி,சரத், பாக்யராஜ் போன்றவர்களுக்கும், நேதாஜி வழியில் நாட்டிற்காய் போராடிய இந்த விஷால் என்பவருக்குமான கோஷ்டி சண்டை அது

அந்த ஏழை தியாகிகளுக்கு ஒரு சங்கம் உண்டாம், அதில் தேர்தலும் உண்டாம்.

காந்தி தியாகம் பெரிதா? நேதாஜி தியாகம் பெரிதா எனும் சண்டையில் இருவரும் மோதிகொள்வார்களாம்

யார்வழி தமிழ்நாட்டுக்கு பொருத்தமான முன்னேறும் வழி என்பதில் அவர்களுக்குள் சர்ச்சை வந்து தேர்தலில் அதை தீர்ப்பார்களாம்

இதற்கு எல்லையில் சண்டையிட்டு கை கால் இழந்த நாசர், கார்த்தி மற்றும் இந்திய பொருளாதரத்தை தூக்கி நிறுத்திய சிம்பு மற்றும் இன்னபிற சிந்தனையாளர்களின் ஆதரவும் உண்டாம்

இப்படியாக இந்த பத்திரிகைகள் இந்த பெரும் தியாகிகளின் சங்க போராட்டத்தை பெரிதாக சொல்லிகொண்டிருந்தன‌

சிலர் ஓரமாய் போய் சண்டை போடுங்கள் என மக்கள் சொல்லிவிட்டதால் இந்த தியாகிகள் கூட்டம் கடும் அப்செட்டாம்,

இதில் ராதாரவி எனும் முன்னாள் இந்திய ராணுவ ஜெனரலும், சரத்குமார் எனும் முன்னாள் ஒலிம்பிக் சங்க தலைவரும் வெளியேற்றபட்டதிலும் மக்களிடம் ஒரு சர்ச்சையும் இல்லை என்பதில் அவர்களுக்கு வருத்தமாம்.

டாக்டர் மன்மோகன்சிங்குடன் உலக பொருளாதார சிக்கலை தீர்த்தவரும், பிப்ரவரிமாதம் பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு பெரும் போரை தவிர்த்வருமான பாக்யராஜ் என்பவர் களத்திற்கு வந்திருப்பது கூடுதல் கவனமாம்.

நாட்டில் அவனவனுக்கு என்ன பிரச்சினை, இந்த கூத்தாடிகளுக்கு என்ன பிரச்சினை பார்த்தீர்களா?

சூட்டிங் மட்டும் செட்டுக்குள்ளும் அல்லது வெளிநாடுகளில் நடக்குமாம், கதை டிஸ்கசன் அடைக்கபட்ட அறையில் நடக்குமாம், சம்பள பரிவர்த்தனை மகா ரகசியமாக நடக்குமாம்

ஆனால் சண்டை மட்டும் பகிரங்கமாக போட்டு கொள்வார்களாம்

தயாரிப்பாளருக்கு ஒரு சங்கம், அதிலும் சண்டை

நடிகர்களுக்கு ஒரு சங்கம் அதிலும் சண்டை

இந்த பெப்சி என்றொரு அமைப்பு உண்டு, அதில் இப்பொழுது தற்காலிக அமைதி, விரைவில் வெடிக்கலாம்

ஆக பெரும் கலவரங்களை தூண்டும் இந்த சங்கங்களை தடை செய்தால்தான் என்ன? இவர்களால் நாட்டிற்கு என்ன பிரயோஜனம்?

இவர்களை தடை செய்தால் என்ன அழிந்துவிடும்

இதில் இருக்கும் பின்னணி என்ன?

இது நிச்சயம் நடிகர்களுக்கான சண்டை அல்ல, அந்த சுயநல கூட்டம் எந்நாளும் தன் நலத்தை பார்க்குமே தவிர பொதுநலம் பார்க்காது

இந்த சண்டை ராமசந்திரன் காலத்தில் அதாவது அவர் அரசியலுக்கு வரும்பொழுது வந்தது

சினிமா அரசியலை கட்டுபடுத்தும் காலம் வந்தபொழுது பெரிதானது

அது அவர் காலம், ரஜினி காலம், விஜய் காலம், விஜய் சேதுபதி காலம் என தொடர்கின்றது

சினிமாவுக்கு இருந்து அரசியலுக்கு வந்து வென்ற தலைவர்கள் அதை தங்கள் கண் அசைவிலே வைத்திருந்தனர், அது அவர்களுக்கு அவசியமுமானது

அதன் தொடர்ச்சியே இன்றைய சர்ச்சைகள்

இப்பொழுதும் பாக்யராஜ் ஒரு கட்சிக்கும் விஷால் ஒரு கட்சிக்கும் சாதகமாக ஆடுவதே உண்மை

இதில் யார் வென்றாலும் ஒரு மண்ணும் நடக்காது, நடிகர் சங்க கட்டடம் கட்டபடவும் செய்யாது

அவர்களில் ஒருவர் நினைத்தால் கூட என்றோ அதை கட்டியிருக்கலாம்

நடிகர் சங்கத்து சண்டை அரசியல் கட்சிகளின் மறைமுக சண்டை அன்றி வேறல்ல‌

இப்போதைக்கு மகாத்மா அணியின் கோஷ்டியும், நேதாஜி அணியின் கோஷ்டியும் தேர்தலுக்கு செல்கின்றதாம்

அங்கு நாட்டுக்காக வாழ்க்கையினை தொலைத்த‌ தியாகிகள் எல்லாம் வாக்களிப்பார்களாம் ,

இப்படியாக பெரும் அழிச்சாட்டியம் செய்கின்றது ஊடகங்கள்